தமிழுக்காக, சுப்ரபாதம் பாதியில் நிறுத்தம்!
மார்கழி மாதம் தொடங்கியது! (Dec-16-2006);
தமிழுக்காக, சுப்ரபாதம் பாதியில் நிறுத்தப்பட்டது!
எங்கு?... தமிழ் அறிஞர் ஒருவரின் வீட்டிலா? இல்லை....
தமிழக அரசு ஏதாச்சும் ஆணை பிறப்பித்து உள்ளதா?? இல்லை! அதெல்லாம் இல்லை!
இது காலம் காலமாக விரும்பிச் செய்யப்பட்டு வரும் ஒரு வழக்கம்! எங்கு?
திருமலை திருப்பதியில்!
அதனால், இங்கு அடியேன் வலைப்பூவிலும் சுப்ரபாதப் பதிவு, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் படுகிறது!
ஏன் இப்படி?
ஆண்டாளுக்குப் பெருமை சேர்க்க; தமிழுக்குப் பெருமை சேர்க்க!
திருமலையில் ஒவ்வொரு இரவும் பள்ளியறை (ஏகாந்த) சேவையில், போக ஸ்ரீநிவாசனைத் தொட்டிலில் கிடத்துவது வழக்கம்!
ஆனால் மார்கழியில் மட்டும், கண்ணனைக் கிடத்துகிறார்கள்!
மறுநாள் காலையில், நம் ஆண்டாள் கண்ணனை எழுப்பிப் பாட்டு இசைக்கி்றாள்! திருப்பாவை முப்பது பாடல்களும் தினமும் பாடுகிறார்கள், வேங்கடவனின் முன்பு! அதுவும் பூசையின் முதல் பாட்டே, கோதையின் தமிழ்ப் பாட்டு தான்!
இப்படி தமிழுக்குப் பெருமை சேர்க்க, ஏற்பாடுகள் செய்தது யார் தெரியுமா?
எம்பெருமானார், உடையவர் என்றெல்லாம் வைணவர் உலகம் கொண்டாடும் இராமானுஜர் தான் இவ்வாறு செய்தது!
இதைக் திருமலைக் கோவில் ஒழுகு விதியாகவே ஏற்படுத்தினார்! திருப்பாவை மீது அவருக்கு அவ்வளவு பாசம்! திருப்பாவை ஜீயர் என்ற ஒரு பெயரும் அவருக்கு உண்டு!
திருப்பாவை முழுவதும் பாடிய பின் தான், அவனுக்கு முதல் ஆரத்தி காட்டுகிறார்கள்!
நாமும் பாடலாமா? மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்...
மார்கழியைத் தனுர் மாதம் என்றும் சொல்லுவார்கள்!
மாதங்களில் நான் மார்கழி என்று கண்ணன் கீதையில் மொழிகிறான்!
அவனைக் காதலித்து, அவனில் ஈடழிந்து,
அவன் வாய்ச்சுவை எப்படியோ என்று வெண் சங்கைப் பார்த்துக் கேட்கிறாள் ஒரு பேதை! அவள் பெயர் கோதை!
அந்தக் கோதை அவனை அடைய நோன்பு இருக்கிறாள், இந்த மார்கழியில்! வெறுமனே நோன்பு இருந்தால் அவளோடு கதை முடிந்து விடுமே!
அப்புறம் நாம் எல்லாம் எப்படிக் கடைத்தேறுவதாம்?
அதனால் பாட்டு பாடி நோன்பு இருக்கிறாள்! அவள் எண்ணியது சரி தான்!
இப்போது நமக்கும் அந்தப் பாட்டு கிடைத்து விட்டது அல்லவா?
ஐயைந்தும் (5*5) + ஐந்தும்(5) =25+5 = 30 பாடல்கள்; திருப்பாவை!
ஒவ்வொரு முறை படிக்கும் போதும் ஒவ்வொரு பொருள் தோன்றும்!
பல ஆச்சாரியர்களும், குருமார்களும், புலவர்களும், கவிஞர்களும் இதற்கு உரை எழுதி உள்ளார்கள்!
அப்படியும் முழுப் பொருளைக் காண முடிந்ததா? அறிதோறும் அறியாமை கண்டற்றால்!
2004 இல், நண்பர் தேசிகன், தினம் ஒரு பதிவு தந்தார்
2005 இல், தோழர் ஜி.இராகவன், தினம் ஒரு பதிவு தந்தார்
குமரனும், கோதைத் தமிழமுதத்தை அப்போதும், இப்போதும் தந்து கொண்டு இருக்கிறார்.
மீண்டும் படித்துச் சுவைப்போம் அவற்றை!
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பதும் வம்பு!
நம்மை வம்புக்காக இந்தப் பூமி சுமந்தால்....ச்சே நன்றாகவா இருக்கும்?
வாருங்கள், பாவைப் பாடல்களை, மீண்டும் வாசிப்போம்!...
(சுப்ரபாதம், மீண்டும் தை மாதம் துவங்கும்!) .....
அது வரை,
1. கோதை கண்ட அவதாரங்கள், திருப்பாவையில் - இயற்கை, உணவு, விஞ்ஞானம், வானவியல் என்று சிறப்புக் கண்ணோட்டப் பகுதிகளாக வாரம் ஒரு முறையாவது, மாதவிப் பந்தலில் அடியேன் இட முயல்கிறேன்!
2.௧ண்ணன் பாட்டு வலைப்பூவிற்கு அன்பர்கள் பலர், பாடல்கள் அனுப்பி உள்ளனர்.
ஞானவெட்டியான் ஐயா,
மதுமிதா அக்கா,
பெங்களூரில் இருந்து சுதா,
சாத்வீகன்,
பிரேம்குமார் சண்முகமணி,
பாலராஜன் கீதா
இன்னும் பலர் அனுப்பி உள்ளனர். கூட்டு முயற்சியின் சிறப்பே தனி!
இவர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றி! அதோடு குமரன், பாலாஜி, அடியேன்.
அந்தப் பாடல் மலர்களை எல்லாம் ஒவ்வொன்றாய்த் தொடுத்து, தினம் ஒரு மாலையாக கண்ணன் பாட்டில் இட எண்ணம்!
பாடிக் கொடுத்தாள் நற் பாமாலை - பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு!
நாமும் தினம் ஒன்றாய் இந்த மார்கழியில் தொடுத்துக் கொடுப்போம்!
என்ன, சரி தானே நண்பர்களே? தினம் ஒரு மாலைக்கு இங்கே செல்லுங்கள்: கண்ணன் பாட்டு