கெளசல்யா சுப்ரஜா ராமா (3) - அம்மா எழுந்திரு!
பெரும்பாலான வீடுகளில் அம்மா தான் முதலில் எழுவாங்க! சில சமயங்களில் அம்மாவுக்கு முடியலைன்னா, அப்பா எழுந்து காபி போட்டுத் தருவதும் உண்டு!
பாசமுள்ள பல வீடுகளில், அம்மா எழுந்து அடுக்களையில் உருட்டும் சத்தம் கேட்டால் போதும், அப்பாவும் எழுந்து விடுவார், மற்ற வீட்டு வேலைகளைச் செய்ய!
வளர்ந்தும் வளராத சிறு பிள்ளைகளும், ஒரு சில நேரங்களில் அம்மாவுக்கு ஒத்தாசை செய்ய எழுந்துடுங்க!
அட... இது நம்ம வீட்டு விஷயம் போலவே இருக்குதுங்களா?
திருமலைக் கோயிலும் நம்ம வீடு மாதிரியே தாங்க!
அன்னை அலர்மேல் மங்கை முதலில் எழ, மார்பில் உள்ள உயிரே எழுந்து விட்டது, என்று அப்பனும் உடனே எழுந்து விடுகிறான்!
சென்ற பதிவில் "உத்திஷ்ட, உத்திஷ்ட" என்று ஐந்து முறை சொல்லியும் இன்னும் துயில் எழவில்லை நம் அப்பன்!
(முந்தைய பதிவுக்குச் சென்று, சுலோகமும் பொருளும், இன்னொரு முறை பார்த்து வரணும் என்று நீங்கள் நினைத்தால், மேலே சொடுக்கவும்)
சரி, இவன் எழுவதாகத் தெரியவில்லை! இதற்கு ஒரே வழி!
இப்போ அன்னையை எழுப்புவோம்!
அவள் எழுந்தவுடன் பாருங்கள், அவனும் கிடுகிடு என்று எழுந்து விடுவான்!
ஒரு வீட்டுக்கு மட்டும் அம்மாவான நம் தாயாருக்கே அவ்வளவு வேலைன்னா,
சகல உலகங்களுக்கும் அம்மா, ஜகன்மாதா எனப்படுபவள்,
அன்னை அலைமகளுக்கு எவ்வளவு வேலை இருக்கும்!
உலகக் குடும்பத்தின் ஆனந்தமே அவள் கையில் தானே உள்ளது!
(இந்த சுலோகத்தை படிக்கும் போது, கூடவே கேட்டுப் பயில நினைத்தால், இதோ சொடுக்குங்கள்)
மாத சமஸ்த ஜகதாம் மது கைடபாரே
வக்ஷோ விஹாரிணி மனோகர திவ்ய மூர்த்தே
ஸ்ரீ ஸ்வாமினி, ச்ரிதஜன ப்ரிய தான சீலே
ஸ்ரீ வேங்கடேச தயிதே தவ சுப்ரபாதம்
மாத சமஸ்த ஜகதாம் = சகல உலகங்களுக்கும் தாயே, ஸ்ரீ மகா லக்ஷ்மி!
சமஸ்த ஜகங்களுக்கும் மாதா = ஜகன் மாதா! பூவுலக உயிர்கள், மனிதர் மட்டும் இல்லை; தேவர், கின்னரர், கிம்புருடர், நாகர், பாதாள உலகினர், அசுரர் என்று அனைத்து தரப்பினருக்கும் அவளே அன்னை; நரகாசுரனின் அன்னையும் அவள் தானே! குழந்தைகள் செய்யும் தவற்றை எல்லாம் பொறுத்தருள எம்பெருமானிடம் சதா சர்வ காலமும் முறையிட்டு, அவன் சினம் தணிக்கும் அன்புத் தாய் ஆயிற்றே! (என்ன செய்வது சில சமயம், அவளுக்கும் தர்மசங்கடங்கள், நம் போன்ற பிள்ளைகளால்:-)
மது கைடபாரே = மது, கைடபன் என்ற கொடியவரை அழித்து, (வேதம் மீட்ட) பெருமாள்
முன்னொரு நாள், பிரம்மனிடம் இருந்து வேதங்களைக் களவாடினர் மது மற்றும் கைடபன் என்ற அரக்கர்கள்; ஹயக்ரீவனாய் தோன்றி அவர்களை வதைத்து, உலகுக்கே ஞானத்தை மீட்டுத் தந்தான் இறைவன்; "ஞான ஆனந்த மயம் தேவம்" என்று கல்விக்கு அரசனாய் இன்றும் வணங்கப்படுகிறான் ஹயக்ரீவன்!
வக்ஷோ விஹாரிணி = அவன் திருமார்பில் (வக்ஷ ஸ்தலத்தில்) கொலு இருப்பவளே!
அந்த ஞானகுருவான பெருமாளின், திருமார்பை அலங்கரிப்பவளே! அவனை விட்டு ஒரு நொடிப் பொழுதும் பிரியாதவளே! "அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பன்", என்று முதலில் உன்னைச் சொல்லி விட்டுப், பின்னர் தானே அவனைச் சொல்கிறார்கள்! அவன் மார்பில் ஸ்ரீவத்ச மச்சமாய் இருக்கும் தாயே!
(வசந்த விகார் என்று சொல்வது போல, வக்ஷ விகார் = மார்பில் உறைபவள்)
மனோகர திவ்ய மூர்த்தே = அழகும் ஐசுவரியமும் நிறைந்தவளே!
மனோகரம் = மனத்தை லயிக்கச் செய்யும் அழகு! அழகு மட்டுமா? திவ்ய மூர்த்தி = திவ்யமான ஐசுவரியமும், குணநலன்களும் உடையவள் நம் அன்னை! சும்மாவா சொல்கிறார்கள், "அவள் மகாலட்சுமி போல" என்று!
ஸ்ரீ ஸ்வாமினி = சுவாமியின் இல்லத் தலைவியே!
தர்மன் ஒருவன் என்றால் உடன் சக தர்மினி; "பகவானே! பகவதியே!" என்று சொல்வது போல், சுவாமிக்கு சுவாமினி! வேங்கட வீட்டின் இல்லத்தரசி!
ச்ரித ஜன, ப்ரிய தான சீலே = நாடி வரும் அன்பருக்கு, அவர்கள் விரும்புவதை வாரி அளிக்கும் தூயவளே!
ச்ரித ஜனங்கள் = நாடி வரும் அன்பர்கள்; இவர்கள், தாயிடம் ஒடி வரும் குழந்தைகள் போல; பசுவிடம் ஒடி வரும் கன்றைப் போல!
ப்ரிய = விருப்பப்பட்டதெல்லாம்; தான சீல = வாரி வாரி தானம் கொடுக்கும் வள்ளல் போல!
தொலை தூரத்தில் கன்றைக் கண்ட பசுவுக்கு எப்படி பால் தானாக வழிகிறதோ, அதே போல் நாங்கள் உன் அருகில் வருவதற்கு முன்பே, எங்களுக்கு அருள் கொடுக்க எண்ணும் தாயே!
ஸ்ரீ வேங்கடேச தயிதே = திருவேங்கட நாதனின் தர்ம பத்தினியே
தவ சுப்ரபாதம் = இனிய பொழுதாய் விடிய, எங்கள் அம்மா, நீ கண் மலர்க!
ஆண்டாளும் இதே தான் செய்கிறாள் பாருங்கள்!
"எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்" என்று முதலில் சொல்லிப் பார்க்கிறாள்! ஹூம்...ஒன்றும் நடக்கவில்லை!
அடுத்து, "குல விளக்கே, எம்பெருமாட்டி யசோதாய், அறிவுறாய்" என்று சொல்கிறாள்!
நந்தகோபாலனுக்கு "எழுந்திராய்", என்று சொன்னவள், யசோதைக்கு மட்டும் "அறிவுறாய்" என்று சொல்லக் காரணம் என்ன? சொல்லுங்க பார்ப்போம்!
இதோ யசோதை "விழித்து" விட்டாள்; கோகுலமே "எழுந்து" விட்டது!
அதே போல்,
தயா சிந்து நாயகி, எழுந்து விட்டாள்!
தயா சிந்து நாயகா, அப்பா வேங்கடவா, திருக்கண் மலர்க!
-------------------------------------------------------------------------------------
முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1. M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2. கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3. தமிழ் சுப்ரபாதம் (நித்ய ஸ்ரீ) -
(Plays in Rhapsody player; If not installed, please wait till it auto installs; After that it plays by itself)
நன்றி:
Music: musicindiaonline.com, sribalaji.com,rhapsody.com
Pics: tirumala-tirupati.com
-------------------------------------------------------------------------------------