Saturday, December 15, 2007

சுப்ரபாதம்(28&29): திருப்பதியில் பெருசா அப்படி என்னய்யா இருக்கு?

இன்னியோட சுப்ரபாதப் பதிவுகள் நிறைவு அடையப் போகின்றன! திருப்பதியில் மட்டும் அப்படி என்னாங்க சிறப்பு? எதுக்கு இம்புட்டு கூட்டம், இத்தினி பில்டப்பு? :-)

குடும்பஸ்தர்கள் முதல் துறவிகள் வரை, வாலிபன் முதல் வயோதிகன் வரை, ஏழை முதல் பணக்காரன் வரை, கள்ள நோட்டு அடிப்பவன் முதற்கொண்டு கள்ளமில்லா உள்ளத்தான் வரை.....இவ்வளவு பேருக்கும்...திருமலையில் அப்படி என்ன ஒரு உணர்வு பூர்வமான ஒட்டுதல்? ஏன்-ஏன்-ஏன்?

பணம் குவியுதே! அதுனாலயா? இல்லை! பணம், பெருங்கூட்டம் எல்லாம் இப்போ தான்...சுமார் ஒரு அம்பது அறுவது ஆண்டுக்கு முன்னால் இருந்து தான்! அதுக்கு முன்னாடியெல்லாம் ஆண்டுக்கு ஒரு முறை போய் வருவதற்கே சிரமப்படுவாங்க! ஆனா எல்லாரு்க்கும் வீட்டில் இருந்து கொண்டே ஒரு தனி ஒட்டுதல் இருக்கும்! - ஏன்?

இரண்டாயிரம் வருசமா இருக்குதே! ஆழ்வார்கள் தங்கள் கால்களை, மலைமேல் வைத்து மிதிக்கவும் அஞ்சினார்களாமே!
சிலப்பதிகாரம் காலம் தொட்டு அப்படி என்ன ஒரு ஈர்ப்பு? தமிழ் இலக்கியம் மட்டும் தானா?
தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரிய மராத்தி இலக்கியங்கள், கீர்த்தனைப் பாடல்கள்-ன்னு...அப்படி என்ன தான்யா இருக்கு இங்கே? :-)

வாங்க, இன்னிக்கி சுலோகத்தைப் பார்த்தால், இந்த ரகசியம் புரிந்துவிடும்! கிடுகிடு-ன்னு பாட்டைப் பார்த்துவிட்டு, இந்த முக்கியமான செய்திக்குப் போவோம்!



இது மிகவும் முக்கியமான இறுதி சுலோகம். இரண்டு முறை ஓதுவாங்க! (இந்த சுலோகத்தைப் படிக்கும் போது, கூடவே கேட்டுப் பயில நினைத்தால், இதோ சொடுக்குங்கள்)




லஷ்மீ நிவாச நிரவத்ய குணைக சிந்தோ
சம்சார சாகர சமுத்தர அநைக சேதோ
வேதாந்த வேத்ய நிஜ வைபவ பக்த போக்ய
ஸ்ரீவேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

லஷ்மீ நிவாச = திருமகள் வசிக்கும் பெருமானே

(அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல்மங்கை உறைபவனே!)

நிர வத்ய குணைக சிந்தோ = குறையொன்றும் இல்லாத குணக் கடலே

(சிந்து=கடல்; நிர வத்ய குணக் கடல் = குறையொன்றுமில்லாத கல்யாண குணங்களின் கடல்! - இது அப்படியே ஒரு பாசுரம்! என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்!)

சம்சார சாகர சமுத்தர = வாழ்க்கைப் பெருங் கடலில் (சம்சார சாகரம்)
அநைக சேதோ = (எங்களைக் கரையேற்றி விடும்) ஒரே அணை நீ தான்!

(இது தான் மேலே சொன்ன ரகசியம்!!! கீழே விரிவாகப் பார்ப்போம்!!!)

வேதாந்த வேத்ய = வேதாந்தங்களும் அறிய விரும்பும் ஞானப்பொருள், நீ!
நிஜ வைபவ = உண்மையான குணங்களைக் கொண்டவன் நீ! (எண்குணத்தான் - கல்யாண குணங்கள் கொண்டவன்)

பக்த போக்ய = பக்தர்களுக்குப் போகமாக இருப்பவன் நீ! அடியார்கள் இன்புற்று இருப்பது ஒன்றிலேயே இன்புற்று இருப்பவன் நீ!


ஸ்ரீ வேங்கடாசல பதே = திரு வேங்கடம் உடையானே,
தவ சுப்ரபாதம் = உனக்கும் அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!



அடுத்து சுலோகம் நூற்பயன் (பலஸ்ருதி) என்று சொல்லுவார்கள்...நூலை உணர்ந்து படிப்பதால் வரும் நற்பயனைச் சொல்லும் சுலோகம்!


இத்தம் விருஷாசல பதே, இக சுப்ரபாதம்
யே மானவா, ப்ரதி தினம் படிதும் ப்ர-விருத்தா
தேஷாம் பிரபாத சமயே, ஸ்மிருதி ரங்க பாஜாம்
பிரஜ்ஞாம், பர ஆர்த்த சுலபாம், பரமாம் ப்ரசுதே


இத்தம் = இப்படியாக
விருஷா சல பதே = விருஷ மலை எனப்படும் திருமலைக்கு அதிபதியான
திருவேங்கடமுடையான்
இக சுப்ரபாதம் = அவனின் இந்த சுப்ரபாதம்

யே மானவா = அனைத்து மக்களும்
ப்ரதி தினம் படிதும் = தினமும் படித்து
ப்ர-வ்ருத்தா = ஒழுகுவார்களே ஆனால்

தேஷாம் பிரபாத சமயே = தினமும் வைகறைப் பொழுதில்,
ஸ்மிருதி ரங்க பாஜாம் = எம்பெருமான் முன்னர், நினைந்து (ஸ்மிருதி), ஓதுவார் தமக்கு

பிரஜ்ஞாம் = சிதறாத மனம் (பிரக்ஞை) சித்திக்கும்!
பர ஆர்த்த சுலபாம் = உயர்ந்த செல்வமான (நித்ய விபூதி = வீடுபேறு), சுலபமாய்க் கிட்டும்!
பரமாம் பிரசுதே = பரமபதம் வாய்க்கும்! பரமபதம் வாய்க்கும்!

------------------------------------------------------------------
முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1.
M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2.
கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3.
தமிழ் சுப்ரபாதம் (நித்ய ஸ்ரீ) - (Windows Media Player)
நன்றி: Music: musicindiaonline.com, sribalaji.com Pics: tirumala-tirupati.com

-------------------------------------------------------------------



சரி....ரகசியத்துக்கு வருவோம்!

திருப்பதிக்கு மட்டும் அப்படி என்னய்யா சிறப்பு?
ஏன்னா - திருப்பதியில் மட்டும் தான், இறைவன் ஒரு வித்தியாசமான கோலத்தில் நிற்கிறான்!
கூட்டத்தில் உன்னிப்பாகப் பார்க்க முடியவில்லையே-ன்னு சொல்லறீங்களா? பரவாயில்லை! காலண்டரில், படத்தில் எங்கு வேணுமானாலும் பாருங்க! பட்டுன்னு தெரியும்!

ஆன்மீகம்-னாலே ஏதோ நாலு பாட்டு, நாப்பது தத்துவம்,
புரியாத மொழியல தஸ்ஸூ புஸ்ஸுன்னு ஏதோ ஒன்னு!
அட, புரிஞ்ச மொழியான தமிழ்-ல கூட, வெளக்கம் சொன்னாத் தான்யா வெளங்குது!
படிக்காதவன், பாமரன்,....படிச்சும் அறிவில்லாதவன் - இவங்க கதி எல்லாம் என்ன? இறைவனை அனுபவிக்கவே முடியாதா?

கீதையும், அனுபூதியும் படிச்சாத் தான் ஞானம், பக்தி எல்லாம் பொறக்குமா?
இனிமே எங்கிட்டுப் போயி, இதெல்லாம் படிச்சி, எப்போ நான் கரையேறது? சரி......மாதா, பிதா, குருவைக் கேட்கலாம்-னா.........
இந்தக் காலத்துல "குரு"-ன்னு சொல்லிக்கிட்டு "குரு"ட்டாம் போக்குல வண்டி ஓட்டுறவங்க தான், அதிகமா இருக்காங்க! - யாரை நம்பறதுன்னே தெரியலையே! அடப் பெருமாளே!!

"அட,
உனக்கு ஏன்-பா இவ்ளோ குழப்பம்? நீ புதுசா எதையும் படிக்க வேணாம்! யாரையும் போயி புதுசா நம்பவும் வேணாம்!
உனக்கு கீதைக்குக் கீதையா, அனுபூதிக்கு அனுபூதியா,
குருவுக்கு குருவா....நான் தான் இருக்கேனே! அப்புறம் என்ன?
என் தோற்றத்தைக் கொஞ்சம் நல்லா உற்றுப் பாரு! வெவரம் புரிஞ்சிடும்!" பெருமானின் வலது கை = கீழே நோக்கித் தன் பாதங்களைக் காட்டுகிறது!
பெருமானின் இடது கை = தன் முழங்காலில் வைத்துக் கொண்டு நிற்கிறது!
எவன் ஒருவன், இந்தப் பாதங்களைப் பற்றிக் கொண்டு, விசுவாசத்துடன் தஞ்சம் அடைகின்றானோ, அவனுக்கு உலகம் என்னும் இந்த பெரிய சமுத்திரம்...இதோ வெறும் முழங்கால் ஆழம் தான்!
இப்படிச் சொல்லாமல் சொல்லி விளக்கும் முத்திரைக் கோலம்! = சம்சார சாகர சமுத்தர அநைக சேதோ = பிறவிப் பெருங்கடல் நீந்துவார்; நீந்தார் இறைவனடி சேராதார்!



பாதகங்கள் தீர்க்கும், பரமன் அடி காட்டும் = இது கோதைத் தமிழ்!
சர்வ தர்மான் பரித்யஜ்ய....மாம் "ஏகம்" சரணம் வ்ரஜ = இது கீதையின் ரகசியம், சரம சுலோகம்!! - எல்லாத் தர்மங்களையும் நீங்கி, என்னொருவனையே சரணம் புகுந்தவனைக் காத்து, வீடும் அளிப்பேன்!
இதை எல்லாம் தனித் தனியாகப் போய் எங்கு படிப்பது? அந்தக் கருத்துகளை எல்லாம் அப்படியே கற்சிலையில் காட்டி நிற்கிறான் இறைவன்!

இது போன்றதொரு கோலத்தை, வேறெங்கும் காண முடியாது! வேறு பெருமாள் கோவில்களில் கூட இப்படிக் காண முடியுமான்னு கேட்டா, முடியாது!
பொதுவா இறைவனை, அபயம் தரும் கரம் கோலத்திலோ, இல்லை வரங்கள் கொடுக்கும் வரத ஹஸ்தம் கோலத்திலோ தான் (வரம்-தரு-கரம்) அமைத்து இருப்பார்கள்!

இப்படி, முட்டி மேல் கையை வைச்சிக்கிட்டு, விறைப்பா எதுக்கு நிக்கணும்?
பெருங்கடல் நீந்தும் வழியைச் சொல்லிக் கொடுக்கத் தான்!
பாதங்களைக் காட்டுவது போல் காட்டி, வீடுபேறைக் காட்டும் திருக் கோலம்...அரிதிலும் அரிது!
மோட்சத்தையும் சுலபமாக்கிய ஒரே காரணத்தால் தான் கலியுகத் தெய்வம் = வேங்கடவன், என்று ஓகோவென்று கொண்டாடுகிறார்கள்!

இந்தக் கோலத்தின் உள்ளார்ந்த தத்துவம், கண்ணுக்குப் புலப்படுதோ, இல்லையோ, மனசுக்குப் புலப்படுதோ, இல்லையோ,
இந்த உன்னதம் தான், திருமலைக்கு இவ்வளவு சிறப்பைச் சேர்க்கிறது! ஒன்றும் புரியாவிட்டாலும் கூட, சன்னிதியில் நிற்கிறோமே சில நிமிடம்; அப்போது அந்த அடிமனசு மட்டும், இறைவா இறைவா என்று அதிர்கிறது அல்லவா? அதுக்கு இந்த மோட்சத் திருக்கோலம் தான் மறைமுகக் காரணம்!

ரகசியம், ரகசியம் என்று பொத்திப் பொத்தி வைத்த மறை பொருளை,
எந்தப் பேதமும் இன்றி அனைவருக்கும் "பப்ளிக்கா போட்டு உடைக்கும்", கோலம் தான் திருவேங்கடத் திருக்கோலம்!
சென்று சேர் திருவேங்கட மாமலை
ஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே
என்று நம்மாழ்வார் ஒரே போடாகப் போடுகிறார்!
எம்பெருமான் பொன்மலை மேல் ஏதேனும் ஆவேனே....என்று மலை மேல் ஏதாச்சும் ஒன்னாய் ஆக மாட்டோமா என்று அத்தனை ஆழ்வார்களும் உருகுகிறார்கள்!

ஒரு முறை இராமானுசரும் அவர் சீடர்களும், திருமலை யாத்திரையின் போது, வழி தவறிப் போய் விட்டார்கள்! பக்கத்து வயலில் ஏற்றம் இறைச்சிக்கிட்டு இருந்தான் ஒரு ஏழை விவசாயி; மலைக்குப் போகும் சரியான ரூட்டை அவங்களுக்குச் சொன்னான்!
உடனே அவனைக் கீழே விழுந்து கும்பிட்டாராம் இராமானுசர்! அட, இது என்ன சின்னப்புள்ளத் தனமால்ல இருக்குன்னு எல்லாரும் கூவ...

"மோட்சத்துக்கு வழிகாட்டிக் கொண்டு நிற்கிறான் வேங்கடவன்!
அந்த வழிகாட்டிக்கே, வழியைக் காட்டினான் பாருங்க இந்த விவசாயி! இவனும் ஒரு குரு தான்" என்று சொல்லி, மற்ற எல்லாரையும் தன் கூடவே விழுந்து கும்பிடச் சொன்னாராம்!
சரியான புனித பிம்பமா இருப்பாரு போல இருக்கே-ன்னு சொல்றீங்களா? :-)
இதில் இருந்து தெரிந்து கொள்ளுங்கள், திருமலைக்கு ஏன் அவ்வளவு சிறப்பு என்று!



இது வரைக்கும் எம்பெருமானின் திருப்பள்ளி எழுச்சியை, ஆர்வமுடன் வந்து கேட்ட அனைத்து நண்பர்களுக்கும், நன்றி சொல்லிக் கொள்கிறேன்!
பொதுவா ஆன்மீகப் பதிவுகளில்.....அதுவும் இது போன்று சுலோகம், பாட்டு-ன்னு வர பதிவுகளில் எல்லாம், பின்னூட்டப் புயல் அவ்வளவா வீசாது! :-)

ஆனால் சுப்ரபாதப் பதிவுகளில் 100+ பின்னூட்டங்களும் வந்துள்ளன.
பரம், வியூகம்-னு பயனுள்ள விவாதங்கள் நடந்துள்ளன.
வேங்கடம், திரு+மால் என்று தமிழறிவு முயற்சிகள் பேசப்பட்டுள்ளன.
இதற்கு மேல்விளக்கப் பதிவுகள், இராம.கி. ஐயா போன்ற மற்ற மூத்த பதிவர்களால் போடப்பட்டுள்ளன!

வெறுமனே பொழிப்புரையாக மட்டும் சொல்லிக் கொண்டு போய் இருந்தால், இது எப்போதோ முடிந்திருக்கும்! ஆனால் அப்படிச் செய்ய என் மனம் ஒப்பவில்லை!
1. சுப்ரபாதம் எதுக்கு? நமக்கா? கடவுளுக்கா?
2. கோவிலுக்குக் குளிக்காமப் போனாத் தீட்டா?
3. வேங்கடம் வட சொல்லா? தமிழ்ச் சொல்லா?
4. தமிழுக்காகச் சுப்ரபாதம் பாதியில் நிறுத்தம்!
5. வைணவத்தில் நவக்கிரகங்கள் ஏன் இல்லை?
6. தீர்த்தம் ஏன் கொடுக்கறாங்க? சடாரி ஏன்??
என்று பல விளக்கங்களைப் பார்த்தோம்!

சும்மானா போனோமா வந்தோமா-ன்னு இல்லாம, இன்றைய இளைஞர்கள் மனத்தில் பல கேள்விகள் இருக்கு! அது ஏன் அப்படி.......இது ஏன் இப்படி-ன்னு பகுத்து அறிந்த பின்னர் தான், நடக்க நினைக்கிறார்கள்! அது தான் நல்லதும் கூட! அப்போது தான் ஒரு உடைமைக் குணம் (sense of ownership) வரும்!
அதான் பொழிப்புரை மட்டுமே சொல்லாம, பல கோணங்களில் "இது ஏன், அது ஏன்" என்று அலசிக்கிட்டே போனோம்!

இத்துடன் சுப்ரபாதம் நிறைந்தது! இதோ தங்க வாசல் திறந்தது!
எம்பெருமானின் காணத் தெவிட்டாத திருக்கோலம்! நீல மேனி நெடியோன் நின்ற வண்ணமும்!!
ஒற்றை வெள்ளை வேட்டியில்,
ஒற்றைத் துளசி மாலையில்,
வேறு ஆபரணங்கள் இன்றி,
பகை அணங்கு ஆழியும், பால் வெண் சங்குமாய் - சங்கு சக்கரங்களுடன்,
மோவாயில் பக்தன் அடித்த வெள்ளைத் தழும்பு - "தயா சிந்து" துலங்க,
திருமார்பில் அன்னை வீற்றிருந்து, நம் எல்லாரையும் "வாங்கப்பா வாங்க" ன்னு சொல்ல...
இந்த நாளின் முதல் சேவை = சுப்ரபாத சேவை!!!

தோள் கண்டார் தோளே கண்டார், தொடு கழல் கமலம் அன்ன
தாள் கண்டார் தாளே கண்டார், தடக் கை கண்டார்
என்று எல்லாரையும் மயக்கிப் போடும் ஒரு எளிவந்த திருக்கோலம்!

காலைச் சுத்திகள் முடிந்து, இன்றைய பொழுதின் தரிசனம் தொடங்கியது...
முதல் மணி ஒலிக்க, நவநீத ஆரத்தி என்னும் முதல் தீபம் காட்டப்படுகிறது! கோவிந்தா கோவிந்தா என்னும் முழக்கம்!
பாதங்களைக் காட்டி, முழங்காலில் கை வைத்து நிற்கும் கோலம் தெரிகிறது அல்லவா? நேரில் செல்லும் போதும் காண முயலுங்கள்!

இந்த முயற்சிக்கு உறுதுணையாய் இருந்த நண்பர்கள் பலருக்கும் நன்றி சொல்லிக்கிறேன்!
உலகில் not so privileged என்பார்களே, அந்தச் சில பிஞ்சுக் குழந்தைகளுக்காக, அப்பனை இறைஞ்சிக் கொள்கிறேன் - ஷ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணும்!!

வெறுமனே ஆரவாரத்தை விட்டு ஒழித்து,
அறிவும், செறிவும், வளர்க்க உதவுவது தான் ஆன்மீகம் என்ற நிலை வரவேண்டும். அதற்கான சிறுசிறு முயற்சிகள் பெருக இறைவன் துணை செய்யட்டும்!

தூங்குவது போல் தூங்கிக் கொண்டிருக்கும் நம்மையெல்லாம் தட்டி எழுப்ப, ஒரு சுப்ரபாதம் ஓங்கி ஒலிக்கட்டும்!!

கோவிந்த நாம சங்கீர்த்தனம் - கோவிந்தா கோவிந்தா!
திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்!

Monday, December 10, 2007

சுப்ரபாதம்(26&27): கோயிலில் முதல் தரிசனம் இவனுக்கா?

காலையில் சில பேர் எழுந்தவுடன், கட்டிலை விட்டு, முதலில் கண்ணாடி முன்னாடி போய் நிப்பாங்களாம்? எதுக்குன்னு கேக்கறீங்களா?
கூட்டுக் குடும்பத்தில் இருந்திருந்தா உங்களுக்கும் தெரிஞ்சிருக்கும்!
தலை கலைஞ்சி, கண்ணு சொக்கி, வாயில் ஜொள்ளு ஒழுகி, ஹா-ன்னு ஒரு கொட்டாவி விட்டு...காலாற எழுந்திரிச்சி நடந்தா...

அய்யோ.....வாஷ்பேசினுக்கு போற வழியில அத்தைப் பொண்ணு வந்து நிக்குறா...இவ எங்க இங்க வந்தா?
நம்ம கலைஞ்சி போன மூஞ்சிய பாத்திருப்பாளோ? நேத்துன்னு பாத்து, ஷேவிங் கூடப் பண்ணல! இப்பிடி யோசித்துக் கொண்டே, கையாலயே தலை சீவிக்கிற "சீவிப் பசங்க", இருக்குறாங்க! :-)
இப்படிப் பெருமாளும் துயில் களைஞ்சி ஒரு சீவு சீவிக்குறாரு! :-)



சுப்ரபாதப் பதிவுகள், அடுத்த பதிவோட முடியப் போகுது! அதனால் அடுத்த பதிவு மிகவும் ஸ்பெஷலான பதிவு! அதுக்கு முன்னோட்டமா, சில தகவல்களை இன்னிக்குப் பாக்கலாம்!

திருமலையில் சுப்ரபாத சேவைன்னே ஒரு தரிசனம் உண்டு! விடியற்காலை சுமார் 02:30 மணிக்கு துவங்கும் சுப்ரபாதம்.
அதுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு தான் நடை சாத்திக் கோவிலை மூடி இருப்பாங்க.
சடக்குன்னு அடுத்த நாளுக்காக, மீண்டும் திறந்திடுவாங்க! கோவிலில் முதல் தரிசனம் யாருக்குத் தெரியுமா?

வேதம் ஓதுபவர்களுக்கா? - இல்லை!
தமிழ் ஓதும் விற்பன்னருக்கா - இல்லை!
அரசனுக்கா? மந்திரிக்கா? - இல்லை! இல்லை!!
படித்த மேதைக்கா - இல்லை!
நேத்து உண்டியலில் எல்லாரையும் விட அதிகமாப் பணம் கொட்டினவருக்கா? - இல்லவே இல்லை!

இவர்கள் எல்லாரும் கைகட்டிக் காத்திருக்க, எங்கிருந்தோ "மாஆஆ" என்று ஒரு சத்தம்!
கூட்டம் அதிகம் இல்லை! குளிர் தென்றல் வீசுகிறது! சில பக்தர்கள் அங்கப் பிரதட்சிணம் செய்து முடிக்கிறார்கள்;

இப்போது நாம் நிற்கும் இடம் திருமாமணி மண்டபம். இரண்டு பெரிய காண்டா மணிகள் வாசலில்! அருகே நந்தா விளக்கு!
எதிர்ப் பக்கம் கருடன் நிற்கிறான். அவனுடன் சேர்ந்து நாம் எல்லாரும் நிற்கிறோம்.
வாயிலைக் காக்கும் துவார பாலகர்கள் (ஜய விஜயர்கள்) இருபுறமும் காத்து நிற்கும் தங்க வாயில் (தெலுங்கில்: பங்காரு வாகிலி) மூடப்பட்டு உள்ளது.

அர்ச்சகர்கள் குடங்களில் நீருடன் நிற்கின்றனர். பூக்குடலைகள் தாங்கிக் கொண்டு இன்னும் சில பேர் காத்துள்ளனர் - யாருக்கு?

திருமலையில் ஜீயர் என்னும் வைணவத் தலைவருக்கு "பெரிய கேள்வி அப்பன்" என்ற தூய தமிழ்ப் பெயர்! ஆலய நிர்வாகத்தில் கேள்வி கேட்கும் உரிமை பெற்றவர்; ஆதலால், கேள்வியப்பன் என்ற தமிழ்ப்பெயரைச் சூட்டி, அந்தப் பதவியை உருவாக்கினார் இராமானுசர்.
அந்தக் கேள்வியப்பர் பூட்டின் சாவியைத், துவார பாலகர்கள் அருகில் வைத்து, கதவைத் திறக்க அனுமதி பெறுகின்றார்; பின்னர் அவரும் காத்துள்ளார் - யாருக்கு?

அன்னமாச்சார்யரின் பூபாளக் கீர்த்தனை தம்பூராவில் இசைக்கப்படுகிறது;
தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் தமிழ்த் திருப்பள்ளி எழுச்சியின் முதல் பாசுரமும் அப்படியே இசைக்கப்படுகிறது! - வேறு மொழிச் சத்தங்களோ, கோஷங்களோ ஏதும் இல்லை!

மணிகள் ஒலிக்கின்றன; பேரிகையும் ஊதுகோலும் சேர்ந்து ஓசை எழுப்புகின்றன;
காற்றில் நெய் தீபத்தின் மணமும், பச்சைக் கர்ப்பூரத்தின் வாசனையும் மூக்கைத் துளைக்கிறது!
இதோ.....திருக்கதவம் திறக்கப்படுகிறது!
எல்லோர் கண்களும் எக்கி எக்கி, எம்பெருமானைச் சேவிக்கத் துடியாய்த் துடிக்க...
அடச்சே!....வெள்ளைத் திரை ஒன்று போடப்பட்டுள்ளதே! நாம் காண முடியாதா? - முடியாது...முதல் தரிசனம் வேறு யாரோ ஒருவருக்கு! - யாரப்பா அது?

ஜீயர், அர்ச்சகர்கள் எல்லாரும் உடனே ஒதுங்கிக் கொள்கிறார்கள்!
படிக்காத, பகட்டு இல்லாத ஒருவர் உள்ளே வர,
எல்லாரும் வழிவிட்டு ஓரமாக நின்று கொள்கிறார்கள்!

யாருக்கு இப்படி ஒரு மரியாதைன்னு பாக்குறீங்களா? - ஒரு மாட்டு இடையனுக்கு!
பசுவும், கன்றுமாய் ஓட்டி வரும் இடையன், பொற்கதவின் முன் வந்து நிற்க...
மெல்லத் திரையை விலக்கி....அவன் மட்டும் இறைவனை ஹா...வென்று பார்க்கிறான்! அவனுடன் பசுவும் கன்றும் இறைவனைக் காண்கின்றன!
பசுவும் கன்றுமாய், வரும் கோனாரின் முகத்தில் தான் திருமலை அப்பன் முதலில் விழிக்கின்றான்!

கற்றாரை யான் வேண்டேன்; கற்பனவும் இனி அமையும் என்று மாணிக்கவாசகர் பாடுவது தான் எவ்வளவு பொருத்தமாய் இருக்கு!
இந்தப் பழக்கம் பல நூற்றாண்டுகளாய் இருந்து வரும் ஒன்று! சாதி வித்தியாசங்கள் பார்க்கப்பட்ட காலத்தில் கூட, இந்த வழக்கம் நடைபெற்றுக் கொண்டு தான் இருந்தது.
கோ+விந்தன் = பசு+காப்போன் அல்லவா அவன்!
உயிர்கள் என்னும் பசுக்களைக் காத்து மேய்க்கும் "நல்ல மேய்ப்பன்"! அதனால் தான் பசுவைக் காட்டி, அன்றைய பணியை, இறைவனுக்கே அறிவுறுத்திச் செல்கிறான் இந்த இடையன்!

அதற்கு அப்புறம் தான் ஜீயரும், அர்ச்சகர்களும், இன்ன பிற அடியவர்களும் ஒவ்வொருவராய் உள்ளே செல்கிறார்கள்! அனைவர் கையிலும் மங்கலப் பொருட்கள் - கண்ணாடி, விளக்கு, மலர்மாலை என்று...
கண்ணாடியைத் தூக்கிப் பிடித்து, இறைவனுக்குக் காட்டியபடியே செல்கிறார்கள்!

அடுத்த நிறைவுப் பதிவில், எந்த அலங்காரமும் இன்றி, வெள்ளைத் துவராடையில், ஒற்றைத் துளசி மாலையுடன், மிக எளிமையாக ஒரு கோலத்தை நாம் எல்லாரும் காணப் போகிறோம்! திருப்பதியில் மட்டும் அப்படி என்ன பெருசா சிறப்பு இருக்குன்னு, சில பேர் கேக்கறாங்க இல்லையா? அடுத்த பதிவில் தெரிந்து விடும் பாருங்கள், உங்களுக்கு!

சுப்ரபாதத்தின் இறுதி வரிகள் ஒலித்துக் கொண்டு இருக்க....வாங்க, இன்றைய சுப்ரபாதத்துக்குப் போகலாம்;




(இந்த சுலோகத்தைப் படிக்கும் போது, கூடவே கேட்டுப் பயில நினைத்தால், இதோ சொடுக்குங்கள்)





பாஸ்வான் உதேதி விகசாநி சரோருகானி
சம்பூர யந்தி நினதை ககுபோ விகங்கா
ஸ்ரீவைஷ்ணவா சததம் அர்த்தித மங்களாஸ்தே
தாமாச்ரயந்தி தவ வேங்கட சுப்ரபாதம்

பாஸ்வான் உதேதி = கதிரவன் உதித்து விட்டான்!
விகசாநி சரோருகானி = மலர்ந்து விட்டன தாமரைகள்!

சம்பூரயந்தி நினதை = முழுமையாக ஒலிக்கத் தொடங்கிவிட்டது
ககுபோ விகங்கா = மலைப் பறவைகளின் ஒலி!

கீசு கீசு என்றும் ஆனைச்சாத்தன் கலந்து...
புள்ளும் சிலம்பின காண், புள்ளரையன் கோவிலில்
...என்ற திருப்பாவை வரிகள் அப்படியே நினைவுக்கு வருகின்றன!

ஸ்ரீவைஷ்ணவா = வைணவ அடியவர்கள்
சததம் அர்த்தித = என்றும் உன்னையே விரும்பிக் கொண்டு
மங்களா அஸ்தே = மங்களப் பொருட்களைக் கையில் தாங்கி நிற்கிறார்கள்!

தாமா ச்ரயந்தி = விடாப்பிடியாக இன்னும் தூக்கமா?

தவ வேங்கட சுப்ரபாதம் = திருவேங்கடமுடையானே, உனக்கும், அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!








பிரம்மா ஆதய சுரவரா ச மகர்ஷ யஸ்தே
சந்தஸ் சனந்தன முகாஸ் தவ யோகி வர்யா
தாமாந்திகே தவஹி மங்கள வஸ்து ஹஸ்தா
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்


பிரம்மா ஆதய = பிரம்மன் முதலான
சுரவரா = அமரர்கள்
ச மகர்ஷ யஸ்தே = இவர்களுடன் மகரிஷிகள்

சந்தஸ் சனந்தன = சந்தையாக வந்துள்ளனர், சனந்தனர் முதலான முனிவர்கள்
முகாஸ், தவ யோகி வர்யா = உன் கோயில் முகத் துவாரத்திலே, தவ யோகிகள் நிரம்பி உள்ளனர்!

தாமாந்திகே தவஹி = மின்னுகின்ற உயர்ந்த
மங்கள வஸ்து = மங்களப் பொருட்களை,
ஹஸ்தா = கையில் ஏந்தியுள்ளனர்.


எவை அந்த மங்கலப் பொருட்கள்? - நீர்க்குடம், தீபம், சாமரம், கண்ணாடி, வெண் துவராடை, துளசிதளம்!
காலையில் எழுந்தவுடன் மங்கலப் பொருட்களைப் பார்க்கும் வழக்கம் விஷூக் கனி என்று மலையாள மக்கள் கொண்டாடுவாங்க! ஆனா அது தமிழ் நாட்டு வழக்கம் தான்! எப்படி அதை நாம் தொலைத்தோம்-ன்னு தான் தெரியலை! :-)


வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க
மாநிதி கபிலை ஒண் "கண்ணாடி" முதலா
எம்பெருமான் படிமக்கலம் காண்டற்கு
ஏற்பனவாயின கொண்டு நன் முனிவர்
தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ?
- என்று இது அப்படியே திருப்பள்ளி எழுச்சியிலும் வருகிறது!


ஸ்ரீ வேங்கடாசல பதே = திருவேங்கடமுடையானே
தவ சுப்ரபாதம் = உனக்கும், அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!
----------------------------------------------------------------------------
முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1.
M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2.
கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3.
தமிழ் சுப்ரபாதம் (நித்ய ஸ்ரீ) - (Windows Media Player)
நன்றி: Music: musicindiaonline.com, sribalaji.com Pics: tirumala-tirupati.com
----------------------------------------------------------------------------

Saturday, November 17, 2007

சுப்ரபாதம்(25) - கோயிலில் ஏன் தீர்த்தம் கொடுக்கறாங்க?

தீர்த்தம்-னா காலேஜ் பசங்க சங்கேத மொழியில வேற அர்த்தம்! :-) ஆனா நாம இன்னிக்கி பாக்கப் போறது ஒரிஜினல் தீர்த்தம் பற்றி!
பெருமாள் கோவிலில் பல வேளைகளில் தீர்த்தம் கொடுத்து, தலையில் சடாரி வைக்கிறார்கள்! அது ஏன் என்று யாராச்சும் யோசிச்சு இருக்கீங்களா?

சும்மா ஒரு ரெண்டு சொட்டு தீர்த்தம் குடிச்சா தாகம் தீர்ந்திடுமா? சில பேர் வரிசைல நிக்காம முட்டி மோதி, தீர்த்தம் வாங்குகிறேன் பேர்வழி-ன்னு, பாதி தீர்த்தத்தை கீழே நழுவ விடுவதும் உண்டு! :-) எதுக்கு இந்த பில்டப்பு எல்லாம்?

முதலில் சடாரியை கொஞ்சம் எளிமையாப் பாத்துடுவோம் வாங்க! இது பற்றி மாதவிப் பந்தல் பதிவுகளில் முன்னர் லைட்டாகச் சொல்லி உள்ளேன்!



சடாரி அல்லது சடகோபம்; அதைக் கொஞ்சம் கூர்ந்து பாருங்க; ஏதோ ஒரு கிரீடம் போல இருக்கும். அதன் மேலே இரு பாதங்கள்!
இறைவனின் திருப்பாதங்களை நாம் தேடிப் போகா விட்டாலும் கூட, அவை நம்மைத் தேடி வருகின்றன! நம்மைக் கடைத்தேற்ற!
கோவிலுக்கு உள்ளேயும் சரி, வெளியேயும் சரி, இந்த சடாரி கூடவே பயணிக்கும்!


சுவாமி சிவானந்தரிடம் அப்துல் கலாம் ஒரு கேள்வி் கேட்டாராம்; அக்கினிச் சிறகுகள் நூலில் வரும்! - How can I find my right teacher?
அதற்குச் சிவானந்தர் சொன்ன பதில் - When the student is ready, the Teacher arrives!

அறியாத சீடன், குருவை மட்டும் எப்படித் தனியாக அறிந்து விட முடியும்? அவன் குருவை நோக்கிச் செல்ல வேண்டியதில்லை! சீடனை நோக்கிக் குரு தானே வருவார், சீடன் கற்க விழையும் போது!

அது போல் ஒரு குரு வருகிறார் நம்மைத் தேடி!
நம்மாழ்வாரின் இயற்பெயர் மாறன் சடகோபன்! சடாரிக்குப் பெயரும் சடகோபம் தான்! வைணவ மரபில் அவர் தான் ஆதி குரு! அவர் தான் சடாரியாக வருகிறார் நம்மிடம்!
அவரே இறைவனின் சடாரியாக இருந்து,
அவன் பாதங்களை,
நம்மை நோக்கிக் கொண்டு வந்து கொடுத்து,
நம்மை உய்விக்கிறார்! - இதுவே சடாரியின் தத்துவம்!
சரி, அதற்கு ஏன் கிரீடம் போல ஒரு அமைப்பு? ஸ்ட்ரெயிட்டா பாதங்களையே தலை மேல் வைத்து விடலாமே?

நாம் தான் எது ஒன்னையும் நேரடியா கொடுத்தாலே, ஆயிரம் எடக்கு பேசுவோமே? ஆனால் அதே வேளையில், நம்மைச் சிறப்பித்து, நமக்கு்த் தலையில் சூட்டினா, உச்சி குளிர்ந்து விடாதா? வெளியில் காட்டிக் கொள்ளாவிட்டாலும், உள்ளே கொஞ்சமாச்சும் புளகாங்கிதம் அடைவோம் அல்லவா? :-)

"தலை" மேல தூக்கி வச்சிக்கிட்டு ஆடுறான், "தலை" கால் தெரியலை அப்படி-ன்னு பேச்சு வழக்கில் கூட, எண்சாண் உடம்புக்கு "தலையே" பிரதானம்!
என்னா "தல", செளக்கியமா-ன்னு தான் நாமளும் கேக்கறோம்! "தலை"யாய ஒன்றுன்னு தானே இலக்கியங்களும் சொல்கின்றன!

இப்படிப்பட்ட மனிதனின் தலைக்கு அணிகலனாகத் தான் அந்தக் கிரீடம்!
ஆனா கிரீடம் தான் உண்மையான அணிகலனா? இல்லை! - அதுக்கு மேலேயும் ஒன்னு இருக்கு! உலகத்தில், தலை மேல் வைத்துக் கொண்டாட வேண்டிய ஒரே பொருள் எது? - இறைவனின் திருப்பாதங்கள் தான்! - எண்குணத்தான் தாளை வணங்காத் தலை என்பது தான் வள்ளுவம்!

அவன் மலரடிகளைச் சூட்டிக் கொள்வதை விட பெரும்பெருமை வேறெதுவும் இல்லை!
அதனால் தான் சடாரியில் கிரீடம் வைத்து, அதன் மேல் சுவாமியின் திருவடிகளை வைத்தார்கள்!
எந்தப் பேதமும் இன்றி அனைவருக்கும் தலையில் சூட்டி அழகு பார்க்கும் கிரீடம் அது! யாருக்கும் மறுக்கப்படாத கிரீடம் - அதுவே சடாரி!!



அடுத்து தீர்த்தம் எதுக்கு-ன்னும் பார்த்து விடுவோம், வாங்க!
நாராயணன் என்ற பதத்தில், நாரம் என்பதற்குத் தண்ணீர்-னு பொருள்!

நீர் இன்றி அமையாது உலகு! அது போல் நீர் வண்ணன் அன்றி அமையாது உலகும் உயிரும்!

அதனால் தான் பெருமாளுக்கு எல்லாமே நீராக அமைந்துள்ளது!
அவன் பேரும் நீர்! அவன் வண்ணமும் நீர்!
அவன் உறைவதும் பாற்கடல் நீர்! அவனுடன் அலைமகளும் நீர்!
"ஆபோ நாரா" என்று ஒரு சூக்தமும் உண்டு! பிரளய காலத்தில் ஏற்படும் நீருக்கும், படைக்கும் காலத்தில் தோன்றும் நீருக்கும் நாரம்-ன்னு பேரு!

துப்பு ஆர்க்குத், துப்பு ஆயத், துப்பு ஆக்கித், - துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை என்ற குறள் நினைவிருக்கா?
உணவை உற்பத்தி செய்யவும் நீர் தேவை! அதே சமயம், அந்த நீரே ஒரு உணவாகவும் இருக்கு!

நீரைப் போலவே நீர் வண்ணன் நாராயணனும், உலகுக்குக் காரணமாகவும் இருக்கிறான்! அதே சமயம் காரியமாகவும் இருக்கிறான்!

அதனால் தான் "ஆழிமழைக் கண்ணா" என்று மழை நீரோடு, நாரணனைச் சேர்த்தார்கள்!

நீருக்கு ஒரு பெரிய குணம் இருக்கு! - அதுக்கு வடிவம் என்பதே கிடையாது! ஆனா, எதில் ஊற்றுகிறீர்களோ, அந்த வடிவத்தை அது பெற்று விடும்!
அதே போல் தான் நீர்வண்ணனாகிய நாரணனும்!
தமர் உகந்தது எவ்வுருவம், அவ்வுருவம் தானே! அடங்காது எங்கும் பரந்த பரந்தாமன், எதிலும் அடங்கி விடுவான், நீரைப் போலவே!

மீனா, ஆமையா, பன்றியா, நரசிங்கமா, குள்ளமா, உசரமா, முனிவனா, குடும்பஸ்தனா, அரசனா, மாட்டுக்காரனா, கற்சிலையா, அடியவர் மனதா - எதிலும் அடங்கி விடும் தன்மை அவனுக்கு! எளியவர்க்கு எளியனான இந்த குணத்துக்குக் கூட "நீர்மை" என்றே பெயர்!

அதனால் தான் நாரணன்-நீரான் என்பதைக் காட்டி, அவனையே நமக்கு மணக்க மணக்கப் பருகத் தருகிறார்கள்! அதுவே தீர்த்தம்! ஒரே ஒரு சொட்டு போதும்! உள்ளில் அடங்க!
அதுவும் அவன் திருமேனியில் பட்ட நீர் என்பதால், அவன் திருமேனி சம்பந்தத்தையும் நமக்கு அளிக்கிறது!

தீர்த்தம் வாங்கிக் கொள்ளும் முறையும் ஒன்று உள்ளது! கட்டை விரலையும் ஆட்காட்டி விரலையும் சேர்த்தால், உள்ளங்கை குவிந்து விடும். அதில் நீரைச் சிந்தாமல் வாங்கிக் கொள்ளலாம்! சிலர் வேட்டியின் நுனியையோ, துண்டின் நுனியையோ ஒரு கையில் பிடித்து இன்னொரு கையில் வாங்கிக் கொள்வார்கள்; கீழே சிந்தாது! வெளியூரில் ஏது வேட்டி? நான் கைக்குட்டையைப் பிடித்து வாங்கிக் கொள்வேன்! :-)

வாங்க, இன்றைய சுப்ரபாதத்துக்குப் போகலாம்; தீர்த்தம்னா என்ன, அதில் கலந்துள்ள பொருட்கள் என்னென்னு சொல்றாங்க!



(இந்த சுலோகத்தைப் படிக்கும் போது, கூடவே கேட்டுப் பயில நினைத்தால், இதோ சொடுக்குங்கள்)


ஏலா லவங்க கனசார சுகந்தி தீர்த்தம்
திவ்யம் வியத்சரிதி ஹேம கடேஷூ பூர்ணம்
த்ருத் வாத்ய வைதிக சிகாமணய ப்ருஹ்ருஷ்டா
திஷ்டந்தி வேங்கட பதே தவ சுப்ரபாதம்

ஏலா லவங்க கனசார = ஏலக்காய், லவங்கம், பச்சைக் கர்ப்பூரம்
சுகந்தி தீர்த்தம் = இவற்றால் நறுமணம் கமழும் நன்னீர் (தீர்த்தம்)
தீர்த்தங்களில் பெரும்பாலும் இடப்படும் பொருட்கள்:
பச்சைக் கர்ப்பூரம்
ஏலக்காய், இலவங்கம்
ஜாதிக்காய், வெட்டிவேர்
மருத்துவ மரப்பட்டைகள்
சிறிது மஞ்சள்
எல்லாவற்றுக்கும் மேலாக, துளசி! - இவற்றினால் உண்டாகும் வாசம், நாத்திகரையும் தீர்த்தம் பருக வைக்கும்! :-)
வாழாட்பட்டு நின்றீர் ஊள்ளீரேல், வந்து மண்ணும் மணமும் கொள்மின் என்கிறார் பெரியாழ்வார்! நீராட்டிய நீர் மட்டும் தான் தீர்த்தம் என்றில்லை! நீராட்டம் இல்லாத ஆலயங்களிலும் கூட வெறும் நீரைச் சேமித்து வைத்து தீர்த்தம் தருவது உண்டு!

எம்பெருமானுடைய திருமேனி சம்பந்தத்தால், வாசனை நீர், வாசவன் நீராக ஆகிறது.
தினமும் திருமஞ்சனம் நடக்காத கோயில்களில் கூட, சுவாமியின் திருப்பாதங்களுக்கு நீராட்டு உண்டு! அதை ஸ்ரீ பாத தீர்த்தம்-னு சொல்லுவாங்க!
மேலும் திருமஞ்சனம் செய்த பின், சுவாமியின் திருமேனியில் உள்ள ஈர ஆடையைக் களைந்து, கைகளில் சுற்றிக் கொண்டு, ஒவ்வொருவருக்கும் ஈரவாடைத் தீர்த்தம் தருவது வழக்கம்! உடுத்துக் களைந்த நின் பீதக ஆடை-ன்னு பெரியாழ்வார் பாசுரம்!
சிவாலயங்களில் கூட சில சமயம் தீர்த்தம் உண்டு! பூவும் நீரும் கண்டு என்பது அப்பர் பெருமானின் பதிகம்.

திவ்யம் வியத் சரிதி = அழகாக ஓடும் ஆற்று நீரை (ஆகாச கங்கை நீர் வீழ்ச்சியில் இருந்து)
ஹேம கடேஷூ பூர்ணம் = தங்கக் குடங்களில் முழுமையாக நிரப்பி,

ஆகாச கங்கை என்னும் அருவியில் இருந்து தான், திருவேங்கடமுடையானுக்கு திருமஞ்சன நீர் எடுக்கப்பட்டது!
இந்த நீர்க் கைங்கர்யம் செய்யுமாறு பெரிய திருமலை நம்பிகளை வேண்டிக் கேட்டுக் கொண்டார் இராமானுசர். மலர் கைங்கர்யத்துக்கு அனந்தாழ்வானை நியமித்து அருளினார்!
இது பற்றி முன்னரே மாதவிப் பந்தல் பதிவில் "தண்ணி காட்டிய இறைவன்" என்னும் இடுகையில் பார்த்துள்ளோம்!

பாபவிநாசம்

ஆகாசகங்கை


மிகவும் வயதான திருமலை நம்பிகளின் உடல் நலம் கருதி, இறைவனே வந்து திருவிளையாடல் செய்தான். பாபவிநாசம் என்னும் இன்னொரு தீர்த்தத்தைக் கோவிலுக்கு அருகிலேயே உண்டாக்கினான். இப்போது இங்கிருந்து தான் தீர்த்தம் எடுக்கிறார்கள்!
இன்றும் திருமலை நம்பிகளின் வம்சத்தவர், (தோழப்பர் என்று அழைக்கப்படுபவர்கள்) ஆண்டுக்கு ஒரு முறை தண்ணீர் அமுது உற்சவத்தின் போது, பழைய ஆகாச கங்கையில் இருந்து நீர் கொணர்ந்து சமர்ப்பணம் செய்கிறார்கள்!


அது தவிர, மோசமான வானிலை போன்ற சூழ்நிலைகளில், கோவிலின் உள்ளேயே உள்ள பொற்கிணற்றில் (பங்காரு பாவி) நீர் சேந்திக் கொள்வதுண்டு. Water Management என்னும் நீர் மேலாண்மை மாதிரி தான்! இந்தக் கிணற்றைத், தரிசனம் முடித்து விமானப் பிரகாரத்துக்கு வந்தவுடனேயே எதிரில் காணலாம்!

பொற்கிணறு

த்ருத் வாத்ய = வேகமாக எடுத்து வருகிறார்கள்
வைதிக சிகாமணய = வேத ஓதும் விற்பன்னர்கள்!
ப்ருஹ்ருஷ்டா = மகிழ்ச்சியுடன் (வந்து உன் சன்னிதியில் நிற்கும் அவர்களுக்கு)
திஷ்டந்தி = காத்திருந்து அருள் புரிவாய்!

இவ்வாறு பொற்குடங்களில் நீர் எடுத்து வரும் விற்பன்னர்கள், ஆலய வாசலுக்கு வேகமாக ஓடி வருகிறார்கள்! மலை இறக்கம் வேறு அல்லவா? தானாகவே அவர்களைத் தள்ளுகிறது!
அன்று முழுதும் அடியார்க்கு நல்லபடி தரிசனம் கிடைக்க வேண்டுமே! அதற்கு காலம் தாமதிக்காது, தீர்த்தம் கொணர்ந்தால் தானே முடியும்! அதனால் தான் இந்த ஓட்டமும் நடையும்!
வாய் நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால், கதிரொளித் தீபம் கலசமுடன் ஏந்தி, கோவில் வாசலுக்கு குறித்த நேரத்தில் வந்து நிற்கின்றனர்!


அப்பா பெருமாளே, அவர்கள் வரத் தாமதம் ஆனாலும் ஆகலாம்; அதனால் இன்னும் கொஞ்ச நேரம் தூங்குகிறேன் என்று நீயும் சின்னக் குழந்தையைப் போலச் சேட்டை செய்யாதே!
அவர்கள் சொன்ன வண்ணம் சொன்ன நேரத்துக்கு வந்து விடுவார்கள்! போதும் தூக்கம்!
அவர்கள் வருகைக்காக நீ எழுந்து காத்திரு! - தீர்த்தம் வந்த அடுத்த விநாடி ஒரு கணமும் தாமதியாது, எழுந்து தயராகி விடு!
நாளெல்லாம் உன்னைக் காண அடியார்கள் கால் கடுத்து நிற்கிறார்கள்! நீ தாமதிக்கலாமா? தத்துவம் அன்று! தகவேலோ ரெம்பாவாய்!

வேங்கட பதே = திருவேங்கடமுடையானே
தவ சுப்ரபாதம் = உனக்கும், அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!


----------------------------------------------------------------------------
முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1.
M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2.
கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3.
தமிழ் சுப்ரபாதம் (நித்ய ஸ்ரீ) - (Windows Media Player)
நன்றி: Music: musicindiaonline.com, sribalaji.com Pics: tirumala-tirupati.com
----------------------------------------------------------------------------

Saturday, November 03, 2007

சுப்ரபாதம்(23&24) - தமிழ் ஆட்டம்! மச்சாகூர்-மாகோலா-சிங்காவா-மாராமா!

சரி, அது என்னா மச்சாகூர்-மாகோலா-சிங்காவா-ராமாரா?:-)
மாகோலா, கோக்கோ கோலா-ன்னுகிட்டு என்ன உளறல்-னு பாக்குறீங்களா?ஹிஹி..அது ஒரு தமிழ் விளையாட்டு! பதிவின் கடைசிலே பாருங்க!

இன்னிக்கி சுப்ரபாதம் என்னன்னா? காதலில் வெற்றி அடைய வேண்டுமா?
மன்மத விரதம் இருங்க!
மன்மதன்-ரதி கோவிலுக்குப் போங்க-ன்னு யாராச்சும் இது வரை சொல்லி இருக்காங்களா?
அப்படிச் சொன்னாக்கா, இளைஞர் பட்டாளம் முழுக்க எந்தக் கோவிலுக்குப் போகும்-னு நினைக்கிறீங்க? பேசாம மெரீனா பீச்சுக்கு எதிர்தாப்புல ஒரு மன்மதன் கோயில் கட்டிடலாமா? :-)

அட, சும்மா இல்லீங்க! ஆனானப்பட்ட ஆண்டாளே மன்மதனை வேண்டினாளாம், தன்னைக் கண்ணனோட சேர்த்து வைக்கச் சொல்லி!
பாவைநோன்பு இருந்தவள், மன்மத நோன்பும் இருந்தாளாம்!
காயுடை நெல்லொடு கரும்பு அமைத்துக்
கட்டி அரிசி அவல் அமைத்து,
வாய் உடை மறையவர் மந்திரத்தால்
மன்மதனே உன்னை வணங்கு கின்றேன்

- என்று வேறு பாடுறா! எதுக்காம்?

தேயம் முன் அளந்தவன் திரிவிக்கிரமன்
திருக் கைகளால் என்னைத் தீண்டும்வண்ணம்,
சாயுடை வயிறும் மென் தடமுலையும்
தரணியில் தலைப்புகழ் தரக்கிற்றியே

- திரிவிக்ரமன் அணைப்புக்காம்!
அடுத்த முறை, கோவிலில் காதலர்களை யாரும் திட்டினாங்கனா, ஆண்டாள் பாட்டை எடுத்து வுடுங்க! கப்-சிப்புன்னு ஆயிடுவாங்க! :-)

மன்மத லீலையை வென்றார் உண்டோ? மன்மதன் எல்லாரையும் மயக்குவான், அதிலும் புது மாப்பிள்ளைகளை அதிகம் மயக்குவான் சரி!
ஆனா அந்த மன்மதனையே மயக்கி அவன் தொழிலையே மறக்கச் செய்ய முடியுமா? யாரால் முடியும்?
ஒரே ஒரு ஜோடியால் தான் முடியும்! யார் அது? பார்க்கலாம் வாங்க!



(இந்த சுலோகத்தைப் படிக்கும் போது, கூடவே கேட்டுப் பயில நினைத்தால், இதோ சொடுக்குங்கள்)






























கந்தர்ப்ப தர்ப்ப ஹர சுந்தர திவ்ய மூர்த்தே
காந்தா குசாம் புருஹ குட்மல லோல த்ருஷ்டே
கல்யாண நிர்மல குணாகர திவ்ய கீர்த்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

கந்தர்ப்ப = காதலின் தேவன், மன்மதன்
தர்ப்ப = அவனின் தற்பெருமையை
ஹர = விரட்டிடும்
சுந்தர திவ்ய மூர்த்தே = அழகும், புனிதமும் கொண்ட மூர்த்தியே, பெருமாளே!


மன்மதனை எரித்தவன் சிவபிரான்! அப்படிச் சிவனாரின் தவத்தையே கலைக்கும் அளவுக்கு தொழில் புரிந்த மன்மதன், தன் தொழிலையே மறந்து மயங்குகிறான் என்றால்?
எவரையும் தன் கரும்பு வில் பாணத்தால் மயங்கச் செய்பவன் என்ற அவனுடைய தற்பெருமை...ஒன்றுமில்லாமல் போகிறது! எதைப் பார்த்து?

திவ்ய தம்பதிகள் இருவரைப் பார்த்து!
அவர்களின் காதலும், அன்பும் கண்டு அவனே வெட்கி நிற்கிறான்!
மன்மத பாணம் பாய்ந்தால். கொஞ்ச நேரம் தான் மோகம் இருக்கும்!
ஆனால் இங்கு அவன் பாணத்தின் சக்தி, தூய்மையான காதல் முன் தலைகுனிந்து நிற்கிறது! ஏனாம்?
பெருமாள் உறக்கம் கலையாமல், தன் மனத்துக்கினிய மனையாள், மகாலக்ஷ்மியை அணைத்துக் கொண்டு, உறங்கிய வண்ணமே இருக்கிறான்!

இவர்கள் உறங்கும் அழகு,
கண்கள் மூடினாலும், ஒருவரை ஒருவர் உறக்கத்திலும் பார்த்துக் கொண்டிருக்கும் அழகு,
எனக்கு நீ, உனக்கு நான் என்னும் காதலின் அழகு,
சம்சார சாகரத்தைக் காதலினால் கடக்கலாம் என்று காட்டும் அழகு!

குத்து விளக்கெரிய கோட்டுக் கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய்திறவாய்!


இவர்கள் அன்பைக் கண்டு மன்மதனே வாயடைத்துப் போய் நிற்கிறான்!
இப்படியும் ஒரு ஈடுபாடா? பின்னிப் பிணைதலா?
இது அன்பா? இல்லை மாரன் அம்பா?
மன்மத அம்பும் கூர் மழுங்கிப் போய் நிற்கும் மகோன்னத அன்பு!

காந்தா = மனத்துக்கினியவள், மகாலக்ஷ்மி தாயாரின்
குச = திருமார்போடு
ஆம்புருஹ குட்மல = தாமரைத் தண்டு போல
அணைத்துக் கொண்டு, இன்னும் உறக்கமா?

மைத்தடங் கண்ணினாய் நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவாற்றகு இல்லாயால்
தத்துவம் அன்று தகவேலோ ரெம்பாவாய்!

உங்கள் காதலைப் பிறகு வைத்துக் கொள்ளுங்கள்! உங்க குழந்தைகள் எல்லாரும் கோவிலுக்கு வந்திருக்கோம்! முதலில் எங்களைக் கவனிங்க, என்று செல்லமாகச் சிணுங்கித் துயில் எழுப்புகிறார்கள்!

லோல த்ருஷ்டே = சிரிக்கும் குறும்புப் பார்வை கொண்டவனே

கல்யாண = மங்களகரமானவனே
நிர்மல = குறையொன்றும் இல்லாத கோவிந்தா
குணாகர = குணங்களின் உறைவிடமே
திவ்ய, கீர்த்தே = புனிதமானவனே, புகழ் ஓங்குபவனே!
துயில் களைக! எங்கள் துயர் களைக!

ஸ்ரீ வேங்கடாசல பதே = திருவேங்கடமுடையானே
தவ சுப்ரபாதம் = உனக்கும், அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!



கவி காளமேகத்திடம் ஒரு புலவர், திருமாலின் பத்து அவதாரங்களையும் ஒரே வெண்பாவில் பாட முடியுமான்னு கேட்க,
ஒரு வெண்பா என்ன? அரை வெண்பாவிலேயே பாடுகிறேன் என்று சொல்லிப் பாடியும் காட்டினார்.

மெச்சுதிரு வேங்கடவா வெண்பாவிற் பாதியில் என்
இச்சையில் உன்சன்மம் இயம்பவா? - மச்சாகூர்
மாகோலா சிங்காவா மாராமா ராமாரா
மாகோபா லாமாவா வா


அட என்னங்க இது.....மாராமா ராமாரா-ன்னு நாக்கு குழறுதா?
பதம் பிரிங்க; புரியும்! :-)
மச்சா-கூர்மா-
கோலா-சிங்கா-வாமா-ராமா-ராமா-
ராமா-கோபாலா-மாவா வா

(கோலா =வராகம்
வாமா =வாமனா
ராமா-ராமா-ராமா =பரசுராமா-ராமா-பலராமா-ன்னு மூன்று இராமன்கள்
மா-வா =குதிரையின் மேல் வரும் கல்கி...
என்னங்க, தமிழ் விளையாடுதா? எங்க இன்னொரு தரம் நாக்குழறாம வேகமா சொல்லுங்க பார்ப்போம்,
மாகோலா சிங்காவா மாராமா ராமாரா, மாகோபா லாமாவா வா :-)



























மீனாக்ருதே- கமட- கோல- ந்ருசிம்ம- வர்ணிந்
ஸ்வாமிந்- பரஸ்வத தபோதன- ராமசந்திர-
சேஷாம்ச ராம- யது நந்தன- கல்கி ரூப-
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

1. மீன ஆக்ருதே = மீன வடிவம் - மச்சாவதாரம்
2. கமட = ஆமை - கூர்மாவதாரம்
3. கோல = பன்றி - வராக அவதாரம்
4. ந்ருசிம்ம = நரசிம்ம அவதாரம்
5. வர்ணிந் ஸ்வாமிந் = பிரம்மச்சாரி, பெரும் சுவாமியாய் - வாமன/திருவிக்ரம அவதாரம்

6. பரஸ் வத தபோதன = பரசு தாங்கும் தவமுனி - ப்ரசுராம அவதாரம்
7. ராமசந்திர = ராமாவதாரம்
8. சேஷாம்ச ராம = சேஷனின் அம்சமாய் ராமன் - பலராம அவதாரம்
9. யது-நந்தன = யது குலத் தோன்றல் - கிருஷ்ணாவதாரம்
10. கல்கி ரூப = கல்கி அவதாரம்

பத்து அவதாரங்களும் இந்த ஒரே சுலோகத்தில் வருகிறது! முடிந்தால் மனப்பாடம் செய்து கொள்ளுங்க! தசாவதார தோத்திரம்-னு வேதாந்த தேசிகர் ஒரு அருமையான படைப்பைச் செய்துள்ளார். அதன் சாரம் போல இருக்கு! இப்படி அத்தனை அவதாரங்களின் சாரமாக நிற்கிறான் திருவேங்கட மாமலையில்!

ஒவ்வொரு அவதாரத்திலும் நோக்கம் என்ன? - தர்ம பரிபாலனம்! அறம் காத்தல்!
தன்னை வந்தடையும் வழியை உயிர்களுக்கு எளிதாகப் புரியுமாறு காட்டி அருளல்!
இதைத் தான் திருவேங்கடமுடையான் காட்டிக் கொண்டு நிற்கிறான்!

வேறு எந்த ஆலயத்திலும் (சைவமாகட்டும் வைணவமாகட்டும்), காண முடியாத ஸ்பெஷல் போஸ் திருமலையில்! :-)
ஆலயத்தில் தரிசனம் செய்யும் போது பார்த்தால், அந்தச் சின்முத்திரைக் கோலம் புலப்படும்!
சுப்ரபாதம் இறுதிப் பதிவில்(29), இது பற்றி விரிவாகச் சொல்கிறேன்!

அதனால் தான் சுலோகத்தில் தசாவதாரங்களின் தொகுப்பாகத் திருமலை நாதனைச் சொல்கிறார்! கலியுக வைகுந்தம் என்று திருமலையும் போற்றப்படுகிறது!
இன்றும், ஆலயத்தில் தசாவதார ஆரத்தி பெருமாளுக்கு உண்டு! தசாவதாரங்களும் பொறித்த பெரிய தாம்பாளத் தட்டில் இந்த ஆரத்தியை எடுக்கிறார்கள்!


தசாவதாரத் தத்துவமே,
ஸ்ரீ வேங்கடாசல பதே = திருவேங்கடமுடையானே
தவ சுப்ரபாதம் = உனக்கும், அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!

----------------------------------------------------------------------------
முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1.
M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2.
கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3.
தமிழ் சுப்ரபாதம் (நித்ய ஸ்ரீ) - (Windows Media Player)
நன்றி: Music: musicindiaonline.com, sribalaji.com Pics: tirumala-tirupati.com
----------------------------------------------------------------------------

Friday, October 26, 2007

சுப்ரபாதம்(21&22) - சரண்யா! சரண்யா!!

என் மனத்துக்கினிய நண்பர் ஒருவர், ஜிடாக்கில் முன்பு ஒரு கேள்வி கேட்டார்: What is the most important place on this earth?
நான் ஏதோ திருப்பதி, திருவரங்கம், திருச்செந்தூர்-னு சொல்லுவேன் எதிர்பார்த்தார் போல! ஆனா, நான் சொன்னேன்! - Home! Home!! Home!!!
Home-இல் மனது வைத்தாலே, Om வந்து விடும்! :-)

நாம் சுயநினைவுடன் பாதி நேரம், வீட்டுக்கு வெளியில் தான் கழிக்கிறோம்!
சுகமோ, துக்கமோ, ஆபிசில் பதவி உயர்வோ, சண்டையோ, நண்பர்/நண்பிகளுடன் கும்மாளமோ,...எதுவாயினும்...எல்லாம் முடித்து வீட்டுக்கு வரும் வேளை!

நம் தெருவுக்குள் நுழைந்ததுமே, ஒரு இனம் புரியாத உணர்வு எழும்! நம் வீட்டூக்குள் நுழைந்ததும் அப்படி ஒரு பாதுகாப்பான உணர்வு! இதை விடப் பாதுகாப்பான இடம் உலகில் வேறெங்கும் இல்லை என்பது போல ஒரு மகிழ்ச்சி!
உலகத்துக்காகக் காலை முதல் போட்ட வேடத்தைக் கலைத்து விட்டு, நாம் நாமாக இருக்கலாம் என்ற நிம்மதி!
நம் வீட்டுக் கட்டாந்தரையில் படுத்தாலும், அன்னை மடியில் படுத்தது போல் ஒரு சுகம்! காற்று வீசி, நம் தலைமுடியைக் கோதுவது போல் ஒரு சுகம்!

"அப்பாடா" என்று நிம்மதியுடன் வீட்டுக்குள் அடங்கும் சுகம்! - இதற்கு நல்லவன் கெட்டவன், பணக்காரன் ஏழை, நாத்திகன் ஆத்திகன், குழந்தை வாலிபன் என்ற பேதமே கிடையாது! எல்லாரும் இதனுள் அடங்கி விடுவர்!
ஒரு சின்னஞ் சிறு குழந்தை, வீட்டுக்கு வழி தெரியாமல் நிற்கும் போது, எப்படிக் கலங்கி போய் நிற்கிறது! அதன் கைப்பிடித்து, அதோ பார் உன் வீடு என்று காட்டினால், துள்ளிக் கொண்டு ஓடாதா?

அதனால் தான் இறைவனை அடைவதையும் வீடுபேறு என்று சொன்னார்கள் முன்னோர்கள்!
வீட்டைப் பெறும் பேறு, பெரும் பேறு! - அதுவே சரண்யா!



அது என்ன சரண்யா? சரண்யாவுக்கும், வைணவத் தத்துவமான சரணாகதிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கு!!

பெருமாளைச் சரண்யன்-னு சொல்லிக் கூப்பிடுவதில், பக்தர்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சி!
சர்வ லோக சரண்யன்-ன்னு சொல்லுவாங்க! சரண்யன்-னா என்ன?
சரண் என்பதற்கு வீடு, வழி, உதவி-ன்னு பல பொருள் இருக்கு!
அதையெல்லாம் தாண்டி சரணாகதி என்னும் அடைக்கலம் புகுதல் தான் இன்று அனைவருக்கும் தெரிந்த பொருளாகி விட்டது!

இறைவன் சரண்யன் = ஏன்னா அவனே வீடாக இருக்கிறான்!
இறைவன் சரண்யன் = ஏன்னா அவனே அந்த வீட்டுக்கு வழியாகவும் இருக்கிறான்!
இறைவன் சரண்யன் - ஏன்னா அவனே அந்து வீட்டுக்கு செல்லும் வழியையும் காட்டி நமக்கு உதவி புரிகிறான்!

நானே வழியும் ஜீவனுமாய் இருக்கிறேன் என்ற பைபிளின் வேதாகம வசனத்தைக் கேட்டிருப்பீங்க!
தமிழில் ஆற்றுப்படை-ன்னும் கேள்விப்பட்டு இருப்பீங்க! ஆற்றுப்படுத்துதல் என்று சொல்லுவாங்க! அதாச்சும் களைப்பையும் சந்தேகத்தையும் களைந்து, வழிகாட்டுதல்!
பெருமாளுக்கே உரியவன் ஜீவன்!
ஜீவனுக்கே சரண்யன் பரமாத்மா!!

அந்தச் சரண்யனை, இந்த ஜீவன் சரணம் அடையறதே, சரணாகதி!
சரண்யா, நீயே கதி என்பதே சரணாகதி!

இன்றைய சுப்ரபாதத்தில் சரண்யம் பற்றி வருகிறது! மிக மிக எளிமையான சுலோகங்கள்! மனனம் செய்வதற்கும் மிக எளிது!


(இந்த சுலோகத்தைப் படிக்கும் போது, கூடவே கேட்டுப் பயில நினைத்தால், இதோ சொடுக்குங்கள்)







ஸ்ரீ பூமி நாயக தயாதி குண அம்ருத ஆப்தே
தேவாதி தேவ ஜகத் ஏக சரண்ய மூர்த்தே
ஸ்ரீமந் அனந்த கருடாதிபிர் அர்ச்சி தாங்க்ரே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

ஸ்ரீ பூமி நாயக = ஸ்ரீதேவியான திருமகளுக்கும், பூமிதேவியான மண்மகளுக்கும் நாயகனே!

தயாதி குண = கருணை (தயா) முதலிய சகல கல்யாண குணங்கள்
அம்ருத ஆப்தே = கொண்ட அமுதக் கடலே

திருவேங்கடமுடையான் சன்னிதியில் அவன் தனித்து நிற்பதாகத் தானே நம் கண்களுக்குத் தெரிகிறது? தாயார் சன்னிதியோ கீழ்த் திருப்பதியில் தானே உள்ளது! அப்படி இருக்க, எப்படி இப்படிப் பாடி வைத்தார்கள்?
கவனித்துப் பார்த்தால் தெரியும், அவன் திருமார்பில், ஸ்ரீ-பூமி தேவிகளும் எழுந்தருளி உள்ளார்கள். அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா!

தயா தேவியும் உள்ளாள்! யார் இந்த தயா தேவி?

இறைவனின் கருணையை, தயைத் தான் இவ்வாறு உருவகித்துப் பாடுகிறார் வேதாந்த தேசிகர் என்னும் ஆசாரியர்!
இறைவன் எண்ண முடியாத குணங்களைக் கொண்டவன் தான் என்றாலும், அவனுக்குப் பொதுவாக எட்டு குணங்களைச் சொல்லுவார்கள்!

எண்குணத்தான் தாளை வணங்காத் தலை என்று வள்ளுவரும் எண்குணத்தைச் சொல்லுகிறார்!

அந்த எண் குணங்களில் மிகவும் தலையாயது உயிர்களிடத்தில் பரம கருணை; தயை என்ற குணம்! தயா சிந்து என்று மோவாய்க் கட்டையில் உள்ள வடுவைப் பற்றி முன்னர் ஒரு மாதவிப்பந்தல் பதிவில் தான் பார்த்தோமே!
முத்தமிழால் வைதாரையும் வாழ வைப்பவன் தமிழ்க் கடவுள் முருகன் என்றால்
தன்னை அடித்தாலும், அரவணைத்துக் காப்பவன் தான் தமிழ்க் கடவுள் திருமாலும்!!!
பக்தன் அடித்த வடுவை, மானம் போகுமே என்று மறைத்துக் கொள்ளாது, அன்புக்குச் சாட்சியாக இன்றும் மோவாயில் காட்டிக் கொண்டு நிற்கிறான் இறைவன்!
அதனால் தான் அவன் சிந்தும் தயையை அமுதக் கடல் என்று சொல்கிறார்!

தேவாதி தேவ = தேவாதி தேவனே! இமையோர் தலைவனே!
தேவர்களுக்கும் ஆதி அவன்! ஆதியாய் அநாதியாய் நின்றவன்! தேவர்களையும் கடந்தவன்! அசுரர்களையும் கடந்தவன்! அதனால் தேவ-ஆதிதேவன்!
இந்த சுலோகம் அப்படியே ஆழ்வார் பாசுரம்
திருமகள் தலைவனை, தேவதேவனை
இருபத முளரிகள் இறைஞ்சி ஏத்துவாம்!


ஜகத் ஏக "சரண்ய மூர்த்தே = உலகம் முழுமைக்கும் நீ ஒருவனே சரண்யன் (ரட்சகன்)
சரண்யன் என்றால் என்ன-ன்னு முன்னரே பார்த்தோம்! உலகம் முழுமைக்கும் அவன் ஒருவனே சரண்யன்! ஒருவன்"ஏ" என்பதில் அந்த ஏகாரம் மிகவும் முக்கியமானது!
மாம் "ஏகம்" சரணம் வரஜ என்பது தான் கீதை காட்டும் சரம சுலோகம்! - அனைத்துக்கும் அவன் ஒருவனே சரண்யன்!
அசுரருக்கும் அவனே சரண்யன், தேவருக்கும் அவனே சரண்யன்!
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே என்பது வள்ளலார் வாக்கு!


ஸ்ரீமந் = லக்ஷ்மீகரமானவனே
அவன் பெருமையைச் சொல்லணும்னா கூட, அன்னையைத் தான் சொல்ல வேண்டி இருக்கு பாத்தீங்களா?
அழகானவனே-ன்னு சொல்லணும்னா லக்ஷ்மீகரமானவனே சொல்லணும்! கருணை உடையவனே-ன்னு சொல்லணும்னா கூட லக்ஷ்மீகரமானவனே தான் சொல்லணும்!

அனந்த கருடாதிபிர் அர்ச்சி தாங்க்ரே = அனந்தன், கருடன் முதல் அனைவரும் உன் திருவடிகளை அர்ச்சிக்கிறார்கள்!
அவனை பரமபதம் என்று அழைக்கப்படும் வைகுண்டத்திலே, நித்ய வாசம் செய்யும் நித்ய சூரிகள் எல்லாம் சேவித்து இருக்கிறார்கள்!
அனந்தன் என்ற நாக வடிவானவனும், கருடன் என்ற பறவை வடிவானவனும் ஒருசேர அர்ச்சிக்கிறார்கள்!
இங்கு தான் சூட்சுமம்! நாகமும் கருடனும் ஒன்றொக்கொன்று எதிர் இயல்பு!


ஆனால் எப்படி இருவரும் பரமனுக்குப் பிரியமாய் அவன் திருத்தொண்டில் ஈடுபடுகிறார்கள்?
Pair of Opposites Concept is deeply rooted in Vaishnavite Mysticsm.
நாகன்-கருடன், சக்கரம்(ஒளி)-சங்கு(ஒலி), மனிதன்-மிருகம்...இன்னும் நிறைய எதிரெதிர் நிலைகள், இறைவன் முன்னிலையில் ஒன்றி விடுகின்றன!
அதே போல் தேவர்,அசுரர் பாகுபாடு எல்லாம் இறைவன் முன் நிற்காது! பக்தி ஒன்றே நிற்கும்!

ஸ்ரீ வேங்கடாசல பதே = திருவேங்கடமுடையானே
தவ சுப்ரபாதம் = உனக்கும், அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!



பெருமாளின் பன்னிரு திருப்பெயர்களில் பல பெயர்கள், அடுத்த சுலோகத்தில் வருகிறது!
கேசவா, நாராயணா, மாதவா, கோவிந்தா
விஷ்ணு, மதுசூதனா, திரிவிக்ரமா, வாமனா
ஸ்ரீதரா, ஹ்ரிஷிகேசா, பத்மாநாபா, தாமோதரா!
- இவையே பன்னிரு திரு நாமங்கள்!







ஸ்ரீ பத்மநாப புருஷோத்தம வாசுதேவ
வைகுண்ட மாதவ ஜனார்த்தன சக்ர பாணே
ஸ்ரீ வத்ஸ சிஹ்ன சரணாகத பாரிஜாத
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

ஸ்ரீ பத்மநாப = நாபிக் கமலம் (தொப்புள் கொடியில்) தாமரைக் கொடியை உடையவனே, பத்மநாபா!

புருஷோத்தம = புருஷர்களில் உத்தமனே! புருடோத்தமா!
வாசுதேவ = வாசுதேவனே!


பத்மநாபன் = இது படைப்புத் தத்துவம்! இறைவன் தொப்புள் கொடியில் பிரம்மன் தோன்றி, அவன் வாயிலாக உயிர்கள் தோன்றின!
ஆக பெருமாளுக்கும் நமக்கும் தொப்புள் கொடி உறவு!
அந்தி போல் நிறத்தாடையும் அதன்மேல் அயனைப் படைத்ததோர் எழில்
உந்தி மேலது அன்றோ அடியேன் உள்ளத்தின் உயிரே
என்பது திருப்பாணாழ்வார் வாக்கு!

புருஷோத்தமன் = ஆண்களில் எவனாச்சும் ஒருத்தன் உத்தமனா? வீட்டில் கேட்டுப் பாருங்க! இல்லைன்னு பதில் ஸ்ட்ராங்கா வரும்! :-) ஒரே ஒருவன் தான் உத்தமன்! யார் அவன்?
ஓங்கி உலகளந்த உத்தமன் - அவனே புருஷோத்தமன்!

வாசுதேவன் = பொதுவாக கண்ணனைத் தான் வாசுதேவ கிருஷ்ணன் என்று அறிவோம்! ஆனால் இந்த வாசுதேவன் என்னும் சொல், அவதாரங்களுக்கு எல்லாம் முனனரே, பரம்பொருளைக் குறிக்கும் சொல்! பரவாசுதேவன் என்று குறிப்பார்கள்!
எங்கும் வியாபித்து வாசம் செய்பவன் வாசுதேவன்!
ஸ்ரீ வாசுதேவ நமோஸ்துதே ஓம் நம இதி-ன்னு விஷ்ணு சகஸ்ரநாமத்திலும் பயின்று வரும்!
செங்கட் கருமேனி வாசு தேவனுடய,
அங்கைத் தலமேறி அன்ன வசஞ்செய்யும்,
சங்கரையா. உஞ்செல்வம் சாலவ ழகியதே
- என்று வாசுதேவனை ஆண்டாளும் அழைக்கிறாள்!

வைகுண்ட = வைகுண்ட நாதா
மாதவ = மாதவா
ஜனார்த்தன = ஜனார்த்தனா
சக்ர பாணே = சக்கரத்தை ஏந்தியவனே


ஜனார்த்தன = ஜன + அர்த்தன = ஜனங்களால் தேடப்படும் அர்த்தம்/செல்வம்; அதாவது அனைத்து உலகங்களும் அடைய விரும்பும் ஒரே பொருள்! அதுவே ஜனார்த்தனம்!
சக்ர பாணி = சுதர்சனம் என்னும் சக்கரப் படையை ஏந்தியவனே!

வடிவார் சோதி வலத்து உறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு என்று பெரியாழ்வார் சக்கரத்தை வாழ்த்துகிறார்!

ஸ்ரீ வத்ஸ சிஹ்ன = ஸ்ரீவத்சம் என்ற மச்சத்தை வல மார்பில் உடையவனே!
பெருமாளின் வலத் திருமார்பில் இருக்கும் மச்சத்துக்கு ஸ்ரீவத்சம் என்று பெயர்! தமிழில் திருமறு!
திருமறு மார்பன்! அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா என்று சொன்னார்களே? இராமன் குழந்தையாய் இருக்கும் போது, சீதை எப்படி அவனுடன் ஓட்டி இருக்க முடியும்?
அது என்ன சும்மா வாய் வார்த்தைக்குச் சொல்லப்பட்டதா? இல்லையில்லை!

மகாலக்ஷ்மியாகிய திருமகளின் அம்சமாய் என்றும் அவனுடன் ஒட்டி இருப்பது இந்த மச்சம்!
அவதார காலங்களில், குழந்தையாய் இருக்கும் போதும் கூட, அவனுடன் ஒட்டி இருப்பது இந்த திருமறு தான்!

வாமன அவதாரத்தில் இந்த மச்சம் யார் கண்ணிலும் பட்டு விடக் கூடாதே என்று மான்தோலை இழுத்துப் போர்த்திக் கொண்டு வந்தான் வாமனன்!
இப்ப சொல்லுங்க! பெருமாளு மச்சம் உள்ள ஆளு தானே! :-)
அவனை விட்டு ஒரு நொடிப்பொழுதும் பிரியாமல் இருக்கவே இப்படி ஒரு மச்சம்!! நல்ல பொண்டாட்டி, நல்ல புருஷன் போங்க! :-)

சரணாகத பாரிஜாத= சரணம் அடைந்தார்க்கு பாரிஜாத மலர் போல் அருள் பொழிந்து குளிர்விப்பவனே!

ஸ்ரீ வேங்கடாசல பதே = திருவேங்கடமுடையானே
தவ சுப்ரபாதம் = உனக்கும், அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!

----------------------------------------------------------------------------
முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1.
M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2.
கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3.
தமிழ் சுப்ரபாதம் (நித்ய ஸ்ரீ) - (Windows Media Player)
நன்றி: Music: musicindiaonline.com, sribalaji.com Pics: tirumala-tirupati.com
----------------------------------------------------------------------------

Saturday, October 20, 2007

சுப்ரபாதம்(19&20) - சிற்றின்பம் வேண்டும்! பேரின்பம் வேண்டாம்!

மோட்சத்துக்குப் போய்க் கொண்டு இருக்காரு ஒரு பக்தர்! இறைவனின் தூதர்களே வந்து அவரை அழைத்துப் போறாங்க! போகும் வழியில் திருமலைக் கோவிலின் கோபுரம் தெரியுது! ஆனந்த நிலைய விமானம் மின்னுது! என்ன நினைச்சாரோ தெரியலை! "விஷ்ணு தூதர்களே...மோட்சம் எல்லாம் வேண்டாம்! நான் இங்கயே இறங்கிக்குறேன்-னு"...ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாரு!

என்னய்யா சொல்றீரு? அவனவன் மோட்சம் கிடைக்காதா-ன்னு தவம் கிடக்கிறான்! நீங்க என்னான்னா ஏதோ பாதி வழியில, போதும்...நான் இந்த எக்ஸிட்ல இறங்கிக்கறேன்னு சொல்றது போல பேசறீங்களே! என்ன ஆச்சு உமக்கு?

இல்லீங்க, எனக்குச் சிற்றின்பமே போதும்! பேரின்பம் எல்லாம் வேண்டாம்!
அடப்பாவி மனுஷா...போயும் போயும் இந்த மாதிரி ஒரு ஆளையா, நாம மோட்சம் கூட்டிப் போகலாம்-னு எண்ணினோம்? கணக்கு வழக்குல ஏதோ தவறு நடந்திடுச்சா? சிற்றின்பப் பிரியனா இவன்?

இறைவன் நாம ரூபங்களை எல்லாம் கடந்தவன். அவனை ஒரு உருவத்தில் அடக்கி வழிபடுவது எல்லாம் கீழ்ப்படியாச்சே! இதுவும் ஒரு வகை சிற்றின்பம் தானே! - அப்படின்னு நினைக்கிறீங்களா தூதர்களே?
சரி, சிற்றின்பம்-னே வைச்சிக்கோங்க! எனக்கு அந்தச் சிற்றின்பமே போதும்!
அந்த இன்பத்தில் தான் இறைவனைத் தான் மட்டும் தனியே அனுபவிக்காமல், அடியவர்களோடு அடியவர்களாய், ஒருவருக்கு ஒருவர் ஒன்றாகக் கூடி, அவன் குணானுபவங்களைப் பேசியும் பாடியும், சேர்ந்து அனுபவிக்க முடிகிறது!

அதோ அடியவர்கள் எல்லாம் கீழே இருக்காங்க! கோவிலில் சுப்ரபாதம் ஒலிக்கிறது! இன்னும் சற்று நேரத்தில் நடை திறந்திடுவாங்க! தமிழ்ப் பாசுரங்கள் முழங்கப் போறாங்க! நான் இறங்கி விடுகிறேன்! வருகிறேன் தூதர்களே! மன்னித்துக் கொள்ளுங்கள்!

என்னடான்னு பாக்குறீங்களா - இன்னிக்கி சுப்ரபாதத்தின அவுட்லைன் இதான்! :-)
கொஞ்சம் பெரிய பதிவு தான்! ஆனா முழுசா சொன்னாத் தான் பொருள் விளங்கும்! நேரம் எடுத்துப் படிங்க...
பெரியது கேட்கும் எரிதவழ் வேலோய்! - தொண்டர் தம் பெருமை பதிவிடவும் பெரிதே! :-)



(இந்த சுலோகத்தை படிக்கும் போது, கூடவே கேட்டுப் பயில நினைத்தால், இதோ சொடுக்குங்கள்)




த்வத் பாத தூளி, பரித ஸ்புரித உத்தமாங்கா
சுவர்கா அபவர்க நிரபேக்ஷ, நிஜாந்த ரங்கா!
கல்ப ஆகம ஆகலநயா ஆகுலதாம் லபந்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

த்வத் பாத தூளி = உன் பாத தூளியை (திருமண்)
இறைவனின் பாத தூளி பற்றி பக்தி இலக்கியங்கள் பல கதைகளைப் பேசும்!
எஜமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வச்சோம்...அப்படின்னு இந்தக் காலத்துல கூட பாட்டு போடறாங்க! :-)
கடவுள் வாழ்த்து பற்றிச் சொல்ல வந்த திருவள்ளுவர் கூட, இறைவனை விட்டு விட்டு இறைவனின் பாதங்களைத் தான் பற்றிக் கொள்கிறார். முதல் அதிகாரத்திலேயே திருவடிகள் தான் எங்கும் நிறைந்திருக்கு!

வாலறிவன் "நற்றாள்" தொழாஅர் எனின்
மலர்மிசை ஏகினான் "மாணடி" சேர்ந்தார்
வேண்டுதல் வேண்டாமை "இலானடி" சேர்ந்தார்க்கு
தனக்குவமை இல்லாதான் "தாள்"சேர்ந்தார்க் கல்லால்
அறவாழி அந்தணன் "தாள்"சேர்ந்தார்க் கல்லால்
எண்குணத்தான் "தாளை" வணங்காத் தலை
நீந்தார் இறைவன் "அடி" சேராதார்.
......என்று திருக்குறளில் கூட எங்கு பார்த்தாலும் "திருவடிகள்" தான்!

வைணவத்தில் திருவடிகளுக்கு மிகப் பெரிய இடம் உண்டு. பல தத்துவங்களும் கதைகளும் உண்டு! பாதுகை ஏன் நாட்டை ஆண்டது என்பதற்கும் விளக்கம் உண்டு!
மற்ற சமயங்களிலும் இலக்கியங்களிலும் கூட இறைவனின் இணையடிகள் ஏத்தப்படுகிறது. ஈசன் எந்தை இணையடி நீழலே என்று அப்பர் சுவாமிகள் உருகுகிறார்!
ஆனால் அவை பெரும்பாலும் பாட்டோடும் கருத்தோடும் நின்று விடும்! - மக்களிடம் நேரடியாகச் சென்றடையும் வழிபாட்டு முறைகளில் திருவடிகள் வெளிப்படையாகத் தெரிவதில்லை!

ஆனால் வைணவத்தில் திருவடிகள், மக்களிடம் நேரடியாக முன்னிறுத்தப்படுகின்றன.
நெற்றியில் இட்டுக் கொள்ளும் நாமம் = திருவடி
கோவிலில் தலை மேல் வைக்கும் சடாரி = திருவடி
கருடன் = பெரிய திருவடி
அனுமன் = சிறிய திருவடி
திருவடி சம்பந்தம், பாதுகா சகஸ்ரம், பாத பூசை என்று திருவடி இல்லாத இடமே கிடையாது!

அது ஏன் திருவடிக்கு மட்டும் இவ்வளவு பெருமை?
கையைச் சொல்லலாமே! அது தானே அபயம் கொடுக்கிறது? - முகத்தைச் சொல்லலாமே! அது தானே நம்மைப் பார்த்துச் சிரிக்கிறது?
எதுக்குக் காலைச் சொல்லணும்?
முன்னரே ஒரு சுப்ரபாதப் பதிவில் சொல்லி இருக்கிறேன். பாருங்க!

அந்தத் திருவடியின் அடியில் உள்ள கோடானுகோடி துகள்களில், ஒரு துகளாக இருக்க மாட்டோமா என்று எல்லாச் சமயத்து அன்பர்களுமே விரும்புகின்றார்கள்.
அந்தத் திருவடித் துகளைத் தான், அடியவர்கள் தங்கள் தலையின் மேல் சூடிக் கொள்கிறார்கள்! திருமண் என்று சிலாகித்துப் பேசுகிறார்கள்!

பரித ஸ்புரிதோ = தாங்கிக் கொண்டு, புல்லரித்துப் போய் நிற்கிறார்கள், அடியவர்கள்!
உத்தமாங்கா=
உத்தம+அங்கா= உன் திருவடித் துகள் ஒன்றே அவர்கள் அங்கங்களை எல்லாம் சுத்தம் செய்து விட்டது!
பொதுவா மண்ணுன்னா அழுக்கு; நீருன்னா சுத்தம். ஆனாப் பாருங்க, திருவடித் துகளே அங்கங்களைச் சுத்தம் செய்து விட்டதாம்!
சைவத்திலும் கூட, குளிக்காமலேயே திருநீறு தரிக்கலாம் என்ற விதி இருக்கு!


சுவர்கா, அபவர்க நிரபேக்ஷ = சொர்க்கப் பதவி, மோட்ச நிலை - இவற்றில் கூட ஆசையில்லாமல்
நிஜா அந்தரங்கா = அந்தரங்க சுத்தியுடன் உன்னையே விரும்புகிறார்கள்
சேக்கிழார் சுவாமிகள் மிக அருமையாகச் சொல்லுவார் பெரிய புராணத்தில்! அது தான் அடியவர்களின் உண்மையான லட்சணம்!
கூடும் அன்பினால் கும்பிடலே அன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினார்!

அடியார்கள் சொர்க்கம், மோட்சம் இதன் மேல் கூட ரொம்ப விருப்பம் வைக்காமல், அவனையே விரும்பி நிற்கிறார்கள்!
அவனின் திருவுள்ள உகப்பிற்கு மட்டும் தான் தாங்கள் இருக்கிறோம் என்ற அன்பு நிலை அது! அதனால் அவர்கள் மோட்சம், பிறவா வரம் என்று தனியாக விரும்புவது எல்லாம் ஒன்றும் இல்லை!

சொர்க்கம்-நரகம் = அவரவர் செயல் வினைகளில், அவ்வப்போதே இன்ப துன்பங்கள் விளைந்து விடுகின்றன!

மோட்சம் = பிறவிச் சுழல்களில் சிக்காமல் பரமபதம் என்னும் மோட்சம் அடைந்து விட்டால், மீண்டும் வரவேண்டாம் அல்லவா?
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே! என்கிறார் நம்மாழ்வார்!
அப்பிடின்னா என்ன அர்த்தம்?

தேவர்களாகப் பிறந்தாலும் கூட, வைகுந்தம் செல்ல வேண்டும் என்றால், மனிதப் பிறவி எடுத்துத் தான் செல்ல முடியும்!
சரி, அப்படிச் சென்று விட்டால், மீண்டும் வராமல், ஜாலியா அங்கேயே இருக்கலாம் அல்லவா? - இப்படி எல்லாம் கணக்கு போடமாட்டார்களாம் அடியவர்கள்!
அவர்களுக்குத் தெரிந்தது எல்லாம் அவனின் திருவுள்ள உகப்பு ஒன்று தான்!

ஆழ்வார் ஏற்கனவே மோட்சம் அடைந்து வைகுந்தத்தில் தான் இருக்கிறார். ஆனால் இனி பிறவி இல்லை என்று அவர் கணக்கு போட்டுக்கொண்டு இருக்கிறாரா?
ஆதிசேஷன் பரமபதத்தில் நித்ய வாசம் செய்பவர். அவர் இராமானுசர், மணவாள மாமுனிகள் என்று அவதாரம் செய்து, மாறி மாறிப் பூமிக்கு வரவில்லையா?

மற்ற மண்ணுலக மக்கள் எல்லாரும் கடைத்தேறும் பொருட்டு, அடியவர்களை பூமிக்கு அனுப்பி அவதரி்ப்பிக்கின்றான் இறைவன்!
அடப் போங்க பெருமாளே, நானே படாத பாடுபட்டு மோட்ச பதவி வாங்கிக் கொண்டு வந்திருக்கேன்....என்னைப் போயி திரும்பிப் போகச் சொல்லுறீங்களேன்னு முரண்டு செய்வார்களா என்ன? :-)

மற்ற அடியவர்களும், உயிர்களும் கடைத்தேறும் பொருட்டு, இறைவன் அனுப்பினால், அதுவும் அவர்களுக்கு மோட்சமே!
அதான் கூடும் அன்பினால், வீடும் வேண்டா விறலின் விளங்கினார்! - இறைத் தொண்டில் தன்னல தர்மத்தைக் காட்டிலும் பொதுநல தர்மம் தான் முன்னிற்கும்!
முன்பே மாதவிப் பந்தல் வைகுண்ட ஏகாதசிப் பதிவில், இது பற்றி பார்த்தோம்!

மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய் என்ற திருப்பாவை வாசகம் தான், இதன் பின்னே மறைந்துள்ள பொக்கிஷம்!
முப்பது நாளும் நோன்பு நோற்றுவிட்டு, கடைசி நாளில் மோட்சம் வேண்டாம் என்று சொல்லும் பைத்தியக்காரப் பெண்ணா ஆண்டாள்?
இற்றைப் பறை கொள்வாம் அன்று! காண் கோவிந்தா என்று ஆண்டாள் பறை வேண்டாம் என்று சொல்லி விடுகிறாள்! - பின்ன, என்ன தான் வேணுமாம்?

குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது - உன் பணிகளுக்கு எங்களை ஆட்படுத்திக் கொள்!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும், உற்றோமே ஆவோம் - பிறவிகள் பிறந்தாலும், உன் உள்ளத்து உகப்புக்கு மட்டும் நாங்க இருந்தாப் போதும் என்ற காதல் நெஞ்சம் தான்! அதுவே உண்மையான பக்தியின் சிகரம்! - நின் அருளே புரிந்து இருந்தேன், இனி என்ன திருக்குறிப்பே?


கல்ப ஆகம, ஆகலநயா = கல்பம் (யுகம்) ; ஒவ்வொரு நொடியும் ஒரு கல்பமாய் கழிகிறது அடியார்களுக்கு!
இறைவனை "எப்போதும்" கூடி இருக்க முடியவில்லையே என்ற ஏக்கம் வாட்ட
ஆகுலதாம் லபந்தே = துன்பப்பட்டு இருக்கின்றார்கள்!

கல்பம்=4,320,000 ஆண்டுகள்! 4 யுகம் = 1 கல்பம்!
Time between creation and deluge...
இது பற்றி விஞ்ஞான நோக்கில், வானுக்குள் விரியும் அதிசயங்கள் போல, ஒரு பதிவிட வேண்டும் என்று எனக்கு ரொம்ப நாள் ஆசை! :-) சரி, மேட்டருக்கு வருவோம்...

இப்போது தெரிகிறது அல்லவா, தேவர்களைக் காட்டிலும், எதுக்கு அடியவர்களை உயர்வாகச் சொல்லுறாங்க-ன்னு! திருவேங்கடமுடையான் ஆலயத்தில் பெருமாளின் தரிசனத்துக்கு, நின்று கொண்டு இருக்காங்க! அடியார் இவர்களுக்கு அன்பு காட்டிட, வேங்கடவா எழுந்தருள்வாய்!

ஸ்ரீ வேங்கடாசல பதே = திருவேங்கடமுடையானே
தவ சுப்ரபாதம் = உனக்கும், அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!







த்வத் கோபுர ஆக்ர சிகராணி, நிரீக்ஷ மாணா
ஸ்வர்கா அபவர்க பதவீம், பரமாம் ச்ரயந்த!
மர்த்யா மநுஷ்ய புவனே, மதி மாச்ரயந்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்!

த்வத் கோபுராக்ர சிகராணி = உன் ஆலய கோபுரத்தின் சிகரத்தைக்
நிரீக்ஷ மாணா = கண்ணாரக் கண்டு

கோபுர தரிசனம், பாப விமோசனம்-னு சொல்லுவாங்க!
அப்படின்னா நான் கூடத் தான் தினப்படி கோபுரத்த பாக்கறேன். என் நண்பர் ஒருத்தர் நடத்தும் மதுபானக் கடை, கோபுரத்துக்கு எதுத்தாப்புல தான் இருக்கு! :-)
அவருக்கும், எனக்கும் பாவ விமோசனம் ஆயிடுச்சா என்ன? - அதான் "கண்ணாரக் கண்டு" ன்னு சொல்லுறாங்க - கோபுரத்தைக் கோவிந்தனா பாக்கும் போது பாப விமோசனம்!

ஸ்வர்கா அபவர்க பதவீம் = சொர்க்கம் மற்றும் மோட்சப் பதவியைக் கூட விரும்பாமல்!
பரமாம் ச்ரயந்த= உத்தமமான உன் சேவையில், திருத் தொண்டில் மட்டும் ஈடுபாடு கொண்டுள்ளார்கள்!
சென்ற சுலோகத்திலேயே, இதுக்கு விளக்கம், பார்த்து விட்டோம்! தவத்தினால் அடைந்த பதவிகளைக் கூட இறைவனுக்காக உதறித் தள்ள தயாராய் இருப்பவர்கள் அடியார்கள்! சேவித்து இருப்பதுவே செவ்வடியார் செழுங்குணம்!

மர்த்யா மநுஷ்ய = அழியும் மானிடப் பிறவிகள் வாழும்
புவனே = பூவுலகில், பிறக்கத் தான்
மதிம் ஆச்ரயந்தே = அவர்கள் எண்ணம் போகின்றது

இப்படித் தொண்டு ஒன்றில் மட்டும் கருத்துடைய அடியவர்கள், உன் முகம் காண வந்திருக்காங்கப்பா! தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே! சீக்கிரம் எழுந்து, உன் குளிர்முகம் காட்டு!

ஸ்ரீ வேங்கடாசல பதே = திருவேங்கடமுடையானே
தவ சுப்ரபாதம் = உனக்கும், அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!

----------------------------------------------------------------------------
முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1. M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2. கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3. தமிழ் சுப்ரபாதம்
(நித்ய ஸ்ரீ) - (Windows Media Player)
நன்றி: Music: musicindiaonline.com, sribalaji.com Pics: tirumala-tirupati.com
----------------------------------------------------------------------------

சுப்ரபாதம் (தமிழில்):

ஒலிச் சுட்டிகள்!

முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1. M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2. கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3. தமிழ் சுப்ரபாதம் - நித்ய ஸ்ரீ பாடுவது (Windows Media Player)

நன்றி:
Music: musicindiaonline.com, sribalaji.com
Pics: tirumala-tirupati.com

சுப்ரபாதம் (மூலம்):

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP