Friday, September 28, 2007

சுப்ரபாதம்(18) - வைணவத்தில் நவக்கிரகங்கள் ஏன் இல்லை?

பெரும்பாலான வைணவ ஆலயங்களில் நவக்கிரக சன்னிதி என்று தனியாக ஒன்று இருக்காது! சிவன் கோயில்களில் இருப்பது போல் நவக்கிரகங்களைச் சுற்றி வர முடியாது! அது ஏன் என்று யோசிச்சி இருக்கீங்களா?
ஒரு வேளை சந்திரனில்-செவ்வாயில் எல்லாம் மனிதன் கால் வைக்கப் போகிறான் என்று முன்னரே தெரிந்து விட்டதா வைணவம் வளர்த்தவர்களுக்கு? :-)

இன்னிக்கி சுப்ரபாதம் நவக்கிரகம் பற்றித் தான்! பார்க்கலாம், வாங்க!





(இந்த சுலோகத்தை படிக்கும் போது, கூடவே கேட்டுப் பயில நினைத்தால், இதோ சொடுக்குங்கள்)





சூர்யேந்து பெளம புத வாக்பதி காவ்ய செளரி
ச்வர்பானு கேது திவிஷத் பரிஷத் ப்ரதானா
த்வத் தாச தாச சரமாவதி தாச தாசா
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்

நவக்கிரகங்கள் = ஒன்பது கோள்கள் முதலில் பட்டியல் போடுறாங்க
சூர்ய = சூர்யன் (ஞாயிறு)
இந்து = சந்திரன் (திங்கள்)
பெளம = செவ்வாய்
புத = புதன்
வாக்பதி = வாக்குக்கு அதிபதி பிரகஸ்பதி; அதாவது குரு (வியாழன்)
காவ்ய = காவியக் கவிதை வல்லுநர்; அதாவது சுக்கிரன் (வெள்ளி)
செளரி = சனி பகவான்
ச்வர்பானு = ராகு
கேது = கேது

திருமலையில் பெருமாளின் காலடியில் சந்திர கலை உள்ளது = சோதிடத்தில் சந்திர தோஷப் பரிகாரத் தலமாகத் திருப்பதி விளங்குகிறது!

பொதுவாக வைணவ ஆலயங்களில், நவக்கிரகங்களுக்குத் தனியாகச் சன்னிதி கிடையாது! (மதுரை கூடலழகர் ஆலயம், மற்றும் சில ஆலயங்கள் தவிர); இதனால் பெருமாள் கோவில்களில் நவக்கிரகங்களுக்கு மதிப்பில்லை என்று பொருளாகி விடாது! அங்கும் நவக்கிரகங்களைக் குறித்து பூசைகள் - பஞ்சாங்க ஸ்ரவணம், ஹோமம் எல்லாம் உண்டு தான்! சுதர்சனம் என்னும் சக்கரத்தாழ்வார் பூசையிலேயே நவக்கிரகங்களும் இடம் பெற்று விடும்!

வைணவத்தில் தாயாருக்கும் பெருமாளுக்கும் மட்டுமே பெரும் இடம் தரப்பட்டிருக்கும்!
பரிவார தேவதைகள், நித்ய சூரிகள் - இவர்களுக்கு எல்லாம் தனியாகச் சன்னிதி கிடையாது! இவர்கள் எல்லாம் பெருமாளின் இடத்திலேயே இருந்து கொண்டு, அவரை அரூபியாகச் சேவித்து இருப்பதாக ஐதீகம்! அவ்வளவு ஏன்? படைத்தலைவர் விஷ்வக்சேனர் (சேனை முதலியார்) க்குக் கூட எத்தனை ஆலயங்களில் தனியாகச் சன்னிதி இருக்கு?

ஆனால் அடியார்களுக்கும், ஆழ்வார் ஆசார்யர்களுக்கு மட்டும் சன்னிதி இருக்கும்! - இதுவே அடியவர் பெருமை!
பெருமாளின் அதிகாரிகளைக் காட்டிலும் அடியவர்களுக்கே களம் அமைத்துத் தரப்படுகிறது! ஏன்?
அதிகாரிகளை முன்னிறுத்தினால் சக்தியும் வலுவும் முன்னிறுத்தப்படும்! அடியவரை முன்னிறுத்தினால் அன்பும் பக்தியும் தானே வளரும்! - அதனால் தான் இது போன்றதொரு அமைப்பு!
பெருமாள் ஆலயங்களின் அமைப்பு ஒரு குடும்பம் வாழும் வீட்டைப் போன்றது! அங்கே தாய் தந்தை குழந்தைகளைத் தான் பிரதானமாகப் பார்க்கலாம்!

நவக்கிரகங்களும் இறைவனின் அதிகாரிகள்; அவரவர் கர்ம பலனை வழங்கும் அதிகாரிகள்!
அவர்களுக்கு உண்டான மரியாதையும், மதிப்பும், பூசனையும் உண்டு! ஆனால் வெளிப்படையாக முன்னிறுத்தப்படுவதில்லை! அவர்களுக்கும் சேர்த்து அவர்களையும் ஆண்டளக்கும் பெருமாளே முன்னிறுத்தப்படுகிறார்.
அவர் உருவத்திலேயே, இவர்களும் அடங்கி விடுகிறார்கள்! அவதாரங்களில் கூட, நவக்கிரக அம்சங்கள் உண்டு!
சூர்யன் = இராமன்
சந்திரன் = கண்ணன்
செவ்வாய் = நரசிம்மர்
புதன் = கல்கி
வியாழன் = வாமானர்
வெள்ளி = பரசுராமர்
சனி = கூர்மம்
ராகு = வராகம்
கேது = மச்சம்

அதே போல், 108 திவ்யதேசங்களில், ஒன்பது திவ்யதேசங்கள், நவக்கிரகத் தலங்களாகச் சொல்லப்படுகின்றன (திருநெல்வேலி-தூத்துக்குடியைச் சுற்றியுள்ள நவ திருப்பதிகள்)
சூர்யன் = திருவைகுண்டம்
சந்திரன் = திருவரகுணமங்கை
செவ்வாய் = திருக்கோளூர்
புதன் = திருப்புளிங்குடி
வியாழன் = திருக்குருகூர் (ஆழ்வார் திருநகரி)
வெள்ளி = திருப்பேறை
சனி = திருக்குளந்தை
ராகு = திருத்துலைவில்லி மங்கலம் (இரட்டைத் திருப்பதி)
கேது =திருத்துலைவில்லி மங்கலம் (இரட்டைத் திருப்பதி)

சிவாலயங்கள் தவிர்த்து, அறுபடை வீடுகளில் கூட நவக்கிரகங்களுக்குத் தனிச் சன்னிதி இல்லை என்றே எண்ணுகிறேன்! முருக நல்லன்பர்களிடமும், சைவச் செல்வர்களிடமும் கேட்டறிய வேண்டும்.





திவிஷத் பரிஷத் = தேவர்கள் கூட்டத்துக்கே
ப்ரதானா = முக்கியமாய், (அவர்களையே அடக்கும் சக்தி வாய்ந்த நவக்கிரகங்கள்)


தேவர்கள் கூட்டத்தில் ஒரு பகுதியாய் நவக்கிரகங்கள் இருந்தாலும், அவர்கள் பணி நிமித்தம் அந்த மாதிரி! கர்ம பலன்களைக் கொண்டு சென்று சேர்க்கும் அதிகாரிகளாக இருப்பதால் அவர்களுக்குப் பாரபட்சம் கிடையாது.
தேவர்களையே அடக்கும் வல்லமை பெற்றவர்கள். அதே சமயம், அசுரர்கள் எதிரிகளாக இருப்பதால், அவர்களுக்குப் பாரபட்சம் எல்லாம் காட்ட மாட்டார்கள் இந்த ஒன்பது பேரும்!

அப்பேர்பட்ட நவக்கிரகங்கள்,
த்வத் தாச தாச = உன்னுடைய அடியார்க்கு அடியார்களிடம்
சரமாவதி தாச தாசா = அடியார்களாக இருந்து சேவை செய்கிறார்கள்

இங்கு தான் அடியார்களின் பெருமை மின்னுகிறது!
இறைவனுக்குத் தானே அடியார்கள்? அடியார்களுக்கே எப்படி அடியார் இருப்பார்கள்?
அதாவது பழுத்த தொண்டர்கள், இறைவனைச் சக தொண்டர்களிட"மும்" காண்பது!
அப்படிக் காண்பதால் அடியார்க்கு அடியார் ஆவது! தொண்டர் அடிப்பொடி!
கைங்கர்யம் என்னும் திருத்தொண்டில், தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!

ஒருவர் நம்மை விட கொஞ்சம் அதிக செல்வம் வைத்திருந்தால் கொஞ்சமாச்சும் பொறாமை வரும்! வெளிக் காட்டிக் கொள்வதும், காட்டாததும் அவரவர் மனோநிலையைப் பொருத்தது!கல்விச் செல்வம், பொருட் செல்வம் மட்டுமில்லை...சாதாரண பின்னூட்டச் செல்வம் வரை இந்தப் பொறாமை பாயும் சக்தி பெற்றது! :-)))
இது பக்தியில் கூட உண்டு! - பொ
றாமை என்று இல்லாவிட்டாலும் உயர்ந்த பக்தி, தாழ்ந்த பக்தி என்றெல்லாம் தரம் பிரித்துப் பேச முற்படும்!
அடியார் கூட்டங்களில் அனைவரும் ஒன்றாகக் கூடி இறைவனைத் தொழும் போது, மற்றவர்களையும் பார்க்கிறோமே! நாம் மட்டும் தனியாகத் தொழ முடியாதே! கூடியிருந்து குளிர வேண்டுமே - என்ன செய்வது?

அப்போது சக அடியார்களைப் பார்த்து இது துளிர் விட்டால்? மனித குணம் தானே!
அதனால் தான் அடியார்க்கு அடியார் ஆக வேண்டும் என்பது!

சக அடியார்களிடமும் ஆண்டவனைக் காண்பது. அடியார்க்கு அடியவராகி விட்டால் பொறாமை தலை தூக்காது. அன்பு தான் தலை தூக்கும்!
அன்பு தலை தூக்கினால் தான் உள்ளத்தில் பக்தி வளரும்!
துவேஷம் தலை தூக்கினால் யுக்தி தான் வளருமே ஒழிய பக்தி வளராது!
பெருமாளைப் பார்த்து, அடியார்களாகிய நாம் பொறாமைப் படுகிறோமா? இல்லையே!

அது போலத் தான் அடியார்களைப் பார்த்து, அடியார்க்கு அடியார்களும்!

இறைவரோ தொண்டர் தம் உள்ளத்து ஒடுக்கம்
தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே!

இப்படி இறைவனே தொண்டர்களின் உள்ளத்தில் ஒடுங்கி விடுவதால், தொண்டர்களுக்குத் தொண்டர்கள் ஆகின்றன நவக்கிரகங்கள்.
சரமாவதி தாஸ்யம் என்பார்கள்; அதனால் தான் சரமாவதி தாச தாசா என்கிறது ஸ்லோகம்.
நவக்கிரகங்களும் அடியார்களின் கர்ம பலனைக் கொடுக்கும் போதும், அவர்களின் பற்றற்ற நிலையினைப் பார்த்து, "பரிவுடனே" கொடுக்கின்றன!
எப்படிக் கொடுக்கின்றன? - சரமாவதி தாச தாசா என்று கொடுக்கின்றன.
ஒரு தாசன் எப்படிப் பணிந்து பக்தியுடன் கொடுப்பானோ, அப்படிக் கொடுக்கின்றன!
அடியார்க்கு அடியாராய், அவை நல்ல நல்ல நல்ல, என்று கொடுக்கின்றன!

ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பு இரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

என்ற சம்பந்தரின் கோளறு பதிகத்தையும், இந்த சுப்ரபாத ஸ்லோகத்தோடு எண்ணிப் பாருங்கள்!


ஸ்ரீ வேங்கடாசல பதே = திருவேங்கடமுடையானே
தவ சுப்ரபாதம் = உனக்கும், அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!

----------------------------------------------------------------------------
முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1.
M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2.
கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3.
தமிழ் சுப்ரபாதம் (நித்ய ஸ்ரீ) - (Windows Media Player)
நன்றி: Music: musicindiaonline.com, sribalaji.com Pics: tirumala-tirupati.com
----------------------------------------------------------------------------

Friday, September 14, 2007

சுப்ரபாதம்(16&17) - சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு!

திருமலையில் பிரம்மோற்சவம் துவங்கி விட்டது! (Sep 15th)
உற்சவத்தின் போது, சிவாஜி ஸ்டைலில் பல நடைகள் நடந்து காட்டுவான்; நடிகர் திலகங்களுக்கு எல்லாம் திலகம் அல்லவா அவன்!
பக்தர்களுக்கு நடையழகு சேவிப்பது பெருமாளுக்கு கைவந்த கலை!

என்னென்ன நடை நடக்கின்றான்?
கருட நடை, சிம்ம நடை, பாம்பு நடை, யானை நடை, புரவி நடை என்று பல நடைகள்! நீ நடந்தால் நடை அழகு!
இன்றைய பதிவில் அந்த நடை அழகை எல்லாம் பார்க்கலாம் வாங்க! அப்படியே கொஞ்சம் வாஸ்துவும்!

Sep 15th இந்த ஆண்டு பிள்ளையார் சதுர்த்தியும் கூட! அனைவருக்கும் விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்!




(இந்த சுலோகத்தை படிக்கும் போது, கூடவே கேட்டுப் பயில நினைத்தால், இதோ சொடுக்குங்கள்)



சேவாபரா: சிவ சுரேஷ க்ருசானு தர்ம
ரக்ஷோம்பு நாத பவமான தனாதி நாதா
பத்தாஞ்ஜலி ப்ரவிலசந் நிஐ சீர்ஷ தேசா:
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

சேவாபரா = கைங்கர்ய செய்யும் சேவாபாரர்கள் எல்லாம் உன் சேவைக்கு காத்துள்ளனர்!
- யாரெல்லாம் காத்துள்ளனர்?
அஷ்ட திக் பாலகர்கள் என்று சொல்லப்படும் எண் திசைக் காவலர்கள்! இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திசை! வாஸ்து சாஸ்திரத்தில் மிகவும் காணப்படும் இவர்களைப் பற்றிய குறிப்புகள்!

திருமலைக் கோவிலில் அமைந்தது போன்று வாஸ்து, உலகில் வேறு யார்க்கும் அமையுமா தெரியாது! அவ்வளவு கச்சிதம்!
பெருமாள் கலியுக வரதனாக, பூலோகத்தில் மலைக் குனிய நிற்கப் போகிறார் என்று ஆனது! உடனே, திசைக் காவலர்கள் எல்லாம் அவருடன் வந்து அந்தந்த இடங்களில் நின்று விட்டார்கள்! இப்படித் தெய்வங்களே வந்து திசையில் நின்று விட்டால் சொல்லவும் வேண்டுமோ?


உண்டியல் இருக்கும் இடம் = குபேர மூலை, வடக்கு!
மடப்பள்ளி = அக்னி மூலை, தென் கிழக்கு
திருமஞ்சனக் கிணறு = மேற்கு, வருண மூலை
குரு ராமானுசர் சன்னிதி = தெற்கு பார்த்து, குரு பகவான் ரூபமாய் உள்ளது!
ஆலயம் = கிழக்கு பார்த்து உள்ளது, இந்திர மூலை!
பெருமாளின் காலடியில் சந்திர கலை = சோதிடத்தில் சந்திர தோஷப் பரிகாரத் தலம்!
இப்படிப் பல பொருத்தங்கள் கச்சிதமாய் அமைந்து விட்டன.

சிவ = ஈசானன்
சுரேஷ = இந்திரன் (சுரர்களின்/தேவர்களின் ஈசன் = சுரேஷன்)
க்ருசானு =அக்னி
தர்ம ரக்ஷோ = யம தர்ம ராஜன்
அம்பு நாத = வருண தேவன் (அம்பு/அப்பு=நீர்)
பவமான = வாயு தேவன்
தனாதி நாதா = தனங்களின் தலைவன், குபேரன்

இந்திரன் = கிழக்கு
அக்னி = தென் கிழக்கு
யமன் = தெற்கு
நிருதி = தென் மேற்கு
வருணன் = மேற்கு
வாயு = வட மேற்கு
குபேரன் = வடக்கு
ஈசானன் = வட கிழக்கு

இப்படி எண் திசைக் காவலர்களும் நிற்கிறார்கள். ஆலயத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இந்த எட்டு பேருக்கும் அந்தந்த திசையில் பலி பீடங்கள் உள்ளன. சுவாமிக்கு நிவேதனம் செய்த பின்னர், இந்த அஷ்ட திக் பாலகருக்கும் அன்ன பலி சார்த்தப்படுகிறது! ஒவ்வொரு வீதியுலாவின் போதும் பெருமாள் அந்தந்த திசைகளில் (மொத்தம் எட்டு இடத்தில்) நிற்பார். அப்போது அவர்களுக்கும் சேர்த்தே ஆரத்தி காட்டப்படுகிறது! - இப்படி தன் பரிவாரங்களையும் அன்போடு அரவணைத்து நடத்தும் பேரரசனாக விளங்குகிறார் மலையப்பன்!

பத்தாஞ்ஜலி = கூப்பிய கரங்களை எடுக்காது, கூப்பியபடியே, அஞ்சலி செய்து கொண்டு
ப்ரவிலசந் = மிகவும் ஆனந்தமாக
நிஐ சீர்ஷ தேசா = பெருமைக்குரிய திசை/தேச அதிபதிகள் உன்னைச் சேவித்து மகிழக் காத்துள்ளனர். திசைகள் மட்டுமா சேவிக்கின்றன? நாட்டின் பலப்பல திசைகளில் இருந்து பல தரப்பட்ட மக்களும் அல்லவா குவிகிறார்கள், அவனின் திருமேனியைப் பருகவும், தரிசன செளபாக்கியத்தில் உருகவும் சதா சர்வ காலமும் வந்து கொண்டே இருக்கிறார்களே!
பஞ்சாபிலும் இருந்து வருவார்கள், அசாமிலும் இருந்து வருவார்கள்!
காஷ்மீரம், தில்லி என்று வடக்கும், கல்லிடைக்குறிச்சி தெற்கும் சமன்படும் இடம் அல்லவா திருமலை! வடக்கும் வாழ்கிறது; தெற்கும் வாழ்கிறது!!

ஸ்ரீ வேங்கடாசல பதே = திருவேங்கடமுடையானே
தவ சுப்ரபாதம் = உனக்கும், அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!


காதல் மடப் பிடியோடு
களிறு வருவன கண்டேன்
கஜ நடை!




தாடீஷூதே விஹக ராஜ மிருகாதி ராஜ
நாகாதி ராஜ கஜ ராஜ ஹயாதி ராஜா
ஸ்வஸ்வ அதிகார மஹி மாதிகம் அர்தயந்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

தாடீ ஷூதே = கோவிலின் வழித் தடத்தில் (ராஜ வீதிகளில்)
திசைக் காவலர்கள் போலவே, ஒவ்வொரு உயிரினத்தின் தலைமையும் அல்லவா தலைவனை வழிபடுகிறது!

விஹக ராஜ = பட்சி ராஜனாகிய கருடன்
மிருகாதி ராஜ = மிருக ராஜனாகிய சிங்கம்
நாகாதி ராஜ = நாக ராஜனாகிய சேஷன்
கஜ ராஜ = கஜ ராஜனாகிய கஜேந்திரன் (ஐராவதம்)
ஹயாதி ராஜ = குதிரை ராஜனாகிய உச்சைசிரவஸ்

இந்த ஐந்தும் பிரம்மோற்சவத்தில் வாகனங்களும் கூட!
பொதுவாக நடை அழகு, வடை அழகு, குடை அழகு என்பார்கள்!
திருவரங்கத்தில் நடை அழகும், திருப்பதியில் வடை அழகும், காஞ்சிபுரத்தில் குடை அழகும் பிரசித்தம்!

அது என்ன நடை அழகு?
சுவாமியை வாகனத்தில் எழுந்தருளப் பண்ணி, அவனைச் சுமந்து வருவோர்க்கு ஸ்ரீபாதம் தாங்கிகள் என்று பெயர்! இவர்கள் அந்தணர் குலம் மட்டும் அலலாது, பல குலமும் சேர்ந்தவர்கள்.

இவர்கள் பாதங்களை வீதிகளில் பெண்கள் நீரூற்றுவார்கள்! மலர் இடுவார்கள்!
திருவரங்கத்தில் இராமானுசர் கட்டளைப்படி, அர்ச்சகர் இவர்கள் அனைவரையும் வணங்கி, மாலை பரிவட்ட மரியாதைகள் செய்ய வேண்டும்! - இப்படியாக, பெருமாள் கோவில்களில் சாதிப் பாகுபாடுகள் என்பது காண்தலே அரிது!

இவ்வாறு பெருமாளைத் தூக்கி வரும் போது, ஒவ்வொரு சமயத்துக்கும் ஒரு நடை உள்ளது. அதற்கு ஏற்றாற் போல் தமிழ்ப் பாடல்களும், ராகங்களும் உள்ளன! அதை நாதசுரத்தில் வாசிக்கும் போது, அதுவும் மல்லாரியாக வாசிக்கும் போது, நாத்திகனும் நடனம் ஆடுவான்! அப்படி ஒரு இசை!

கருட சேவையின் போதும், ஆஸ்தானத்தின் போதும் கருட நடை - கருடத்வனி ராகம்! அப்படியே தொம் தொம் தொம்மென்று குதித்து பறப்பது போலவே இருக்கும்! மாலை ஆட, மலை ஆட, குடை ஆட, குணவன் ஆட.....அழகோ அழகு!
சுவாமிக்கும் தாயாருக்கும் நடக்கும் மட்டையடி ஊடல் சண்டையில் - சர்ப்ப நடை. பாம்பு ஊர்வது போல் சத்தமே இல்லாமல் போவான் கள்ளன்!

சித்திரை விழாக்களில் கம்பீரச் சிம்ம நடை! சிங்க நடை போட்டு, திருமலைச் சிகரத்தில் ஏறு!
மாலை உலாக்களில் கஜ நடை! எதையும் லேசாக எடுத்துக் கொள்ளும் யானையின் ஒய்யாரம்!
தேரின் போது அஸ்வ (குதிரை) நடை! ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் என்பது போல் டொக் டொக் என்று துள்ளல் நடை.


உன்றன் இந்த நடையழகைக் கண்டு, உன்னை உற்சவத்தில் அழகாகத் தூக்கிச் செல்லும் உரிமையை இன்னும் இன்னும் வேண்டுகிறார்கள்!

ஸ்வஸ்வ அதிகார = தங்கள் தங்கள் அதிகாரம், உரிமையை
மஹிமா அதிகம் = அதன் மகிமை அறிந்து, இன்னும் அதிகமாக
அர்தயந்தே = விரும்புகிறார்கள்
பட்சி, நாக, சிம்ம, கஜ, அஸ்வ ராஜர்கள்!
சிங்கத்துக்குத் தன் நடையே மறந்து போய், உன் நடையில் தன் நடையைக் கற்றுக் கொள்ள வந்துள்ளது! அதே போலத் தான் மற்ற மிருகங்களும்!
இப்படி நாலறிவு ஐந்தறிவு மிருகமெல்லாம் உன் வழி நடக்க முனையும் போது,
ஆறறிவு மனிதன் என்று தான் உன் வழியில் நடக்க கற்றுக்கொள்வானோ? - கருணை செய்யடா, கார்முகில் வண்ணா!

ஸ்ரீ வேங்கடாசல பதே = திருவேங்கடமுடையானே
தவ சுப்ரபாதம் = உனக்கும், அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!

----------------------------------------------------------------------------
முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1.
M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2.
கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3.
தமிழ் சுப்ரபாதம் (நித்ய ஸ்ரீ) - (Windows Media Player)
நன்றி: Music: musicindiaonline.com, sribalaji.com Pics: tirumala-tirupati.com
----------------------------------------------------------------------------

சுப்ரபாதம் (தமிழில்):

ஒலிச் சுட்டிகள்!

முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1. M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2. கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3. தமிழ் சுப்ரபாதம் - நித்ய ஸ்ரீ பாடுவது (Windows Media Player)

நன்றி:
Music: musicindiaonline.com, sribalaji.com
Pics: tirumala-tirupati.com

சுப்ரபாதம் (மூலம்):

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP