Friday, July 27, 2007

சுப்ரபாதம்(13)- வேங்கடம்- தமிழ்ச் சொல்லா? வட சொல்லா?

திருமலை திருப்பதி, தமிழ்நாட்டுக்கு உரியதா என்ன?
தமிழ்நாட்டின் எல்லை வடவேங்கடம் என்று எல்லாத் தமிழ் இலக்கியங்களும் பேசுகின்றன! - இலக்கியம் பேசினால் போதுமா? மக்கள் பேச வேண்டுமே!
அங்கேயோ மக்கள் பலர் தெலுங்கு பேசுவதால், வேங்கடம் ஆந்திரத்துக்குச் சென்று விட்டது! திருத்தணிகையை மீட்ட ம.பொ.சி அவர்களால் கூட திருப்பதியை மீட்க முடியவில்லை!

இன்றைய பதிவில் இருந்து ரூட் மாறப் போகுது! :-)
இது நாள் வரை "சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்" என்று தான் வந்தது...சேஷ மலைக்கு அரசனே எழுந்திரு-ன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க!
ஆனா பெருமாள் அப்படி லேசாத் துயில் கலையப் போகிறார்-ன்னு தெரிஞ்சதும்... எல்லாமே மாறிப் போச்சுது! பெருமாளைப் பற்றிப் பாடிக்கிட்டு இருந்தவர்கள், இனி பெருமாளுக்குப் பிடித்தமானவர்களைப் பற்றி எல்லாம் பாடப் போறாங்க!
இனிமேல் ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்-னு மாற்றிப் பாடப் போறாங்க!

எது என்ன வேங்கடம்?...அது என்ன தமிழ்ச் சொல்லா? வட சொல்லா?
அசலம்=மலை; இது வடசொல். தெரிஞ்சது தான்!
(சேஷாசலம், பத்ராசலம், ஹிமாச்சலம், அருணாச்சலம்...)
ஆனா வேங்கடம்?...இது மிகவும் அழகான தமிழ்ச் சொல்!

வேங்கடம் = வேம் + கடம் = கொடுங் கடன்கள் வேகும் மலை என்பது பொருள்.
வேம் என்பது வெப்பம், நெருப்பு, பொசுக்கல் என்ற பொருளில் வரும். (வேங்காலம், வேடைக் காலம் என்று கோடைக் காலத்தைச் சொல்வதுண்டு).

கடம் = கடன் = பிறவிக் கடன் (வினை)
கடம் பலகிடந்து காடுடன் கழிந்து என்று சிலப்பதிகாரம் சொல்கிறது!
கடம் உண்டு வாழாமை என்று கடன் வாங்குவதைப் பற்றி இனியவை நாற்பது என்னும் பழந்தமிழ் நூல் பாடுகிறது!
இந்தப் பிறவிக் கடனைப் (நல்வினை/தீவினை) பொசுக்க வல்ல மலை ஆனதாலே அது வேங்கட மலை!

வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும்
ஓங்கு உயர் மாமலை உச்சி மீமிசை
பகை அணங்கு ஆழியும் பால் வெண் சங்கும்
தகை பெறு தாமரைக் கையில் ஏந்தி

என்று சங்கு சக்கரங்களோடு பெருமாள், வேங்கடத்தின் மேல் நிற்பதைச் சிலப்பதிகாரம் படம் பிடித்துக் காட்டுகிறது!



சரி, ஒரு மலை எப்படி கடத்தைப் பொசுக்கும்?...
தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய் என்ற திருப்பாவை நினைவுக்கு வருகிறதா?
போய பிழையும், இனி வரப் போகும் கர்ம வினைகளும், இவை போதாதென்று, இந்தப் பிறவியில் ஏற்றிக் கொண்ட பாவ மூட்டைகளும் - இப்படி எவ்வளவு கடனை நாம வாங்கி வைச்சிருக்கோம்! திருப்பிக் கட்ட வேண்டுமே! வட்டி கட்டி மாளுமா?

செல்போன் பில்லைக் கட்டாமப் போனாலே, Late Fee, Finance Charges, Delinquency அது இது என்று போட்டுத் தாளித்து விடுகிறார்கள்! கிரெடிட் கார்டு என்றால் இன்னும் ஒரு படி அதிகம் - சொல்லவே வேண்டாம்! வட்டிக்கு-வட்டிக்கு-வட்டி என்று ஏறிக்கொண்டே போக வேண்டியது தான்!

உண்மையான பண இருப்பை எண்ணிப் பார்க்காது, கையில் தான் கார்டு இருக்கே-ன்னு ஆடாத ஆட்டம் ஆடினால்?....திவால்!
அதே போல் உண்மையின் இருப்பான இறைவனை எண்ணிப் பார்க்காது, கையில் தான் வசதி இருக்கே, வாழ்க்கை இருக்கே-ன்னு ஆடாத ஆட்டம் ஆடினால்??? :-)


கொடும் பாபங்களையும் பொசுக்க வல்லது திருமலை!
மலையே வைகுந்த சாளக்கிரமாக இருக்கிறது!
அதன் மீது தன் கால் படவும் அஞ்சி, கீழிருந்தே சேவித்தார்கள் ஆழ்வார்கள்!
சென்று சேர் திருவேங்கட மாமலை
ஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே

என்று மலையைத் தொழுதாலே போதும், வினைகள் எல்லாம் ஓயும்! என்கிறார் வேதம் தமிழ் செய்த நம்மாழ்வார்!

அந்த வேங்கட மாமலைக்கு அதிபதி - அயர்வறும் அமரர்கள் அதிபதி -வேங்கடாசலபதி - தவ சுப்ரபாதம் என்று இனி மேல் வரப் போகும் சுப்ரபாதங்களைப் பார்ப்போம், வாருங்கள்!



(இந்த சுலோகத்தை படிக்கும் போது, கூடவே கேட்டுப் பயில நினைத்தால், இதோ சொடுக்குங்கள்)



(சுப்ரபாதத்தில் முக்கியமான சுலோகம் - இந்தச் சுலோகம் பொதுவாக இரண்டு முறை சாற்றப்படும் - மிகவும் எளிது கூட - வாய் விட்டுச் சொல்லிப் பாருங்கள்!)

ஸ்ரீ மந் அபீஷ்ட வரதாகில லோக பந்தோ
ஸ்ரீ ஸ்ரீநிவாச ஜகதேக தயைக சிந்தோ
ஸ்ரீ தேவதா க்ருஹ புஜாந்தர திவ்ய மூர்த்தே
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்

ஸ்ரீ மந் = ஸ்ரீ(மகாலக்ஷ்மி); அவளின் மனத்துக்கு இனியவனே!
Sweet Heart-ன்னு கேள்விப்பட்டு இருக்கீங்களா? அதான் ஸ்ரீமன் :-)
இந்த Sweet Heart-க்கு அப்படியே நேரான தமிழ்ப்பதத்தை ஆண்டாள் தருகிறாள்! என்னன்னு கண்டுபிடிச்சி சொல்லுங்க பார்ப்போம்!

அபீஷ்ட வரத = விருப்பங்களை நிறைவேற்றுபவனே!
அபீஷ்டம்=விருப்பம். நியாயமான நல்ல விருப்பங்கள். மற்றை நம் காமங்கள் அல்லாத விருப்பங்கள்...
இப்படி நம் ஆசை, விருப்பம், எண்ணங்களை எல்லாம் நிறைவேற்றி வைப்பவன் - வரம் தரும் வரதன் - நாம் வந்த காரியம் ஆராய்ந்து அருளுபவன்!


அகில லோக பந்தோ = எல்லா உலகத்துக்கும் உறவுக்காரனே
எல்லா உலகம் என்று ஏன் சொல்ல வேண்டும்?
தேவர்-அசுரர் என்றோ, மேலோர்-கீழோர் என்றோ, பணக்காரன்-ஏழை என்றோ, படித்தவர்-பாமரர் என்றோ, சாதி-மதம் என்றோ எந்தவொரு வேற்றுமையும் அவனுக்குக் கிடையாது!
வேற்றுமை நம்மிடத்தில் தான்! நாம் பார்க்கும் பார்வையில் தான்!
அவனோ கண்ணாடி போல!
எதுவாகப் பார்க்கிறோமோ, அதுவாகவே தெரிகிறான்! அகலில் அகலும்...அணுகில் அணுகும்...


ஸ்ரீ ஸ்ரீநிவாச = திரு-மாலே! ஸ்ரீநிவாசா
ஸ்ரீநிவாசன் என்பது மிகவும் முக்கியமான திருநாமம்..
பொதுவா அம்மாவுக்கு ஒரு பெயர் இருக்கும். அப்பாவுக்கு ஒரு பெயர் இருக்கும்! அம்மையப்பன் இருவருக்கும் சேர்த்து ஒரே பெயராக இருக்குமா?
இருக்கே! அதுவே திரு-மால்! ஸ்ரீ-நிவாசன்!

"பிரம்மநி ஸ்ரீநிவாசே" என்பது இராமானுசரின் ஸ்ரீபாஷ்யம்!
பரப்பிரும்மம் (பரம்பொருள்) யார் என்றால், அது ஸ்ரீநிவாசன் தான் என்று அவர் நிர்ணயம் செய்கிறார்! அவர் மட்டுமில்லை!
ஆதிசங்கரர், மத்வர், வல்லபர் போன்ற பலப்பல ஆச்சாரியர்களும் வேறு வேறு மார்க்கங்களைக் காட்டினாலும், நாராயணனே பரப்பிரும்மம் என்று ஒருமுகமாகச் சொல்கிறார்கள்!
"நாராயண பரோ வக்யாத்" என்று தான் ஆதிசங்கரரின் பாஷ்யமே தொடங்குகிறது! "நாரயணஹ, பரஹ" என்று முத்தாய்ப்பாகச் சொல்கிறார்!



ஜகத் ஏக தயைக சிந்தோ = அனைத்து உலகுக்கும் கருணை சிந்துபவன் நீ ஒருவனே!
தயை=கருணை! தயா சிந்து=கருணைக் கடல்!
உலகத்துக்குக் கடல் தான் காப்பு! கடலில் நடக்கும் நிகழ்வுகளால் தான் உலகம் ஒரே சீராக இயங்குகிறது!

நீராரும் கடல் உடுத்த நில மடந்தை! விரிதிரை முந்நீர் உலகம் என்பதெல்லாம் தமிழ் இலக்கியம்! அதனால் தான் இறைவனைக் கடலாக உருவகிக்கிறோம்!
கடலில் இருந்து தோன்றியது எல்லாம் இறுதியில் கடலில் போய்த் தான் கலக்கிறது.
இறைவனோ கருணைக்கடல்! இருப்பதோ பாற்கடல்!


பெருமாள் மோவாய்க் கட்டையில் இருக்கும் வெள்ளைத் தழும்புக்கும் "தயா சிந்து" என்று தான் பெயர். இது பற்றி முன்பே மாதவிப் பந்தல் பதிவில் பார்த்தோம்!

இந்த "தயா" வின் மேல் தான், சுவாமி தேசிகன் என்னும் ஆச்சார்யர், தயா சதகம் என்னும் அற்புதமான நூலைப் பாடியுள்ளார்!

மோவாயில் பொட்டழகன்!



ஸ்ரீ தேவதா க்ருஹ புஜாந்தர = "ஸ்ரீ" என்று போற்றப்படும், அன்னை மகாலக்ஷ்மி உன் திருமார்பில் வசிக்கிறாள்

ஸ்ரீ மகாலக்ஷ்மிக்கு வீடு (க்ருஹம்) எது?
உன் திருமார்பே அவள் வீடு! வலப்பக்க மார்புக்கு வக்ஷ ஸ்தலம் என்றே பெயர்! அதில் அவள் நீங்காது நித்ய வாசம் செய்கின்றாள்!

ஒரு நொடிப் பொழுதும் உன்னை விட்டுப் பிரிய மாட்டாள்! மஞ்சள் குங்கும பூஷிதையாக, நித்ய சுமங்கலியாக இருக்கிறாள்! அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா!

அவள் எதற்கு திருமார்பில் போய் இருக்க வேன்டும்? அவளுக்கு வேறு இடம் கிடைக்க வில்லையா என்ன?
அடியவர்கள் வரும் போது, அவர்கள் புண்ணிய பாபக் கணக்குகளை இறைவன் பார்க்கத் தொடங்கினால் யாரேனும் மிஞ்சுவமா? அதனால் தான் அவன் இதயத்துக்கு அருகில் போய் உட்கார்ந்து கொண்டாள்.
நாம் அவனிடம் செல்லும் போது, நம் தவறுகள் எல்லாம் அவன் மனத்தில் உதிக்காதவாறு, அவனைக் குளிர்விக்கிறாள்!

திவ்ய மூர்த்தே = திவ்யமான அழகை உடைய தலைவா!
எத்தனையோ மூர்த்திகள் உலகில்! ராம மூர்த்தி, கிருஷ்ண மூர்த்தி, சுந்தர மூர்த்தி!
ஆனால் இவனோ திவ்ய மூர்த்தி! அழகே வெட்கப்படும் அழகன்!

ஸ்ரீ வேங்கடாசல பதே = அப்பா, திருவேங்கட மலைக்கு அதிபதியே
தவ சுப்ரபாதம் = இனிய காலை வணக்கங்கள்! திருப்பள்ளி எழுக!!
----------------------------------------------------------------------------
முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1.
M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2.
கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3.
தமிழ் சுப்ரபாதம் (நித்ய ஸ்ரீ) - (Windows Media Player)
நன்றி: Music: musicindiaonline.com, sribalaji.com Pics: tirumala-tirupati.com
----------------------------------------------------------------------------

Friday, July 13, 2007

சுப்ரபாதம்(11&12) - பெண் தாமரைக்கும் ஆண் வண்டுக்கும் சண்டை!

தாமரை-ன்னா பெண்! வண்டு-ன்னா ஆண்!
இது தான் பொதுவா இலக்கியங்களில் சொல்லப்படும் ஒப்புமை! இதை வைத்தே பெரும்பாலான பெண்கள் ஒரு டயலாக்கை நிரந்தரமாக்கி விட்டார்கள்!

தாமரை = அழகு, பொறுமை, காதல் இதெல்லாம்!
வண்டு = மலர் விட்டு மலர் தாவும் எண்ணம் கொண்டது!
"அட, உங்களுக்கு என்னங்க? ஆம்பிளைங்க நீங்கள் எல்லாம் வண்டு போல; ஹூம்...நாங்க தான் தாமரை போல!", என்ற தங்கமணிகளின் பேச்சு அன்றும், இன்றும், என்றும் உள்ளது தான்! :-)

சுப்ரபாதத்திலும் கிட்டத்திட்ட இதே வசனம் வராத குறை! இதனால் தாமரைகளுக்கும் வண்டுகளுக்கும் ஒரே போட்டா போட்டி! பஞ்சாயத்து பண்ண யாரு?......
அட நம்ம வேங்கட "கிருஷ்ணன்" தான்! கண்ணன் யார் பக்கம் தீர்ப்பு சொல்லுவான்-ன்னு உங்களுக்குத் தெரியாதா என்ன? வாங்க பார்க்கலாம்!
சென்ற பதிவில் நாரதர் வந்தார்!
அவர் பின்னாலேயே, இந்தப் பதிவில் வண்டு-தாமரை சண்டை வருகிறது! :-)





(இந்த சுலோகத்தை படிக்கும் போது, கூடவே கேட்டுப் பயில நினைத்தால், இதோ சொடுக்குங்கள்)







யோஷா கணேன வரதத்னி விமத்ய மானே
கோசால யேஷூ ததி மந்தன தீவ்ர கோஷா
ரோஷாத் கலிம் விததே ககுபஸ்ச கும்பா
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்


யோஷா கணேன = இளமையான பெண்கள் கூட்டம்;

கோசால யேஷூ, ததி மந்தன = கோ சாலை - பசுக்கள் வாழும் இடைச்சேரியில் - தங்கள் கை வளையல்கள் குலுங்கத் தயிர் கடைகிறார்கள்!
கடைவது பாலை! அப்படிக் கடைந்தால் வருவது தயிர்!
அப்படியிருக்க தயிர் கடைகிறார்கள் என்று எப்படிச் சொல்லலாம்?
பால் கடைகிறார்கள் என்று அல்லவா சொல்ல வேண்டும்? - இதற்கு ஒரு இலக்கணக் குறிப்பு கூட இருக்கு தமிழில்! பள்ளியில் படிச்சது ஞாபகம் இருந்தா சொல்லுங்க பார்ப்போம்! :-)

பெரிய கடலைக் கடைந்த போதே தாங்கி நின்ற பரம்பொருள், இன்று ஆயர் சேரியில், சிறிய தயிரைக் கடையும் போதும், தாங்கி நிற்கிறான்!


தீவ்ர கோஷா = தீவிரமான கோஷம் - தயிர் கடையும் பெரும் சப்தம் எழுகிறது!
சாதாரண தயிர் கடையும் விஷயம் - அது எப்படிப் பெரும் சத்தம் எழும்?
"ஆய்ச்சியர் மத்தினால், ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?" என்ற ஆண்டாளின் பாசுரத்தை நினைவிற் கொள்ளுங்கள்!
விடியற் காலை; திருமலை மீது;

அப்போதெல்லாம் மலை மேல் ஆள் அரவம் அதிகம் இல்லை போலும்! அதனால் தான் தயிர் அரவம் அதிகம் கேட்கிறது!

கிராமத்தில் பெரிய பானைகளில் கடைவதைப் பார்த்திருந்தாலோ, கேட்டிருந்தாலோ தெரியும்! பெரிய பானையைத் தூணை ஒட்டி வைத்து,
தூணில் பெரிய மத்தை நாணல் கயிற்றினால் கட்டி, அதைக் கடையும் போது,
கர்..கர்...கர்ர்ர்....கர்ர்ர்ர் என்று பெரும் சத்தம் எழும்பும்...கேட்டு மகிழ்ந்துள்ளீர்களா?
(மிக்சியில் விப்பிங் ப்ளேடு போடு, விப் செய்தால் இதை விடச் சத்தம் கூடுதலாக வரும் என்று யாரோ சொல்வது காதில் விழுகிறதே:-)


ரோஷாத் கலிம் விததே = இந்தப் பெரும் ஒலி, எங்கும் பரவி எதிரொலிக்கிறது!
ககுபஸ்ச கும்பா = பானையின் ஒலி, மலையின் மேல் முழங்குகிறது!
பெருமாளே! இதைக் கேட்டுமா, நீ இன்னும் எழாமல் இருக்கிறாய்?

சேஷாத்ரி சேகரவிபோ = சேஷ மலைச் சிகரத்துக்கு அரசனே!
தவ சுப்ரபாதம் = இனிய காலை வணக்கங்கள்! திருப்பள்ளி எழுவாயாக!!


அடுத்து இதோ.......பெண் தாமரைக்கும் ஆண் வண்டுக்கும் சண்டை!







பத்மேச மித்ர சதபத்ர கதாலி வர்க்கா
ஹர்த்தும் ச்ரியம் குவலயஸ்ய நிஜாங்க லக்ஷ்ம்யா
பேரீ நிநாத மிவ பீப்ரதி தீவ்ர நாதம்
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்


பத்மேச மித்ர = தாமரைப் பூவின் (பத்மம்) நட்புக்குப் பாத்திரமான வண்டு

குவலயஸ்ய = குவளைப் பூ
கருநீல நிறத்தில் இருக்கும் குவளை மலர்! பார்ப்பதற்கு அதுவும் வண்டின் நிறம் போலவே உள்ளது! அதைப் பார்த்து வண்டு பொறாமை கொள்கிறது. பகைமை கொள்கிறது!
"எனக்குப் போட்டியாக, அதே நீலமா?" என்ற முணுமுணுப்பு...சிறிது நேரத்திலேயே ரீங்கார ஒலியாகி...பெரும் சப்தம்!


பேரீ நிநாத மிவ = பேரிகை (முரசு) கொட்டுவது போல
பீப்ரதி தீவ்ர நாதம் = பெரும் ஓசை, தீவிரமான நாத சத்தம்
வண்டுகள் எல்லாம் தங்கள் நீலமே, குவளையின் நீலத்தை விட அழகாக இருக்கிறது என்று பொறாமைக் கீதங்கள் பாடுகின்றன.
அடே நீல வண்ணா! பாவம் அவற்றுக்குத் தெரியவில்லை போலும்,

உன் நீலம் ஒன்றும் உலகத்தில் உள்ளது என்று! அந்த நீல மேக சியாமளத்தின் முன் வேறு எந்த நீலமும் நிற்க முடியுமா என்ன?

பெருமாளே! இன்னுமா எழவில்லை?
இனித் தான் எழுந்திராய்...ஈதென்ன பேர் உறக்கம்?

வண்டுகளுக்கும், தாமரைப் பூக்களுக்கும் நடக்கும் இந்த ஊடலைத் தீர்த்து வைக்கவாவது...சீக்கிரம் எழுந்திருப்பாயாக!

சேஷாத்ரி சேகரவிபோ = சேஷ மலைச் சிகரத்துக்கு அரசனே!
தவ சுப்ரபாதம் = இனிய காலை வணக்கங்கள்! திருப்பள்ளி எழுவாயாக!!
சு+ப்ரபாதம் = உனக்கும், அதனால் எங்களுக்கும் சுகமான காலைப் பொழுதாக மலரட்டும்.

----------------------------------------------------------------------------
இனி மேல், இந்த வலைப் பூவில்..."சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்" வராது!
----------------------------------------------------------------------------
முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1.
M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2.
கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3.
தமிழ் சுப்ரபாதம் (நித்ய ஸ்ரீ) - (Windows Media Player)
நன்றி: Music: musicindiaonline.com, sribalaji.com Pics: tirumala-tirupati.com
----------------------------------------------------------------------------

Saturday, July 07, 2007

சுப்ரபாதம்(9&10) - நாரதா, ஒனக்கு வேறு இடம் கிடைக்கவில்லையா?

காலாங்காத்தால வந்துட்டான்-பா கடன்காரன் என்று நம்மில் பல பேர் எத்தனை முறை சலித்துக் கொண்டிருப்போம்! அதுவும் தூங்கி எழுந்து பெட் காபி குடிக்கலாம் என்று வாய்க்கு அருகே லோட்டாவைக் கொண்டு போகும் வேளையில்................நம் முன்னே நாரதர் வந்து நின்றால்?.....

அய்யோ! அவர் கலக்கும் கலகக் காபி, இதை விட படு ஸ்டாராங்கா இருக்குமே! "நாரதா, இன்று உனக்கு வேறு இடம் கிடைக்கவில்லையா" என்று கேட்பார் அல்லவா சிவாஜி, திருவிளையாடல் படத்தில்!

பெருமாள் துயில் எழும் வேளையிலும், அதே போல் கன்-டைமுக்கு வந்து நிற்கிறார் நாரதர். என்ன விஷயமோ?....... பார்ப்போம் வாருங்கள்!
சென்ற பதிவில்
"கிளிகள்" பெருமாளை எழுப்பின; இன்றோ "கிலிகள்" எழுப்ப வந்துள்ளன! :-)





(இந்த சுலோகத்தை படிக்கும் போது, கூடவே கேட்டுப் பயில நினைத்தால், இதோ சொடுக்குங்கள்)




தந்த்ரீ ப்ரகர்ஷ மதுர ஸ்வநயா விபஞ்ச்யா
காயத்ய நந்த சரிதம் தவ நாரதோபி
பாஷாச மக்ர அசக்ருத் கரசார ரம்யம்
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்


தந்த்ரீ= தந்தி; ப்ரகர்ஷ = அடர்ந்து நீண்ட
நாரதர் தோளில் எப்போதும் தொங்குமே, அது ஒரு விசேட வீணை. அதற்கு மஹதி என்று பெயர்.
அப்போதே எளிதில் எங்கும் எடுத்துச் செல்லக் கூடிய (மொபைல்) வீணையைக் கையாண்டுள்ளார் பாருங்கள்! ஏன் ஊர் ஊராக எடுத்துச் செல்ல வேண்டும்?
எங்கும் ஒரு இடத்தில் நிலையாக இல்லாது......திரிந்து கொண்டே இருப்பது அவர் பெற்ற சாபம். அது தனிக் கதை! அதற்கு ஏற்றவாறு ஒரு இசைக் கருவி மஹதி!
இன்று நாம் கச்சேரிகளில் காணும் வீணையைத் தோளில் தொங்க விட்டுக் கொண்டு, நடமாட முடியுமா என்று கற்பனை செய்து பாருங்கள்! :-)
அடர்ந்து நீண்ட தந்தி உடைய அந்த வீணையில்...

மதுர ஸ்வநயா விபஞ்ச்யா = மதுரமான உன் நாமங்களை சொல்லிக் கொண்டு
பெருமாள் அழகன் என்பது அனைவரும் அறிந்ததே! அவன் திருநாமம் அவனை விடவும் அழகு, இனிமை! அதனால் தான் அது மதுரமான நாம சங்கீர்த்தனம்...
"நாராயண நாராயண ஜெய கோவிந்த ஹரே!" என்று தான் நாரதர் பொதுவாக மீட்டுவாராம்!

நாராயணா என்ற பெயரைக் கேட்டாலே எரிந்து விழும் இரணியகசிபு கூட, இதன் ராகத்தில் மயங்கினானாம்! நாராயண நாமத்தை வாய் விட்டுப் பாடினால் தானே அவன் வம்பு செய்வான்! பாடாமல், மீட்டினால்?
பாவம், நாரதர் தன் எதிரியின் திவ்ய மங்களத் திருநாமங்களைத் தான் பாடுகிறார் என்று அவனுக்கு தெரியாமால், ஆகா ஓகோ என்று ரசித்தானாம்:-)

காயத்ய நந்த சரிதம் = உன் சரிதத்தை, நந்த கிருஷ்ண சரிதத்தைக், கானம் பாடுகிறார்

தவ நாரதோபி = தவ ஒழுக்கத்தில் சிறந்த நாரத முனி!
நாரதர் சார்பு நிலைகள் எதுவும் அற்றவர். தேவர், அசுரர் என்று எல்லாரும் அவரை வரவேற்று உபசரிப்பார்கள்! தர்மம் தழைக்க, இறைவனின் திருவுள்ளப்படி காரியம் ஆற்றுபவர்!
கலகப் பிரியர் என்று உலகம் பழித்தாலும் புகழ்ந்தாலும், அந்தச் சாபத்தையும் வரமாக ஆக்கிக் கொண்டவர்! நாரதர் கலகம் நன்மையில் தானே முடியும்!

நாரதர் சிறந்த முருக பக்தர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

வள்ளித் திருமணத்தில் பெரும் பங்கு வகிப்பவர்! முருகனுக்கே அறிவுரை சொல்லி, காதல் திருமணம் தான் என்றாலும், வள்ளியின் பெற்றோருடைய ஆசி திருமணத்துக்குத் தேவை என்று வலியுறுத்துவார்.

அப்பேர்பட்ட மகரிஷி, கர்நாடக இசையின் ஆதி குரு,

இதோ.......திருமலையில், எம்பெருமான் சந்நிதி முன்பு, பங்காரு வாகிலி (தங்க வாயில்) நின்று கொண்டு, பூபாள ராகத்தில் கீர்த்தனை மீட்டி, திருப்பள்ளி எழுச்சி பாடுகிறார்!

பாஷா சமக்ரம் அசக்ருத் = முழு வாக்கியங்களை ஒரு முறை மட்டும் பாடி நிறுத்தி விடாது, தொடர்ந்து பாடி
தொடர்ந்து பாடுவது என்பது ஒரு cycle, சுழற்சி! ஓம் நமோ வேங்கடேசாய, என்று ஜபிப்பது போல!
காலையில் நம்மை எழுப்ப, நம் அம்மாவும், "எழுந்துருடா" என்று ஒரு முறை சொன்னால் வேலைக்கு ஆகுதா? தொடந்து ஜபம் செய்கிறார்களே, அது போலத் தான்!
:-)

கரசார ரம்யம் = இனிமையான, ரம்மியமான நாரத சங்கீர்த்தனம் கேட்கிறதே!

சேஷாத்ரி சேகரவிபோ = சேஷ மலைச் சிகரத்துக்கு அரசனே!
தவ சுப்ரபாதம் = இனிய காலை வணக்கங்கள்! திருப்பள்ளி எழுவாயாக!!


அடுத்து...............பாருங்க! ஒரு சூப்பர் இயற்கைக் காட்சி!

ஷாப்பிங் மாலில் இரவு நேரம்! எல்லாரும் வெளியேறி விட்டார்கள் என்று நினைத்துக் கதவடைத்து விட்டார்கள்!
ஆனால் பாவம்...எங்கோ உள்ளே இருந்து கொண்டு, விலை ஆராய்ச்சி செய்து கொண்டு இருந்த நீங்கள் மாட்டிக் கொண்டீர்கள்! யாருக்காச்சும் இப்படி நடந்துள்ளதா? :-)
இரவெல்லாம் தனியாக மாட்டிக் கொண்டு, எப்போதடா விடியும் என்று காத்துக் கொண்டிருக்குது ஒரு ஜீவன், திருப்பதி மலையின் மேலே!
யார் அது?.............. பாட்டைப் பாருங்கள்!








ப்ருங்காவலீ ச மகரந்த ரஸா நுவித்த
ஜங்கார கீத நிநதைஸ் சக சேவநாய
நிர்யாத்யு பாந்த சரஸீ கமலோ தரேப்ய
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்


ப்ருங்காவலீ ச மகரந்த
ரஸா நுவித்த = மகரந்த ரசத்தை அனுபவிக்கும் வண்டுகள் சிறைபட்டுக் கிடக்கின்றன
தாமரைப் பூ எவ்வளவு உத்தமமான காதலி! மாலை வேளை ஆனதும், சூரியக் காதலன் போய் விடுவான் என்று தெரிந்து, தானும் தன் இதழ்களை மூடிக் கொள்கிறாள்!
பாவம், இவர்கள் காதலின் ஆழத்தை அறியாத வண்டுகள்,

இன்பமாக தேன் குடித்துக் கொண்டு போதையில் இருக்கின்றன. தாமரை கூம்பிக் கொள்கிறது. உள்ளேயே மாட்டிக் கொண்டன வண்டுகள்!

இன்பம் என்று நினைத்த தேனே எமனாய் ஆகிவிட்டது வண்டுக்கு!
இரவெல்லாம் தாமரைச் சிறைவாசம்!....................................
அதே இன்பத் தேன் இப்போது கசக்க ஆரம்பித்து விட்டதோ வண்டுக்கு?
எப்போதடா பகல் வேளை வரும், எப்போது தாமரை விரியும், எப்போது மீண்டு வரலாம் என்று கணக்கு போடத் துவங்கி விட்டது வண்டு! - நம் ஆன்மாவும் இப்படித் தானோ?

ஜங்கார கீத நிநதைஸ்,
சக சேவநாய = ரீங்கார சப்தத்தை இனிய கீதம் போல் எழுப்புகின்றன. உன்னைச் சேவிக்கின்றன!
சிறைவாசத்தால் சித்தம் தெளிந்த வண்டு, உன்னை மனத்துக்குள்ளேயே சேவித்து, ரீங்கார கீதம் பாட....அதற்கும் ஒரு விடியல் பிறக்கிறது!

நிர்யாத்யு பாந்த
சரஸீ கமலோ தரேப்ய = அந்தக் குளத்தில் (சரஸ்) இருக்கும் தாமரை (கமலம்), இதோ விரிகிறது....ஆன்மா விடுகிறது!
விடியல் கிடைக்கிறது, தாமரை விரிகிறது, சிறை ஒழிகிறது, வண்டு பறக்கிறது!

சேஷாத்ரி சேகரவிபோ = சேஷ மலைச் சிகரத்துக்கு அரசனே!
தவ சுப்ரபாதம் = இனிய காலை வணக்கங்கள்! திருப்பள்ளி எழுவாயாக!!
சு+ப்ரபாதம் = உனக்கும், அதனால் எங்களுக்கும் சுகமான காலைப் பொழுதாக மலரட்டும்.
----------------------------------------------------------------------------
முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1.
M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2.
கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3.
தமிழ் சுப்ரபாதம் (நித்ய ஸ்ரீ) - (Windows Media Player)
நன்றி: Music: musicindiaonline.com, sribalaji.com Pics: tirumala-tirupati.com
----------------------------------------------------------------------------

சுப்ரபாதம் (தமிழில்):

ஒலிச் சுட்டிகள்!

முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1. M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2. கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3. தமிழ் சுப்ரபாதம் - நித்ய ஸ்ரீ பாடுவது (Windows Media Player)

நன்றி:
Music: musicindiaonline.com, sribalaji.com
Pics: tirumala-tirupati.com

சுப்ரபாதம் (மூலம்):

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP