Sunday, November 30, 2008

சுப்ரபாதம்(38,39,40): விநா வேங்கடேசம்! இனி ஜருகண்டி இல்லை!

திருமலையில் எம்பெருமான் சன்னிதியில் 45 நிமிடம் நிற்க ஆசையா? நடக்கிற காரியமா அது? ஜருகண்டி ஜருகண்டி மட்டுமில்லை! போதாக்குறைக்குப் பொன்னம்மா-ன்னு, இப்போ தேவஸ்தானம் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கு! பேரு=மகா லகு தரிசனம்! பெரிய "சுளுவான" தரிசனம்! இதுல என்ன சுளுவு-ன்னு கேக்கறீங்களா? ஹா ஹா ஹா! அங்க தான் ஆப்பு! :)

முன்பு போல, ஜய-விஜயர்களைத் தாண்டி, உள்ளே நுழைந்து, குலசேகரன் படிக்கு வெளியே, பெருமாளின் முன்னால், அரைக் கணமாச்சும் நின்று சேவிப்பது எல்லாம் இனிமேல் கிடையாது!
இனிமேல் துவார பாலகர்கள் கிட்ட இருந்தே தான் சேவித்துக் கொள்ளணும்! அதற்கு மேல் உள்ளே போக முடியாது! உள்ளே போய், வெளியில் வரும் வாக்கிங் டைம் மிச்சம்! ஹா ஹா ஹா! எப்படி இருக்கு ஐடியா?
இது தான் மகா லகு தரிசனம்? பெரிய "சுளுவான" தரிசனம்!:)

இதைக் கோயில் நிர்வாகம் எப்போதெல்லாம் நினைக்கிறதோ, அப்போதெல்லாம் அமல்படுத்தி விடுகிறது! நீங்க போகும் போது இந்த மகா லகு தரிசனம் இல்லாம இருந்தா, அது உங்க புண்ணியம்! இன்னும் பத்து வருஷத்தில், எல்லாரும் ஜன்னல் வழியாப் பாத்துக்குங்கப்பா-ன்னு சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை! :)

நிலைமை இப்படிப் போய்க் கொண்டு இருக்க, உங்களுக்கு மட்டும், சன்னிதியில் ஒரு முக்கால் மணி நேரம் அமர்ந்து கொண்டு, நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்துமாக, ஏகாந்தமாக, ஆசை தீர ருசித்துக் கொள்ளுங்கள் என்றால் எப்படி இருக்கும்?
அந்த வித்தை எப்படி-ன்னு தான் இன்னிக்கி சுப்ரபாதப் பதிவில் பார்க்கப் போகிறோம்!
வாங்க, தோத்திரத்தின் கடைசிப் பகுதிக்கு! இது உங்களில் பல பேருக்குத் தெரிந்த சுலோகம் தான்! மிகவும் இனிமையான பாடல்!




(இந்த சுலோகத்தைப் படிக்கும் போது, கூடவே கேட்டுப் பயில நினைத்தால், இதோ சொடுக்குங்கள்)

விநா வேங்கடேசம் ந நாதோ ந நாத
சதா வேங்கடேசம் ஸ்மராமி ஸ்மராமி
ஹரே வேங்கடேச ப்ரசீத ப்ரசீத
ப்ரியம் வேங்கடேச ப்ரயச்ச ப்ரயச்ச


விநா வேங்கடேசம் = வேங்கடேசனைத் தவிர
ந நாதோ ந நாத = வேறு தலைவன் இல்லை! வேறு தலைவன் இல்லை!
சதா வேங்கடேசம் = எப்போதும் வேங்கடேசனையே
ஸ்மராமி ஸ்மராமி = நினைத்துக் கொண்டிருக்கிறேன்! நினைத்துக் கொண்டிருக்கிறேன்!

ஹரே வேங்கடேச = அப்பனே வேங்கடேசா
ப்ரசீத ப்ரசீத = கருணை காட்டு! கருணை காட்டு!
ப்ரியம் வேங்கடேச = விருப்பமான வேங்கடேசா
ப்ரயச்ச ப்ரயச்ச = (மங்களங்களைக்) கொடுப்பாய்! கொடுப்பாய்!

அது என்ன "ப்ரியம்" வேங்கடேச? யாருக்குப் ப்ரியமானவன்? யாரெல்லாம் வேங்கடவனை விரும்புகிறார்கள்? மாறன் சொல்வதைக் கேளுங்கள்!
நிகரில் அமரர், முனிக் கணங்கள் "விரும்பும்" திருவேங்கடத்தானே!
புகல் ஒன்று இல்லா அடியேன் உன், அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே!

அது என்ன "விரும்பும்" திருவேங்கடத்தான்? "ப்ரியம்" வேங்கடேச?

* குடும்பஸ்தர்கள் முதல் துறவிகள் வரை,
* வாலிபன் முதல் வயோதிகன் வரை,
* ஏழை முதல் பணக்காரன் வரை,
* கள்ள நோட்டு அடிப்பவன் முதல் கள்ளமில்லா உள்ளத்தான் வரை.....
* சைவர்கள் முதல் வைணவர்கள் வரை,
* இந்திக்காரர்கள் முதல் மறத் தமிழர்கள் வரை,
* ஆதி சங்கரர் முதல் இராமானுசர் வரை...
இவ்வளவு பேரும் "விரும்பும்" திருவேங்கடத்தான்! - ஏன்?

பணம் குவியுதே! அதுனாலயா?
இல்லை! பணம், பெருங்கூட்டம் எல்லாம் இப்போ தானே...சுமார் ஒரு அம்பது அறுவது ஆண்டுக்கு முன்னால் தானே!அதுக்கு முன்னாடியெல்லாம் ஆண்டுக்கு ஒரு முறை போய் வருவதற்கே சிரமப்படுவாங்களே! ஆனா அப்போதும் வீட்டில் இருந்து கொண்டே, அவனுக்குன்னு தனியா முடிஞ்சி வச்சிப்பாங்களே - ஏன்?

இரண்டாயிரம் வருசமா இருக்குதே! சிலப்பதிகாரம் காலம் தொட்டு அப்படி என்ன ஒரு ஈர்ப்பு? தமிழ் இலக்கியம் மட்டும் தானா அவனைக் கொண்டாடுகிறது? தெய்வத் தமிழுக்குப் பின்னால் வந்த
* தெலுங்குக் கீர்த்தனைகள்,
* கன்னட தாச நாமாக்கள்,
* மலையாள கானங்கள்,
* மராத்தி அபாங்குகள்,
* ஒரிய தரங்கங்கள்,
* குஜராத்திய கோலாட்டப் பாடல்கள்-ன்னு...
எப்படி இத்தனை மொழிகளிலும் இவன் "விரும்பும்" திருவேங்கடத்தான் ஆனான்? "ப்ரிய" பாலாஜி ஆனான்?

ஆண்டாள் அரங்கனைத் தானே விரும்பினாள்? மணந்து கொண்டாள்? ஆனால் அரங்கன் மேல் பத்தே பாடல் தான் பாடினாள்! வேங்கடவன் மேல் தான் அதிகமான பாடல்கள்! வேங்கடற்குத் தான் தன்னை விதிக்கச் சொல்கிறாள்!
குல முதல்வனான நம்மாழ்வார், சரணாகதி என்று வரும் போது மட்டும், அரங்கனிடம் செய்யாமல், வேங்கடவனிடம் செய்யும் மாயம் என்ன?
"புகல் ஒன்று இல்லா அடியேன், உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே" என்ற சரணாகதிக்கான ஒரே பாசுரம், வேங்கடவன் மேல் அமைந்தது வியப்பிலும் வியப்பே!

இப்படி அனைவருக்கும் "ப்ரியம்" வேங்கடேசனாய் இருக்கும் காரணத்தை அறியத் தான் முடியுமா? முடியும்! முன்பே சுப்ரபாதப் பதிவில் சொன்னது போல்,
வேங்கடத்து நெடியோன் மட்டும் தான் மோட்சத்துக்கான வழியை நம் எல்லாருக்கும் சொல்லிக் கொடுத்துக் கொண்டே நிற்கிறான்!


* ஒரு கரம் பாதங்களைக் காட்டிப் பற்றிக் கொள் என்கிறது!
* இன்னொரு கரம், அப்படிப் பற்றிக் கொண்டால், இந்த உலக சமுத்திரம் வெறும் முழங்கால் ஆழம் தான், என்று முழங்காலில் கை வைத்துக் காட்டுகிறது! இது தான் அந்த ரகசியம்!

மோட்சம் எல்லாம் யாருக்குப்பா வேணும்?
நான் இந்தப் பிறவியில் ஜாலியா இருக்கணும்! எனக்கு அது தான் வேணும், இது தான் வேணும் - என்று கேட்பவர்கள் தான் பலரும் உண்டு! ஹா ஹா ஹா! அதையும் வேண்டுவன வேண்டியபடியே தருகிறான்!
* மோட்ச ரகசியமும் சொல்ல முடியும்! காதல் கதையும் சொல்ல முடியும்!
* சின்னக் குழந்தையுடனும் பழக முடியும்! பெரிய ஞானிகளிடமும் பழக முடியும்!
* நல்லவனிடமும் பழக முடியும்! கொள்ளைக் கூட்டத்திடமும் பழக முடியும்!

ஒரே தாய், ஒவ்வொரு குழந்தைக்கும், அவரவர்க்குப் பிடித்தமான மாதிரி சமைத்துப் போடுகிறாள் அல்லவா?
அது போல, அவரவர்க்குப் பிடித்தமான மாதிரி...
உன்னத் தருகிறான் வேங்கடவன்! உண்ணத் தருகிறான் வேங்கடவன்!

அதான் இவ்வளவு "ப்ரியம்" வேங்கடேச! "விரும்பும்" திருவேங்கடத்தானை!!

சதா வேங்கடேசம் ஸ்மராமி ஸ்மராமி! ப்ரியம் வேங்கடேச ப்ரயச்ச ப்ரயச்ச!!


இப்போ ஜருகண்டியை எப்படித் தவிர்க்கலாம் என்ற ரகசியம்:

அகம் தூர தஸ் தே பதாம்போஜ யுக்ம
ப்ரணாம் இச்சய ஆகத்ய சேவாம் கரோமி
சக்ருத் சேவயா நித்ய சேவா பலம் த்வம்
ப்ரயச்ச ப்ரயச்ச ப்ரபோ வேங்கடேச


அகம் தூர தஸ் = அடியேன் வெகு தூரத்திலிருந்து வந்துள்ளேன்!
தே, பத அம்போஜ யுக்ம = உன் தாமரை இணையடிகளை
ப்ரணாம் இச்சய ஆகத்ய = வணங்கும் ஆசையில் வந்துள்ளேன்!
சேவாம் கரோமி = உன்னைச் சேவிக்க வந்துள்ளேன்!

சக்ருத் சேவயா = எப்போதாவது ஒரு முறை, இப்படிச் செய்யும் சேவை,(அதை ஏற்றுக் கொண்டு)
நித்ய சேவா = உனை என்றும் கண் குளிரக் காணும் நீங்காத சேவை என்னும் நித்யப்படி சேவையை
பலம் த்வம் = நீ வரமாகக்
ப்ரயச்ச ப்ரயச்ச = கொடுப்பாய்! கொடுப்பாய்!
ப்ரபோ வேங்கடேச = பிரபோ வேங்கடேசா!

நீங்கள் போகும் போது, திரை போட்டு இருக்கா? அல்லது சன்னிதியில் ரொம்ப நேரம் நிற்க முடியவில்லையா? அதனால் என்ன?
நீங்கள் தான் அவனைப் பார்க்க முடியவில்லை! ஆனால் அவன் உங்களைப் பார்த்துக் கொண்டு தானே இருப்பான்? அவனை யாரும் ஜருகண்டி ஜருகண்டி-ன்னு சொல்ல முடியாதே! அப்புறம் எதற்கு வீண் கலக்கம்?

