சுப்ரபாதம்(14) - கோவிலுக்குக் குளிக்காமப் போனாத் தீட்டா?
சிவனாரும், பிரம்மனும், முருகனும் பெருமாளைத் தரிசிக்கும் ஆவலில், க்யூ வரிசையை உடைத்து விட்டு ஒடோடி வருகிறார்கள்! அவர்கட்கு பிரம்படி வேறு!
இன்னொரு விஷயம்! தரிசனம் செய்யணும்னா கட்டாயமா குளிக்கணுமா என்ன? குளிக்கா விட்டா தீட்டா?.....
ஆமாம், தீட்டு தான் என்றால் தீட்டு கழிப்பது எப்படி? பார்க்கலாம் வாங்க! :-)
![]() | ![]() |
(இந்த சுலோகத்தை படிக்கும் போது, கூடவே கேட்டுப் பயில நினைத்தால், இதோ சொடுக்குங்கள்)
ஸ்ரீ சுவாமி புஷ்கரிணி- காப்லவ நிர்மலாங்கா
ச்ரேயோர் திநோ, ஹர விரிஞ்சி சனந்தன ஆத்யா
த்வாரே வசந்தி வரவேத்ர ஹதோத்த மாங்கா:
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்
ஸ்ரீ சுவாமி புஷ்கரிணி = ஸ்ரீ சுவாமியின் திருக்குளத்தில்
புஷ்கரிணி = குளம்; திருவேங்கடமுடையான் ஆலயத் திருக்குளத்துக்கு சுவாமி புஷ்கரிணி என்று பெயர். இதைக் குலசேகர ஆழ்வார் எவ்வளவு அழகா தமிழில் ஆக்குகிறார் பாருங்கள்!
சுவாமி+புஷ்கரிணி = கோன்+ஏரி = கோனேரி
கோனேரி ராஜபுரம் என்ற ஊர், தமிழ்நாட்டில் உண்டு.
பொதுவா வடமொழிச் சொற்களைத் தமிழில் ஆக்கும் போது, தமிழ்ப் பெயர் சற்று நீண்டு விடும் என்று சிலர் குறைபட்டுக் கொள்வார்கள்.
ஆனா இங்க பாருங்க...வடமொழியில் நீள்ள்ள்ள்ள்ள்ளமான பெயர்...ஆனால் தமிழில் ரத்தினச் சுருக்கமா "கோனேரி".
வடமொழி-தமிழ் ஆக்கும் போது, நிறைய சொற்களுக்குக் கடினப்படுகிறீர்களா?
கவலைய விடுங்க! ஆழ்வார்களிடமும், குறிப்பா ஆண்டாளிடமும் தேடினாலே பாதிச் சொற்கள் கிடைத்து விடும்!
கோனேரி வாழும் குருகாய் பிறப்பேனே என்பது ஆழ்வார் பாசுரம்.
அதாச்சும் இறைவன் திருக்குளத்துக்கு அருகிலேயே வாழும் ஒரு கொக்காய் பிறந்தால் கூட பேரின்பம் தான் என்கிறார் ஆழ்வார்!
வைகுண்டத்தில் உள்ள விரஜா நதியே கோனேரி ஆனது என்பது தாத்பர்யம்.
கா அப்பு லவ, நிர்மலா அங்கா = கோனேரி நீரைத் தெளித்துக் கொண்டு, அகமும் புறமும் தூய்மை அடைந்து
அப்பு=நீர், லவ=கொஞ்சமாக
மலம் = குற்றம்/அழுக்கு; நிர்மலம் = குற்றமின்மை
அது சரி, கோயிலுக்குப் போகணும்னா கட்டாயம் குளிச்சிட்டுத் தான் போகணுமா?
பண்டரிபுரம் பாண்டுரங்கன் ஆலயத்துக்குப் போனீங்கனா தெரியும். வடக்கத்திக்காரர்கள் அதுவும் குறிப்பா தாக்கூர்கள் கோயிலுக்குள் திபுதிபு-ன்னு ஒடி வருவாய்ங்க! சில பேர் கிட்ட வந்தா நாறும்! என்னைக்குக் குளிச்சானோ என்னமோ? :-)
ஆனாப் பாருங்க! கோயிலில் வேற எந்த ஒரு வார்த்தையும் பேச மாட்டாங்க!
ஹே பாண்டுரங்கா, ஹே விட்டலா...ன்னு ஓடி வந்து பாண்டுரங்கன் காலில் விழுந்திடுவான்.
தீட்டு தீட்டு-ன்னு சொல்றாங்களே! அப்பிடி-ன்னா என்ன? - நம் ஐயன் வள்ளுவரும் சொல்கிறார்! கன்னடத்துக் கவி புரந்தரதாசரும் சொல்கிறார்!
குளிக்காம கோவிலுக்குப் போனா தீட்டு! - அது சரின்னே இப்போதைக்கு வைத்துக் கொள்வோம்! சரி, அங்கே போயி, கோவிலில் வம்பு பேசினா? - அதைக் காட்டிலும் இது தீட்டு! :-)
கோவிலுக்கு மடியா போகணும் மடியாப் போகணும்-னு சொல்லிட்டு, அங்கு போய் வம்பு பேசினா? மடி மடின்னு, மடியே மடிந்து விடுகிறது! :-)
சரி தீட்டாயிடிச்சு!...இதுக்கு எப்படி தீட்டு கழிக்கறது?
சும்மா தண்ணியில் ரெண்டு முக்கி முக்கி எழுந்துட்டா தீட்டு போயிடுமா? - இல்லவே இல்லை!
சிறப்புக் குளியல் செய்யணும்! அது என்ன சிறப்புக் குளியல்?
கோவிலில் அந்நிய வார்த்தைகளை விடுவது தான் சிறப்புக் குளியல்! உயர்ந்த ஸ்நானம், எல்லாம்!
அதைத் தான் புரந்தரதாசர், "தனுவு நீர் ஓளகத்தி பளவேனு, மனதல்லி திட பக்தி இல்லாத மனுஜனு!" என்கிறார். நம் ஐயன் வள்ளுவர் ஒரு படி மேலே போய் விடுகிறார்.
புறத்தூய்மை நீரால் அமையும் அகத்தூய்மை
வாய்மையால் காணப் படும்.
திருக்குளத்தில், கங்கையில், காவிரியில், குமரியில், எங்கு குளித்தாலும்... குளிக்கும் போது புறத்தை மட்டும் தூய்மை செய்யாமல், அகத்தையும் சேர்த்துத் தான் தூய்மை செய்ய வேண்டும்!
சரி, புறத்துக்கு சோப்பு/ஷாம்பூ போடலாம்; சில பேர் பால், பயத்தமாவு கூட பயன்படுத்தறாங்க!
ஆனா அகத்துக்கு எது சோப்பு? - இறைவனின் திருநாமம் தான் அழுக்கு நாசினி, கிருமி நாசினி, எல்லாம்!
விடியற் காலை அங்கப் பிரதிட்சணம் செய்தவர்களுக்கும், மொட்டை போட்டுக் கொள்பவர்களுக்கும் இது நல்லாத் தெரியும்!
அதிகாலைக் குளிரில் நடுங்கிக் கொண்டே, திருமலைக் குளத்தில் ஒரு முங்கு, முங்கி எழுங்க!
அதுவும் மனதாரக் "கோவிந்தா கோவிந்தா" என்று சொல்லிக் கொண்டே எழுங்க!
குளிரில் உடம்பும் நடுங்கி,
உள்ளே உள்ள பாவங்களும் நடுங்கி விடாதா என்ன?
ச்ரேய ஆர்த்திநோ = பரிபூர்ணமான நலமுடன் வாழ வேண்டிக் கொண்டு ஆனந்தமும் நலமும் கிடைக்க வேண்டிக் கொண்டு,
ஆனந்த நிலையத்தில், யார் யார் எல்லாம் காத்திருக்கிறார்கள்?
ஹர, விரிஞ்சி, சனந்தன ஆத்யா = சிவன், பிரம்மன், சனந்தனர் முதலான மகரிஷிகள்
ஹரன் = சிவபெருமான்
விரிஞ்சி = பிரம்மன் (ஜனனி ஜனனி பாடலில் கூட ஹரி ஹர விரிஞ்சி-ன்னு ஒரு வரி வரும்) சனந்தன ஆத்யா = சனகாதி முனிவர்கள்;
சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்ற நால்வரும் வயதில் இளைய ரிஷிகள். ஆனால் பக்தியும் ஞானமும் ஒருங்கே கைவரப் பெற்றவர்கள்!
இதில் சனத்குமாரர் கார்த்திகேயனான முருகப் பெருமானின் அம்சம் என்றும் சொல்லுவார்கள்.
இந்த 4 பேரால் தான்...நமக்கு 4 அவதாரங்கள் கிடைத்தது...என்னன்னு பின்னூட்டத்தில் சொல்லுங்க பார்ப்போம்! :-)
த்வாரே வசந்தி, = மகா துவாரம் என்னும் உன் ஆலய வாசலிலே நிற்கிறார்கள்.
(அப்போது சேனை முதலியாரின் தொண்டர்கள், தங்கள் கையில் உள்ள பொற் பிரம்பால், அனைவர் தலையின் மேலும், மெல்லிதாய் வைத்து, அனுகிரகம் செய்ய)
வர வேத்ர ஹத= பொற் பிரம்பால் தட்டி முறைப்படுத்த,
உத்தம அங்கா = அதனால் இன்னும் தூய்மை அடைகிறார்கள்!
வேத்ரம்=பிரம்பு; வர வேத்ரம்=பொற் பிரம்பு
அந்தக் காலத்தில் ஆசிரியர் என்றால் கையில என்ன இருக்கும்? - பிரம்பு!
யாராச்சும் பார்த்து இருக்கீங்களா? இல்லை அடி வாங்கித் தான் இருக்கீங்களா? :-)
மாணவர்களை அவர் அடிக்கிறாரோ இல்லையோ, ஆனால் கையில் பிரம்புடன், வேட்டி-கோட்-தலைப்பாகை-குடை; வாயில் கணீரென்று தமிழ்ச் செய்யுள்...ஆகா! ஆகா!
பெருமாளின் படைகளுக்கு பிரதான தளபதியாய் இருப்பவர் விஷ்வக்சேனர்.
தமிழில் சேனை முதலியார் என்று போற்றுவார்கள்! விநாயகரைப் போலவே, வைணவ பூசைகளில் முதல் பூசை இவருக்குத் தான்! - இவர் தான் வைணவ சம்பிரதாயத்தில் முதல் ஆசிரியர்!
பெருமாள் தாயாருக்கு உபதேசிக்க, தாயார் நம் மீது உள்ள கருணையால் இவருக்கு உபதேசம் செய்து வைத்தார்! - இவரே தலைமை ஆசிரியர்! நம்மாழ்வாரின் குரு!
அந்தக் குருவின் கையில் பொற் பிரம்பு!
அந்தப் பிரம்பில் இருந்து எழும் இனிய நாதம்!...
என்னது பிரம்பில் இருந்து இசையா? நம்ப முடிய வில்லையா? பிரம்பைக் காற்றில் வீசிப் பாருங்க...தெரியும்! :-)
மெல்லிசைக் கச்சேரிகளில், வாத்தியங்களுக்கு முன்பு நின்று கொண்டு ஒரு மனுஷர் கையில் பிரம்பை வைத்து அப்படியும் இப்படியும் ஆட்டுவார்! - music conductor
நாம் நினைப்போம் - இந்த மனுஷன் ஒன்னுமே செய்யாம, சும்மா பந்தா கட்டுகிறாரே என்று! ஆனால் அத்தனை வாத்தியங்களின் நாதமும் ஒருங்கே சுருதி சேர்ந்து ஒன்றாய் ஒலிக்கிறது என்றால், அதற்கு இவரே காரணம்.
அதே போலத் தான், உயிர்கள் எல்லாம் பல பாதைகளில் சென்றாலும்,
எம்பெருமானின் திருநாமம் என்னும் நாத இன்பத்தை எல்லா உயிர்களும் ஒருங்கே அடைய, பிரம்பை வீசுகிறார் விஷ்வக்சேனர்!
அவருடைய சேனைகள் கையிலும் பொற்பிரம்பு இருக்கிறது!....எதற்கு?
கோயிலுக்கு வருபவர்களை எல்லாம் அடித்து விளாசவா? இல்லையில்லை! :-)
வானவர்களை எல்லாம் தலையில் பொற்பிரம்பால் தொட்டு, தரிசனத்துக்கு, ஒவ்வொருவராக அனுப்பி வைக்கிறார்கள்! அப்படி பிரம்போசையால் ஏற்படும் ஓங்காரம், யார் எந்த மன நிலையில் இருந்தாலும், அதை எல்லாம் விலக்கி,
பரம்பொருள் ஒருவனையே நெஞ்சில் நிறைத்து விடுகிறது! - ஆனாப் பாருங்க, வானவர்களுக்கு மட்டும் தான் இந்த "அடி"! நமக்கு இல்லை - ஏன் இப்படி? :-)
தானம் தவம் செய்த முனிவர்கள், வானவர்கள் எல்லாரையும் கீழே இறக்குகிறார் பெருமாள்!
பாவங்கள் புரியும் நம்மையோ மேலே ஏற்றுகிறார்!
மேலோர் எல்லாரும் அவரவர் நிலையில் இருந்து கீழிறங்கி திருமலைக்கு வருகிறார்கள், பெருமாளின் திருமேனி செளந்தர்யம் என்னும் வடிவழகைச் சேவிக்க!
நாமோ, ஒன்றுமே செய்யாமல், மேலேறிச் செல்கிறோம், மேல்நிலையை அடைய! - இது தான் இறைவனின் கேழில் பரங்கருணை!
இப்பேர்ப்பட்ட எம்பெருமானைப் பார்த்துப் பார்த்து அனுபவிக்க வந்துள்ளார்கள்...
கயிலை நாதன் சிவபெருமான்
சத்யலோக நாதன் பிரம்மா
தமிழ்வேள் முருகப் பெருமான்
சனகாதி முனிவர்கள்....
எல்லாரும் வந்து, பங்காரு வாகிலியில் உன்னைச் சேவிக்க நிற்கிறார்கள்!
ஆவல் மிகுதியால் எட்டி எட்டிப் பார்க்கிறார்கள்...
பெருமாளின் வடிவழகைக் அப்படியே கண்களால் உறிஞ்சிப் பருகுவதற்கு!
துவார பாலகர்கள், இவர்கள் ஆவலை எல்லாம் முறைப்படுத்தி,
ஓங்காரப் பிரம்போசையால் மனம் ஒன்றச் செய்து, தரிசனத்துக்கு வழிவகை செய்து வைக்க...
என் அப்பனே, திருவேங்கடமுடையானே...
சிவபெருமானின் அன்பை பெற்றுக் கொள்ளவும்,
சண்முகனின் அன்பைப் பெற்றுக் கொள்ளவும்,
பிரம்ம சனகாதிகள் அன்பைப் பெற்றுக் கொள்ளவும்.....சீக்கிரமாகத் திருப்பள்ளி எழுவாயே!
ஸ்ரீ வேங்கடாசல பதே = அப்பா, திருவேங்கடமுடையானே
தவ சுப்ரபாதம் = இனிய காலை வணக்கங்கள்! திருப்பள்ளி எழுக!!
குறிப்பு:
இப்படி சிவபெருமானும் முருகப்பெருமானுமே ஆவல் மிகுதியால் காத்துக் கொண்டு நிற்கும் போது நாம் எல்லாரும் எம்மாத்திரம்?
- அதனால் அடுத்த திருமலை யாத்திரையில்,
க்யூ வரிசையில் நிற்கும் போது, அலுப்பு ஏற்பட்டு மனம் சலித்துக் கொள்ளாதீர்கள் :-)
முனிவர்களே பிரம்போசை கேட்கும் போது, நாம் எல்லாம் எம்மாத்திரம்?
கோவில் பணியாளர்கள் சற்றே கடுமையாக நம்மை நகர்த்தி விட்டாலும்,
அதற்காக எல்லாம் சலனப் படாதீர்கள்!
இதையெல்லாம் தாண்டிய பெரும் பொக்கிஷம் நம் முன்னே நிற்க,
இதெல்லாம் ஒரு பொருட்டா என்ன? :-)
----------------------------------------------------------------------------
முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1. M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2. கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3. தமிழ் சுப்ரபாதம் (நித்ய ஸ்ரீ) - (Windows Media Player)
நன்றி: Music: musicindiaonline.com, sribalaji.com Pics: tirumala-tirupati.com
----------------------------------------------------------------------------



