பத்தே நொடிகள் தான் தரிசனமா? அதனால் என்ன? ஒன்றே ஒன்றை மட்டும் நினைவில் வையுங்கள்!
* எக்காரணம் கொண்டும் கண்களை மூடிக் கொள்ளாதீர்கள்!
வேண்டுதல் வைக்கக் கூட நேரம் இருக்காது! அதனால் பரவசப்பட்டு கண்களை மூடிக் கொள்ளாதீர்கள்! பத்தே நொடிகள் தான்! உங்கள் புறக் கண் என்னும் காமிராவிலும், அகக் கண் என்னும் வீடியோ கருவியிலும் அப்படியே ஆழமாகப் பதிந்து வைத்துக் கொள்ளுங்கள்!

மேயச் சென்ற மாடு அசை போடுமா? நன்றாக மேய்ந்து, வீட்டுக்கு வந்து தானே அசை போடும்! அது போல சன்னிதியில் கண்களை மூடாதீர்கள்! வீட்டுக்கு வந்த பின்னர், அப்போது மூடிக் கொள்ளுங்கள்! மனத்திரையில் ஜருகண்டி ஜருகண்டி இல்லாமல், நீங்கள் விரும்பிய வண்ணமே ஓடும்!

இதை வேங்கடவன் சன்னிதியில் அடுத்த முறை போகும் போது சொல்லிவிட்டு வாருங்கள்!
"என் வீடு மிகத் தொலைவில் இருக்கு! இருந்தாலும் உன் மேல் இருக்கும் காதலால் தான், உன்னைப் பாக்கணும்-னே இவ்ளோ தூரம் வந்திருக்கேன்!
இன்னிக்கி நான் பார்க்கும் இந்த திவ்ய மங்களச் சேவையை, நான் எப்போதெல்லாம் நினைக்கின்றேனோ, அப்போதெல்லாம் எனக்குக் காட்டி அருள்வாய் காதலனே!"


தாயே தந்தை என்றும், தாரமே கிளை மக்கள் என்றும்
நோயே பட்டு ஒழிந்தேன், "உனைக் காண்பதோர் ஆசையினால்"
வேயேய் மாபொழில் சூழ், விமலச் சுனை வேங்கடவா!
நாயேன் வந்து அடைந்தேன், நல்கி என்னை ஆட்கொண்டு அருளே!

இது தான், வேங்கடவன் சன்னிதியில், ஜருகண்டி ஜருகண்டிக்குப் பயப்படாமல், பல மணி நேரம் தரிசனம் செய்ய வல்ல ரகசியம்!

(* ஏகாந்த சேவை என்னும் நள்ளிரவுத் தாலாட்டு-பள்ளியறைச் சேவை ஒன்று உண்டு! முன்பதிவு கிடையாது! அன்று இரவு 09:00 மணி வாக்கில், விஜயா வங்கியில், முதல் ஐம்பது பேருக்கு சிறிய கட்டணத்தில் டிக்கெட் வழங்குவார்கள்! கூட்டம் அதிகம் இருந்தால் அப்போ இது பொது தரிசனம் இன்றித் தனியாகச் செய்யப்பட்டு விடும்!
இந்தச் சேவைக்குச் சென்றால், ஆர அமர்ந்து, எம்பெருமானைத் தமிழிலும் தெலுங்கிலும் இசையோடு தாலாட்டி, பால் பருக வைத்து, கொசுவலை போட்டு மூடி உறங்கச் செய்து, பாதாதி கேசமாக, ஆழ்ந்து அனுபவிக்க முடியும்! அந்த நாளின் கடைசிச் சேவை! நடை சார்த்தி, அடுத்த முக்கால் மணியில் சுப்ரபாதம்! அடுத்த முறை செல்லும் போது முயன்று பார்க்கவும் :)





அக்ஞானினா மயா தோஷான்
அ சேஷாந் விகிதாந் ஹரே
க்ஷம ஸ்வ த்வம் க்ஷம ஸ்வ த்வம்
சேஷ சைல சிகா மணே!

அக்ஞானினா மயா தோஷான் = அறிவொன்றும் இல்லாதவன் நான்! என் குற்றங்களை எல்லாம்
அ சேஷாந் = மீதமே இல்லாமல்
விகிதாந் ஹரே = செய்வாயாக!
க்ஷம ஸ்வ த்வம் க்ஷம ஸ்வ த்வம் = என்னை மன்னிப்பாய்! என்னை மன்னிப்பாய்!
சேஷ சைல சிகா மணே = சேஷ மலைச் சிகா மணியே!

இப்படி உன்னைச் சேவித்து வந்த பின்னாலும், என் சுய பிரதாபங்களும், ஆணவமும், சுயநலமும் அவ்வப்போது தலை விரித்து ஆடுகின்றனவே!
அடி மனத்தில்-அந்தராத்மாவில் நீ இருந்து கொண்டு, இது தவறு என்று காட்டிக் கொடுத்தாலும், "என்" அறிவும் புத்தியும், என் மனசின் மொழியைக் கேட்பதில்லையே! என்ன செய்ய?

அறிவொன்றும் இல்லாத ஆய்க் குலத்தில் உன் தன்னை,
பிறவிப் பெறும் தனை புண்ணியம் யாம் உடையோம்!
குறையொன்றுமில்லாத கோவிந்தா....
அறியாத பிள்ளைகளோம், அன்பினால் உன் தன்னைச்
சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே!...


எங்கள் குற்றங்களை எல்லாம் ஒன்று கூட மிச்சம் வைக்காமல், பொசுக்கி விடு!
* இந்தப் பிறவிக்குச் சேர்த்து வைக்கும் Recurring Deposit பாவங்களையும் (பிராரப்தம்)
* அடுத்த பிறவிக்கு நாங்கள் சேர்த்து வைக்கும் Fixed Deposit பாவங்களயும் (ஆகமியம்)
ஒன்று கூட மிச்சம் வைக்காமல் பொசுக்கி விடு! வேங்+கடம் என்றாலே வெம்மையான பாவங்களைப் பொசுக்கும் மலை அல்லவா!

சென்று சேர் திரு வேங்கட மாமலை
ஒன்றுமே தொழ, நம் வினை ஓயுமே
- என்ற மாறன் வாக்கு பொய்யாகுமோ?
போய பிழையும், புகு தருவான் நின்றனவும்,
தீயினில் தூசாக ஆக்கி விடு! ஒன்று கூட மிச்சம் வைக்காதே!

க்ஷமஸ்வ த்வம் க்ஷமஸ்வ த்வம், சேஷ சைல சிகா மணே!
என்னை மன்னிப்பாய்! என்னை மன்னிப்பாய்! திருவேங்கடம் உடைய தேவே!

ஏடு கொண்டல வாடா, வேங்கட ரமணா - கோவிந்தா! கோவிந்தா!!
ஆபத் பாந்தவா, அனாத ரட்சகா - கோவிந்தா! கோவிந்தா!!

(சுப்ரபாதம் பாகம் 2of4 = வேங்கடேஸ்வர தோத்திரம் நிறைந்தது! சுபம்!)
அடுத்த பாகத்திலிருந்து, சரணெள, சரணம் ப்ரபத்யே-ன்னு, சரணாகதியைப் பார்ப்பதற்கு முன்....
அந்தரி இக்கட ரண்டி, பிரசாதம் தீஸ்கோண்டி, சரணாகதியை அப்பறம் செய்துக்கலாம்! பதிவர். அம்பி-காரு பொறந்த நாளு வேற! அல்வா இல்லைன்னாலும் லட்டாச்சும் கொடுப்போம் :)

Sunday, November 23, 2008

சுப்ரபாதம்(36&37): ரஜனி+காந்த்=எட்டு குணம்?

சின்ன வயசுல இந்தச் சுப்ரபாதம் கேட்கும் போது, அதுல ரஜினி, ரஜினி-ன்னு வரும்! எனக்கு அப்போ வடமொழி இட்லிமொழி எல்லாம் தெரியாது:) (இப்ப மட்டும் என்ன வாழுதாம்-ன்னு தானே கேக்கறீங்க?)
ஹைய்யோ, தலைவர் பேரு, ரஜனி-ன்னு சுப்ரபாதத்திலேயே வருது! அதை எம்.எஸ்.அம்மாவும் பாடுறாங்க-ன்னு புளகாங்கிதப் பட்டுப்பேன் போல! :)

நீங்களே கேட்டுப் பாருங்களேன்! ரஜினி, ரஜினி-ன்னு ஒலிப்பது போல இருக்கும்! ஆனா அது அந்த ரஜினி இல்ல! அது ரஜநி!
ரஜநி-ன்னா இருட்டு, கருப்பு என்பது பொருள்!
சிவாஜி படத்துல, ஷ்ரேயா, ரஜினியைப் பார்த்து, இந்தக் கலர்-ன்னு தானே சொல்லுவாங்க?:)

அப்போ ரஜனி+காந்த், அப்படின்னா என்ன அர்த்தம்? சொல்லுங்க பார்ப்போம்!
ரஜநி+காந்த் = கருப்பு+கவர்ச்சி
யாருப்பா அது, கருப்பா கவர்ச்சியா, கோபிகைகளைக் காந்தம் போல் கவர்ந்து இழுப்பவன்? தலைவரின் பெயர்க் காரணம் கூறுக!:)
வாங்க இன்னிக்கி சுப்ரபாதத்தில் அந்த "ரஜனி-காந்தனை"யும், அவன் "கல்யாண குணங்கள்" என்றால் என்னன்னும் பார்க்கலாம்!



(இந்த சுலோகத்தை படிக்கும் போது, கூடவே கேட்டுப் பயில நினைத்தால், இதோ சொடுக்குங்கள்)


அவனி தனயா கமநீய கரம்
ரஜநீ கர சாரு முக அம்-புருஹம்
ரஜநீ சர ராஜ தமோ மிகிரம்
மகநீயம் அகம் ரகுராம மயே


அவனி தனயா = பூமியின் மகள் (சீதை)
கமநீய கரம் = (அவள்) விரும்பும் கரங்களை உடையவனே!
ரஜநீ கர சாரு = (அவன்) கருத்த, கவர்ச்சியான
முக அம்புருஹம் = முகம் தாமரை போல இருக்கு!

ரஜநீ சர ராஜ = இருளில் நடமாடுபவர்களின் (அரக்கர்களின்) அரசன் (இராவணன்)
தமோ மிகிரம் = அவன் தமோ குணத்தைப் (கீழ்க் குணத்தை) போக்கியவன்!
மகநீயம் = மிகச் சிறந்தவன்!
அகம் ரகு-ராம மயே = என் இதயமே அந்த ரகு-ராகு-ராகவ மயமாய் இருக்கு!

சீதை = அவனியின் தனயை!
மண்ணுக்குள் தோன்றியவள்! மண்ணுக்குள்ளேயே மறைந்து போனவள்!
அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல், தன்னை இகழ்வார் எல்லாரையும், (அது அந்தப் பொல்லா இராமனாகவே இருப்பினும் கூட) தாங்கிக் கொண்டாள்!

ஸ்ரீதேவியின் அவதாரம்! பூதேவியின் மடியில் வந்து "உதித்தது" ஆச்சரியம் தான்! ஆம் சீதை பிறக்கவில்லை! உதித்தாள்!
ஒரு திரு-முருகன் வந்து ஆங்கே "உதித்தனன்" உலகம் உய்ய, என்பது போலவே சீதையும் "உதித்தவள்"! இராம நவமி, கிருஷ்ண ஜெயந்தி, ஹனுமத் ஜெயந்தி-ன்னு எல்லாம் இருக்கு! சீதா ஜெயந்தி இருக்கா? இல்லை! ஏன்னா, சீதை பிறக்கவில்லை! உதித்தாள்!

சீதையின் உதித்தல் பற்றி யாரேனும் பின்னூட்டத்தில் சொல்லுங்க! மிகவும் சுவாரஸ்யமான தோற்றம் சீதையின் தோற்றம்!
இராவணன் கண்ட குழந்தை, பின்னர் ஜனகர் கண்ட குழந்தையாக ஆனாளோ! சீதை, இராகவனை விட வயதில் மூத்தவள்!

அவள் விரும்பிக் கைப்பிடித்த கரம் இராகவ கரம்! அவன் கருப்பானவன் தான்! ஆனால் கவர்ச்சியானவன்! வெறும் கவர்ச்சி அல்ல! மங்கள, மஹநீய, அழியாத கவர்ச்சி!
மையோ மரகதமோ மறிகடலோ மழை முகிலோ
ஐயோ இவன் வடிவு என்பதோர் அழியா அழகுடையான்
என்கிறார் கம்பர்!
எதிரிகளும் விரும்பும் கவர்ச்சி உடையவன்! இராவணனே ஒரு கட்டத்தில், இராகவனின் குணங்களை எண்ணியெண்ணி வியக்கிறான்; ஆனால் யாரும் அறியாமல், தனிமையில்! :)

இருளில் நடமாடும் அரக்கர்களின் தலைவன் இராவணன்! அந்தணன்! புலஸ்திய மகரிஷியின் பேரன்! தன்னைச் சிவ பக்தன் என்று "சொல்லிக் கொள்வதில்" பெருமைப் படுபவன்!
ஆனால் மற்ற சிவனடியார்களை மதிக்காது, நந்தி தேவரிடம் சாபம் பெற்றான்!
தான் மட்டுமே சிவ-சிரோன்மணி என்று பக்தியிலும் ஆணவம் தான் பொங்கி வழிந்தது! இது தாமச பக்தி! தாமச குணம்!

ஆனால் "இன்று போய், நாளை வா" என்று சொன்ன அடுத்த கணமே, அந்தத் தாமச குணம் ஆடத் தொடங்கி விடுகிறது! அதே சிந்தனையில் ஆணவம் நாணவம் ஆக, நாணிப் போய் ஒரேயடியாக உட்கார்ந்து விட்டான் இலங்கேஸ்வரன்!
இப்படி இராவணப் பெருந்தகையின் தமோ குணத்தை ஒரே வாக்கியத்தில் போக்கியவா!
இராவணனை விடக் கீழ்-மனம் கொண்ட அடியேனின் தமோ குணத்தையும் போக்கு! எமை ஆக்கு! இராகவா எனும் நல் வாக்கு!

இராமாவதாரம் முடிந்து விட்டதால், இனி அதைப் பார்க்கவே முடியாதே! அந்தக் குறையைப் போக்கவென்றே, இன்றும் வேங்கட இராமனாக விளங்குகிறாய் திருவேங்கடத்தில்!
அகம் ரகு-ராம மயே! = என் இதயமே அந்த ரகு ராம மயமாய் இருக்கிறதே!

(*** முந்தைய பதிவில் சொன்னது போல், வில்/அம்புறாத் தூணி சுமந்த இராமனின் தழும்புகளை, வேங்கடவன் திருத்தோள்களில் இன்றும் காணலாம்! உரல் இழுத்து, மரம் ஒடித்த கண்ணனின் தழும்புகளை வேங்கடவன் திருவயிற்றிலே இன்றும் காணலாம்!)


அடுத்த சுலோகம் மிகவும் சிறப்பானது! ஏன் தெரியுமா? பகவானின் கல்யாண குணங்கள் என்றும் அடியார்கள் சொல்வது இதில் வருகின்றது! வாங்க பார்ப்போம், அப்படி என்ன தான் பெருசா "எண் குணம்"-னு?



சுமுகம் சு-ஹ்ருதம் சுலபம் சு-கதம்
ஸ்வநுஜ அஞ்ச சுகாயம், அமோக சரம்
அபகாய ரகூத்வகம் அன்யம் அகம்
ந கதஞ்சந கஞ்சந ஜாது பஜே

சு-முகம் = நல்ல முகம்
சு-ஹ்ருதம் = நல்ல இதயம்
சு-லபம் = எளிமையானவன்
சு-கதம் = எளிதில் அடையப்படுபவன்

ஸ்வனுஜம் = நல்ல தம்பிகளை உடையவன்
சு-காயம் = அழகிய உடல் வனப்பு கொண்டவன்
அமோக சரம் = வெல்லும் (வீணாகாத) அம்புகளை உடையவன்

அபகாய ரகூ த்வஹம் = அவன் ரகு குலத்தையே உயர்த்தியவன்
அன்ய அகம் = அவனைத் தவிர்த்து, நான் (அகம்)
கதஞ்சந கஞ்சந - எப்போதும் எங்கெங்கும்
ந ஜாது = அறிய மாட்டேன்
ந பஜே = வணங்க மாட்டேன்

பெருமாள் = சு-முகன், சு-ஹ்ருதன், சு-லபன், சு-கதன்!
சு-முகன், சு-ஹ்ருதன், அப்படின்னா என்ன? = முகமும் அழகு, அகமும் அழகு!
சரி, அப்போ சு-லபன், சு-கதன்? = மிகவும் சுலபமானவன்! சுலபமான கதி காட்டுபவன்!

அவன் செல்வந்தன் அல்லன்! அவன் எளிவந்தன்!
எளிமையானவன்! பிறவா யாக்கைப் பெரியோனாக இருப்பினும், அதையும் நமக்காக விட்டுக் கொடுத்து, நமக்காகவே பிறந்துழன்று நடிக்கிறான்! இந்த எளிவந்த தன்மை யாருக்கு வரும்?

அவரவர் தத்தம் நிலையில் இருந்து இறங்கி வராமல் வேண்டுமானால் தேவர்களுக்கு உதவி செய்வார்கள்! மக்களுக்கு உதவி செய்ய கீழே இறங்கி வரணுமே? நம்மிடையே வந்து, நம் கூடவே வாழ்ந்து, கஷ்டமான உலக வாழ்விலும், அறம் காப்பது எப்படி என்பதை எடுத்துக்காட்ட யார் உள்ளார்கள்?

சகல சக்திகள் இருந்தாலும், கழுத்தில் ஓலை கட்டிக் கொண்டு தூது போவதும், குதிரைக்குப் போர்க் களத்திலே புல் பிடுங்கிப் போடுவதும் யார் தான் செய்வார்கள்? உண்மையான தம்பியின் உயிர் காக்கும் வேளையிலும், சும்மா "தம்பி" என்று கூப்பிட்ட குகனின் நலத்தை முதலில் பார்த்துவிட்டு, அப்புறமா பரதனை நோக்கி ஓட யாருக்கு மனம் வரும்? அவன் தான் சுலபமானவன்! எளிவந்தன்!
அரி, வானவர்க்கு அரியன்! அடியார்க்கு எளியன்!
அறி-வானவர்க்கு அரியன்! அடியார்க்கு எளியன்!
:)

எல்லாம் சரி! ஆனால் அவன் தேவர்களுக்கு மட்டுமே சொந்தமல்லவா? அவர்களுக்கு மட்டும் தானே அருள்வான்?
ஹா ஹா ஹா! யார் சொன்னது? பிரகலாதன், குபேரன், மகாபலி, வீடணன், சுக்கிரன் என்று பலப்பல அரக்கர்களுக்கும் அருள் செய்பவன் ஆயிற்றே!
ஆனால் இந்திரனின் மகன் ஜெயந்தனை அடித்து விரட்டியவன் ஆயிற்றே! இந்திர பூசை நடக்க விடாமல், இயற்கையான ஒரு மலைக்குப் பூசை செய்யச் சொன்னவன் ஆயிற்றே!
அசுரன் பிரகலாதன் = பிரகலாத ஆழ்வார் ஆனான்!
தேவன் ஜெயந்தன் = காகாசுரன் என்று அசுரன் ஆனான்!

இப்படிக் குலம் பார்த்து அருளாது, குணம் பார்த்து அருளும் குணம் தானே பரம குணம்!
ஈசன் வானவர்க்கு என்பன் என்றால்-அது
தேசமோ திருவேங் கடத்தானுக்கு
?
என்று அதனால் தான், அவன் வானவர்க்கும் மட்டும் அன்பன் இல்லை என்று ஆழ்வார் பாடுகிறார்! அன்பு காட்டி, எளிமை காட்டும் குணங்களுக்கு "பெருமாளின் கல்யாண குணங்கள்" என்று பெயர்! அவை எவை?

1. வாத்சல்யம் = அன்பு உடைமை (Boundless Love)
2. செளலப்யம் = நீர்மை (Easily Visible & Approachable)
3. செளசீல்யம் = எளிவந்த தன்மை (Easily Mixing with Mortals)
4. சுவாமித்வம் = என்றும் கைவிடேன் என்னும் உரிமை (Sense of Ownership)

முமுட்சுப் படி என்னும் நூலில், இதை மிக அழகாக விளக்குகிறார் பிள்ளை லோகாசாரியார்!
* குற்றங் கண்டு வெருவாமைக்கு வாத்சல்யம்
* காரியம் செய்யும் என்று துணிகைக்கு சுவாமித்வம்
* சுவாமித்வம் கண்டு அகலாமைக்கு செளசீல்யம்
* அதைக் கண்டு பற்றுகைக்கு செளலப்யம்

என்று வியாயக்யானம் (விரிவுரை) செய்கிறார் அண்ணல்!

இந்த எளிமைக் குணங்களோடு, அவன் அருமைக் குணங்களும் உண்டு!

5. சர்வக்ஞ-த்வம் = முற்றும் உணர்தல் (Omniscient)
6. சர்வ சக்தி-த்வம் = முடிவிலா ஆற்றல் (Omnipotent)
7. சர்வ வியாபி-த்வம் = முற்றும் நிறைதல் (Omnipresent)
8. சத்-சித்-ஆனந்தம்/மங்களம் = முற்றிலும் இன்பம் (Bliss/Mangalam)

இந்த எட்டுக் குணங்கள் தான் "எண் குணம்" என்பது இல்லை! வள்ளுவர் காட்டும் எண் குணம் என்பது வேறு! மிகவும் ஆய்வுக்கு உரியது!
எண் குணத்தான் என்று ஐயன் வள்ளுவன் கடவுள் வாழ்த்தில் தொட்டுச் செல்வதை லேசாகப் பார்க்கலாம்!

இதற்கு உரை செய்த சிலர், "தன் வயத்தினன் ஆதல்" என்று ஆரம்பித்து ஒரு எட்டுக் குணங்களைப் பட்டியல் போடுவர்! ஏதோ இந்தக் குணங்கள் எல்லாம் வடமொழி தான் கண்டு பிடித்துக் கொடுத்தது போல் இருக்கும்! ஆனால் அதுவல்ல!
தமிழிலேயே இத்தனை குணங்களும் பேசப் படுகின்றன! சமயம் சாராத சில தமிழறிஞர்கள், எண் குணத்தான் என்பதை, எண்ண முடியாத குணங்கள் கொண்டவன் என்று பொருள் உரைக்கிறார்கள்.
ஆனால் முதல் எட்டுக் குறள்களில் கூறப்பட்ட எண்-குணங்களை நீங்களே பாருங்கள்!
1. ஆதிபகவன்,
2. வாலறிவன்,
3. மலர்மிசை ஏகினான்,
4. வேண்டுதல் வேண்டாமை இலான்,
5. இறைவன்,
6. பொறிவாயில் ஐந்து அவித்தான்,
7. தனக்குவமை இல்லாதான்,
8. அறவாழி அந்தணன்
என்ற எட்டு குணங்களையே, ஒன்பதாவது குறளில் ஒன்றாய்த் தொகுத்து,
கோளிற் பொறியில் குணம் இலவே? எண் குணத்தான்
தாளை வணங்காத் தலை!

என்று பாடி விடுகிறார் ஐயன்! இந்த எண் குணத்தையும் மேற் சொன்ன எட்டு கல்யாண குணங்களோடு பொருத்திப் பார்க்கலாமே தவிர, இந்த எண்-குணத்தை எல்லாம் கொண்டு, வள்ளுவர் வைணவர், சைவர், சமணர்-ன்னு எல்லாம் தற்குறிப்பேற்றம் செய்வது தகாது! வள்ளுவம் சமய நூல் அல்ல! எனவே சமய நூல் அல்லாத ஒன்றை வைத்து, அதன் ஆசிரியர் இந்தச் சமயமோ, அந்தச் சமயமோ என்பதும் தகாது!


இப்படி எண்ணிலாக் குணக் கடலாக இறைவன் விளங்குகிறான்!

அவதாரங்களில், இப்படிக் குணங்கள், குணங்கள், கல்யாண குணங்கள் என்று பேசப்படும் ஒரே அவதாரம் இராமாவதாரம் மட்டுமே!
இராமவதாரத்தை மட்டுமே "பெருமாள்" என்று குறிப்பதும் வழக்கம்! அந்த இராமப் "பெருமாள்" வணங்கிய விக்ரகம் "பெரிய பெருமாள்" (அரங்கன்)!
ஆண்டாளும் இராமனைத் தான் "மனத்துக்கு இனியான் (Sweet Heart)" என்று பாடுகிறாள்! கண்ணனை வெறுப்பேத்தக் கூட இருக்கலாம்! :)

பின்னாளில் உரைக்கப்பட்ட கீதைக்கு, "அட போப்பா, வாயில சொல்லுறது ஈசி! வாழ்ந்து பார்த்தா தானே தெரியும்?" என்ற பேச்சு வந்து விடக் கூடாது என்று தான்...
* முதலில் இராமனாய், தானே வாழ்ந்து காட்டி
* பின்னர் கண்ணனாய், ஊருக்கே உபதேசம் செய்கிறான்!

அதனால் தான் நம்மாழ்வார் என்னும் மாறன் சடகோபன்
கற்பார்கள் இராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ?
கேட்பார்கள் கேசவன் கீர்த்தி அல்லால் மற்றும் கேட்பரோ?
என்று பாடுகிறார்!

அந்தக் குணங்களைக் கேட்டுக் கேட்டு இன்னும் முடியவில்லையாம் ஒருத்தருக்கு! இன்னும் இன்னும் கேட்டுக்கிட்டே இருக்காரு!
அதனால் தான் திருமலைக் கோயில் வாசலில், தன் இரு கைகளுக்கும் விலங்கு இட்டுக் கொண்டு, வேங்கட ராமனைச் சேவித்தவாறு நின்று கொண்டே இருக்கிறார்!

யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம் = எங்கெங்கு இராமனின் கல்யாண குணங்கள் பாடப்படுதோ
தத்ர தத்ர க்ருதம் ஹஸ்தக அஞ்சலீம் = அங்கங்கு கூப்பிய கரத்தோடு வணங்கிக் கொண்டு

மாருதிம் நமதே என்று கல்யாண குணங்களில் திளைத்து இருக்கும் ஆஞ்சனேயன் பிறந்த மலை திருமலை-அஞ்சனாத்ரி!

ந கதஞ்சந கஞ்சந ஜாது பஜே! = நம் ஆஞ்சநேயன் கேட்டுக்கிட்டே இருக்கான்! நீங்களும் கேட்டுக்கிட்டே இருங்க!
விநா வேங்கடேசம் ந நாதோ ந நாத
சதா வேங்கடேசம் ஸ்மராமி ஸ்மராமி
என்று அடுத்த சனிக்கிழமை, இந்த சுப்ரபாதப் பகுதியை நிறைவு செய்வோம்! அவசியம் வாங்க! ஹரி ஓம்!

Friday, November 14, 2008

சுப்ரபாதம்(34&35) - ஆண்/பெண்களுக்குப் பிடித்தது இராமனா? கண்ணனா??

வேங்கட"ராமன்"-ன்னு பேரு கேள்விப்பட்டு இருப்பீங்க! வேங்கட "கிருஷ்ணன்"-ன்னு பேரும் கேள்விப்பட்டு இருப்பீங்க! இரண்டில் எது சரி? வேங்கடவன் = இராமனா? கண்ணனா?? இரண்டும் வேற வேற அவதாரங்கள்! வேற வேற கால கட்டங்கள்! எப்படி ஒரே நேரத்தில் வேங்கடத்தில் இருக்க முடியும்? வாங்க, இன்னிக்கு சுப்ரபாதம் பார்க்கலாமா?

* பெண்களுக்குப் பிடித்தது யார்? = கண்ணனா? இராமனா??
* ஆண்களுக்குப் பிடித்தது யார்? = இராமனா? கண்ணனா??


இராமன் புனித பிம்பம்! :)
ஆண்கள் இராமனை மதிப்பார்கள்! ஆனால் லயிக்க மாட்டார்கள்!
கண்ணன் மனித பிம்பம்! :)
பெண்கள் கண்ணனில் லயிப்பார்கள்! ஆனால் மதிக்க மாட்டார்கள்!

இந்த ஸ்தோத்திரம் ஆணும் பெண்ணும் பாடுவது போல் இருக்கு பாருங்கள்! பெண் யாரைப் பாடறா, ஆண் யாரைப் பாடுறான்-ன்னும் நீங்களே பாருங்க! லேடீஸ் ஃபர்ஷ்ட்! பெண்கள் பாடுவதைக் கேளுங்கள் :)




(இந்த சுலோகத்தை படிக்கும் போது, கூடவே கேட்டுப் பயில நினைத்தால், இதோ சொடுக்குங்கள்)
கல வேணு ரவா, வச கோப வதூ
சத கோடி வ்ருதாத், ஸ்மர கோடி ஸமாத்!
ப்ரதி வல்லவிகா அபி மதாத் சுகதாத்
வசுதேவ சுதாந் ந பரம் கலயே!!


கல வேணு ரவா = அருமையான புல்லாங்குழல் (வேணு) ஒலியால்
வச கோப வதூ = வசப்பட்ட கோபி கன்னிகைகள்
சத கோடி வ்ருதாத் = நூறு கோடி பேர் சூழ்ந்துள்ளார்கள்!
ஸ்மர கோடி ஸமாத் = கோடி மன்மதனுக்கு (ஸ்மரனுக்கு) ஒப்பானவனே!

(அப்படி நூறு கோடி பேர் சூழ்ந்தாலும்)
ப்ரதி வல்ல விகா = ஒவ்வொரு ப்ரிய கோபிக்கும்
அபிமதாத் சுகதாத் = அவர்கள் அபிமானித்தாற் போலே சுகமளிப்பவனே!
வசுதேவ சுதாந் = வசுதேவன் மகனே!
ந பரம் கலயே = (உனை அல்லால்) வேறு பரம்/கதி இல்லை!

மன்மதனை, விஷ்ணுவுக்கு மகனாகச் சொல்வார்கள்! மன்மதனுக்கு அனங்கன் என்றும் பெயர்! அதாச்சும் அன்+அங்கம்! உருவம் இல்லாதவன்!
சூப்பர்! உருவ வழிபாடு பிடிக்காதவங்கெல்லாம் இனி மன்மதனைக் கும்பிட்டுக்குங்க-ப்பா! லவ்வுக்கும் லவ்வும் ஆச்சு! ஆன்மீகத்துக்கும் ஆன்மீகமும் ஆச்சு! :)

ஆண்டாளும் மார்கழி நோன்பு முடிச்சி, தையொரு திங்களில், மன்மதனைத் தான் வணங்குகிறாள்! "அனங்க தேவா, உய்யவும் ஆங்கொலோ என்று சொல்லி உன்னையும் உம்பியையும் தொழுதேன்" என்று பாடுகிறாள்!

நெற்றிக் கண்ணால் எரித்த பின்னர், சிவபெருமானால் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்ட மன்மதன், உருவம் இல்லாமல் இருக்கிறான்! உருவம் இல்லாது இருக்கும் போதே, காதலில் இத்தனை பேரைப் பாடாய்ப் படுத்துகிறான்! இன்னும் உருவமும் இருந்து விட்டால்? அதுவும் மன்மதனைப் போலக் கோடி அழகர்கள் தோன்றி விட்டால்?

அதென்ன தோன்றி விட்டால்? அதான் தோன்றியாகி விட்டதே!....அவன் தான் கள்ளச் சிரிப்பழகன், கருப்பழகன், எழுகமலப் பூவழகன், கண்ணன்! அவனைச் சுற்றிச் சத கோடி கோபியர்கள்! இருவரையும் கட்டி வைப்பது புல்லாங் குழலின் பிரணவ நாதம்!

சரி, கோடி கோபியர்கள் சூழ்ந்தால் ஒரே ஒரு கண்ணன் என்ன செய்ய முடியும்? அத்தனை பேரும் அவரவர் அபிமானித்தாற் போலே, அவரவர்க்கு அவ்வவ்வாறு காட்சி தருகிறான் இறைவன்! இந்தக் க்ளோனிங் எஃபெக்ட் வேறு எந்த அவதாரத்திலும் இல்லை! :)

எப்படி H2O என்பதில் இரு ஹைட்ரஜன் அணுக்கள் ஒரு உயிர்வளிக்குக் (ஆக்சிஜன்) கட்டப்பட்டிருக்கு? Single Covalent Bond என்பதாலே! இது எத்தனை ஹைட்ரஜன் அணுக்களையும் அதனதன் தன்மைக்கு ஏற்ப ஏற்றுக் கொள்ளக் கூடியது! Thatz why we have more covalent bonds than ionic bonds.

அதனால் தான் H2O என்னும் நீருக்கு அனைத்தும் கரைக்க வல்ல குணம் (Universal Solvent)! நாரணம் என்பதும் இந்த நீர் தான் என்பதை முன்னரே சுப்ரபாத-தீர்த்தப் பதிவிலே சொல்லி இருக்கேன்! இந்த வேதியியல் நீர் என்பதைக் கொண்டே பல நுட்பமான படைப்புத் தத்துவங்களை அறிவியல் பார்வையில் புரிந்து கொள்ள முடியும்!

எப்படி பல ஹைட்ரஜன் அணுக்கள் ஒரு உயிர்வளிக்குக் கட்டப்பட்டிருக்கோ, அதே போல பல ஆத்மாக்களும் ஒரே பரம்பொருளுடன் கட்டப்பட்டு இருப்பது பிரணவ நாதம் என்ற சப்த மாத்திரத்தினால்! படைப்புத் தொழிலைப் பிரணவம் கொண்டு செய்கிறேன் என்று பிரம்மன் கூறுவதும் இதனால் தான்! பிரணவப் பொருளை முருகன் சிவனார்க்கு உரைப்பதும் இப்படித் தான்! முருகன் ஈசனின் காதில் சொன்னதை, அடியேன் உங்கள் காதிலும் சொல்கிறேன்! - மாதவிப் பந்தலில் பின்னொரு நாள்! :)

அது போல ஒரே இறைவன், பல கோபிகைகளுக்கும், பலப்பல கண்ணன்களாய்த் தோற்றம் காட்டுகிறான்! இப்படி மாயம் செய்யும் வசுதேவனின் மகனே, வாசுதேவா! உனை அல்லால் எங்களுக்கு வேறு பரம்/கதி இல்லை!

(வசு+தேவன்=செல்வம்+மிகுந்தவன்! வசுதேவன் வேறு! வாசுதேவன் வேறு!
வசுதேவன் மகன் வாசுதேவன் என்று கொண்டாலும், இறைவனுக்கு வாசுதேவன் என்பது மூலப்பெயர்! அவதார காலங்களை எல்லாம் கடந்த பெயர் அது! பர-வாசுதேவன்!)


அடுத்து ஆண்கள் பாடுவதைக் கேட்போமா? அவர்களுக்கு இராமனைத் தானே பிடிக்கும்! எல்லாக் கோபிகைகளையும் அவனே எடுத்துக் கொள்ளாமல், அவன் ஏக பத்தினி விரதனாய் இருப்பதால், எத்தனை ஆண்களுக்குப் போட்டி இல்லாமற் போகிறது! :)
நம் பதிவுலக நண்பர்களில் யாரெல்லாம் கண்ணன்? யாரெல்லாம் இராமன்?? சொல்லுங்க பார்ப்போம்! ஹிஹி! வாங்க பாட்டுக்குப் போவோம்!
அபி ராம, குணா கர, தாசரதே!
ஜக தேக தநுர் தர, தீர மதே
ரகு நாயக, ராம, ரமேச, விபோ!
வரதோ பவ! தேவ, தயா ஜலதே


அபி ராம = எல்லாரும் மிக விரும்பும் (ரமிக்கும்),
குணா கர = குணக் கொழுந்தே!
தாசரதே = தசரதன் புதல்வா!
ஜகத் ஏக = உலகிலேயே நீ தான்
தநுர் தர = கூர் வில்லாளன்!
தீர மதே = கூர் மதி கொண்டன்!

ரகு நாயக = ரகு குலக் கொழுந்தே!
ராம = ராமா (ராம என்னும் தாரக மந்திரம்)
ரமேச = ரமா என்னும் சீதைக்குத் தலைவா!
விபோ = சர்வமும் வியாபித்து இருப்பவனே!
வரதோ பவ = (எங்களுக்கு) என்றும் அருள் செய்வாய்! - (விஜயீ பவ என்பதைப் போலே, வரதோ பவ என்று கேட்கிறார்கள் அடியவர்கள்)
தேவ, தயா ஜலதே = இறைவனே! கருணைக் கடலே!

ராமா-ரமா - இதன் நுட்பத்தைத் தெரிஞ்சிக்கணும்!
ரமித்தல் என்றால் விரும்புதல்!
* பலராலும் ரமிக்கப்படுபவன் (விரும்பப்படுபவன்) = ராமன்!
* அவனை ரமிப்பவர்கள் = ரமா!

ரமா என்பது பொதுவாக அன்னையைக் குறிக்கும் சொல்! மகாலக்ஷ்மி, சீதை!
ஆனால் ரமிக்கும் அடியவர்களையும் ரமா என்று குறிக்கும் வழக்கம் உண்டு!
அவன் ராமன்! நாம் ரமா!

இந்த ராமம் என்பது வெறும் இராமவதாரம் மட்டுமன்று! சீதையின் கணவனைக் குறிக்கும் சொல் மட்டுமல்ல!
வாசுதேவன் என்பதைப் போலவே ராம என்பதும் பொதுவான இறை நாமம் தான்! மிகவும் நுட்பமான நாமம்! இன்னும் ஒரு படி மேலே! நுட்பமான மந்திரம்!

ராம - என்பதற்குத் தாரக மந்திரம் என்று பெயர்! இந்தத் தாரக மந்திரத்தைத் தான் காசியில் முக்தி அடையும் உயிர்களின் செவிகளில், சிவபெருமான் ஓதுகிறார்!
நமோ நா"ரா"யணாய ("ரா") + ந"" சிவாய ("ம") = "ராம"
இது தான் ராம என்னும் தாரக மந்திர மூலப் பொருள்!

* ம-வை எடுத்து விடுங்கள்! ந+சிவாய என்று ஆகி, மங்களம் இல்லை என்று ஆகி விடும்!
* ரா-வை எடுத்து விடுங்கள்! நமோ நாணாய என்று ஆகி, நீர் ஆதாரமே போய் விடும்!
ஆக "ராம" என்பது தான் இரு பெரும் மந்திரங்களையும் ஒரு சேரக் கட்டுகிறது!

அதனால் தான் சஹஸ்ரநாமத்தில் இதன் பொருள் பெரிதாக வைத்துப் பேசப்படுகிறது! ஈசன் பார்வதிக்கு உபதேசித்து அருள்கிறார்!
ஸ்ரீ ராம ராம ராமேதி
ரமே ராமே மனோ ரமே!
சஹஸ்ர நாம தத்துல்யம்
ராம நாம வராணனே!!


இதன் பொருளையும் நுட்பத்தையும் அன்பர்கள்/அடியவர்கள் யாரேனும் இங்கு பகிர்ந்து கொள்ளுமாறு விண்ணப்பித்துக் கொள்கிறேன்!



இப்படித் திருவேங்கடமுடையான் இராமனாகவும் கண்ணனாகவும் மாறி மாறிக் காட்சி கொடுக்கிறான்!
* இன்றும் வேங்கடவன் திருமேனித் தோள்களிலே, அம்புறாத் தூணி கட்டப்பட்ட தழும்புகளும், நாணேற்றிய தோள் தழும்பும் இருக்கும்!
* இன்றும் திருவயிற்றுப் பகுதியிலே, உரலில் பிணைக்கப்பட்ட தாம்புக் கயிற்றுத் தழும்புகளும் இருக்கும்!

அதனால் தான் நம்மாழ்வார்,
புணரா நின்ற மரம் ஏழ் அன்று எய்த ஒரு வில் வலவாவோ,
புணர் ஏய் நின்ற மரம் இரண்டின் நடுவே போன முதல்வாவோ,
திணர் ஆர் மேகம் எனக் களிறு சேரும் திருவேங் கடத்தானே,
திணரார் சார்ங்கத்து உன் பாதம் சேர்வது அடியேன் எந்நாளே?
* மரம் ஏழ் துளைத்து, இராமனாய் வில் சுமந்ததையும்,
* மரம் இரண்டு புகுந்து, கண்ணனாய், வயிற்றில் உரல் தேய்ந்ததையும்
,
என்று வேங்கடவனுக்கு மட்டும் இணைத்துப் பாடுகிறார்!

மலையப்ப சுவாமி = அனுமந்த வாகன இராமனாய்! காளிங்க நடனக் கண்ணனாய்!

இப்படி
வேங்கட"ராமன்"-ன்னு என்றும்
வேங்கட "கிருஷ்ணன்" என்றும்,

வெவ்வேறு யுகக் காட்சிகளை, ஒரே சமயத்தில் காட்டி,
தரிசன மகா பாக்கியம் செய்து வைக்கிறான் திருமலை ஆனந்த நிலையத்தில்!

வேங்கட-கிருஷ்ணா, வேங்கட-ரமணா, கோவிந்தா! கோவிந்தா!
திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்!! ஹரி ஓம்!

Sunday, November 09, 2008

சுப்ரபாதம்(32&33) - திருப்பதியில் ஏது இம்புட்டு பணம்?

வேங்கடவனைப் போல பரம ஏழை வேறு யாரும் கிடையாது! அவன் ஒரு தரித்திரன்-அப்படின்னு தினமும் திருமலையில பாடுறாங்க! அடப்பாவிங்களா! அநியாயமா இல்லை? வாய்க்கூசாம பொய் சொல்லுறாங்களே? உண்டியல் காசு உலகத்துக்கே தெரியுமே! உண்டியலை ஷிப்ஃட்டு போட்டு எண்ணும் அவன் ஏழையா? இல்லை, ரெண்டே ரெண்டு லட்டுக்கு கால் கடுக்க நிக்கும் நாம ஏழையா?

"சமாதிக "தரித்திராய" வேங்கடேசாய மங்களம்!" என்று பெருமாளைத் தரித்திரன் என்றே குறிப்படுகிறார்கள்! = இதெல்லாம் டூ டூ மச்! பாக்கலாம் வாரீங்களா? இன்னிக்கி தோத்திரத்தை? :)

சரி, வேங்கடவன் மட்டும் எப்பிடி இம்புட்டுப் பணக்காரன் ஆனான்?
பல திவ்யதேச எம்பெருமான்கள் எல்லாம் மிடில் கிளாஸ், லோயர் மிடில் கிளாஸ், வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்க, இவனுக்கு மட்டும் என்ன அப்படிக் கொட்டுது? :)
பல பேரிடம் கேட்டுப் பார்த்தேன்! ஒவ்வொருத்தர் ஒவ்வொரு விதமாச் சொல்லுறாங்க! பகுத்தறிவு விமர்சனம் கூட ஒருத்தர் சொல்றாரு :)




ஜகத்குருவான ஆதி சங்கரரை ஒரு காபாலிகனிடம் இருந்து காப்பாற்றினார் நரசிம்மர். அவர் உடனே சிங்கவேள் குன்றம் (அகோபிலம்) சென்று நரசிம்மனை வழிபட்டார்!
அப்போது "திருமலை செல்! மோட்சத்துக்கு என்ன வழி? என்பதைச் சூசகமாக காட்டி நிற்கிறான்! அங்கு சென்றால் தான் உமக்கு விளங்கும்!" என்று உத்தரவானது! உடனே திருப்பதி யாத்திரையை மேற்கொண்டார் பகவத்பாதர்.

திருப்பதியில் இருப்பது பெருமாள் தானா? என்றெல்லாம் கிளப்பிவிடப்படாத கால கட்டம் அது! இளங்கோவடிகள் முதற்கொண்டு, ஆதி சங்கரரும் வேங்கடவன் பெருமாளே என்பதை மிக நன்றாக அறிவார்.
இத்தனைக்கும் இராமானுசருக்கு இருநூறு ஆண்டுக்கு முற்பட்டவர் சங்கரர். எட்டாம் நூற்றாண்டு. அவர் திருமலை வந்து எம்பெருமானைக் கண்ணாரக் கண்டு களித்தார்.

வைத்த கண்ணை எடுக்க முடியவில்லை! பிஞ்சிற் பழுத்த துறவியான அவரே பெருமாளின் பேரழகில் மனம் தடுமாறினார்! உடனே விஷ்ணு பாதாதி கேச ஸ்தோத்திரம் என்ற துதியை இறைவன் மேல் பாடத் தொடங்கி விட்டார். பாதம் முதலாக, உச்சி வரை, ஒவ்வொரு அங்கமாக வர்ணித்து வர்ணித்து, விஷ்ணும் நமாம்யஹம் என்று போற்றி மகிழ்ந்தார்.

இப்படி மோட்ச ரகசியம் காட்டிக் கொடுப்பவனை, ஊருக்கே காட்டிக் கொடுக்க எண்ணி விட்டார் ஆதி சங்கரர்! மக்கள் மலையேறி வந்து அல்லவா சேவிக்க வேண்டும்!
ஏறுவதற்கே மூனு மணி நேரம் மேலே ஆகுது! குளிர் வேற அப்பப்போ நடுங்குது! மிகவும் கடுமையான யாத்திரையாக இருக்கே! மக்கள் வராது போனால்? பெரும் புதையலை அல்லவா இழப்பார்கள்?

ஜனாகர்ஷ்ணம் (ஜன+ஆகர்ஷணம்=மக்கள் ஈர்ப்பு),
தனாகர்ஷணம்(தன+ஆகர்ஷணம்=செல்வ ஈர்ப்பு)

என்ற இரண்டு மந்திர யந்திரங்களைச் செய்வித்தார். தாமே யோகத்தில் இருந்து பெருமாளின் திருவடிகளில் ஸ்தாபிக்கச் செய்து விட்டார் ஜகத்குரு!

ஏற்கனவே அவன் பத்மபீடத்தின் அடியில், மனோ காரகனான சந்திரன் வேறு நிலை கொண்டுள்ளான்!
இன்னிக்கும் ஜோதிட பரிகாரங்களில், சந்திர தோஷ நிவர்த்தித் தலமாகத் திருப்பதி சொல்லப்படுகிறது! இப்போது இந்த ஜனாகர்ஷண யந்திரம் வேறு! சொல்லணுமா?
இது தான் திருமலைச் செல்வச் செழிப்புக்குக் காரணம் என்று பலரும் சொல்வார்கள்!

சங்கரருக்குப் பின் வந்த அனந்தாழ்வான்-இராமானுசர் காலத்தில் கூட அவ்வளவு செழிப்பு இல்லை! பூமாலைக்கே வழியின்றி இருந்தான் திருமலையான்!
சங்கரர் ஸ்தாபித்த யந்திரபலம் பிரசித்தமாகத் தெரிய காலப் பரிமாணம் ஆகுமில்லையா?
சில ஆண்டுகள் கழித்து, கொஞ்சம் கொஞ்சமாய், திருமலையே மக்கள் மலையாக மாறி விட்டது!



என் நண்பர் ஒருவர் பகுத்தறிவுவாதி! கம்யூனிஸ்ட்! ஆனால் வேங்கடவன் மேல் மட்டும் கொள்ளைப் பிரியம்! (வெளியில் தெரியாமல்!)
அவருக்கு இந்த யந்திர மந்திர தந்திரத்தில் எல்லாம் நம்பிக்கை இல்லை! ஆனால் திருவேங்கடமுடையானை மட்டும் "நைசாக" யாருக்கும் தெரியாமல் போய் பார்த்து வருவார்!
திருப்பதியில் மட்டும் ஏன் இம்புட்டு செல்வம் என்பதற்கு அவர் "பகுத்தறிவுப் பாணியில்" ஒரு விளக்கம் சொன்னார்! கேட்டு ஆடிப் போயிட்டேன்! :)

"அடேய் கேஆரெஸ்!
என்னிக்குமே உழைப்புக்கு ஏற்ற ஊதியம் தான்! உழைச்சவன் தான் உசருவான்! தெரிஞ்சிக்கோ!
வேற ஊர் பெருமாளைப் பாரு! காலையில லேட்டா ஆறேழு மணிக்கு எழுந்துக்கறது! மதியம் கதவை மூடிக்கிட்டு ஒரு குட்டித் தூக்கம்! சாயங்காலம் கொஞ்ச நேரம் போக்கு காட்டிட்டு, எட்டு மணிக்கெல்லாம் மறுபடியும் தூங்கப் போயிடறது!

திருமலையான் அப்படியா? விடிகாலைல மூனு மணிக்குச் சிற்றஞ் சிறு காலே-ன்னு குளிர்ல நிக்க ஆரம்பிச்சவன் தான்......
சிறு காலே சிறு காலே-ன்னு கால் வலிக்க நின்னுகிட்டே இருக்கான்!
மதிய ஓய்வு கூட இல்லை! இராத்திரி ரெண்டு மணிக்கு, ஏகாந்த சேவை-ன்னு தூங்க வைக்குறானுங்க! கோயிலைப் பூட்டிட்டு அந்தாண்ட போறதுக்குள்ள, அடுத்த ஷிப்ட்டு ஆளு வந்து, கதவைத் தொறந்து விட்டு சுப்ரபாதம் பாடுறான்!
என்னிக்குமே உழைப்புக்கு ஏத்த கூலி தான்! யந்திரமும் இல்ல! மந்திரமும் இல்ல! தெரிஞ்சிக்கோ"-ன்னு சிரிச்சிக்கிட்டே சொன்னாரு!

இப்படிக் கூலியாளான வேங்கடவன் ஏழை தான்! ஏழைப் பங்காளன் தான்! ஏழைப் பங்கு ஆளனையே பாடேலோ ரெம்பவாய்! :)
அதுக்காக, "தரித்திராய வேங்கடேசாய!", தரித்திரன்-என்றா கடவுளைச் சொல்வது? சேச்சே!
சுப்ரபாதத்தின் தொடர்ச்சியாக, இந்தத் தோத்திரமும் அப்படித் தான் சொல்லுது! அழகான சந்தமான "தோடக விருத்தத்தில்" அமைந்துள்ளது பாட்டு! பாக்கலாம் வாங்க!



(இந்த சுலோகத்தை படிக்கும் போது, கூடவே கேட்டுப் பயில நினைத்தால், இதோ சொடுக்குங்கள்)


அதி வேல தயா தவ துர்விஷஹைர்
அனு வேல க்ருதைர் அபராத சதை:
பரிதம் த்வரிதம் வ்ருஷ சைல பதே!
பரயா க்ருபயா பரிபாஹி ஹரே!


அதி வேல தயா தவ = மிகப் பெரிதான அளவற்ற கருணை உனது!

துர்விஷஹை = துர் விஷயங்கள் என்னும் பாப கர்மாக்களை, தீச்செயல்களை
அனு வேல, க்ருதைர் = காலம் காலமாகச் செய்து கொண்டிருக்கேன்!
அபராத சதை = என் அபராதங்களோ நூறு, நூறாய்ப் பெருகுகிறது! (அதை எல்லாம்)
பரிதம் த்வரிதம் = (உன் கருணை) சூழ்ந்து கொண்டு, துரிதமாய் மூழ்கடிக்கின்றது!

வ்ருஷ சைல பதே! = விருஷபாத்ரி என்னும் விருஷமலைக்குத் தலைவா!
பரயா க்ருபயா = உன் பரம கருணையால்,
"பரிபாஹி" ஹரே = எங்களைப் பரிபூர்ணமாக, முழுவதுமாய்க் காப்பாயாக!

வேங்கடவனுக்கு மட்டும் "அளவுக்கு அதிகமான" தயை இருக்கக் காரணம் என்ன?
தனியாகத் தாயார் சன்னிதி கிடையாது. அவனோடவே அகலகில்லேன் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா-ன்னு வீற்றிருக்கிறாள்!
அதனால் தான் அவன் ஸ்ரீ-நிவாசன்! திரு-மால்!
அவள் தயா தேவி! அதனால் தான் வேதாந்த தேசிகர் அவன் மேல் பாடாது, தயா மேல் பாடினார்! தயா சதகம் என்பது அந்த நூல்!

இப்படி நூறு நூறாத் தீச்செயல் செஞ்சிக்கிட்டே இருக்கேன் நானு!
ஒன்னு செஞ்சாலே, அதை மறைக்க இன்னொன்னு செஞ்சி, இன்னொன்னை ஒளிக்க இன்னொன்னு செஞ்சி, இப்படி ஒன்னே, நூறு நூறா குட்டிப் போடுது!
அடுத்த பிறவிக்காகச், சஞ்சிதம் என்னும் பாவ மூட்டையில் இன்னும் கொஞ்சம் கட்டுச் சோறு போல கட்டிக்கறோம்! :)

இந்தச் சுழற்சியை நிறுத்த வழியே இல்லையா?
சஞ்சித-ஆகாம்யங்களை அறுத்து, இந்தப் பிறவிக்கான பிராரப்தங்களை முடிக்கவே முடியாதா? போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகப் பண்ணவே முடியாதா?

முடியும்! எப்படி முடியும்?
பற்றை விட்டால் பாவச் சுழற்சி நின்று விடும்!


என்னாது ஆசையை ஒழிக்கணுமா?
அடப் போப்பா! புத்தரே ஆசையை ஒழிக்கணும்-ன்னு ஆசைப்பட்டாரு!
எனக்கு அடுத்த மாசம் ப்ரமோஷன் வரப் போவுது! பல்க்கா ஒரு அமெளண்ட்டும் வரும்! அதை வச்சி அந்தப் பக்கத்து வீட்டுக்காரன் நிலத்தை எப்படி வளைச்சிப் போடறேன் பாரு! ரொம்ப நாளா அந்த நிலத்து மேல கண்ணு! பாவி விக்க மாட்டேங்குறான்!
பணத்துக்குப் படியலேன்னா, பவரைக் காட்டிற வேண்டியது தான்! ஏய் செல்லம், உங்கப்பாவுக்கு அந்த அமைச்சரு தெரியும் தானே?
ஏழுமலையானே! இத மட்டும் நல்லபடியா நடத்திக் கொடுத்துருப்பா! உனக்குத் தங்க வேலு காணிக்கையாப் போடுறேன்! :)

ஆக...பற்றை விடறது ரொம்ப கஷ்டம்! ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பற்று! அவனவனுக்கு அவனவன் நியாயம்! இதுல எப்படிப் பற்றை ஒழிக்கறது?
வள்ளுவம் வழி காட்டுகிறது பாருங்கள்!

பற்றுக பற்றற்றான் பற்றினை! - அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு!
பற்றில்லாத இறைவனின் திருவடிகளில் கொஞ்சம் கொஞ்சமா பற்றினால்...கொஞ்சம் கொஞ்சமா பற்று விடும்!

ஓக்கே கொஞ்சம் கொஞ்சமா விடும்! அப்படி விட்டால்? அடுத்து என்ன??
அற்றது பற்றெனில் உற்றது வீடு!

அதனால் தான் வெறுமனே "பாஹி" (காப்பாற்று) என்று வேண்டாது, "பரிபாஹி" என்று வேண்டுகிறார்!
பரி-பாஹி! பரிபூர்ணமாய்க் காப்பாற்று! விலக்கி விலக்கிக் காப்பாற்று!
தேவையில்லாத பற்றை விலக்கி விலக்கிக் காப்பாற்று!
மற்றை நம் காமங்களை மாற்றி மாற்றிக் காப்பாற்று!
பரயா க்ருபயா "பரிபாஹி" ஹரே!


இப்போ, தரித்திரன் என்று சொன்ன சொல்லுக்கு வருவோம்! தரித்திரன்-ன்னு யாரைச் சொல்லுவோம்?
அடுத்து வேளைக்கு ஒன்னுமே காட்ட முடியாத படி, அவனுக்கு எதுவுமே இல்லை, யாரையும் போய்க் கேட்க கூட யாருமில்லை! - அப்படி இருக்கறவனைத் தானே தரித்திரன்-ன்னு சொல்லுவோம்? வேங்கடவனும் அப்படித் தானாம்! எப்படி?

என் குணம் என்ன? = தப்பு பண்ணுறது!
எனக்குச் சமமா தப்பு பண்றவங்களா? = பல பேரைக் காட்டுவேன்!
என்னை விட அதிகமாத் தப்பு பண்றவங்களா? = இன்னும் பல பேரைக் காட்டுவேன்!
அதே போல,
உன் குணம் என்ன? = கருணை காட்டுவது!
உனக்கு சமமா கருணை செய்கிறவர்கள் = ஒருத்தரைக் காட்டு பார்ப்போம்!
உன்னை விட அதிகமா கருணை செய்கிறவர்கள் = ஒருத்தரைக் காட்டு பார்ப்போம்!

வேங்கடவா, உனக்குச் சமமான ஆளைக் காட்டு! = யாருமே இல்லை!
சரி போகட்டும், உனக்கு அதிகமான ஆளைக் காட்டு! = யாருமே இல்லை!

சுத்தம்...அப்படின்னா நீ சம+அதிக தரித்திரனே தான்! யாருமே இல்லை உனக்கு! யாரையும் சமமாகவோ, அதிகமாகவோ காட்ட முடியாது உன்னால! சமாதிக தரித்திராய வேங்கடேசாய மங்களம்!






அதி வேங்கட சைலம் உதாரம தேர்
ஜன தாபி மதா திக, தான ரதாத்
பர தேவ தயா, கதி தாந் நிகமை:
கமலா தயிதாந் ந பரம் கலயே!


அதி வேங்கட சைலம் = அந்த வேங்கட மலையில் நிற்கும்
உதாரமதேர் = கருணை மேகமே!
ஜனதா அபிமதா அதிக = மக்கள் வேண்டுவதை விட அதிகமாக (சமாதிகமாக)
தான ரதாத் = கொடுக்கும் வள்ளலே!

பர தேவ தயா = பரப்பிரம்மம் என்பவன் நீ தான்!
கதிதாந் நிகமை: = என்று நிகமங்கள், வேதங்கள் சாற்றுகின்றன!
கமலா தயிதாந் = கமலையின்(திருமகளின்) அன்பே!
ந பரம் கலயே = (உன்னையன்றி) வேறு ஒரு பரம்/கதி எனக்கு இல்லை!

வேண்டுவதை விட அதிகமாகவே கொடுப்பவன். ஜருகண்டி ஜருகண்டி-யில் பார்க்கவே நேரம் போதலை! இதுல எங்கே தனியா வேண்டிக்கறது?
அது அவனுக்கே தெரியும் போல! அதான் வேண்ட நினைத்ததை விட, அதிகமாகவே கொடுக்கிறான்! - ஜனதா அபிமதா அதிக!

பர தேவ தயா:
பரப்பிரம்மம் என்ற வாசகத்தை வேதங்கள் "நாராயண" என்ற பதத்துக்கே சொல்கின்றன!
சமய பேதங்கள் எல்லாம் கடந்து,
சங்கரர், இராமானுசர், மாத்வர், வல்லபர்...இன்னும் அத்தனை பேரும்,
யார் யாரெல்லாம் வேதத்துக்கு-பிரம்ம சூத்திரங்களுக்கு உரை எழுதினார்களோ...
அவர்கள் சைவரோ, வைணவரோ, சாக்தரோ, முருக அன்பரோ, எல்லாருமே...

வேதங்கள், பரப்பிரம்மம் என்று குறிப்பது, "நாராயண" என்ற பதத்தைத் தான்! என்று பாஷ்யம் எழுதி வைத்தார்கள்!

அந்த "நாராயண" என்கிற பதம் எந்தக் கடவுளை வேண்டுமானாலும் குறித்துக் கொள்ளட்டும்!
வெறும் சங்கு சக்கரத்தை மட்டும் நினைச்சிக்கிட்டு அந்தப் பதத்தைப் பார்த்தால், ஒரு சிலருக்குக் கோபம் கூட வரலாம்! என்ன இது, தேவியிடம் ஈடுபட்ட நம்ம ஆதிசங்கரர் கூட இப்படிச் சொல்லிட்டுப் போயிட்டாரே-ன்னு எனக்கும் தோன்றியது உண்டு!

ஆனால் ஆச்சார்ய ஹிருதயம் என்றுமே பொய்க்காது!
சமயம் கடந்து, வேத சத்தியத்தை உணர்த்திச் சென்றார்கள், பாஷ்யம் செய்த அத்தனை ஆச்சாரியர்களும்!

"நாராயண" என்னும் பதம், வைணவப் பெயர் போலவே நமக்குப் பழகி விட்டது! ஆனால், வைணவர்கள் மட்டுமே அதற்கு உரிமையும் கொண்டாட முடியாது! அத்தனை ஆச்சாரியர்களும் ஏகமனதாகச் சொன்ன பரப்பிரும்ம வாசகம் அது தான் என்பதில் ஐயமில்லை!

இதை ஏன் இங்கு சொல்றேன்னா....
பர தேவ தயா கதி தாந் நிகமை: என்று இந்தத் தோத்திரத்தில் வருவதால் தான்! உடையவர் செய்த பாஷ்யத்துக்கும், திருமலைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு!

ஆதி சங்கரரின் பாஷ்யதுக்குச் சங்கர பாஷ்யம் என்றே பெயர்!
நாராயண பரோ வக்யாத் அண்டம் அவ்யக்த சம்பவம்! நாராயணஹ பரஹ! என்று தான் தம் பாஷ்யத்தை ஆரம்பிக்கிறார் சங்கரர்!

அவருக்குப் பின்னால் வந்த இராமானுசரும் பாஷ்யம் செய்ய விரும்பினார்.
ஆனால் அதற்கு மூல நூல், மற்ற உரைகள் எல்லாம் நல்லபடியாகக் கிடைக்க வேண்டுமே! மூல நூல் காஷ்மீரம் சரஸ்வதி பீடத்தில் உள்ளது! காஷ்மீரப் பண்டிதர்கள் கண்டிப்பானவர்கள்! வாசித்துப் பார்க்கக் கேட்டால் கூடத் தருவார்களா என்பது சந்தேகம் தான்!
அவ்வளவு தூரம் புறப்படும் முன்னர், திருமலைக்கு வந்து, மோட்சக் குறிப்பு காட்டுபவனை வேண்டிக் கொள்கிறார்! வழி காட்டுவாய் தயா தேவி என்று வேண்டுதல்!

வயதான காலத்தில் காஷ்மீரம் செல்கிறார்! காஷ்மீரப் பண்டிதர்கள் லேசுப்பட்ட ஆளா? கடைசியில் மன்னனின் ஆணையால் வேண்டா வெறுப்பாகக் கொடுக்கிறார்கள்! ஆனால் ராவோடு ராவாக நூல் களவு போகிறது! ஆனால் தயா தேவியின் அருளால் உடையவரின் சீடர் கூரத்தாழ்வான் இடைப்பட்ட நேரத்தில் பல பகுதிகளை மனப்பாடம் செய்துவிட்டார்!

இப்படிப் பல சிரமங்களுக்குப் பின் நல்லபடியாகப் பாஷ்யப் பணி நிறைவேறுகிறது! ஸ்ரீ பாஷ்யம் என்று பெயர்!
வடமொழியில் எழுதினாலும், தமிழ்ப் பண்பாட்டின் படியே, இராமானுசர் உரையைச் செய்கிறார்!

தமிழ் மரபுப் படி, அரும் பெரும் நூல்களை, உலகம் என்று வைத்துத் துவங்குதல் தான் வழக்கம்! தொல்காப்பியம் உலகம் என்று தொடங்காவிடினும், முதல் அடியிலேயே உலகம் என்று சொல்லி விடுகிறது!
* வட வேங்கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல் உலகத்து - தொல்காப்பியம்
* உலகம் உவப்ப வலனேர்பு - திருமுருகாற்றுப்படை!
* உலகம் மூன்றும் ஒருங்குடன் ஏத்துமாண் - வளையாபதி
* வையம் தகளியா - ஆழ்வார்களின் அருளிச் செயல் - நாலாயிர திவ்யப் பிரபந்தம்
* உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் - சிவபிரானே முதற்சொல் கொடுத்த பெரியபுராணம்!
* உலகம் யாவையும் தாமுள வாக்கலும் - கம்பராமாயணம்!

இந்தத் தமிழ்ப் பண்பாட்டை நினைவில் இருத்தி, அதே சமயம், "அ"கரம் என்று பிரணவம் வரும் படித் தொடங்குகிறார் இராமானுசர்.
அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே - என்று "அகிலம்" என்றே தொடங்குகிறார் உடையவர்!

திருமலைத் தயா தேவியை வேண்டிக் கொண்டு நிறைவேறிய பாஷ்யம் ஆதலாலே...
பிரம்மனி ஸ்ரீ-நிவாசே!
என்று மறக்காமல் ஸ்ரீ-யைச் சேர்த்து, நாராயண பரப்பிரும்மம் என்பதை உணர்விக்கிறார்!

இப்படி ஸ்ரீபாஷ்யம் எழுவதற்குக் காரணமான தலம் திருமலை! அதனால் தான், இந்தத் தோத்திரத்தில்.. "பர" தேவ தயா கதி தாந் நிகமை: என்று வருகிறது! நாமும் ந பரம் கலயே = (உன்னையன்றி) வேறு ஒரு பரம், பற்றுதல் எனக்கு இல்லை!
புகல் ஒன்று இல்லா அடியேன், உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே! - என்று புகுவோம் வாருங்கள்!

அடுத்த சனிக்கிழமை, அடுத்த தோத்திரங்களைப் பார்ப்போம்!
அதுவரை......ஸ்ரீம்! ஹரி ஓம்!

Saturday, September 20, 2008

சுப்ரபாதம்(30&31) - கமலா குச மாப்பிள்ளை வெட்கப்பட!

ஓ...ஓ...ஓ! லிப்-ஸ்டிக் கரையா? ச்ச்ச்ச்ச்ச்சீய்! அடேய் கள்ளா...
இப்படி, புது மாப்பிள்ளை எழுந்து வெளிய வரும் போது யாராச்சும் பார்த்து இருக்கீங்களா? :)
சரி சரி, நீங்களும் அந்தந்த காலத்துல புது மாப்பிள்ளை தானே? எப்படி இருந்துச்சி, நீங்க வெளியே எழுந்து வரும் போது? சும்மா வெட்கப்படாமச் சொல்லுங்க :)))

என்னாங்க? நலமா இருக்கீயளா? கொஞ்ச நாள் காணாமப் போயிருந்த கேஆரெஸ் இப்போ மீண்டும் சுப்ரபாதப் பதிவுல சந்திக்கறேன்! அட, நான் பேசலீங்க! புரட்டாசி பேசுது! :)
வாங்க சுப்ரபாதத்தின் அடுத்த கட்டத்துக்குப் போகலாம்!

கமலா குச சூசுக குங்குமதோ-ன்னு வரும் பாட்டைப் பல பேரு ரசிச்சி இருப்பீங்க! அதன் மெட்டு அப்படி! அப்பவே ஏ.ஆர். ரகுமான் போல ஃபாஸ்ட் பீட், டான்ஸ் பீட் எல்லாம் போட்டிருக்காங்க போல சுலோகங்களுக்கு!
இந்த அமைப்புக்குப் பேரு, தோடக விருத்தம் - Thodaka Metre!
நாலு நாலு சந்தச் சீராக வரும்! கொஞ்ச கொஞ்சம் நம்ம இன்னிசை வெண்பா மாதிரி! இலவசமா, கொத்தனாரைக் கேட்டுக்குங்க! :)

ஆனந்த கிரி என்பவர் ஆதி் சங்கரரின் சீடர். அவர் தான் இந்தச் சந்த அமைப்பை முதலில் கொண்டு வந்தது! தோடகாஷ்டகம் என்கிற சுலோகம்! பவ சங்கர தேசிகமே சரணம்-ன்னு வரிக்கு வரி முடியும்! அதுக்கு அவர் அமைத்த மெட்டு தான் மிகவும் பிரபலமாகிப் போனது!

பின்னாளில் இதே சந்தத்தை, வைணவ சுலோகங்களுக்கும் பயன்படுத்தி உள்ளனர். அதுவும் மணவாள மாமுனிகள் போன்ற பெரிய ஆச்சார்யர்களே, சீடரான அண்ணங்காச்சாரியாருக்கும் (சுப்ரபாதம் இயற்றியவர்) சொல்லிக் கொடுத்தும் உள்ளனர். ஒரு அத்வைத குருவின் சுலோகச் சந்தம் நமக்கு எதுக்கு என்ற பேதம் எல்லாம் இல்லை!

நீரைப் போலவே, நல்லன, எப்போதும் எல்லார்க்குமே பொது. அவரிடம் இருந்து நாம் ஏன் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற வீம்புகள் எல்லாம் பார்க்கக் கூடாது! அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு இது!



சுப்ரபாதம் என்றால் என்ன? என்று முன்னரே பார்த்தோம்!
தூங்குவது போல் தூங்கிக் கொண்டிருக்கும் நம்மையெல்லாம் தட்டி எழுப்பவே சுப்ரபாதம்!

இறைவன் செல்லக் குழந்தை! குழந்தைகளைத் தான், டேய் ராமா, கிருஷ்ணா, முருகா - எழுந்திரிடா-ன்னு கொஞ்சிக் கொஞ்சி எழுப்புவோம்!
வீட்டில் சிறுசுங்களே எழுந்து விட்ட பின்னர், பெருசுகள் தூங்கிக் கொண்டிருந்தால் நல்லாவா இருக்கும்? அதே போல் இறைவனே சுப்ரபாதம் கேட்டு எழுந்து விட்ட பின்னரும், நாம் இன்னும் தூங்கிக் கொண்டிருந்தால் நல்லாவா இருக்கும்?

துயில் கலைந்த பின், ஒருவர் எப்படி இருப்பாரு?
நீங்க கட்டிலில் இருந்து எழுந்த பின்னர், உங்களைக் கண்ணாடியில் பார்த்து இருக்கீங்களா? படுக்கப் போகும் போது எப்படி இருந்தீர்களோ, அப்படியே தான் எழும் போதும் இருப்பீர்களா என்ன? :)
குழந்தைகள் எழுந்தால் அந்தக் கோலம் ஒரு விதம்!
இளைஞர்/இளைஞிகள் எழுந்தால் அந்தக் கோலம் இன்னொரு விதம்!
ஆனால், காதலர்கள், தம்பதிகள் எழுந்தால்??? :))

காமன் கோயில் சிறைவாசம், காலை எழுந்தால் பரிகாசம் என்பார் கவிஞர் வைரமுத்து!
காலை எழுந்தவுடன் திருவேங்கடமுடையானைக் கண்டால் பரிகாசம் தான் போலும்!
ஆகா, இவ்வளவு நேரம் தூங்கிட்டோமே! இனி மற்ற வேலைகள் எல்லாம் யார் பார்த்துக் கொள்வது? உலகத்துக்கே படி அளக்கணுமே!

டட-டங்டக-டங்டக-டங்டக-டைன்-ன்னு வேலை எல்லாம் நடக்க ஆரம்பிக்குது! சந்தமும் அதே போலவே பயின்று வருது! வாங்க பார்க்கலாம்!

சுப்ரபாதத்தின் இரண்டாம் பகுதி - ஸ்ரீ வேங்கடேஸ்வர ஸ்தோத்திரம்!



(இந்த சுலோகத்தைப் படிக்கும் போது, கூடவே கேட்டுப் பயில நினைத்தால், இதோ சொடுக்குங்கள்)

கமலா குச சூசுக குங்குமதோ
நியதாருணி தாதுல நீல தனோ
கமலாயத லோசன லோக பதே
விஜயீ-பவ வேங்கட சைல பதே


கமலா குச = திருமகள் மகாலக்ஷ்மி, அவள் திரு மார்பகம்
சூசுக குங்குமதோ = முலைக் காம்பிலே, குங்குமப் பூச்சு
நியதா அருணித = பரவியுள்ளதே (குங்குமச்) சிவப்பு
அதுல நீல தனோ = உயர்ந்த, உன் நீல மேனியில்?

கமலாயத லோசன = தாமரை போன்ற அகன்ற கண்கள் கொண்ட
லோக பதே = உலக நாயகா!
விஜயீ-பவ, வேங்கட சைல பதே = வேங்கட மலைக்கு அரசே! விஜயீ பவ! உனக்கு வெற்றி உண்டாகட்டும்!

எளிமையான பாட்டு! அதே போல், இறைவனும் எளிமையாகத் தான் எழுந்திருக்கிறான்! ஒற்றை வெள்ளை வேட்டி, ஒற்றை மேல் துண்டு, ஒற்றைத் துளசீ மாலை, ஒற்றைப் பூ மாலை!
அட, கூடவே என்ன அது கன்னத்துல? சிவப்பா? - கொசுக்கடியா? நாக்கடியா? அவள் தேக்கடியா, தேன் கடியா? :)

ஓ...ஓ...ஓ!
லிப்-ஸ்டிக் கரையா? ச்ச்ச்ச்ச்ச்சீய்! அடேய் கள்ளா...புது மாப்பிள்ளை எழுந்து வெளிய வரும் போது யாராச்சும் பார்த்து இருக்கீங்களா? :)
சரி சரி, நீங்களும் அந்தந்த காலத்துல புது மாப்பிள்ளை தானே? எப்படி இருந்துச்சி நீங்க வெளியே எழுந்து வரும் போது? சும்மா வெட்கப்படாமச் சொல்லுங்க :)))

அதே போல் திருவேங்கடமுடையானுக்கும் வெட்கம் பிடுங்கித் தின்னுது போல!
இப்படியே போனா, யாராச்சும் பார்த்து விட்டால்? தோழர்கள் எல்லாம் ஓட்டியே தீர்த்துடுவாங்களே! ஹா ஹா ஹா!
என்னப்பன், பொன்னப்பன், முத்தப்பன், மணியப்பன் கன்னத்துல சும்மாவே குழி விழும்! இப்ப இது வேறயா?

அவனும் அவளும் தினமுமே கல்யாண உற்சவம் செஞ்சிக்கறாங்க! நித்ய கல்யாணம்! அஷ்டமி-நவமி, நல்ல நாள்-கெட்ட நாள் ஒன்னு கிடையாது! திருமலையில் தினமுமே திருமணம் தான்! எப்பமே அவங்க புது மாப்பிள்ளை, புதுப் பொண்ணு தான்!
அதான் அவன் நீல மேனி எங்கும் அவள் குங்குமச் சிகப்பு! குங்குமத்திலும் வெட்கத்திலும் சிவந்து போய், அவன் நீல மேனி ஐயோ, சேப்பு மேனி ஆனதுவே! :)

பெண்கள் தங்கள் மேனியில் மஞ்சள் பூசிக் கொள்வது வழக்கம்! இப்பவெல்லாம் ஃபேர் & லவ்லியா? தெரிஞ்சவங்க, பூசி விடறவங்க யாராச்சும் சொல்லுங்க! :)
மஞ்சள் இயற்கையான கிருமி நாசினி! இயற்கையான நறுமணம்! பக்க விளைவோ, விலங்குகள் மீது பரிசோதனையோ ஒன்னுமே இல்லை!
மஞ்சளை உலர்த்திப் பொடியாக்கினால் குங்குமம்! மீனாட்சி குங்குமம் என்று இன்னிக்கும் தயாரிக்கிறார்கள்! அப்படிச் செம்பஞ்சுக் குழம்பைப் பூசியிருக்கிறாள் அலர் மேல் மங்கை! அவள் யார்?

அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா! - அதாச்சும், அவனை விட்டு ஒரு நொடிப் பொழுதும் பிரியாமல்.....அவன் மார்பிலே அவள்.......அவள் மார்பிலே அவன்!
மஞ்சள் குங்கும பூஷிதையாக, நித்ய சுமங்கலியாக, அவன் வலத் திருமார்பான வஷ ஸ்தலத்திலே வீற்றிருக்கின்றாள் மகாலக்ஷ்மி! அப்படி ஒரு தம்பதி அன்னோன்யம்!

அந்த அன்னோன்யத்தில் புது மாப்பிள்ளைக்கு நம் பாவங்களும் கோவங்களுமா கண்ணுக்குத் தெரியும்?
சிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாமல், சிரித்து அருளும் புது மாப்பிள்ளையே!

யாதும் மறுக்காத மலையப்பா! உன் மார்பில்
ஏதும் தர நிற்கும், கருணைக் கடல் அன்னை
,
என்றும் இருந்திட, ஏது குறை எனக்கு?
ஒன்றும் குறையில்லை, மறைமூர்த்தி கண்ணா!
மணிவண்ணா, மலையப்பா, கோவிந்தா, கோவிந்தா...





ச-சதுர்முக சண்முக பஞ்ச முக
பிரமுகாகில தைவத மெளலி மனே
சரணாகத வத்சல சார நிதே
பரிபாலயமாம் விருஷ சைல பதே!


சதுர்முக = நான்முக, பிரம்ம தேவர்
சண்முக = ஆறுமுக, முருகப் பெருமான்
பஞ்சமுக = ஐந்துமுக, சிவ பிரான்
பிரமுகாகில தைவத = போன்ற பிரமுகர்களான தெய்வங்கள் எல்லாம்
மெளலி மனே = தங்கள் மெளலி (மகுடம்) மேல், தலை மேல் வைத்து உன்னை மட்டும் கொண்டாடுகிறார்களே! எதனால்?

சரணாகத வத்சல = சரணம் என்று வந்தாரை அன்பால் ஆட்கொள்பவா!
சார நிதே = சகலத்துக்கு சாரமான நிதியே! வற்றாத செல்வமே!
பரிபாலயமாம் = எங்களைக் காப்பாற்றி அருள்வாய்!
விருஷ சைல பதே! = விருஷபாசலம் என்னும் திருமலைக்கு அரசே!

பிரம்ம தேவர், சிவ பெருமான், சண்முகப் பெருமான் போன்ற சிறப்பான தெய்வங்களுக்குக் கூடத் திருவேங்கடமுடையான் மீது அப்படி என்ன கொள்ளைப் பிரியம்? அப்படி என்ன உன்னை மட்டும் தலை மேல் வைத்துக் கொண்டாடுகிறார்கள்?

சிவ பெருமான், உன்னை மேல் நோக்கிப் பார்க்கும் பொருட்டு, திருமலை அடிவாரத்தில், கபிலேஸ்வர ஸ்வாமியாக அமர்ந்து விட்டார்! ஆழ்வார் தீர்த்தம் அவர் தொட்டியில் இன்றும் வந்து விழுகிறது! அதில் தான் ஆறு காலமும் ஈசனுக்குத் திருமுழுக்கு!

முருகப் பெருமான், உன் தோளோடு தோளாக நட்புறவு கொள்ள, திருமலை வனத்தில் உள்ள குமாரதாரா தீர்த்தத்தில் தவம் இயற்றுகிறார்!
பிரம்ம தேவன், ஆண்டு தோறும் பிரம்ம உற்சவம் என்னும் பிரம்மோற்சவம் நடத்துகிறார். இன்றும் பிரம்மோற்சவத்தில் சுவாமியின் ரதத்துக்கு முன்னால் பிரம்ம ரதம் தான் செல்கிறது!

அது என்ன உனக்கு மட்டும் அப்படி ஒரு மயக்கும் மோகனாகாரம்? மாயோன் மாயம்??
சாதி, மதம், மொழி, இன பேதங்கள் இன்றி, வட நாட்டவரும் தென் நாட்டவரும், உன்னை நாடி நாடி வருகிறார்களே! இத்தனை நேரம் கால் கடுக்க நிற்கிறார்களே! கொஞ்சம் கூட அலுக்கவே அலுக்காதா?

* வடவருக்குப் பாலாஜி,
* தெலுங்கருக்குத் தேவுடுகாரு,
* கன்னடர்க்கு ஸ்வாமிவாரு,
* மலையாளிகளுக்கு எங்களச்சன்,
* ஆரியர்க்கு ஸ்ரீ-நிவாசன்,
* எந்தமிழருக்கோ திருவேங்கடமுடையான், திருமகள்-கேள்வன்!

சும்மாவா சொன்னார் மாறன்? நிகரில் அமரர், முனிக் கணங்கள் "விரும்பும்" திரு வேங்கடத்தானே-ன்னு! இப்படி "விரும்பும்" என்ற சொல்லைச் சரணாகதிப் பாசுரத்தில் வைத்துக் கொண்டாடுவது வேறெங்குமே இல்லை!

எல்லாருமே விரும்புகின்றனர்! யாரையும் கட்டாயப்படுத்தவில்லை! எவரையும் வற்புறுத்த வில்லை! ஆசை காட்ட வில்லை!
தானாக விரும்புகின்றனர்! அவரவர் மொழியில் விரும்புகின்றனர்! அவரவர் இனத்தில் விரும்புகின்றனர்!!

நிகரில் அமரர், முனிக் கணங்கள் "விரும்பும்" திரு வேங்கடத்தானே!
புகல் ஒன்று இல்லா அடியேன், உன் அடிக் கீழ், அமர்ந்து புகுந்தேனே!
என்னும் சரணாகதிக்குச் சாரமான ஒரே பாசுரம், அரங்க நகர் அப்பனுக்குக் கூட அமையாமல், திருவேங்கடமுடையானுக்கு மட்டும் அமைந்தது தான் வியப்பிலும் வியப்பு!

அகலகில்லேன் இறையும் என்று, அலர் மேல் மங்கை உறை மார்பா! - என்று தாயாரையும் உடன் வைத்து, செய்யப்படும் சரணாகதியின் சாரம் தான் இந்த மாறாத் தமிழ்! மாறன் தமிழ்!

சரணாகத வத்சல = இப்படிச் சரணாகதி செய்பவர்களின் குற்றங் குறைகள் ஒன்றைக் கூட பார்க்காமல், வாத்சல்யம் (அன்பை) மட்டுமே பார்க்கும் வத்சலா! சரணாகத வத்சலா! சரண்ய வத்சலா!

சார நிதே = அனைத்துக்கும் சாரமான நிதியே! கருணை நிதியே! தயா நிதியே! - மோவாய்க் கட்டையில் பக்தன் அடித்ததைக் கூட வெட்கப்படாமல் காட்டிக் கொண்டு நிற்கும் தயா சிந்தூ!

பரிபாலயமாம் விருஷ சைல பதே! = விருஷ மலை வாசா! சேஷ மலை வாசா! அடியோங்களைப் பரிபாலித்து (தினப்படிக் காத்து) அருள் புரிவாயாக!
நித்யாபி யுக்தானாம் யோக ஷேமம் வஹாம்யஹம் = எங்கள் தினப்படி காரியங்களையும் நீயே நடத்திக் கொடுத்து, பரிபாலித்து, காப்பாயாக!

உள்ளம் புகுந்து, குளிர்ந்து ஏல் ஓர் எம் பாவாய்! - மெள்ள எழுந்து, "ஹரீ" என்ற பேர் அரவம்! - ஹரி ஓம்!

------------------------------------------------------------------
முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1.
M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2.
கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3.
தமிழ் சுப்ரபாதம் (நித்ய ஸ்ரீ) - (Windows Media Player)
நன்றி: Music: musicindiaonline.com, sribalaji.com Pics: tirumala-tirupati.com

-------------------------------------------------------------------

சுப்ரபாதம் (தமிழில்):

ஒலிச் சுட்டிகள்!

முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1. M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2. கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3. தமிழ் சுப்ரபாதம் - நித்ய ஸ்ரீ பாடுவது (Windows Media Player)

நன்றி:
Music: musicindiaonline.com, sribalaji.com
Pics: tirumala-tirupati.com

சுப்ரபாதம் (மூலம்):

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP