Sunday, November 23, 2008

சுப்ரபாதம்(36&37): ரஜனி+காந்த்=எட்டு குணம்?

சின்ன வயசுல இந்தச் சுப்ரபாதம் கேட்கும் போது, அதுல ரஜினி, ரஜினி-ன்னு வரும்! எனக்கு அப்போ வடமொழி இட்லிமொழி எல்லாம் தெரியாது:) (இப்ப மட்டும் என்ன வாழுதாம்-ன்னு தானே கேக்கறீங்க?)
ஹைய்யோ, தலைவர் பேரு, ரஜனி-ன்னு சுப்ரபாதத்திலேயே வருது! அதை எம்.எஸ்.அம்மாவும் பாடுறாங்க-ன்னு புளகாங்கிதப் பட்டுப்பேன் போல! :)

நீங்களே கேட்டுப் பாருங்களேன்! ரஜினி, ரஜினி-ன்னு ஒலிப்பது போல இருக்கும்! ஆனா அது அந்த ரஜினி இல்ல! அது ரஜநி!
ரஜநி-ன்னா இருட்டு, கருப்பு என்பது பொருள்!
சிவாஜி படத்துல, ஷ்ரேயா, ரஜினியைப் பார்த்து, இந்தக் கலர்-ன்னு தானே சொல்லுவாங்க?:)

அப்போ ரஜனி+காந்த், அப்படின்னா என்ன அர்த்தம்? சொல்லுங்க பார்ப்போம்!
ரஜநி+காந்த் = கருப்பு+கவர்ச்சி
யாருப்பா அது, கருப்பா கவர்ச்சியா, கோபிகைகளைக் காந்தம் போல் கவர்ந்து இழுப்பவன்? தலைவரின் பெயர்க் காரணம் கூறுக!:)
வாங்க இன்னிக்கி சுப்ரபாதத்தில் அந்த "ரஜனி-காந்தனை"யும், அவன் "கல்யாண குணங்கள்" என்றால் என்னன்னும் பார்க்கலாம்!



(இந்த சுலோகத்தை படிக்கும் போது, கூடவே கேட்டுப் பயில நினைத்தால், இதோ சொடுக்குங்கள்)


அவனி தனயா கமநீய கரம்
ரஜநீ கர சாரு முக அம்-புருஹம்
ரஜநீ சர ராஜ தமோ மிகிரம்
மகநீயம் அகம் ரகுராம மயே


அவனி தனயா = பூமியின் மகள் (சீதை)
கமநீய கரம் = (அவள்) விரும்பும் கரங்களை உடையவனே!
ரஜநீ கர சாரு = (அவன்) கருத்த, கவர்ச்சியான
முக அம்புருஹம் = முகம் தாமரை போல இருக்கு!

ரஜநீ சர ராஜ = இருளில் நடமாடுபவர்களின் (அரக்கர்களின்) அரசன் (இராவணன்)
தமோ மிகிரம் = அவன் தமோ குணத்தைப் (கீழ்க் குணத்தை) போக்கியவன்!
மகநீயம் = மிகச் சிறந்தவன்!
அகம் ரகு-ராம மயே = என் இதயமே அந்த ரகு-ராகு-ராகவ மயமாய் இருக்கு!

சீதை = அவனியின் தனயை!
மண்ணுக்குள் தோன்றியவள்! மண்ணுக்குள்ளேயே மறைந்து போனவள்!
அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல், தன்னை இகழ்வார் எல்லாரையும், (அது அந்தப் பொல்லா இராமனாகவே இருப்பினும் கூட) தாங்கிக் கொண்டாள்!

ஸ்ரீதேவியின் அவதாரம்! பூதேவியின் மடியில் வந்து "உதித்தது" ஆச்சரியம் தான்! ஆம் சீதை பிறக்கவில்லை! உதித்தாள்!
ஒரு திரு-முருகன் வந்து ஆங்கே "உதித்தனன்" உலகம் உய்ய, என்பது போலவே சீதையும் "உதித்தவள்"! இராம நவமி, கிருஷ்ண ஜெயந்தி, ஹனுமத் ஜெயந்தி-ன்னு எல்லாம் இருக்கு! சீதா ஜெயந்தி இருக்கா? இல்லை! ஏன்னா, சீதை பிறக்கவில்லை! உதித்தாள்!

சீதையின் உதித்தல் பற்றி யாரேனும் பின்னூட்டத்தில் சொல்லுங்க! மிகவும் சுவாரஸ்யமான தோற்றம் சீதையின் தோற்றம்!
இராவணன் கண்ட குழந்தை, பின்னர் ஜனகர் கண்ட குழந்தையாக ஆனாளோ! சீதை, இராகவனை விட வயதில் மூத்தவள்!

அவள் விரும்பிக் கைப்பிடித்த கரம் இராகவ கரம்! அவன் கருப்பானவன் தான்! ஆனால் கவர்ச்சியானவன்! வெறும் கவர்ச்சி அல்ல! மங்கள, மஹநீய, அழியாத கவர்ச்சி!
மையோ மரகதமோ மறிகடலோ மழை முகிலோ
ஐயோ இவன் வடிவு என்பதோர் அழியா அழகுடையான்
என்கிறார் கம்பர்!
எதிரிகளும் விரும்பும் கவர்ச்சி உடையவன்! இராவணனே ஒரு கட்டத்தில், இராகவனின் குணங்களை எண்ணியெண்ணி வியக்கிறான்; ஆனால் யாரும் அறியாமல், தனிமையில்! :)

இருளில் நடமாடும் அரக்கர்களின் தலைவன் இராவணன்! அந்தணன்! புலஸ்திய மகரிஷியின் பேரன்! தன்னைச் சிவ பக்தன் என்று "சொல்லிக் கொள்வதில்" பெருமைப் படுபவன்!
ஆனால் மற்ற சிவனடியார்களை மதிக்காது, நந்தி தேவரிடம் சாபம் பெற்றான்!
தான் மட்டுமே சிவ-சிரோன்மணி என்று பக்தியிலும் ஆணவம் தான் பொங்கி வழிந்தது! இது தாமச பக்தி! தாமச குணம்!

ஆனால் "இன்று போய், நாளை வா" என்று சொன்ன அடுத்த கணமே, அந்தத் தாமச குணம் ஆடத் தொடங்கி விடுகிறது! அதே சிந்தனையில் ஆணவம் நாணவம் ஆக, நாணிப் போய் ஒரேயடியாக உட்கார்ந்து விட்டான் இலங்கேஸ்வரன்!
இப்படி இராவணப் பெருந்தகையின் தமோ குணத்தை ஒரே வாக்கியத்தில் போக்கியவா!
இராவணனை விடக் கீழ்-மனம் கொண்ட அடியேனின் தமோ குணத்தையும் போக்கு! எமை ஆக்கு! இராகவா எனும் நல் வாக்கு!

இராமாவதாரம் முடிந்து விட்டதால், இனி அதைப் பார்க்கவே முடியாதே! அந்தக் குறையைப் போக்கவென்றே, இன்றும் வேங்கட இராமனாக விளங்குகிறாய் திருவேங்கடத்தில்!
அகம் ரகு-ராம மயே! = என் இதயமே அந்த ரகு ராம மயமாய் இருக்கிறதே!

(*** முந்தைய பதிவில் சொன்னது போல், வில்/அம்புறாத் தூணி சுமந்த இராமனின் தழும்புகளை, வேங்கடவன் திருத்தோள்களில் இன்றும் காணலாம்! உரல் இழுத்து, மரம் ஒடித்த கண்ணனின் தழும்புகளை வேங்கடவன் திருவயிற்றிலே இன்றும் காணலாம்!)


அடுத்த சுலோகம் மிகவும் சிறப்பானது! ஏன் தெரியுமா? பகவானின் கல்யாண குணங்கள் என்றும் அடியார்கள் சொல்வது இதில் வருகின்றது! வாங்க பார்ப்போம், அப்படி என்ன தான் பெருசா "எண் குணம்"-னு?



சுமுகம் சு-ஹ்ருதம் சுலபம் சு-கதம்
ஸ்வநுஜ அஞ்ச சுகாயம், அமோக சரம்
அபகாய ரகூத்வகம் அன்யம் அகம்
ந கதஞ்சந கஞ்சந ஜாது பஜே

சு-முகம் = நல்ல முகம்
சு-ஹ்ருதம் = நல்ல இதயம்
சு-லபம் = எளிமையானவன்
சு-கதம் = எளிதில் அடையப்படுபவன்

ஸ்வனுஜம் = நல்ல தம்பிகளை உடையவன்
சு-காயம் = அழகிய உடல் வனப்பு கொண்டவன்
அமோக சரம் = வெல்லும் (வீணாகாத) அம்புகளை உடையவன்

அபகாய ரகூ த்வஹம் = அவன் ரகு குலத்தையே உயர்த்தியவன்
அன்ய அகம் = அவனைத் தவிர்த்து, நான் (அகம்)
கதஞ்சந கஞ்சந - எப்போதும் எங்கெங்கும்
ந ஜாது = அறிய மாட்டேன்
ந பஜே = வணங்க மாட்டேன்

பெருமாள் = சு-முகன், சு-ஹ்ருதன், சு-லபன், சு-கதன்!
சு-முகன், சு-ஹ்ருதன், அப்படின்னா என்ன? = முகமும் அழகு, அகமும் அழகு!
சரி, அப்போ சு-லபன், சு-கதன்? = மிகவும் சுலபமானவன்! சுலபமான கதி காட்டுபவன்!

அவன் செல்வந்தன் அல்லன்! அவன் எளிவந்தன்!
எளிமையானவன்! பிறவா யாக்கைப் பெரியோனாக இருப்பினும், அதையும் நமக்காக விட்டுக் கொடுத்து, நமக்காகவே பிறந்துழன்று நடிக்கிறான்! இந்த எளிவந்த தன்மை யாருக்கு வரும்?

அவரவர் தத்தம் நிலையில் இருந்து இறங்கி வராமல் வேண்டுமானால் தேவர்களுக்கு உதவி செய்வார்கள்! மக்களுக்கு உதவி செய்ய கீழே இறங்கி வரணுமே? நம்மிடையே வந்து, நம் கூடவே வாழ்ந்து, கஷ்டமான உலக வாழ்விலும், அறம் காப்பது எப்படி என்பதை எடுத்துக்காட்ட யார் உள்ளார்கள்?

சகல சக்திகள் இருந்தாலும், கழுத்தில் ஓலை கட்டிக் கொண்டு தூது போவதும், குதிரைக்குப் போர்க் களத்திலே புல் பிடுங்கிப் போடுவதும் யார் தான் செய்வார்கள்? உண்மையான தம்பியின் உயிர் காக்கும் வேளையிலும், சும்மா "தம்பி" என்று கூப்பிட்ட குகனின் நலத்தை முதலில் பார்த்துவிட்டு, அப்புறமா பரதனை நோக்கி ஓட யாருக்கு மனம் வரும்? அவன் தான் சுலபமானவன்! எளிவந்தன்!
அரி, வானவர்க்கு அரியன்! அடியார்க்கு எளியன்!
அறி-வானவர்க்கு அரியன்! அடியார்க்கு எளியன்!
:)

எல்லாம் சரி! ஆனால் அவன் தேவர்களுக்கு மட்டுமே சொந்தமல்லவா? அவர்களுக்கு மட்டும் தானே அருள்வான்?
ஹா ஹா ஹா! யார் சொன்னது? பிரகலாதன், குபேரன், மகாபலி, வீடணன், சுக்கிரன் என்று பலப்பல அரக்கர்களுக்கும் அருள் செய்பவன் ஆயிற்றே!
ஆனால் இந்திரனின் மகன் ஜெயந்தனை அடித்து விரட்டியவன் ஆயிற்றே! இந்திர பூசை நடக்க விடாமல், இயற்கையான ஒரு மலைக்குப் பூசை செய்யச் சொன்னவன் ஆயிற்றே!
அசுரன் பிரகலாதன் = பிரகலாத ஆழ்வார் ஆனான்!
தேவன் ஜெயந்தன் = காகாசுரன் என்று அசுரன் ஆனான்!

இப்படிக் குலம் பார்த்து அருளாது, குணம் பார்த்து அருளும் குணம் தானே பரம குணம்!
ஈசன் வானவர்க்கு என்பன் என்றால்-அது
தேசமோ திருவேங் கடத்தானுக்கு
?
என்று அதனால் தான், அவன் வானவர்க்கும் மட்டும் அன்பன் இல்லை என்று ஆழ்வார் பாடுகிறார்! அன்பு காட்டி, எளிமை காட்டும் குணங்களுக்கு "பெருமாளின் கல்யாண குணங்கள்" என்று பெயர்! அவை எவை?

1. வாத்சல்யம் = அன்பு உடைமை (Boundless Love)
2. செளலப்யம் = நீர்மை (Easily Visible & Approachable)
3. செளசீல்யம் = எளிவந்த தன்மை (Easily Mixing with Mortals)
4. சுவாமித்வம் = என்றும் கைவிடேன் என்னும் உரிமை (Sense of Ownership)

முமுட்சுப் படி என்னும் நூலில், இதை மிக அழகாக விளக்குகிறார் பிள்ளை லோகாசாரியார்!
* குற்றங் கண்டு வெருவாமைக்கு வாத்சல்யம்
* காரியம் செய்யும் என்று துணிகைக்கு சுவாமித்வம்
* சுவாமித்வம் கண்டு அகலாமைக்கு செளசீல்யம்
* அதைக் கண்டு பற்றுகைக்கு செளலப்யம்

என்று வியாயக்யானம் (விரிவுரை) செய்கிறார் அண்ணல்!

இந்த எளிமைக் குணங்களோடு, அவன் அருமைக் குணங்களும் உண்டு!

5. சர்வக்ஞ-த்வம் = முற்றும் உணர்தல் (Omniscient)
6. சர்வ சக்தி-த்வம் = முடிவிலா ஆற்றல் (Omnipotent)
7. சர்வ வியாபி-த்வம் = முற்றும் நிறைதல் (Omnipresent)
8. சத்-சித்-ஆனந்தம்/மங்களம் = முற்றிலும் இன்பம் (Bliss/Mangalam)

இந்த எட்டுக் குணங்கள் தான் "எண் குணம்" என்பது இல்லை! வள்ளுவர் காட்டும் எண் குணம் என்பது வேறு! மிகவும் ஆய்வுக்கு உரியது!
எண் குணத்தான் என்று ஐயன் வள்ளுவன் கடவுள் வாழ்த்தில் தொட்டுச் செல்வதை லேசாகப் பார்க்கலாம்!

இதற்கு உரை செய்த சிலர், "தன் வயத்தினன் ஆதல்" என்று ஆரம்பித்து ஒரு எட்டுக் குணங்களைப் பட்டியல் போடுவர்! ஏதோ இந்தக் குணங்கள் எல்லாம் வடமொழி தான் கண்டு பிடித்துக் கொடுத்தது போல் இருக்கும்! ஆனால் அதுவல்ல!
தமிழிலேயே இத்தனை குணங்களும் பேசப் படுகின்றன! சமயம் சாராத சில தமிழறிஞர்கள், எண் குணத்தான் என்பதை, எண்ண முடியாத குணங்கள் கொண்டவன் என்று பொருள் உரைக்கிறார்கள்.
ஆனால் முதல் எட்டுக் குறள்களில் கூறப்பட்ட எண்-குணங்களை நீங்களே பாருங்கள்!
1. ஆதிபகவன்,
2. வாலறிவன்,
3. மலர்மிசை ஏகினான்,
4. வேண்டுதல் வேண்டாமை இலான்,
5. இறைவன்,
6. பொறிவாயில் ஐந்து அவித்தான்,
7. தனக்குவமை இல்லாதான்,
8. அறவாழி அந்தணன்
என்ற எட்டு குணங்களையே, ஒன்பதாவது குறளில் ஒன்றாய்த் தொகுத்து,
கோளிற் பொறியில் குணம் இலவே? எண் குணத்தான்
தாளை வணங்காத் தலை!

என்று பாடி விடுகிறார் ஐயன்! இந்த எண் குணத்தையும் மேற் சொன்ன எட்டு கல்யாண குணங்களோடு பொருத்திப் பார்க்கலாமே தவிர, இந்த எண்-குணத்தை எல்லாம் கொண்டு, வள்ளுவர் வைணவர், சைவர், சமணர்-ன்னு எல்லாம் தற்குறிப்பேற்றம் செய்வது தகாது! வள்ளுவம் சமய நூல் அல்ல! எனவே சமய நூல் அல்லாத ஒன்றை வைத்து, அதன் ஆசிரியர் இந்தச் சமயமோ, அந்தச் சமயமோ என்பதும் தகாது!


இப்படி எண்ணிலாக் குணக் கடலாக இறைவன் விளங்குகிறான்!

அவதாரங்களில், இப்படிக் குணங்கள், குணங்கள், கல்யாண குணங்கள் என்று பேசப்படும் ஒரே அவதாரம் இராமாவதாரம் மட்டுமே!
இராமவதாரத்தை மட்டுமே "பெருமாள்" என்று குறிப்பதும் வழக்கம்! அந்த இராமப் "பெருமாள்" வணங்கிய விக்ரகம் "பெரிய பெருமாள்" (அரங்கன்)!
ஆண்டாளும் இராமனைத் தான் "மனத்துக்கு இனியான் (Sweet Heart)" என்று பாடுகிறாள்! கண்ணனை வெறுப்பேத்தக் கூட இருக்கலாம்! :)

பின்னாளில் உரைக்கப்பட்ட கீதைக்கு, "அட போப்பா, வாயில சொல்லுறது ஈசி! வாழ்ந்து பார்த்தா தானே தெரியும்?" என்ற பேச்சு வந்து விடக் கூடாது என்று தான்...
* முதலில் இராமனாய், தானே வாழ்ந்து காட்டி
* பின்னர் கண்ணனாய், ஊருக்கே உபதேசம் செய்கிறான்!

அதனால் தான் நம்மாழ்வார் என்னும் மாறன் சடகோபன்
கற்பார்கள் இராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ?
கேட்பார்கள் கேசவன் கீர்த்தி அல்லால் மற்றும் கேட்பரோ?
என்று பாடுகிறார்!

அந்தக் குணங்களைக் கேட்டுக் கேட்டு இன்னும் முடியவில்லையாம் ஒருத்தருக்கு! இன்னும் இன்னும் கேட்டுக்கிட்டே இருக்காரு!
அதனால் தான் திருமலைக் கோயில் வாசலில், தன் இரு கைகளுக்கும் விலங்கு இட்டுக் கொண்டு, வேங்கட ராமனைச் சேவித்தவாறு நின்று கொண்டே இருக்கிறார்!

யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம் = எங்கெங்கு இராமனின் கல்யாண குணங்கள் பாடப்படுதோ
தத்ர தத்ர க்ருதம் ஹஸ்தக அஞ்சலீம் = அங்கங்கு கூப்பிய கரத்தோடு வணங்கிக் கொண்டு

மாருதிம் நமதே என்று கல்யாண குணங்களில் திளைத்து இருக்கும் ஆஞ்சனேயன் பிறந்த மலை திருமலை-அஞ்சனாத்ரி!

ந கதஞ்சந கஞ்சந ஜாது பஜே! = நம் ஆஞ்சநேயன் கேட்டுக்கிட்டே இருக்கான்! நீங்களும் கேட்டுக்கிட்டே இருங்க!
விநா வேங்கடேசம் ந நாதோ ந நாத
சதா வேங்கடேசம் ஸ்மராமி ஸ்மராமி
என்று அடுத்த சனிக்கிழமை, இந்த சுப்ரபாதப் பகுதியை நிறைவு செய்வோம்! அவசியம் வாங்க! ஹரி ஓம்!

49 comments:

துளசி கோபால் said...

எல்லாத்துலேயும் சிரேஷ்டமாச் சொல்றது அந்த 'வாத்சல்யம்'தான்.

அது மட்டும் இல்லைன்னா, மனுசன் பண்ணும் அட்டூழியங்களுக்கு ஒருத்தன் மிஞ்சணுமே!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//துளசி கோபால் said...
எல்லாத்துலேயும் சிரேஷ்டமாச் சொல்றது அந்த 'வாத்சல்யம்'தான்.//

ஆமாங்க டீச்சர்!

//அது மட்டும் இல்லைன்னா, மனுசன் பண்ணும் அட்டூழியங்களுக்கு ஒருத்தன் மிஞ்சணுமே!//

கரெக்டாச் சொன்னீங்க! பதிலுக்கு எதிர்பார்க்காத அன்பு = வாத்சல்யம்!

பை தி பை
வாத்சல்யத்தில் இருந்து தான் வத்சலா-வும் வருது! வத்சலா-ன்னு பேரு வச்சவங்க எல்லாம் ரொம்ப அன்பா இருக்காங்களே-ன்னு யோஜிக்கறது உண்டு! :)

கோவி.கண்ணன் said...
This comment has been removed by the author.
துளசி கோபால் said...

உங்க அம்மா பெயரா?

நம்ம வீட்டுலேயும் மாமா பொண் பெயர் வத்சலாதான். எங்கிட்டே ரொம்ப அன்பா இருப்பாள். எப்பவாவதுதானே என்னைச் சந்திக்க முடியுது:-)

கோவி.கண்ணன் said...

உள்ளேன் ஐயா,

என் குணத்தான் என்ற பெயர் பலருக்கு உண்டு.

"மலர்மிசை ஏகினான்" என்பது பற்றிப் புத்தனைக் குறிக்கும் என்று பெளத்தரும், அருகனைக் குறிக்கும் என்று சமணரும் கூறுவர். மேலும் சமணர் எண்குணத்தான் என்புழி எட்டுக் குணங்களும் அருகனுக்குரிய கடையிலாவறிவு, கடையிலார் காட்சி, கடையிலா வீரியம், கடையிலா வின்பம், நாமமின்மை, கோத்திரமின்மை, ஆயுவின்மை, அழியாவியல்பு என்பனவேயாகும் என்பர் - http://72.14.235.132/search?q=cache:4cKInFDTGUMJ:www.thamilworld.com/forum/index.php%3Fact%3DPrint%26client%3Dwordr%26f%3D23%26t%3D6548+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D&hl=en&ct=clnk&cd=3

******

'எட்டுகொலாம் அவர் ஈறில் பெருங்குணம்' என்று அப்பர் பெருமானும்,

'எண்குணம் செய்த ஈசனே' என்று மாணிக்கவாசகரும் பாடுவர்.

அதனாற்றான் சிவாகமங்களில் சுட்டியபடி என்று பரிமேலகரும்

****

எண் குணத்தான் என்பது சமணருக்கும் பெளத்தருக்கும் பொருத்தாமானதாகத் தெரியவில்லை.

இராமன் விருப்பு / வெறுப்பு அற்றவன் இல்லையாதலால் இராமனுக்கும் பொருத்தமாக தெரியவில்லை. கண்ணனுக்கு ? சொல்லலாம். ஆனால் கண்ணனும் இராமன் அவதாரம் என்பதால், கண்ணனுக்கு பொருத்திப் பார்க்கும் எண் குணம் நிலையானதாக இல்லை.

எண் குணம் என்றும் உடையவராக (புராண இட்டுக்கதைகளை தவிர்த்துவிட்டு பார்த்தால் ) பிறவியற்ற ஒரே ஒருவர் தான் மீதம். :)

வின்னவர்க்கும் மன்னவன் எவரோ அவரே அவர்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//துளசி கோபால் said...
உங்க அம்மா பெயரா?//

அம்மா பேரு ஜோதீஸ்வரி டீச்சர், டீச்சர்! :)
ஆமா அவிங்களும் ஒரு டீச்சர் தான்! ஒங்கள நல்லாவே தெரியும் அவிங்களுக்கு!

திருவண்ணாமலை தீபத்துல வேண்டிக்கிட்டுப் பொறந்தவங்களாம்! அதான் ஜோதி!

இந்த வத்சலா அத்தைப் பொண்ணு! ரொம்ப அன்பா இருப்பா! ஆனா...வேற எடத்துல கண்ணாலம் கட்டிட்டாங்க, படிச்சி முடிக்கச்சொல்லவே! :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@கோவி அண்ணா
திருமூலர் எண்குணத்தான் பற்றியும் பேசுவார்:
கொல்லான் பொய்கூறான் களவிலன் "எண்குணம்"
நல்லான் அடக்கமுடையான் நடுச்செய
வல்லான் பகுத்துண்பான் மாசிலான் கட்காமம்
இல்லான் இயமத்து இடையில் நின்றானே

வள்ளுவத்தில் வரும் இந்த எண்குணச் சொல் மிகவும் ஆய்வுக்கு உரியது! நீங்கள் தரும் காட்டுகள் எல்லாம் வள்ளுவத்துக்குப் பிந்தயவை! நான் காட்டிய திருமந்திரமும் அப்படியே! அதனால் அதைக் குறள்-விளக்கமாக அப்படியே ஏற்பதற்கு இல்லை!

பரிமேலழகர் உரையே டுபாக்கூர் என்று உங்கள் பதிவுகளைப் படித்துப் படித்து, பரிமேலழகர் சொல்லுறது எதையுமே இப்பல்லாம் நம்பறது இல்லை! :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@கோவி அண்ணா
இந்த எண்குணத்தானை சைவம், சமணம், பெளத்தம் என்று ஒவ்வொன்றும் அவரவர் பாணியில் நிலைநாட்டும்! வைணவம் இதை நிலைநாட்டுகிறதா என்று தெரியவில்லை! அது குறளின் ஒவ்வொரு அடியிலும் வரும் திருவடி வணக்கம் பற்றி மட்டுமே பேசுகிறது!

திருவடிகள் சமய வழிபாட்டு முறைகளில் பெரிதாகவும் வெளிப்படையாகவும் கொண்டாடப்படுவது வைணவத்தில் மட்டுமே!

நான் சொன்ன எண்குணம் இராமனுக்கு இல்லை! அந்த முதல் நான்கு குணங்கள் மட்டுமே இராமனுக்கு!

அவதாரங்களைக் கடந்த நாராயணன் என்று வரும் போது தான் இந்த எட்டு குணங்களும் பேசப்படுகின்றன! ஆனால் இந்த எட்டு குணங்களையும், திருக்குறளின் எண்குணத்தானுக்கு வைணவ ஆசிரியர்கள் யாரும் இது வரை முடிச்சு போடவில்லை என்றே நினைக்கிறேன்!
********************

அடியேன் பதிவில் காட்டியுள்ளது எட்டு கல்யாண குணங்கள்! அது எண் குணம் தானா என்பது தெரியாது!

ஆனால் வள்ளுவர் சொல்ல வந்த எண்குணம் என்ன என்ற ஆய்வு வரும் போது
* எண்ண முடியாத குணம் என்றும்
* முதல் எட்டு குறட்பாக்களில் குறிப்பிடும் குணம் என்றும்
கொள்வதே சாலப் பொருத்தமாக இருக்கும்!

முதல் எட்டு குறட்பாக்களில் சொல்லப்படும் எட்டு குணங்களுக்கு, நான் சொன்ன எட்டு கல்யாண குணங்கள் எவ்வளவு தூரம் பொருந்துகின்றன என்பதைப் பொருத்திப் பாருங்கள்!

அப்படியே, சமண/பெளத்த/சைவம் சொல்லும் எட்டு குணங்களும் முதல் எட்டு குறட்பாக்களுக்குப் பொருந்துதா என்று Match the Following செஞ்சி, ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாப் பின்னூட்டம் இடுங்களேன்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

சைவம் காட்டும் எண்குணங்கள்:
1. தன் வயத்தனாதல் - Self-existence - சுவதந்த்ரத்வம் (Absolute Self-Control)
2. தூய உடம்பினனாதல் - Immaculateness - விசுத்த தேகம் (Absolute purity)
3. இயற்கை உணர்வினன் ஆதல் - Intuitive Wisdom - அநாதி பேதம் (Absolute intuition)
4. இயல்பாகவே பாசங்களில் இருந்து நீங்குதல் - Freedom from illusions - நிராமயம் (Absolute Freedom)
5. பேரருள் உடைமை - Unbounded kindness - அலுப்த சக்தி (Boundless Grace)
6. வரம்பில் இன்பமுடைமை - Infinite happiness - நித்ய திருப்தித்வம் (Boundless grace)
7. முற்றும் உணர்தல் - Omni science - சர்வக்ஞத்வம்
8. முடிவிலா ஆற்றல் உடைமை - Omni potence - அனந்த சக்தி

இந்த எட்டுக்கும் முதல் எட்டு குறட்பாக்களைப் பொருத்துங்கள்!

//எண் குணம் என்றும் உடையவராக (புராண இட்டுக்கதைகளை தவிர்த்துவிட்டு பார்த்தால் ) பிறவியற்ற ஒரே ஒருவர் தான் மீதம். :)
வின்னவர்க்கும் மன்னவன் எவரோ அவரே அவர்//

தூய உடம்பினனாதல் என்று சைவம் காட்டுவது, குறள் காட்டுவதில் வரவில்லையே! விளக்கம் ப்ளீஸ்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

சமணம் காட்டும் எண் குணங்கள்:
1. கடையிலாவறிவு,
2. கடையிலாக் காட்சி,
3. கடையிலா வீரியம்,
4. கடையிலா வின்பம்,
5. நாமமின்மை,
6. கோத்திரமின்மை,
7. ஆயுவின்மை,
8. அழியாவியல்பு

இதையும் முதல் எட்டு குறட்பாக்களுக்குப் பொருத்துங்கள்!

கோவி.கண்ணன் said...

//தூய உடம்பினனாதல் என்று சைவம் காட்டுவது, குறள் காட்டுவதில் வரவில்லையே! விளக்கம் ப்ளீஸ்!//

சைவ சமயத்திலும் சொல்லி இருக்கிறார்கள் என்றே காட்டினேன். நான் (பிள்ளைமார் / சைவ பார்பனர்களின் ஆளுகைக்கு உட்பட்ட) சைவ சமய கொள்கைகளைப் போற்றுவது இல்லை.

ஆனால்,

1. ஆதிபகவன், - ஆரம்பம் அற்றவன்

2. வாலறிவன் - தூய அறிவுடையோன்
3. மலர்மிசை ஏகினான் - மன மலரில் இருப்பவன்
4. வேண்டுதல் வேண்டாமையிலான் - விருப்பு வெறுப்பற்றவன்
5. இறைவன்
6. பொறிவாயில் ஐந்தவித்தான் - ஐம்புலன்களை அடக்குபவன்
7. தனக்குவமை இல்லாதான்
8. அறவாழி அந்தணன்

இவையெல்லாம் உருவமற்ற இறைவனுக்கு பொருந்தும். அதன் பெயர் என்ன வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள், சிவம், பேரொளி, பரமாத்மா என்ற பாலற்ற பெயரில் சொல்வது எனக்கு சிறப்பாகத்தான் தெரிகிறது.

கோவி.கண்ணன் said...

//திருவடிகள் சமய வழிபாட்டு முறைகளில் பெரிதாகவும் வெளிப்படையாகவும் கொண்டாடப்படுவது வைணவத்தில் மட்டுமே!
//

திருவடிகள் என்பது பாதத்தைக் குறிக்குமா என்பது ஆராய்ச்சிக்குரியது, அடி என்பதற்கு வழி என்று பொருளும் உண்டு, திருவடியை நாடுதல் என்றால் இறைவனின் வழியை நாடுபவர் என்ற பொருளும் சொல்லலாம். ஆனால் குறியீடாக பாதம், பாத பூஜை என்று சென்றுவிட்டதால், நீங்கள் திருவடிக்கு பாதத்தை வணங்குபவர் என்ற பொருளில் சொல்கிறீர்கள் என்றே நினைக்கிறேன்.

பாத வழிபாடு புத்த மதத்திலும் உண்டு.

http://images.google.com/images?hl=en&resnum=0&q=buddha%20feet&um=1&ie=UTF-8&sa=N&tab=wi

இறைவனின் உயரிய தத்துவமே உருவமற்றது(அத்வைதம்) அல்லது ஒளிவடிவம் (துவைதம்) என்று சொல்லுகிறோம் அதில் பாதம் எங்கே இருக்கும் ?

கோவி.கண்ணன் said...

//பரிமேலழகர் உரையே டுபாக்கூர் என்று உங்கள் பதிவுகளைப் படித்துப் படித்து, பரிமேலழகர் சொல்லுறது எதையுமே இப்பல்லாம் நம்பறது இல்லை! :))//

பழியை எம்மேல போடுறியளா ?

அச்சச்சோ.....அபச்சாரம், நான் தெளிவாகச் சொல்லிவிடுகிறேன்.

பரிமேல் அழகர் எழுதியதே முதல் உரை என்று சொல்லப்படுகிறது. கிடைத்தவற்றில் அது முதலாக இருக்கக் கூடும், பரிமேலழகர் திருக்குறளில் பலவரிகளைத் திருத்தினார் என்ற குற்றச் சாட்டு எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இருந்தாலும் எனது நன் மதிப்புக்குறிய பாவாணாரும் பரிமேலழகர் உரையில் சில சிறப்பான விளக்கங்களும் இருப்பதால் அதனை முற்றிலும் நிராகரிக்க முடியாது என்று சொல்லி இருக்கிறார்.

நான் தனிப்பதிபாகவே எழுத என்னியிருக்கிறேன். பொருளுரை, அருளுரை எல்லாமே தனிப்பட்ட ஒருவரின் கருத்தையும் அதில் ஏற்றிக் கூறுவதே. தீவிர சமய / மொழிப் பற்றின் காரணமாக சொல்லுக்கு பொருளை மிகுந்த கற்பனை புனைவுடனேயே இலக்கிய சுவை என்ற பெயரில் இந்த காலத்தவர் கூடச் செய்கிறார்கள். அதனால் எந்த ஒரு பொருளுரையும் முழுமையானதே அல்ல. மறைமலையடிகளாரும் அப்படித்தான் சைவம் பற்றி எழுதிய கட்டுரைகளில் அவரது தற்கருத்து வலியுறுத்தல் மிகுதியாக இருக்கும்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இறைவனின் உயரிய தத்துவமே உருவமற்றது(அத்வைதம்) அல்லது ஒளிவடிவம் (துவைதம்) என்று சொல்லுகிறோம் அதில் பாதம் எங்கே இருக்கும் ?//

உருவம் அற்றது = அத்வைதம் என்று உங்களுக்கு யார் சொன்னது?
அதை விட
ஒளி வடிவம் = துவைதம் ஆஆஆ?

அடக் கடவுளே! இது என்ன புதுப்புது அல்லிருமை/இருமைக் கோட்பாடுகள் எல்லாம் சிங்கையில் உதயம் ஆகுது? :)

//பாத வழிபாடு புத்த மதத்திலும் உண்டு//

ஆமாம்-ண்ணா! உண்டு!
புத்தம் சரணம் கச்சாமி! சரணம் என்று வந்தாலே, அங்கு பாதங்கள் (சரணெள) எப்படியும் வந்து விடும்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//சைவ சமயத்திலும் சொல்லி இருக்கிறார்கள் என்றே காட்டினேன். நான் (பிள்ளைமார் / சைவ பார்பனர்களின் ஆளுகைக்கு உட்பட்ட) சைவ சமய கொள்கைகளைப் போற்றுவது இல்லை//

ஹா ஹா ஹா!

//1. ஆதிபகவன், - ஆரம்பம் அற்றவன்//

பகவன் என்றால் அற்றவன் என்றா பொருள்?

//பொறிவாயில் ஐந்தவித்தான் - ஐம்புலன்களை அடக்குபவன்//
//இவையெல்லாம் உருவமற்ற இறைவனுக்கு பொருந்தும்//

இல்லையே! ஐம்புலன்கள் இருப்பது உருவம் உடையவர்க்குத் தானே!
காண்தல், கேட்டல், சுவைத்தல், முகர்தல், உணரல் என்று அடக்குதலைச் சொல்றீங்க! அப்புறம் எப்படி உருவமற்ற? எங்கேயோ இடிக்கிது-ண்ணே! :)

//என்ன வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள், சிவம், பேரொளி, பரமாத்மா என்ற பாலற்ற பெயரில்//

பேரொளி சரி!
சிவம் பால் அற்ற பெயரா? இது என்ன தியரி?
அப்படின்னா ஆணல்லன், பெண்ணல்லன், அல்லால் அலியும் அல்லன் என்று நானும் ஒரு பேரைக் கொடுப்பேன்! ஓக்கேவா? அதையும் சிறப்பாத் தெரியுது-ன்னு உங்க வாயால சொல்லணும்! :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//திருவடிகள் என்பது பாதத்தைக் குறிக்குமா என்பது ஆராய்ச்சிக்குரியது, அடி என்பதற்கு வழி என்று பொருளும் உண்டு//

நான் திருவடி-ன்னு தானே சொன்னேன்! எங்கும் பாதங்களைச் சொல்லலையே!
வைணவத்தில் திருவடி என்பது வெறுமனே பாதங்கள் மட்டுமல்ல!
திருவடி=பற்றுக்கோடு! பற்றுக பற்றற்றான் பற்றினை!

//அடி என்பதற்கு வழி என்று பொருளும் உண்டு//

தவறான தகவல் கோவி அண்ணா!
இதோ அகர முதலி

அடி=பாதம், கீழ், உபாயம்!
இடம் என்ற பொருளும் உண்டு!
அடைதல்->அடை->அடி!
வழி என்ற பொருள் கிடையாது-ன்னுனே நினைக்கிறேன்!

கோவி.கண்ணன் said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

உருவம் அற்றது = அத்வைதம் என்று உங்களுக்கு யார் சொன்னது?//

எங்கும் நிறைந்திருப்பதற்கு தனியான வடிவம் ஏது ?

//அதை விட
ஒளி வடிவம் = துவைதம் ஆஆஆ?

அடக் கடவுளே! இது என்ன புதுப்புது அல்லிருமை/இருமைக் கோட்பாடுகள் எல்லாம் சிங்கையில் உதயம் ஆகுது? :)
//

ஆன்மா - பரமான்மா என்ற இருநிலை தான் துவைதம் என்றே நினைக்கிறேன்.

கோவி.கண்ணன் said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//தவறான தகவல் கோவி அண்ணா!
இதோ அகர முதலி//

'அடியொற்றி நடத்தல்' என்பதன் பொருள் பாதச் சுவட்டின் மீது நடப்பது என்று பொருளா ? :) அந்த வழியை ஏற்றுக் கொள்வது, செல்வது என்ற பொருள் தானே ?

//அடி=பாதம், கீழ், உபாயம்!
இடம் என்ற பொருளும் உண்டு!
அடைதல்->அடை->அடி!
வழி என்ற பொருள் கிடையாது-ன்னுனே நினைக்கிறேன்!
//

'அடைதல்' என்றாலே சென்று சேர்த்தல் என்று பொருள் தானே, வழி இல்லாமல் சென்று சேர முடியுமா ?

கோவி.கண்ணன் said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...


//1. ஆதிபகவன், - ஆரம்பம் அற்றவன்//

பகவன் என்றால் அற்றவன் என்றா பொருள்?//

கிண்டலா ? ஆதி என்றால் ஆரம்பம் என்று மட்டுமே பொருள் இல்லை, ஆரம்பம் அரிய முடியாது என்ற பொருளும் உண்டு, ஆதி என்றால் முதன் முதலில் என்ற பொருள் இருந்தாலும், அந்த 'முதன் முதலின்' என்று குறிப்பிட காலம் அரியப்படாத / அறிவிக்காத சொல்லாகவே அங்கு பயன்படுத்துவதால் 'ஆரம்பம் அற்றது என்று சொன்னேன்

//இல்லையே! ஐம்புலன்கள் இருப்பது உருவம் உடையவர்க்குத் தானே!
காண்தல், கேட்டல், சுவைத்தல், முகர்தல், உணரல் என்று அடக்குதலைச் சொல்றீங்க! அப்புறம் எப்படி உருவமற்ற? எங்கேயோ இடிக்கிது-ண்ணே! :) //

ஐம்புலன்களை அடக்குவதற்கான வல்லமையை அவன் தருகிறான் என்றே பொருள்.

//பேரொளி சரி!
சிவம் பால் அற்ற பெயரா? இது என்ன தியரி?//

சிவன் என்பது ஆண்பாலாக சொல்லப்படுகிறது, அல்லா சொல்லுகிறான் என்று இஸ்லாமில் கூடச் சொல்லுவார்கள், அங்கும் ஆணல்ல பெண்ணால்ல என்ற புரிதலே இருக்கிறது, மதங்கள் அனைத்திலும் ஆணாதிக்கம் இருப்பதால் 'சிவன்' என்ற பெயர் சொல்லில் ஆண் தன்மை இருப்பதாக படுகிறது, அதைத் தவிர்க்கத்தான் இங்கே 'சிவம்' என்றே குறிப்பிட்டேன்.

//அப்படின்னா ஆணல்லன், பெண்ணல்லன், அல்லால் அலியும் அல்லன் என்று நானும் ஒரு பேரைக் கொடுப்பேன்! ஓக்கேவா? அதையும் சிறப்பாத் தெரியுது-ன்னு உங்க வாயால சொல்லணும்! :))//

கண்டிப்பாக சொல்லுங்க, எனக்கு பெயரில் எந்த ஒரு ஈர்ப்பும் இல்லை. நான் பயன்படுத்தும் சொல், புரிந்துகொண்டுள்ளச் சொல் என்பதால் சிவம் என்று சொல்கிறேன். சிவம் - அல்லா என்ற இருவேறு பெயர்களைக் கூட ஒன்றாகவே கருதுகிறேன்.

******

கடுப்பாக இருந்தால் வெளிப்படையாகச் சொல்லுங்க, பின்னூட்டத்தை இந்த இடுகைக்கு இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.

:)

குமரன் (Kumaran) said...

தமிழ்மணம் பரிந்துரை பட்டையில் வாக்களித்துவிட்டேன் இரவிசங்கர். வீட்டுப்பாடம் எல்லாம் இனி மேல் தான். :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
தமிழ்மணம் பரிந்துரை பட்டையில் வாக்களித்துவிட்டேன் இரவிசங்கர்//

என்ன வாக்கு போட்டீங்க குமரன்? :)

//வீட்டுப்பாடம் எல்லாம் இனி மேல் தான். :-)//

அதை இப்போ இன்னொருத்தர் செஞ்சிக்கிட்டு இருக்காரு! கொஞ்சம் தப்பு தப்பா செய்யறாரு-ன்னு ஸ்கூல் டீச்சர் கிட்ட திட்டு வாங்குறாரு! :)

Anonymous said...

\\மையோ மரகதமோ மறிகடலோ மழை முகிலோ
ஐயோ இவன் வடிவு என்பதோர் அழியா அழகுடையான் என்கிறார் கம்பர்!//

இராம பிரானுக்கு இன்னும் சில சிறப்புகள் உண்டு.

தோள் கண்டார் தோளே கண்டார், தாள் கண்டார், தாளே கண்டார் என்று கம்பர் கூறுவார்.

மேலும் கைவண்ணம் அங்கு கண்டேன், கால் வண்ணம் இங்கு கண்டேன் என்று இராமனின் அழகைப் புகழ்வர்.

கம்பர் இக்குணங்களைச் சொல்வது போல, நிகமாந்த மகா தேசிகர், ரகு வீர கத்யம் என்னும் வடமொழித் தொகுப்பில்,(ரகுவீர கத்யம், ராமாவதாரத்தைப் பற்றிய அழகிய வீரிய தொகுப்பு)

பால காண்டத்தில்- மஹாதீரன்,
அயோத்யா காண்டத்தில்-
சௌஸீல்ய சாகரன் ,அஸகாய சூரன், அனபாய சாகஸன்(செயற்கரிய செய்வோன்)
,கிஷ்கிந்தா காண்டத்தில் -ஸ்வாதந்த்ர்யன்,ஸுந்தர காண்டத்தில்-ஸர்வஸ்வதானன்,யுத்த காண்டத்தில்-ஸத்ய வ்ரதன்,நிஷ்பந்ந க்ருத்யன்,உத்தர காண்டத்தில்-தார்மிக ராஜவம்சன்,ஸர்வ ஜன ஸம்மாநிதன்(எல்லாரையும் காப்போன்),என்று, ஒவ்வொரு காண்டத்திலும் ஒரு பெயர் இட்டு அழைக்கிறார்.

இப்பெயர்கள் எல்லாம் ராமனின் உடல் அழகு, செய்யும் காரியங்கள் மற்றும், குண நலன்கள்,பண்புகளை வைத்து சொல்லப்பட்டன.இவற்றில் சௌஸீல்ய ஸாகரன் என்னும் பதம் மிகவும் ஏற்றமுடையது.

வேறொரு பின்னூட்டத்தில், என் குணத்தான் எனும் சொல்லைப் பற்றி கூறுகிறேன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கடுப்பாக இருந்தால் வெளிப்படையாகச் சொல்லுங்க, பின்னூட்டத்தை இந்த இடுகைக்கு இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.
:)//

ஹா ஹா ஹா!
கடுப்பூ எல்லாம் ஒன்னும் இல்லை-ண்ணா!

//'அடியொற்றி நடத்தல்' = அந்த வழியை ஏற்றுக் கொள்வது, செல்வது என்ற பொருள் தானே ?//

இல்லை! அடியை ஒற்றி நடத்தல்! அடி=பற்று என்றும் காட்டினேன்! அவரை ஆதாரமாகப் பற்றி நடத்தல்

//'அடைதல்' என்றாலே சென்று சேர்த்தல் என்று பொருள் தானே, வழி இல்லாமல் சென்று சேர முடியுமா ?//

தரவு கேட்பேன்! :)
அகராதி படி, அடி என்றால் என்ன-ன்னு மட்டும் சொல்லுங்க! உங்க ஊகங்கள் எல்லாம் தனி!

கிணற்றடி-ன்னு சொன்னா கிணற்றின் வழியா? கிணறு இருக்கும் இடம்-னு தானே பொருள்
அடைதல்=அடி! அந்த அடைதல் இருக்கும் இடத்துக்குப் போகணும்னா அதுக்கு வேற பேரு இருக்கு தமிழில்! வழி, ஆறு என்று பல சொற்கள்!

ஆனால் அடி=பாதம், கீழ், உபாயம், இடம்!
வழி என்பதும் அடி என்றால், தமிழ் இலக்கண/அகராதி தரவு ப்ளீஸ்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பழியை எம் மேல போடுறியளா ?//

பின்னே? உங்க பதிவைப் பார்த்து தானே நாங்க திருந்தறோம்? பழி வழி மறையோர் மொழி எல்லாம் போகட்டும் கோவி. கண்ணனுக்கே! :)

//பரிமேல் அழகர் எழுதியதே முதல் உரை என்று சொல்லப்படுகிறது. கிடைத்தவற்றில் அது முதலாக இருக்கக் கூடும்//

ஆம்!

//பரிமேலழகர் திருக்குறளில் பலவரிகளைத் திருத்தினார் என்ற குற்றச் சாட்டு எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை//

ஊகம் தான்! சமணர் ஒரு மாதிரி ஊகிப்பார்! வைணவர் ஒரு மாதிரி! பகுத்தறிவாளர் ஒரு மாதிரி என்று அனைவரும் ஊகித்தல் தான்!

எல்லாருக்கும் திருக்குறள் வேண்டி இருக்கு, திருக்குறளுக்காக இல்லை, அவரவர் சார்பு நிலைக் கோட்பாடுகளுக்காக! அதான் பிரச்சனை!

//எனது நன் மதிப்புக்குறிய பாவாணாரும் பரிமேலழகர் உரையில் சில சிறப்பான விளக்கங்களும் இருப்பதால் அதனை முற்றிலும் நிராகரிக்க முடியாது என்று சொல்லி இருக்கிறார்//

சபாஷ்!
பாவாணரைப் புரிந்து கொண்டீர்களே!
முன்பு எப்பவோ ஒரு முறை ஒரு பின்னூட்டத்தில் பாவாணரையும், பெருஞ்சித்திரனாரையும் உங்களுக்கும் அறிமுகம் காட்டினேன்!

பாவாணரிடம் நேர்மைப் போக்கு அதிகம்! ஒன்றைத் தெளிய நிறுவினால், அதில் உள்ள உண்மையை ஒப்புக் கொண்டு விடுவார்! மறுபடியும் அதைக் காட்டாகப் பயன்படுத்தார்!

//பொருளுரை, அருளுரை எல்லாமே தனிப்பட்ட ஒருவரின் கருத்தையும் அதில் ஏற்றிக் கூறுவதே//

என்ன செய்வது?
எண்ணத்தின் வழியில் தானே எழுத்தும் செல்லும்!

//இலக்கிய சுவை என்ற பெயரில் இந்த காலத்தவர் கூடச் செய்கிறார்கள்//

ஹா ஹா ஹா!
கேஆரெஸ் கூடச் செய்யறான்-ன்னு வெளிப்படையாவே சொல்லலாம்! தப்பில்லை! :)

//மறைமலையடிகளாரும் அப்படித்தான் சைவம் பற்றி எழுதிய கட்டுரைகளில் அவரது தற்கருத்து வலியுறுத்தல் மிகுதியாக இருக்கும்//

தற்கருத்தை வலியுறுத்தல் தவறு இல்லை! முற்றும் துறந்தவர் கூட கருத்தைத் துறக்க மாட்டார் என்பதை நினைவில் வையுங்கள்!

ஆனால் வலியுறுத்தல் வேறு! இல்லாத ஒன்றை இருப்பதாக ஏற்றிக் கூறுவது வேறு!

அதைத் தமிழ் இலக்கியம் முழுதும் ஆய்ந்து படித்தவர்கள், யாருக்கு அவ்வளவாத் தெரியப் போகுதுன்னு வேண்டுமென்றே ஒன்றை மறைத்து விட்டு, வேறு மாதிரி பொருள் சொல்லுதல் தான் தப்பு!

இதை வடமொழி மந்திர வித்தகர் செய்யுறாங்க என்று குற்றம் சாட்டும் நாமே செஞ்சா எப்படி?
மறைமலை அடிகளார் சில பல விடயங்களில் இப்படிச் செய்து விட்டார் என்பது அடியேன் பணிவான கருத்து! அதுவும் ஆரிய-திராவிட வேறுபாட்டை நிலைநாட்ட, இருப்பதைக் காட்டுவதை விட்டு விட்டு, பல புனைவுகளும் கூடவே செய்து விட்டார்!

சங்க இலக்கியம் இப்போது எல்லார் கைக்கும் எளிதில் கிடைப்பதால், பல விடயங்களும் வெளியில் வருகிறது! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஒளி வடிவம் = துவைதம்//

அத்வைதம் இறைவனை நிர்க்குண ரூபத்தில் பேர் அற்றவனாய், உரு அற்றவனாய்க் காட்டும்! ஆனால் சகுண ரூபத்தில் உருவமாய்க் காட்டும்! பேர் நாராயணன் என்று சொல்லும்!
எனவே அத்வைதம் என்றாலே உருவம் இல்லாதது என்று முடிவுக்கு வந்து விடாதீர்கள்!

அதே போல் துவைதும், ஒளி வடிவம் ன்னு எல்லாம் கிடையாது! பரமாத்மா ஜீவாத்மா இரண்டுமே வேறு வேறு! ஒன்றுடன் இன்னொன்று கலவாது, தனித்தே இருக்கும் தன்மை பற்றி மட்டுமே பேசும்!

//ஆதி என்றால் ஆரம்பம் என்று மட்டுமே பொருள் இல்லை, ஆரம்பம் அறிய முடியாது என்ற பொருளும் உண்டு//

ஹூம்! சரி! என்ன சொல்ல? நிறைய அஸ்யூம் பண்றீங்க!

ஆதி, அநாதி! அநாதி என்றால் தான் ஆரம்பம் அற்றது!
ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதியை என்று மாணிக்கவாசகர் பாடுறார்-ன்னா...உங்க பொருளைப் பொருத்திப் பாருங்க!

ஆதி இல்லாச் சோதி = ஆரம்பம் அறிய முடியாது என்பது இல்லாச் சோதி! அப்படின்னா ஆரம்பம் அறிய முடியும் சோதி! :)


ஆதி என்றால் முதன் முதலில் என்ற பொருள் இருந்தாலும், அந்த 'முதன் முதலின்' என்று குறிப்பிட காலம் அரியப்படாத / அறிவிக்காத சொல்லாகவே அங்கு பயன்படுத்துவதால் 'ஆரம்பம் அற்றது என்று சொன்னேன்

//ஐம்புலன்களை அடக்குவதற்கான வல்லமையை அவன் தருகிறான் என்றே பொருள்//

தவறு!
பொறிவாயில் ஐந்தவித்தான் = ஐம்புலன்களை அவித்தவன்! அதாச்சும் அவனே அவித்தவன்! அவனுக்கு உருவம் இருந்தால் தானே, பொறி இருக்கும்? அவிக்க முடியும்?

நல்லா தமிழ்ப் பொருளைப் பாருங்க! அவித்தான்! அவிப்பான் அல்ல! அவிப்பான் என்றால் நம் புலன்களை அவிப்பான், அவிக்கும் வல்லமை தரான்-ன்னு வரும்! ஆனால் இங்கே அவிப்பான் இல்லை! அவித்தான்!

படக் படக்-ன்னு அஸ்யூம் பண்ணாம படிச்சீங்க-ன்னா, நீங்க இன்னும் சிறப்பாச் செய்வீங்க! இது என் தனிப்பட்ட கருத்து-ண்ணா! :)

நீங்க உங்க உருவமில்லாக் கான்செப்ட்டை இதற்குள் புகுத்திய போது, எண் குணத்தில், அது மட்டும் செல்லாது என்று தான் காட்டினேன்!

//'சிவன்' என்ற பெயர் சொல்லில் ஆண் தன்மை இருப்பதாக படுகிறது, அதைத் தவிர்க்கத்தான் இங்கே 'சிவம்' என்றே குறிப்பிட்டேன்//

:)
நாராயணன் என்பதில் ஆண்! நாராயணி என்பதில் பெண்! அதனால் தான் நாராயண என்று சொல்லி விட்டார்கள்! சிவம்-சிவன் போலவே தான் இங்கும்!

//எனக்கு பெயரில் எந்த ஒரு ஈர்ப்பும் இல்லை. சிவம் - அல்லா என்ற இருவேறு பெயர்களைக் கூட ஒன்றாகவே கருதுகிறேன்//

நல்லது!
சிவஸ்ச ஹிருதயம் விஷ்ணோர்
விஷ்ணூச ஹிருதயம் சிவம் என்றும் சொல்லுவார்கள்!
பெயர் கடந்து இருப்பவன் பெயர் உள்ளவர்களோடும் பழக வேண்டி இருப்பதால் தான் இவ்வளவு களேபரமும்! :)

Anonymous said...

\\கோளிற் பொறியில் குணம் இலவே? எண் குணத்தான்
தாளை வணங்காத் தலை!
என்று பாடி விடுகிறார் ஐயன்! இந்த எண் குணத்தையும் மேற் சொன்ன எட்டு கல்யாண குணங்களில் பொருத்திப் பாருங்கள்! தமிழின் தகைமையும் இறைமையும் புரிந்து விடும்! (யாராவது பொருத்தி, பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்)//


இங்கு எண்குணத்தான் என்பது, ஸ்ரீமன் நாராயணனையே குறிக்கும்.

ஆங்கிலத்தில் "elimination process" "filtering process" என்று கூறுவர்.

அதன் படி முதலில் பௌத்தம் சமணம், இசுலாம் முதலிய மார்க்கங்களை எளிதாக நீக்கி விடலாம்.பௌத்தம் உருவானபோது, உருவ வழிபாடு இல்லை.வள்ளுவர் உருவ வழிபாட்டின் மீது நம்பிக்கை உள்ளவர்.அதனால் தான் , தாளை வணங்க அறிவுறுத்துகிறார்.

சமணம், அருக மதம். எனவே, அதையும் விலக்குக.
இசுலாம் உருவ நம்பிக்கை இல்லாதது.

தவிரவும் ,மேல் உலக வாழ்வு பற்றி “அருள் இலார்க்கு அவ்வுலகமில்லை”என்று தெளிவாகச் சொல்வதால், மேல் உலகம் , மருபிறவி போன்றவற்றில் நம்பிக்கை இல்லாத அவ்வழிபாட்டு முறைகளை வள்ளுவம் ஒரு போதும் ஏற்கவில்லை.

வள்ளுவர் அறவாழி அந்தணன் எனும் பதத்தை கையாள்கிறார்.மற்றும் அந்தணன் என்போன் அறவோன் என்ற சொல்லிலும் அவர் இந்து மதத்தை வெளிப்படையாக தெளிவாகக் கூறுகிறார்(யாம் இங்கு சொல் பற்றி மட்டும் குறீப்பிடுகிறோம்-பொருள் பற்றி அல்ல)

அந்தண வகுப்பு இந்து மதத்தில் மட்டுமே. பிற மதங்களில் இல்லை.


மேலும் வள்ளுவம் , தொல்காப்பிய இலக்கணத்தை அடி ஒட்டியது.தொல்காப்பியர்,தமிழ்முனி அகத்தியர் ஆகியோர் இந்துக் கடவுள்களின் , நெறி கொண்டோர்.

சிலர், திருக்குறளை , கிரித்தவ மதத்திற்கு, கோள் கொள்வர். வள்ளுவருக்குப் பின்னர் தான் கிரித்து பிறந்தார். எனெவே, கிரித்தவர்களுக்காக வள்ளுவம் வந்தது என்று கூறமுடியாது.

மேலும், கொழுநரைத் தொழுது எழும் மனைவி, பின் தூங்கி முன் எழும் மனைவி என்று இந்து மதத்தோர் பின்பற்றிய முறை பற்றி தெளிவாகச் சொல்லி இருக்கிறார்.

இத்தகைய elimination process மூலமாக, தற்போது, இந்து மதத்திற்கு வருவோம்.

தாள், அடி என்பன இறைவனின் திருவடியையெ குறிக்கும்.

இராம பிரான் திருவடி தான் 14 ஆண்டு காலம் ஆட்சி நடாத்தியது.தேசிகர்”பாதுகாஸகஸ்ரம்” என்னும் நூலில் 1000 பாடல்களில் திருவடியின் பெருமையைச் சொல்கிறார்(ஓரிரவில் எழுதிய பாடல்கள்)


யோகி திருமழிசை ஆழ்வார் தமது திருச்சந்த விருத்த நூலில் 77 ம் பாசுரத்தில்

எட்டுமெட்டுமெட்டுமாய் ஒரேழுமேழுமேழுமாய்
எட்டுமூன்றுமொன்றுமாகி நின்றஅதிதேவனே
எட்டினாய பேதமோடு இறைஞ்சிநின்று அவன் பெயர்
எட்டுழுத்துமோதுவார்கள் வல்லர் வானமாளவே.

என்று எண்குணத்தானின் எட்டெழுத்து நாமம் சொன்னால் கிடைக்கும் பயன் பற்றி விளக்குகிறார்.

இவரது குறிப்பறிந்த தேசிகர் எண்குணத்தானை அழகாகச் சொல்கிறார்.


ஆங்கிலத்தில் “one stop shop" என்று கூறுவர். அப்படி , எந்த விள்க்கம் வெண்டுமானாலும் தேசிகரிடம் இருந்து பெறலாமே.

பின் வரும் பாடல் எண் குணம் பற்றி, தெளிவாகக் கூறுகின்றது.
அதிகார சங்கிரகம். பாடல் 45 தேசிகர் எழுதியது.

எட்டு மா மூர்த்தியென் கணன், எண்டிக்கெட்டிறையெண் பிரகிருதி

எட்டு மாவரைகளீன்றவெண் குணத்தோண் எட்டெணுமெண்குண மதியோர்க்கு

எட்டுமாமலரெண் சித்தியென்பத்தி எட்டியோகாங்கமெண்செல்வம்

எட்டுமாகுணமெட்டெட்டெணுங்கலை எட்டி ரதமேலதுவுமெட்டினவே.

இவற்றில் உள்ள “எட்டு” எல்லாமே எண்குணமுடைய நாரணனைக் குறிக்கிறது.

மேலும் கீதார்த்த சங்கிரகம் என்னும் நூலில் (16 வது பாசுரம்)

மூவெட்டினும் அதின்மோகமடைந்தவுயிர்களினும்

நாவெட்டெழுத்தொடு நல்வீடு நண்ணின நம்பரினும்

மேவெட்டுவன் குண விண்ணோர்களினும் விசயனுக்குத்

தாவிட்டுலகளந்தான் தனை வேரொன்று சாற்றினனே.

திருக்குறளுக்கு வருவோம்

அறவாழி அந்தணன் எனும் சொல்லே வாமன அவதாரத்தைக்குறிக்கும் சொல்லாகக் கருதலாம். மற்றும் அடியார் என்னும் சொல்லே ,
இறைவனின் அடியைச் சார்ந்தவர்கள் என்பதற்காக வந்தது.(எனவெ இங்கு அடி என்பது இறைவனின் பாதத்தைக் குறீக்கும் சொல்லாகக் கொள்க.)


”ஆதி”மூலம் எனும் மாமத யானையை அருள வந்த நாமம். எட்டெழுத்தாகிய நாரணனின் பெயரே.

தற்போது என் சிற்றறிவுக்கெட்டிய செய்திகள் இவை. மேலும் பல செய்திகளை ஆராய்ந்து வள்ளுவம் கூறியது நாரணனெ என்பதை மற்றுமொரு பின்னூட்டத்தில் தெரிவிக்க முயல்வேன்.

கோவி.கண்ணன் said...

//அந்தண வகுப்பு இந்து மதத்தில் மட்டுமே. பிற மதங்களில் இல்லை.//

இது மாபெரும் ஜல்லி, அந்தணன் என்பது வகுப்பல்ல, அது ஒரு தகுதி பெயர் மட்டுமே படித்தவர்கள், குருமார்கள் அனைவருக்கும் அந்த பெயர் சிறப்பு பெயராக தமிழர்களுக்குள் கொடுக்கப்படுவதுண்டு, இதற்கு பலரும் விளக்கம் கொடுத்தாலும் அதுபற்றி சிறிதும் புரிந்துணர்வு இன்றி அதை 'இந்து' சொல்வதாக குறிப்பிடுவதும் தவறு. அது தமிழ் சொல்தான். தமிழ் என்றால் இந்து என்ற பொருள் இல்லை.

அந்தணர், அறவோர் இவையாவும் பண்பு பெயர்களே யன்றி சாதி/வகுப்பு பெயர்கள் இல்லை. இதுவரையில் அறிந்திருக்காவிடில் இப்போதாதவது அறிக. ஐயர் என்பதும் கூட பண்டிதர்களுக்கு (படித்தவர்களுக்கு ) 'சர்' பட்டம் போல் கொடுக்கும் பெயரே யன்றி பார்பனர்களுக்கு உரிய பெயரன்று. பார்பனர்களுக்கான பெயரென்றால் கால்டுவெல் ஐயர் என்றோ, ஐயுபோப் ஐயர் என்றோ கிறித்துவ தமிழ்பற்றாளர்களைப் ஐயர் என்று போற்றி இருக்க மாட்டார்கள்.

பிராமணர் என்பதும் கூட பண்பு பெயரேயன்றி பார்பனர் என்ற சாதியினருக்கு உரிய பெயரன்று

கோவி.கண்ணன் said...

//அத்வைதம் இறைவனை நிர்க்குண ரூபத்தில் பேர் அற்றவனாய், உரு அற்றவனாய்க் காட்டும்! ஆனால் சகுண ரூபத்தில் உருவமாய்க் காட்டும்! பேர் நாராயணன் என்று சொல்லும்!

எனவே அத்வைதம் என்றாலே உருவம் இல்லாதது என்று முடிவுக்கு வந்து விடாதீர்கள்!
//

ஒரு தெளிவே இல்லாது ஒன்றுக்கு இரு பொருள்களைக் கூறிவிட்டால் அது எப்படி சரியானதாகும் ? பன்றிக்கு நாய் என்று பெயரும் உண்டு என்று சொல்வது போல் இருக்கிறது. ஒரு தத்துவத்தை ஏன் உருவம் உள்ளது உருவமற்றது என்று தெளிவில்லாது சொல்ல வேண்டும் ? அதன் தேவை தான் என்ன ? தத்துவக் குழப்பத்தில் எழுதிய உளரல்கள், அதை இங்கே நீங்களும் எடுத்துச் சொல்கிறீர்கள்.

அனைத்துமான அத்வைதம் என்று பேசினீர்கள் என்றால் அங்கு பெயருக்குள் ஒடுங்கிய நாமம் உள்ள நாரயணனுக்கு என்ன வேலை ? எல்லாவற்றையும் சொல்லிவிட்டால் எளிதில் சமாளிக்கலாம் என்பதைத்தவிர்த்து இதில் கருத்தாழம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

//அதே போல் துவைதும், ஒளி வடிவம் ன்னு எல்லாம் கிடையாது! பரமாத்மா ஜீவாத்மா இரண்டுமே வேறு வேறு! ஒன்றுடன் இன்னொன்று கலவாது, தனித்தே இருக்கும் தன்மை பற்றி மட்டுமே பேசும்!//

மதங்கள் அனைத்துமே இறைவனை ஒளிவடிவாகவே சொல்கின்றன, இஸ்லாமியர்கள் இறைவனை உருவமற்றவன் என்று சொன்னாலும் அவனே பெரொளி என்பார்கள். பேரொளி என்றால் வெறும் ஒளி மட்டுமே அல்ல, பேரறிவுவும், பிரபஞ்சம் பற்றிய அறிவும் சேர்ந்ததே. இதையும் நிர்குணம் அதாவது அறிவற்ற (அந்த அறிவற்ற அல்ல) அத்வைத தத்துவத்தை எங்ங்னம் கொண்டு வந்து நுழைப்பீர்கள் ?

//ஹூம்! சரி! என்ன சொல்ல? நிறைய அஸ்யூம் பண்றீங்க!

ஆதி, அநாதி! அநாதி என்றால் தான் ஆரம்பம் அற்றது!
ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதியை என்று மாணிக்கவாசகர் பாடுறார்-ன்னா...உங்க பொருளைப் பொருத்திப் பாருங்க!
ஆதி இல்லாச் சோதி = ஆரம்பம் அறிய முடியாது என்பது இல்லாச் சோதி! அப்படின்னா ஆரம்பம் அறிய முடியும் சோதி! :)
//

இறைவனைப் பற்றி திருக்குறள் பேசும் போது ஆதி என்ற பொருள் ஆரம்பம் என்ற பொருளில் வந்தால் ஆதி அந்தம் இல்லாதவன் என்ற கூற்றும் மறுப்பாகிவிடுகிறதே. அந்த இடத்தில் ஆதிக்கு அந்த பொருள் பொருத்தமாகவே அதாவது ஆரம்பமற்ற என்ற பொருள் சரியாகவே எனக்கு படுகிறது. உங்களை வற்புறுத்தவில்லை :)


//ஐம்புலன்களை அடக்குவதற்கான வல்லமையை அவன் தருகிறான் என்றே பொருள்//

//தவறு!
பொறிவாயில் ஐந்தவித்தான் = ஐம்புலன்களை அவித்தவன்! அதாச்சும் அவனே அவித்தவன்! அவனுக்கு உருவம் இருந்தால் தானே, பொறி இருக்கும்? அவிக்க முடியும்? //

ஒருவருடைய ஐம்புலன்களை அடக்க அருளுபவன் என்ற பொருளில் 'இறைவன் அருளுபவன்' என்ற சொன்னால் அதற்கும் இறைவனுக்கு புலன் இருந்தால் அருள முடியும் என்பீர்களோ ?


//நல்லா தமிழ்ப் பொருளைப் பாருங்க! அவித்தான்! அவிப்பான் அல்ல! அவிப்பான் என்றால் நம் புலன்களை அவிப்பான், அவிக்கும் வல்லமை தரான்-ன்னு வரும்! ஆனால் இங்கே அவிப்பான் இல்லை! அவித்தான்!//

தீயசக்திகளை அவித்தான், அவிப்பான் என்று எப்படி சொன்னாலும் ஒரே பொருள் தான் வரும், இங்கே தீயசக்தி என்பதற்கு பதிலாக பஞ்ச விகாரங்கள் அல்லது ஐம்புலன்களின் இச்சையை என்று போட்டு பாருங்கள் ஒரே பொருளில் தான் வரும், இறைவனுக்கு ஏது ஐம்புலன் ? அவன் அவித்தாலும், அவிப்பாவனாக இருந்தாலும் அவனுக்காக எதையும் செய்து கொள்ளத் தேவையே இல்லை, அடியார்களுக்கு அவிப்பான் அவித்தான் அவிக்கின்றான் ( முக்காலம்)

//படக் படக்-ன்னு அஸ்யூம் பண்ணாம படிச்சீங்க-ன்னா, நீங்க இன்னும் சிறப்பாச் செய்வீங்க! இது என் தனிப்பட்ட கருத்து-ண்ணா! :)//

கற்பனையெல்லாம் பண்ணவில்லை, உங்களுக்கு தெளிவாக புரியவைக்க வேண்டுமென்றால் நீண்ட விளக்கமெல்லாம் எழுதனும், அப்பறம் அது எங்கேயாவது கொண்டு போய் நிறுத்தும், வேண்டாமே, அவ்வப்போது குறிப்புகளை மட்டும் தருகிறேன் :)


//:)
நாராயணன் என்பதில் ஆண்! நாராயணி என்பதில் பெண்! அதனால் தான் நாராயண என்று சொல்லி விட்டார்கள்! சிவம்-சிவன் போலவே தான் இங்கும்!//

சிவ என்னும் பெயர்ச் சொல் ஒளியையே குறிக்கும், நாராயணன் என்ற பெயர் சொல்லின் விளக்கம் ப்ளீஸ். நாராயணன் பொன்னிற சிவப்பு ஒளியாக இருந்தால் எனக்கு ஓகே தான் :)

//நல்லது!
சிவஸ்ச ஹிருதயம் விஷ்ணோர்
விஷ்ணூச ஹிருதயம் சிவம் என்றும் சொல்லுவார்கள்!
பெயர் கடந்து இருப்பவன் பெயர் உள்ளவர்களோடும் பழக வேண்டி இருப்பதால் தான் இவ்வளவு களேபரமும்! :)//

நீங்களும் பெயரை பிடித்து கொண்டு தானே முழுமுதற்கடவுள் என்றால் அது நாரயணன் என்றே சொல்ல முயல்கிறீர்கள்.

முன்பே கூட கேட்டு இருந்தேன், நாராயணனின் தொப்புளில் தோன்றியதாகச் சொல்லப்படும் பிரம்மன் தன் நெற்றியில் சிவச் சின்னமான திருநீறு அணிந்திருப்பது ஏன் ? சிவலிங்கத்திற்க்கு முன்னால் இருக்கும் நந்திக்கு பிரம்ம நந்தி என்ற பெயர் வந்திருப்பது ஏன் ?

சிவ ராமன்
சிவ சங்கரன்
சிவ கிருஷ்ணா
சிவ ப்ரம்மா
சிவ சரஸ்வதி (சிவ தனுஜாவாம் - நன்றி குமரன்) என்றெல்லாம்
சிவனின் நாமத்துடன் சேர்த்து சொல்வதேன்.

சிவனும் சங்கரனும் வேறு வேறு என்பது தெரியுமா ? வார்சடையும், கங்கையை தலையில் அணிந்து, பாம்பை கழுத்தில் அணிந்திருப்பவர் சிவனல்ல, சங்கரனே.

சிவம் என்பதே பேரொளி, பால் அற்றது, அது லிங்க வடிவமாக வணங்கப்படுகிறது, அதற்கு பார்வதி என்கிற மனைவி இருக்க முடியுமா ?

மூவரும் (மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்னு, சங்கரன்) காணாச் சிவப்பெருமான் என்று சொல்லி இருப்பதெல்லாம் பொய்யா ?

எல்லாவற்றையும் விடுங்க சங்கரனும் சிவனும் ஒன்றென்றால் தவக்கோல சங்கரன் சிவலிங்கத்திற்கு, அதாவது தனக்குத் தானே பூஜை செய்வதாக காட்டுவார்களா ? உண்மையில் அப்படித்தானே இருக்கிறது. கிருஷ்ணன் தனக்குதானே பூஜை செய்யும் படங்கள் உண்டா ? பிரம்மனும் அப்படி செய்து கொள்வது கிடையாது ? சிவன் மட்டுமே அப்படி செய்வாரா ? சிவ உருவமாக காட்டப்படுவதெல்லாம் அழிக்கும் கடவுளான சங்கரனே, சிவன் மும்மூர்த்திகளில் முதல் மூர்த்தி அல்ல, அவர்கள் மூவருக்குமே தலைவனாக இருப்பவன்.

மூவரும் சமம் என்றால் மும்மூர்த்திகளில் முதல் மூர்த்தி என்ற போட்டியே வந்திருக்காது, போட்டிக்கு இடமே இல்லை. அது தவறான கருத்தும் கூட. மூவருக்கும் தலைவன் எவன் என்ற கேள்வியே சரியானது.

*****

நாராயணா நாராயணா !
:)

Anonymous said...

\\இது மாபெரும் ஜல்லி, அந்தணன் என்பது வகுப்பல்ல, அது ஒரு தகுதி பெயர் மட்டுமே படித்தவர்கள், குருமார்கள் அனைவருக்கும் அந்த பெயர் சிறப்பு பெயராக தமிழர்களுக்குள் கொடுக்கப்படுவதுண்டு, இதற்கு பலரும் விளக்கம் கொடுத்தாலும் அதுபற்றி சிறிதும் புரிந்துணர்வு இன்றி அதை 'இந்து' சொல்வதாக குறிப்பிடுவதும் தவறு. அது தமிழ் சொல்தான். தமிழ் என்றால் இந்து என்ற பொருள் இல்லை.//


பின்னூட்டத்தைச் சற்றே நன்கு படியுங்கள். மிகத்தெளிவாகச் சொல்லி இருக்கிறேன். சொல்லை மட்டும் கொள்க பொருள் வேண்டாம் என்று.பின்னூட்டத்தை சரியாகப் படிக்கமால், உணர்ச்சி வயப்பட்டுப் படிக்க வேண்டாம். அதை ஜல்லி என்று தூற்றவும் வேண்டாம். அந்தணன் என்ற சொல் கையளப்பட்டதைத் தான் யாம் பகர்ந்தோமே தவிர, அச் சொல்லின் அர்த்தத்திற்கு உள்ளே போகவில்லை. முடிந்தால் ஒரு முறை விளக்கெண்ணையைக் கண்ணில் ஊற்றிக்கொண்டு நன்றாக மறுபடியும் படிக்கவும்.

(இந்த வார்த்தைக்குக் கோபம் கொள்ள வேண்டாம். நன்கு ஆழ்ந்து படிக்கவும் என்று சொல்வதை-ஆங்கிலத்தில் read between the lines என்று சொல்வார்கள்.புறிந்து படித்தல் அல்லது ஆழ்ந்து கவனமாகப் படியுங்கள் என்று சொல்லும்பொது இவ்வாறு கூறுவர். நான் இங்கு எந்த அந்தணருக்கும் வக்காலத்து வாங வரவில்லை.

நான் அந்தணருக்கு இந்து என்று அர்த்தம் கூறவில்லை. இந்து மதத்தில் கையாளப்படும் சொல் என்று கூறினேன்.அந்தணன் என்பது வெறும் தகுதிச் சொல்லாக இங்கு கூறவில்லை.


மீண்டும் வேறு விளக்கம் கூட , இங்கு தருகிறேன். அந்தணன் எனும் சொல்லுக்கு பார்ப்பணன் என்னும் அர்த்தம் தரவில்லை.மற்றெவ்வுயிர்க்கும் செந்தன்மை பூண்டொழுகும் யாவரும் அந்தணரே என்பது வள்ளுவப்பெருந்தகையின் கருத்து.

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்று சொல்வார்கள்.ஜல்லி அடித்தே பழகிய உங்களைப் போன்றவர்களுக்கு யார் என்ன எழுதினாலும் அது ஜல்லியாகத்தான் தெரியும்.

முடிந்தால் உங்கள் செய்திகளுக்கு ஆதாரம் கொடுங்கள். செய்தி தவறு என்று நினைத்தால் மறுப்புக் குடுங்கள். தனிப்பட்ட முறையில் சேற்றை வாரி இறைக்க வேண்டாம்.

அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தக்கல்லால் பிறவாழி நீத்தல் அறிது. இதில் வரும் அந்தணன் என்னும் சொல், வெறும் தகுதிச்சொல்லாக இருப்பின் அது எப்படி பிறவாழியை நீக்கும்?

மறுபிறவி, பிறவி என்னும் கடல் , ஸம்ஸார ஸாகரம் என்பன இந்து மதத்தில் ஆழமாகக் கையாளப்பட்டுள்ளன.

அறவாழி அந்தணன் என்னும் சொல், வெறும் தகுதிச் சொல்லாக இருப்பின் , எதற்கு ஐயா, அது கடவுள் வாழ்த்து என்னும் பகுதியில் வரவேண்டும்? படித்தவர்கள், குருமார்களுக்கு மட்டும் தான் அந்தணன் என்னும் பொருள் கொண்டால், அத்தகையோர் எப்படி ஐய்யா பிறவி என்னும் பெருங்கடலை நீக்குவர்?


http://tamilnation.org/literature/kural/mp153.htm
இதில் கொடுக்கப்பட்டுள்ள மொழி மாற்றத்தை தயவு செய்து நன்கு படிக்கவும். அந்தணன் தகுதிச் சொல் அல்ல. கடவுளுக்கு த்தான் அந்த பெயர் என்பது விளங்கும். இந்து மதம் தான் பல பிறவிகளை நம்புகிறது. இங்கு பிறவாழி என்பது பல பிறவிகளைக் குறிக்கிறது.


Rev Dr G U Pope, Rev W H Drew, Rev John Lazarus மற்றும் Mr F W Ellis ஆகியோர் ஆக்கிய மொழி பெயர்ப்புகளும் அறவாழி அந்தணனை கடவுள் என்று சொல்லும்பொது , உமக்கு மட்டும் எங்கே இருந்து வந்தது தகுதிச் சொல்?

அந்தணன் என்பதை வேறு இடங்களில் வேறு விதமாகக் கையாண்டிருந்தாலும், இங்கு வள்ளூவர், எப்படிக் கையாள்கிறார் என்பதே முக்கியம்.

நீங்கள் , கருத்துக்கு முக்கியம் தருவதை விட, ஜல்லி அடிப்பதற்கும் , இன்ன பிற திசை திருப்பும் முயற்சிக்கும் தான் உங்களது பின்னூட்டத்தை பதிவு செய்துள்ளீர்கள்.

இப்படியே போனால், சுப்ரபாதம் என்னும் மேன்மையான் செய்தி, திசை திருப்பப்படும். ஆகையால், இது விஷயமாக, உங்களிடம் இருந்து இனிமேல் வரும் ஜல்லிகளுக்கு, பதில் கூறுவது, பதிவின் நோக்கத்தை , திசை திருப்பி விடும்.

நல்ல கருத்து இருந்தால், பதில் கருத்து சொல்லப்படும். அல்லது பதில் சொல்ல இயலாது.

Anonymous said...
This comment has been removed by the author.
Kannabiran, Ravi Shankar (KRS) said...

//paravasthu said...
கம்பர் இக்குணங்களைச் சொல்வது போல, நிகமாந்த மகா தேசிகர், ரகு வீர கத்யம்//

பதிவை எழுதும் போது நினைச்சிக்கிட்டே இருந்தேன், ரகு வீர கத்யத்தைச் சொல்லணும்னு! நீண்டுகிட்டே போயிருமே-ன்னு சொல்லாம விட்டேன்! இப்போ நீங்க சொல்லிக் கரை சேர்த்துட்டீங்க! :)

//அயோத்யா காண்டத்தில்-சௌஸீல்ய சாகரன்
கிஷ்கிந்தா காண்டத்தில்-ஸ்வாதந்த்ர்யன்
ஸுந்தர காண்டத்தில்-ஸர்வ ஸ்வதானன்,
யுத்த காண்டத்தில்-ஸத்ய வ்ரதன்//

அருமை! இதுகெல்லாம் தமிழாக்கமும் கொடுங்கண்ணா! எல்லாரும் ரசிப்போமே!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//paravasthu said...
ஆங்கிலத்தில் "elimination process" "filtering process" என்று கூறுவர்//

ஹா ஹா ஹா
நல்லா இருக்கு உங்க எலிமினேஷன்! ஆனா பலரும் சண்டைக்கு வருவாங்க! வள்ளுவம் பெருஞ்சொத்து! சொத்துப் பிரச்சனை கண்டிப்பா வரும்! :))

//வள்ளுவர் உருவ வழிபாட்டின் மீது நம்பிக்கை உள்ளவர்.அதனால் தான் , தாளை வணங்க அறிவுறுத்துகிறார்//

:)
அடி என்பதற்கு பற்றுதல், பற்றுக்கோடு என்ற பொருளும் இருக்கு! அதையும் பார்த்தீங்களாண்ணா?

//மேல் உலக வாழ்வு பற்றி “அருள் இலார்க்கு அவ்வுலகமில்லை”என்று தெளிவாகச் சொல்வதால், மேல் உலகம் , மருபிறவி போன்றவற்றில் நம்பிக்கை இல்லாத அவ்வழிபாட்டு முறைகளை வள்ளுவம் ஒரு போதும் ஏற்கவில்லை//

:)
இதற்கு எதிர் கருத்து/தரவு யாரிடமாச்சும் இருக்கா?
"அவ்வுலகம்" என்பது சமணம்/பெளத்தத்தில் இல்லை!

//வள்ளுவர் அறவாழி அந்தணன் எனும் பதத்தை கையாள்கிறார்.மற்றும் அந்தணன் என்போன் அறவோன் என்ற சொல்லிலும் அவர் இந்து மதத்தை வெளிப்படையாக தெளிவாகக் கூறுகிறார்(யாம் இங்கு சொல் பற்றி மட்டும் குறீப்பிடுகிறோம்-பொருள் பற்றி அல்ல)//

பரவஸ்து அந்தணர்=பிராமணர் என்று சொல்ல வரவில்லை! அந்தச் சொல் இந்து மதச் சொல்லாக இருக்கலாம் என்பது தான் அவர் துணிபு!ஆனால்...

அந்தணர் என்ற சொல் அண்ணல் என்ற பொருளில் தான் பண்டைத் தமிழ் இலக்கியத்தில் புழங்கியது! அது இந்து மதத்தைக் காட்ட வந்த சொல் என்று உறுதியாகச் சொல்ல முடியாது!
சமணர்களும் அவர்கள் பெரியோரை அந்தணர் என்று சொல்லி உள்ளனர்!

திருநூற்றந்தாதி என்னும் சமண நூல், அவிரோதி நாதர் எழுதியது! இவர் வைணவராய் இருந்து பின்னர் சமணராய் மாறினர் என்றும் கூறுவர்!
அதில்
மீண்டு கொண்டேகும் அவ் வெவ்வினைக்கு அஞ்சி நின் மெய்ச்சரணம்
ஆண்டு கொண்டாய் அறவாழி கொண் டே வென்ற **அந்தணனே**
என்று பாடுவார்!

அளிசேர் அறவாழி அண்ணல் என்று சீவக சிந்தாமணியும் பேசுகிறது!
ஆக அந்தணர் தமிழ்ச் சொல்லே! சமயச் சொல் அல்ல!

அந்தணர் என்போர் அறவோர் என்று பின்வரும் குறளிலும் அதைக் காட்டி விடுகிறார்!

//மேலும் வள்ளுவம் , தொல்காப்பிய இலக்கணத்தை அடி ஒட்டியது. தொல்காப்பியர், தமிழ்முனி அகத்தியர் ஆகியோர் இந்துக் கடவுள்களின் நெறி கொண்டோர்//

தொல்காப்பியர் இலக்கணத்தைப் பின்பற்றியது மொழிக்கு மட்டுமே! அவர் இலக்கணத்தைப் பின்பற்றினால் அவர் சமயத்தையும் பின்பற்ற வேண்டும் என்பது சரிவராது!
(தொல்காப்பியர் இந்து சமயம் தானா என்பது தனிக்கதை)

//சிலர், திருக்குறளை , கிரித்தவ மதத்திற்கு, கோள் கொள்வர். வள்ளுவருக்குப் பின்னர் தான் கிரித்து பிறந்தார். எனெவே, கிரித்தவர்களுக்காக வள்ளுவம் வந்தது என்று கூறமுடியாது//

இது ஓக்கே!

//மேலும், கொழுநரைத் தொழுது எழும் மனைவி, பின் தூங்கி முன் எழும் மனைவி என்று இந்து மதத்தோர் பின்பற்றிய முறை பற்றி தெளிவாகச் சொல்லி இருக்கிறார்//

நோ கமெண்ட்ஸ்!
வள்ளுவர் இப்படிப் பெண்களைப் பாடி இருக்கவே கூடாது என்று என் தனிப்பட்ட கருத்தைச் சொல்லிடப் போறேன்! வேணாம்! :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//எட்டுமெட்டுமெட்டுமாய் ஒரேழுமேழுமேழுமாய்
எட்டுமூன்றுமொன்றுமாகி நின்றஅதிதேவனே//

அருமை அருமை!
சமணராய், புத்தராய், சைவராய்-சிவாவாக்கியராய், பின்னர் மழிசைப் பிரானாய் ஆன இவர் கதையை எழுதணுமே!

//எண்குணத்தானின் எட்டெழுத்து நாமம் சொன்னால்//

இங்கு பேசுவது எண் குணம் மட்டுமே! அதனால் எட்டெழுத்து இங்கே வேண்டாமே, ப்ளீஸ்!

//ஆங்கிலத்தில் “one stop shop" என்று கூறுவர். அப்படி , எந்த விள்க்கம் வெண்டுமானாலும் தேசிகரிடம் இருந்து பெறலாமே//

பெறுவோம்! பெறுவோம்! :)

//எட்டு மா குணம் எட்டு எட்டு எனுங் கலை//

அருமையான எடுத்துக்காட்டு!

//அறவாழி அந்தணன் எனும் சொல்லே வாமன அவதாரத்தைக் குறிக்கும் சொல்லாகக் கருதலாம்//

இல்லீங்கண்ணா!
இது அனுமானம் தான்! பிரமாணங்கள் ஏதும் இல்லை!

மேலும்
அற+ஆழி=அறக் கடல்
அற+ஆழி=அறச் சக்கரம்
என்று கொள்வாரும் உண்டு!

//இங்கு அடி என்பது இறைவனின் பாதத்தைக் குறீக்கும் சொல்லாகக் கொள்க//

இதில் மாற்றுக் கருத்தே இல்லை!
இறைவனின் திருவடிகள்/திருவடிப் பற்றைத் தான் வள்ளுவர் வரிக்கு வரி கடவுள் வாழ்த்தில் சொல்கிறார்!


திருவடி வணக்கம் வெளிப்படையாக உள்ளது வைணவம்! எல்லா வைணவப் பூசைகளிலும் திருவடி உண்டு! இவ்வளவு திருவடி முக்கியத்துவம், பாடல்களில் மட்டுமல்லாது, தினப்படி சடங்குகளிலும் உண்டு! சடாரி என்னும் திருவடி நிலைக்கு ஏற்றம் அதிகம்!
வேறு சமயங்களிலும் (புத்த சமயம்) திருவடி வணக்கம் உண்டென்றாலும், இந்த அளவுக்கு இல்லை!

குறட்பாக்களில் வரிக்கு வரி வரும் திருவடிகளைப் பொருத்தி வேண்டுமானால் பார்க்கலாம்! அவ்வளவு தான்!

வள்ளுவர் காலத்தில் வைணவம் இருந்திருக்கு! இந்தத் திருவடி வணக்கம் அவர் கருத்தைக் கவர்ந்திருக்கு என்று வேண்டுமானால் ஊகிக்கலாமே தவிர, வள்ளுவர் வைணவர் தான் என்றெல்லாம் அறுதி இட முடியாது!

வள்ளுவரும் செய்ய வந்ததும் சமய நூல் அல்ல!
அது சமயம் கடந்த நூல்!அதனால் அதை வைத்து அவர் சமயம் எது என்று நிலைநிறுத்தவும் முடியாது! நிலைநிறுத்தத் தேவையும் இல்லை!


அவர் வேறு ஒரு சமய நூலைச் செய்து, அதில் திருவடியைச் சொல்லி இருந்தால், அப்போ விஷயம் வேறு! அப்போது திருவடி மட்டுமல்லாது, இன்னும் பல குறிப்புகளை அவரே கொடுத்திருப்பார்! அப்போது நாம் பகுத்தறிந்து உணரலாம்!

ஆனால் இது அப்படி அல்லவே!
உலகப் பொது மறை, உலகப் பொது மறையாகவே இருக்கட்டும்!
அவரவர் தத்துவங்களை அவரவர் பொருத்தி வேண்டுமானால் பார்த்துக் கொள்ளட்டும்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@பரவஸ்து, கோவி அண்ணா

கோவியண்ணே
பரவஸ்து, வலையுலகத்துக்கு சற்றே புதியவர்! இந்த ஜல்லி, கில்லி போன்ற செந்தமிழ்ச் சொல்லாடல்கள் எல்லாம் அவ்ளோ பழக்கம் இல்லைன்னு நினைக்கிறேன்! :)
ஸோ, வேண்டாமே!

அவர் தற்காலப் பார்ப்பன சாதிச் சொல்லாய் அந்தணரைச் சொல்ல வரலை! அவரே சொல்லிட்டாரே! அவர் அந்தணர் என்பதை இந்துச் சொல் என்ற பார்வையில் தான் சொன்னார்! அம்புட்டு தான்!

பரவஸ்து:
கோவி மேலே பொங்கிறாதீங்க! பாவம் விட்டுருங்க! அண்ணாச்சி கருத்துப் புலி! கருத்துச் சிங்கம்! எப்ப எந்தக் கருத்தைச் சொல்லி எந்தக் கருத்துக்குத் தாவுவாரு-ன்னு அவருக்கே தெரியாது! :))

அந்தணர் என்பது சமணச் சொல்லும் கூட என்று இலக்கியக் குறிப்பு காட்டி இருக்கேன்! பாத்தீங்களா?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கோவி.கண்ணன் said...
ஒரு தத்துவத்தை ஏன் உருவம் உள்ளது உருவமற்றது என்று தெளிவில்லாது சொல்ல வேண்டும் ?//

அதை அத்வைதம் சொன்னவரு கிட்ட போயி கேளுங்க!
அடியேன் அந்த சங்கரன் அல்ல! நான் "வெறும்" சங்கரன்! :)

//தத்துவக் குழப்பத்தில் எழுதிய உளரல்கள், அதை இங்கே நீங்களும் எடுத்துச் சொல்கிறீர்கள்//

Dont make such sweeping statements!
SK told that we are all kuzhappavaathis!
You are following the same approach!
Then watz the big difference?

அத்வைத தத்துவ உளறல் என்பதெல்லாம் டூ மச்!
தத்துவம் குழப்பமாத் தான் இருக்கும்! அதான் தத்துவம்!
உடனே உளறல்-ன்னா எப்படி? நீங்க பேசறது (பேத்தறது) கூடத் தான் குழப்பமா இருக்கு சில நேரங்களில்! உடனே கோவியின் உளறல்கள்-ன்னா கவிதைக் தொகுப்பு போடறோம்? :))

//அனைத்துமான அத்வைதம் என்று பேசினீர்கள் என்றால் அங்கு பெயருக்குள் ஒடுங்கிய நாமம் உள்ள நாரயணனுக்கு என்ன வேலை ?//

அத்வைதம் என்ன சொல்கிறது என்று மட்டுமே சொல்ல வந்தேன்!
அது சரி/தவறு-ன்னு சொல்ல வரலை!
அத்வைதம்=உருவ வழிபாடு கிடையாது என்ற உங்கள் Sweeping Statement தவறு என்பதை மட்டுமே சுட்டிக் காட்டினேன்!

//மதங்கள் அனைத்துமே இறைவனை ஒளிவடிவாகவே சொல்கின்றன//

இப்போ நீங்க தான் ஜல்லி அடிக்கறீங்க!
நான் ஒளி வடிவம் இல்லை-ன்னு சொன்னேனா?
த்வைதம்=ஒளி வடிவம்-ன்னு நீங்க சொன்னது தவறு-ன்னு மட்டும் தான் சொன்னேன்!

உங்கள் ஒளி வடிவக் கருத்தைச் சொல்லுங்க! வேணாங்கலை!
ஆனா அது த்வைதம் சொல்லுது-ன்னு அடிச்சி விடாதீங்க-ன்னு மட்டும் தான் சொல்லுறேன்!
Plz understand that coz you are doing this same mistake in every discussion!
If u wanna talk abt oLi vadivam, plz do talk and compare in all religions. But dont assume and tell Dwaitham=oLi vadivam!

//ஆதி என்ற பொருள் ஆரம்பம் என்ற பொருளில் வந்தால் ஆதி அந்தம் இல்லாதவன் என்ற கூற்றும் மறுப்பாகிவிடுகிறதே//

இப்போ புரியுதா உங்க தப்பு?
ஆதி அந்தம் இல்லாதவன் என்ற கூற்றும் மறுப்பாகி விடக் கூடாதே-ன்னு நீங்களா இப்படிப் பொருள் கட்டுறீங்க!

அது மிகவும் தவறு-ண்ணா! ஒவ்வொரு தமிழ்ச் சொல்லுக்கும் பொருள் இருக்கு! அந்தச் சொல்லும் பொருளுமாய் இயைந்த கருத்தோடு சொல்லுங்க! அப்ப ஓக்கே!

ஆதி-பகவன் என்பதற்கு வேறு பொருள்! அதற்குப் பகவன் என்றால் என்ன என்றும் பார்க்க வேண்டும்! போய்ப் பாருங்கள்!

//இறைவனுக்கு ஏது ஐம்புலன் ?//

நானும் இறைவனுக்கு ஐம்புலன் இருக்குன்னு சொல்லலையே! கட+உள், கடந்தவனுக்குப் புலன் ஏது? இது கூடத் தெரியாதா மக்கு-ன்னு முடிவே கட்டிட்டீங்களா?

//அவிப்பான் அவித்தான் அவிக்கின்றான் - முக்காலம்//

அடச்சே! தமிழ் வகுப்பு எடுக்க வைக்கறீங்களே!
அவித்தான், அவிப்பித்தான்
தானே அவித்தல், இன்னொருவருக்கு அவிப்பித்தல்!

சரி, கோவி இஷ்டைல்லயே சொல்லுறேன்! தமிழ் வேணாம்!
பொறி வாயில் ஐந்து "அவித்தான்" என்கிறார்! அவித்தான் = இறந்த காலம்! அப்படின்னா இறைவன் என்ன முன்னாடி அவித்தான்! அத்தோட சரியா? இனிமே அவிக்க மாட்டானா?

//சிவ என்னும் பெயர்ச் சொல் ஒளியையே குறிக்கும்//

(பெயர்ச்)சொல் அளவில், சிவ=ஒளி என்பதற்கு அகராதி காட்டுங்க!

//நீங்களும் பெயரை பிடித்து கொண்டு தானே முழுமுதற்கடவுள் என்றால் அது நாரயணன் என்றே சொல்ல முயல்கிறீர்கள்//

ஹா ஹா ஹா!
எனக்கு முழு முதற் கடவுள் பிசினசும் இல்லை! நான் பெயரைப் பிடிச்சிக்கவும் இல்லை! சிவன் இதயத்தில் விஷ்ணு! விஷ்ணு இதயத்தில் சிவன்-ன்னு வரும் சுலோகத்தை உங்களுக்குக் காட்டினேன்!

நாராயணன்=பரப்பிரும்மம் என்பதை அத்வைத/விசிஷ்டாத்வைத/த்வைத சித்தாந்தங்கள் எல்லாம் கூறுகின்றன என்ற ஒரு Data or Fact-ஐ தான் முன் வைத்தேன்!

எங்க சாமி/ஆசாமி தான் முழுமுதல், அவன் முழு செகண்ட், இவன் பாதிமுதல்-ன்னு எல்லாம் சொல்லலை! :)
எங்கே நாராயணன் என்ற பெயர்ச் சொல்லை மட்டும் பிடிச்சிக்கிட்டு, ஒடனே நாமம் போட்டு, சங்கு சக்கரம் எல்லாம் வரைஞ்சி, கோஷ்டியில் கடவுளையே சேர்த்துடப் போறாங்களோ-ன்னு பயத்தில் தான்...

இந்த மூன்று தத்துவங்களும் சொல்லும் நாராயணன், வைணவர்களுக்கு மட்டுமே உரிய நாராயணன் அல்ல! அப்படின்னும் சொல்லிட்டேன்! ஸோ, நான் எதையும் பிடிச்சித் தொங்கிக்கிட்டு இல்ல சாமியோவ்!

//பிரம்மன் தன் நெற்றியில் சிவச் சின்னமான திருநீறு அணிந்திருப்பது ஏன்? //

பிரம்மன் எந்த போட்டோக் கடையில் போட்டோ எடுத்து உங்களுக்குக் காட்டினாரு? :)
பிரம்மனுக்கு நாமம் போடும் கோயிலும் உண்டு!
பெருமாளுக்கு நாமமே போடாத கோயிலும் உண்டு!

இந்த மாதிரி வாதங்களை எல்லாம் உங்களைத் தவிர வேறு யாராலயும் வைக்க முடியாது! :)

//சிவனும் சங்கரனும் வேறு வேறு என்பது தெரியுமா ?//

சிவம் என்பதும் சிவன் என்பதும் கூட வேறு வேறு தெரியுமா?
நாராயண என்பதும் விஷ்ணு என்பதும் கூட வேறு வேறு தெரியுமா?

//சிவம் என்பதே பேரொளி, பால் அற்றது, அது லிங்க வடிவமாக வணங்கப்படுகிறது, அதற்கு பார்வதி என்கிற மனைவி இருக்க முடியுமா ?//

சமீப காலமா "சிவம்" என்பதைப் புரிஞ்சோ புரியாமலோ பிடிச்சிக்கிட்டீங்க போல!
ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே! :))

//மூவரும் (மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்னு, சங்கரன்) காணாச் சிவப்பெருமான் என்று சொல்லி இருப்பதெல்லாம் பொய்யா ?//

மூவரும் காணா நாரணா என்று சொல்லி இருப்பதெல்லாம் பொய்யா ? :))

//தவக்கோல சங்கரன் சிவலிங்கத்திற்கு, அதாவது தனக்குத் தானே பூஜை செய்வதாக காட்டுவார்களா ?//

பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், சங்கரன் எல்லாம் கட்டிற் கால்களாய் இருக்க, ஆதி சிவம் படுத்திருக்க, சிவத்தின் மீது சக்தி ஏறி உட்கார்ந்து இருப்பது போல் எல்லாம் காட்டுவார்களா? உண்மையில் அப்படித்தானே இருக்கிறது? :))

//கிருஷ்ணன் தனக்குத் தானே பூஜை செய்யும் படங்கள் உண்டா ?//

கிருஷ்ணன் நாரணனுக்குப் பூசை செய்ததைக் காட்டட்டுமா?
இராமன் நாரணனுக்குப் பூசை செய்ததைக் காட்டட்டுமா?
இன்ன பிற அவதாரங்கள், விஷ்ணு, வாசுதேவன், ருத்திரன், சங்கரன் எல்லாம் நாரணனுக்குப் பூசை செய்ததைக் காட்டட்டுமா? :))

எல்லாத்துக்கும் மேலா "உங்கள்" உருவமற்ற பேரொளி செய்த வழிபாட்டு நிலை....
சரி வேணாம்...
சமீப காலமா புரிஞ்சோ புரியாமலோ நீங்க புடிச்சிக்கிட்டதை முழுக்கப் படிச்சிட்டு வாங்க! :)

//*****
நாராயணா நாராயணா !
:)//

அடச்சே! இதை மொதல்லயே சொல்லி இருக்கக் கூடாது! இவ்ளோ நேரம் டைப்படிக்க வச்சிட்டீங்களே! ஹா ஹா ஹா! :))

ஈஸ்வரனின் மனதில்: புருவ மத்தியில்!
ஈஸ்வரா! ஈஸ்வரா!

கோவி.கண்ணன் said...

//Dont make such sweeping statements!
SK told that we are all kuzhappavaathis!
You are following the same approach!
Then watz the big difference?//

அது புரியுது, நீங்கள் உளறுவதாகச் சொல்லவில்லை. உளறல்களை உளறல் என்று அறியாமல் அவற்றை இங்கு எடுத்துச் சொல்கிறீர்கள் என்று மட்டுமே சொன்னேன். சங்கரர் உளறினார் என்று சொல்லுவதற்கு ஆட்சேபம் தெரிவிக்க மாட்டீர்கள் என்றே நினைக்கிறேன். மெய்ப்பொருள் காண்பது மட்டும் அறிவா ? படிக்கும் போது சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதும் அறிவு தானே.

கோவி.கண்ணன் said...

//அடச்சே! இதை மொதல்லயே சொல்லி இருக்கக் கூடாது! இவ்ளோ நேரம் டைப்படிக்க வச்சிட்டீங்களே! ஹா ஹா ஹா! :))//

சிவன், சிவம் என்றே பேசுவதால் நான் எதோ சைவ சமயத்திற்கு தாங்குவதாக நினைக்க வேண்டாம். சேக்கிழார் போன்ற ஆன்மிகத் தீவிரவாதிகளை எப்போதும் விமர்சித்தே வருகிறேன். 64 நாயன்மார்களுக்கு காட்சி கொடுத்த பிறகு சிவன் அதன் பிறகு எங்கே காணாமல் போனார் என்று சைவ அன்பர்களைப் பார்த்து கேட்க ஆவல் தான். சிவனுக்கு பெருமை சேர்ப்பதாக கட்டுக்கதைகளைக் கூறி பார்பனிய சிந்தாந்தங்களுக்கு பசுமரத்து ஆணியாக்கி வைக்கப்பட்டது தான் திருவிளையாடல் மற்றும் சிவ புராண கதைகள். முதன் முதலில் பார்பனர்களுக்கு அடிவருட தொடங்கியவரே சேக்கிழார் என்பதே தமிழ்சமய ஆராய்ச்சியாளர்களின் துணிபு.

பரமாத்மா என்றால் அது சிவன் தான் என்று நான் அறிந்த வரையில் சொல்லவது போலவே நீங்கள் நாராயணனைச் சொல்கிறீர்கள். மற்ற படி நான் சிவம், சிவன் என்று சொல்வதால் சைவத்திற்கு தாங்குகிறேன் என்றெல்லாம் எண்ண வேண்டாம். நீங்களும் 'நாரயணன்' என்ற பெயரைச் சொல்வதால் வைணவ ஆதரவு நிலை கொண்டவர் என்று நானும் கருதவில்லை.

கோவி.கண்ணன் said...

//நான் அந்தணருக்கு இந்து என்று அர்த்தம் கூறவில்லை. இந்து மதத்தில் கையாளப்படும் சொல் என்று கூறினேன்.அந்தணன் என்பது வெறும் தகுதிச் சொல்லாக இங்கு கூறவில்லை.//

இந்து மதத்தில் என்றால் இந்துவில் எந்த மதத்தில் திருவள்ளுவர் காலத்தில் இந்து என்ற சொல்லே இல்லை, சைவமா ? வைணவமா ? அப்படி இருபிரிவுகள் திருவள்ளுவர் காலத்தில் இருந்ததே இல்லை.

//இதற்கு எதிர் கருத்து/தரவு யாரிடமாச்சும் இருக்கா?
"அவ்வுலகம்" என்பது சமணம்/பெளத்தத்தில் இல்லை!//

கே.ஆர்.எஸ்,

யார் அப்படிச் சொன்னது ? புத்த ஜாதக கதைகளில் இந்திரன் கிளியாக வந்தான் என்ற கதையெல்லாம் உண்டு. புத்த மததில் பரிநிர்வாண நிலை என்று ஒன்று உண்டு, அதாவது முக்தி, அதைச் சொர்கம் என்பார்கள் அவர்கள், அவ்வுலகம் என்பதை ஏன் அதற்கு பொருத்த முடியாது ? அவ்வுலகு என்பதன் பொருள் (மற்றொரு) பெளதீக உலகா ? இந்திரன் வசிப்பதாகச் சொல்லப்படும் இடமா ?

புத்த மதத்தினர் குறிப்பாக சீனர்கள் மேலு உலகில் வசிக்கும் தங்கள் முன்னோர்களுக்கு அனுப்ப பொருள்களை தீயில் இட்டு எரிக்கும் பழக்கம் இருக்கிறது. சுவர்க்கம் இருப்பதை புத்தமதத்தினரும் நம்புகிறார்கள். புத்த மதத்தில் அன்னை கூட உண்டு. முக்தி கோட்பாரு சமணத்திலும் உண்டு, அதையே சொர்க்கம் என்று அவர்களும் சொல்லுவார்கள்.

புத்தமத்தில் இருபிரிவுகள் உண்டு மகாயாண புத்த மதத்தில் சொர்க்கம் உண்டு, அவை அசோகர் காலத்திற்கு முன்பே ஏற்பட்டவை, அதாவது திருவள்ளுவர் காலத்திற்கும் முன்பே

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//தத்துவக் குழப்பத்தில் எழுதிய உளரல்கள், அதை இங்கே நீங்களும் எடுத்துச் சொல்கிறீர்கள்//

//Dont make such sweeping statements!//

//அது புரியுது, நீங்கள் உளறுவதாகச் சொல்லவில்லை//

அடக் கடவுளே!
என்னை ஏதாச்சும் சொல்லுங்க! நோப் பிராப்ளம்! நான் என்ன உளறாதவனா? தூக்கத்துலயாச்சும் பாவனா பாவனா-ன்னு உளறுவேன்-ல? :)

நான் சொல்ல வந்தது, சங்கரர் போன்ற தத்துவ ஞானிகளை, இப்படிச் சொல்லாடாதீங்க-ன்னு தான்!
அவர் கருத்தை வேறு மாதிரி மறுத்துரைக்கலாம்! இப்படி வேண்டாமே! :(

வேறு யாராவது பெரியாரின் உளறல்கள், ஜீவானந்தத்தின் உளறல்கள், பேரறிஞர் அண்ணாவின் உளறல்கள், நேதாஜியின் உளறல்கள்-ன்னு சொன்னா நமக்கு எப்படி இருக்குமோ, அதே தான்!
Blabber is an unparliamentary word in the assembly of thinkers! Confused is not! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நான் சிவம், சிவன் என்று சொல்வதால் சைவத்திற்கு தாங்குகிறேன் என்றெல்லாம் எண்ண வேண்டாம். நீங்களும் 'நாரயணன்' என்ற பெயரைச் சொல்வதால் வைணவ ஆதரவு நிலை கொண்டவர் என்று நானும் கருதவில்லை//

சரியான புரிதலுக்கு நன்றி-ண்ணா!

சேக்கிழாரை விட்டுருவோம்! பதிவுக்கு வருவோம்

உலகப் பொது மறை திருக்குறள் மற்றும் வைணவம் பற்றிய அடியேன் கருத்துக்கள் சரியான புரிதலா?
குறளுக்கோ வைணவத்துக்கோ அதனால் பாதகம் இல்லையே?

கோவி.கண்ணன் said...

//வேறு யாராவது பெரியாரின் உளறல்கள், ஜீவானந்தத்தின் உளறல்கள், பேரறிஞர் அண்ணாவின் உளறல்கள், நேதாஜியின் உளறல்கள்-ன்னு சொன்னா நமக்கு எப்படி இருக்குமோ, அதே தான்!
Blabber is an unparliamentary word in the assembly of thinkers! Confused is not! :)//

இன்னும் மோசமாகக் கூடத்தான் சொல்கிறார்கள், இல்லை என்று உங்களால் மறுக்க முடியுமா ?

புத்தர் உளறினார் என்று சங்கரர் சொல்லி இருக்க மாட்டாரா ? சமணர்கள் உளறுகிறார்கள் என்று ஞானசம்பந்தன் சொல்லாமல் இருந்திருப்பானா ? அவர்களெல்லாம் சொல்லும் போது நான் சங்கரன் உளறினார் என்று சொல்வதில் தவறு என்ன ?

Anonymous said...

\\இந்து மதத்தில் என்றால் இந்துவில் எந்த மதத்தில் திருவள்ளுவர் காலத்தில் இந்து என்ற சொல்லே இல்லை. சைவமா ? வைணவமா ? அப்படி இருபிரிவுகள் திருவள்ளுவர் காலத்தில் இருந்ததே இல்லை.//

வேறு பிரிவுகள் வந்ததால், நமது நம்பிக்கையை அழைக்க இந்து என்ற பெயர் வந்தது. மற்ற பிரிவுகளின் தன்மையில் இருந்து பிரித்துக்காட்ட , இந்த சொல் வந்தது என ஆய்வர்கள் கூறுகின்றனர்.

திருவள்ளுவர் காலம் என்று அல்ல.அதற்கு முற்பட்டே சைவ வைணவப்பிரிவு உண்டு.

\\கோவி மேலே பொங்கிறாதீங்க! பாவம் விட்டுருங்க! அண்ணாச்சி கருத்துப் புலி! கருத்துச் சிங்கம்! //

கோபம் என்று சொல்வதைவிட பதிவின் திசை மாறுகிறதே என்பது தான். பார்ப்பனன் என்பது பற்றிய செய்தி வந்தால் , தேவை இல்லாமல் சண்டை வந்து பதிவின் நோக்கம் கெடும். அதனால் தான். கடும் சொற்கள். பின்னூட்டத்தை ஜல்லி என்று அழைத்தது பற்றி வருத்தம் இல்லை.தமிழ் பேசும் மக்கள், எதற்கெடுத்தாலும் பார்ப்பனியத்தை கையில் எடுத்து, அதைத் திட்டினால் ஒரு அல்ப மகிழ்ச்சி அடைகின்றனர்.

பார்ப்பனியம் பற்றி வெரு இடங்களில் , வேறு பதிவுகளில், பேசலாம். இங்கு பேசினால், அது பதிவின் நோக்கத்தை மாற்றி, திசை திருப்பி விடும்.அதுதான் எனது உண்மை வருத்தம்.

//மேலும், கொழுநரைத் தொழுது எழும் மனைவி, பின் தூங்கி முன் எழும் மனைவி என்று இந்து மதத்தோர் பின்பற்றிய முறை பற்றி தெளிவாகச் சொல்லி இருக்கிறார்//


எனக்கும் இதில் உடன்பாடு இல்லை.

\\வள்ளுவரும் செய்ய வந்ததும் சமய நூல் அல்ல!
அது சமயம் கடந்த நூல்!அதனால் அதை வைத்து அவர் சமயம் எது என்று நிலைநிறுத்தவும் முடியாது! நிலைநிறுத்தத் தேவையும் இல்லை!//


வள்ளுவம் சமயம் செய்ய நூல் என்று சொல்லவில்லை.அதே சமயம் கடவுள் வாழ்த்து, சமயங்கள் சார்ந்து தானே எழுதப்பட்டுள்ளன?


\\அடி என்பதற்கு பற்றுதல், பற்றுக்கோடு என்ற பொருளும் இருக்கு! அதையும் பார்த்தீங்களாண்ணா?//

இருக்கலாம். ஆனால், கடவுள் வாழ்த்து என்னும் பகுதியில் வரும்போது தான், “அடி” என்ற சொல்லிற்கு இந்த அர்த்தம் வருகிறது. இதுவே, அரன் வலியுறுத்தல் மற்றும் வேறு இடங்களில் சொல்லி இருந்தால், அதற்குரிய வேறு விளக்கங்களில் அர்த்தம் கொள்ளலாம்.


\\யார் அப்படிச் சொன்னது ? புத்த ஜாதக கதைகளில் இந்திரன் கிளியாக வந்தான் என்ற கதையெல்லாம் உண்டு. புத்த மததில் பரிநிர்வாண நிலை என்று ஒன்று உண்டு, அதாவது முக்தி, அதைச் சொர்கம் என்பார்கள் அவர்கள், அவ்வுலகம் என்பதை ஏன் அதற்கு பொருத்த முடியாது ? அவ்வுலகு என்பதன் பொருள் (மற்றொரு) பெளதீக உலகா ? இந்திரன் வசிப்பதாகச் சொல்லப்படும் இடமா ?//

நான் அறிந்த வரையில், மறு பிறவியை புத்தரோ, அருக தேவனோ நம்பவில்லை. பின்னால் வந்தவர்கள், தான் அதை மாற்றி அமைத்தனர். பௌத்தம் சமணம் இவையெல்லாம் , மாயாவாதத்தில் தான் முக்கிய சிந்தனைகளை செலுத்தி உள்ளன்.

புத்தரின் முக்கிய கொள்கை, உருவ வழிபாடு கிடையாது,மறுபிறவி கிடையாது. பின்னால் வந்தவர்கள், அதை மாற்றி , உருவ வழிபாட்டிற்கு வழி வகுத்தனர்.(ஒரு சாரார்). சனாதன(இந்து தர்மத்தைப் பார்த்து இவற்றின் கொள்கைகளை, தமக்கும் கொண்டனர்.)


\\அந்தணர், அறவோர் இவையாவும் பண்பு பெயர்களே யன்றி சாதி/வகுப்பு பெயர்கள் இல்லை. இதுவரையில் அறிந்திருக்காவிடில் இப்போதாதவது அறிக. //

இதை நீங்கள் எழுதுவற்கு முன்பே அறிவோம் , என்பதை தெளிவாகக் கூறிவிட்டேன்.

வேறு இடங்களில், அந்தணன் என்ற சொல்லைக் கையாள்வதற்கும், கடவுள் வாழ்த்துப்பகுதியில், கையாள்வதற்கு நிறைய வேறுபாடுகள் உள்ளன்.இங்கு கூறப்படும் அந்தணன், பிறவாழியை நீக்கும் பெருமகன் என்று வள்ளுவர் உறைக்கிறார்.ஒரு சாதா(ரண) அண்ணலோ, குருவோ, அந்தணனோ, பிறவாழியை நீக்கும், தகுதியும் சக்தியும், உடையவனாக இருக்க முடியுமா?
கடவுள் வாழ்
இது என் அடிப்படைக்கேள்வி.


கடவுள் வாழ்த்தில் கூறப்படும் பிரவாழியை நீக்கும் அந்தணனும், செந்தன்மை பூண்டொழுகும் அந்தணனும், வேறு வேறு. விதத்தில் அர்த்தம் தரும் வகையில் கையாளப்பட்டுள்ளுன்.(மீண்டும் வேண்டிக்கொள்கிறேன்.அந்தணன் என்னும் சொல்லுக்கு சாதியச் சாயம் வேண்டாமே இந்தப்பதிவில்)

\\இங்கு வரும்
அந்தணர் என்ற சொல் அண்ணல் என்ற பொருளில் தான் பண்டைத் தமிழ் இலக்கியத்தில் புழங்கியது! அது இந்து மதத்தைக் காட்ட வந்த சொல் என்று உறுதியாகச் சொல்ல முடியாது!
சமணர்களும் அவர்கள் பெரியோரை அந்தணர் என்று சொல்லி உள்ளனர்!//

மறுக்கவில்லை.சமணர். மற்ற ஏனையோர் அதைப்பயன் படுத்தி இருக்கலாம்.ஆனால், கடவுள் வாழ்த்தில் வள்ளுவர் அருதியிட்டுச் சொல்வது பொல், பிறவிப்பெருங்கடல் நீந்துவதற்கு, அவர்கள் அந்தணர் என்ற சொல்லை பயன்படுத்தவில்லை.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கோவி.கண்ணன் said...
புத்தர் உளறினார் என்று சங்கரர் சொல்லி இருக்க மாட்டாரா ?//

இல்லை!

//சமணர்கள் உளறுகிறார்கள் என்று ஞானசம்பந்தன் சொல்லாமல் இருந்திருப்பானா ?//

:)

//அவர்களெல்லாம் சொல்லும் போது நான் சங்கரன் உளறினார் என்று சொல்வதில் தவறு என்ன ?//

ஒன்றுமில்லை!
பெரியாரையும் இன்னும் சில சான்றோரையும் சொன்னால் அப்போ பொங்கக் கூடாது! இதே நிலையில் தான் இருக்கணும்! :)

Forgive us our sins,
as we forgive those who sin against us!
Amen!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வள்ளுவம் சமயம் செய்ய நூல் என்று சொல்லவில்லை.அதே சமயம் கடவுள் வாழ்த்து, சமயங்கள் சார்ந்து தானே எழுதப்பட்டுள்ளன?//

அதான் கடவுள் வாழ்த்தை இன்றும் பொருத்திப் பார்த்துக்கிட்டு இருக்கோம்! :)

பற்றுக பற்றற்றான் பற்றினை - அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு
இது கடவுள் வாழ்த்து அல்ல! துறவு! இப்படி நம் விவாதங்களுக்காகவே ஆங்காங்கே நல்லாவே தெளித்து விட்டுப் போயிருக்காரு ஐயன்! :)

//கடவுள் வாழ்த்தில் கூறப்படும் பிரவாழியை நீக்கும் அந்தணனும், செந்தன்மை பூண்டொழுகும் அந்தணனும், வேறு வேறு//

உண்மை தான் சுந்தர் அண்ணா! அந்தச் சொல் கடவுள் வாழ்த்தில் கடவுளைக் குறிக்கிறது! நீத்தார் பெருமையில் சான்றோரைக் குறிக்கிறது! ஒரு சிறப்புச் சொல், இடத்திற்கு ஏற்றவாறு பல பொருள், ஒரு மொழி ஆவதும் தமிழிலக்கியத்தில் உண்டே! மறை என்ற சொல்லும் அப்படியே!

//பிறவிப்பெருங்கடல் நீந்துவதற்கு, அவர்கள் அந்தணர் என்ற சொல்லை பயன்படுத்தவில்லை//

சுழன்று தொல் யோனிகட்கே
மீண்டு கொண்டு ஏகும் அவ் வெவ்வினைக்கு அஞ்சி நின் மெய்ச் சரணம்
ஆண்டு கொண்டாய் அறவாழி கொண் டே வென்ற **அந்தணனே**

என்று பிறவாழி நீக்க அருகன் உதவுகிறார் என்ற சமணப் பாடல் இருக்கே!

Anonymous said...

\\சுழன்று தொல் யோனிகட்கே
மீண்டு கொண்டு ஏகும் அவ் வெவ்வினைக்கு அஞ்சி நின் மெய்ச் சரணம்
ஆண்டு கொண்டாய் அறவாழி கொண் டே வென்ற **அந்தணனே**

என்று பிறவாழி நீக்க அருகன் உதவுகிறார் என்ற சமணப் பாடல் இருக்கே!//

மீண்டும் சொல்கிறேன்.புத்தருக்கும் அருக தேவனுக்கும் , மறுபிறவியில் நம்பிக்கை இல்லை.பின்னர் வந்தவர்களே , இந்து சமயக் கோட்பாடுகளை ஒட்டி தங்கள் இலக்கிய இலக்கண வடிவுகளைப் படைத்தனர்.

இப்போதிருக்கும் நமக்கே , புத்தர், மற்றும் அருக தேவன் ஆகியோரின் மூலக் கொள்கைகள் தெரியும் என்றால் வள்ளுவரும் அதை அறிந்து தானே எழுதி இருப்பார்.

மறு பிறவி, பிறவியை நீக்கும் இறைத் தன்மை முதலியவற்றின் மீது புத்தருக்கோ, அருக தேவனுக்கோ நம்பிக்கை இல்லை. பின்னர் அவரது கொள்கைகளைக் கடைப்பிடித்தவர்கள் தாம் , உருவ வழிபாடு , மறுபிறவி, மீண்டும் பிறவாமை போன்றவற்றைப் பதிவு செய்தனர்.

கோவி.கண்ணன் said...

//மீண்டும் சொல்கிறேன்.புத்தருக்கும் அருக தேவனுக்கும் , மறுபிறவியில் நம்பிக்கை இல்லை.பின்னர் வந்தவர்களே , இந்து சமயக் கோட்பாடுகளை ஒட்டி தங்கள் இலக்கிய இலக்கண வடிவுகளைப் படைத்தனர்.

இப்போதிருக்கும் நமக்கே , புத்தர், மற்றும் அருக தேவன் ஆகியோரின் மூலக் கொள்கைகள் தெரியும் என்றால் வள்ளுவரும் அதை அறிந்து தானே எழுதி இருப்பார்.

மறு பிறவி, பிறவியை நீக்கும் இறைத் தன்மை முதலியவற்றின் மீது புத்தருக்கோ, அருக தேவனுக்கோ நம்பிக்கை இல்லை. பின்னர் அவரது கொள்கைகளைக் கடைப்பிடித்தவர்கள் தாம் , உருவ வழிபாடு , மறுபிறவி, மீண்டும் பிறவாமை போன்றவற்றைப் பதிவு செய்தனர்.//

இதுவும் தவறான வாதம் புத்தம் சமணம் இரண்டிலுமே மறுபிறவி நம்பிக்கை உண்டு.

சமண மதவழி வந்தது தான் பெண் தெய்வ வழிபாடு, பவுத்தமத வழி வந்தது தான் பெண்களும் துறவியாகலாம் என்கிற மாற்றம்.

துறவு கோட்பாடுகளும், துறவு நிலையும் சமணம் மற்றும் பவுத்தம் வழி வந்தது தான், ஏனைய சமயங்களில் உயிர்பலியும், தீ வளர்க்கும் யாகமுமே இறைவணக்கமாக இருந்தது.

மரணத்திற்கு அடுத்து நிர்வாண நிலை (அம்மணம் இல்லை) அதாவது பிறவாமையே லட்சியேம், பிறவாமையே மோட்சம் என்ற கொள்கை அடிப்படை பவுத்த மற்றும் சமண மதங்களில் உண்டு.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கோவி.கண்ணன் said...
இதுவும் தவறான வாதம் புத்தம் சமணம் இரண்டிலுமே மறுபிறவி நம்பிக்கை உண்டு//

சரி, நீங்க தான் சரியான வாதத்தை வையுங்கள் கோவி அண்ணே!

1. நீங்கள் கொடுத்த சுட்டியில், விஷ்ணு, ஸ்ரீதேவி போன்ற குறிப்புகளும், அவர்கள் ஆதி தீர்த்தங்கரர்களுக்கே தாய்-தந்தையர் என்றெல்லாம் கூட வருகிறதே!
2. தீர்த்தங்கரர்கள் எல்லாம் வடநாடு தானே! அப்போ சமணம் ஆரியவாதம் இல்லையா? :)
மாயோன், சேயோனாச்சும் தமிழ் மண்ணில் இருந்து அங்கே போனார்கள்! இங்கிருந்து யாரும் சமணத்துக்குப் போனாற் போலவும், அவர்களை அங்கு மதிப்பது போலவும் தெரியலையே! :)

//சமண மதவழி வந்தது தான் பெண் தெய்வ வழிபாடு//

சமணம் தோன்றும் முன்னரே, ரிக்/யஜூர் வேதங்களில் பெண் தெய்வங்களும், ஸ்ரீ சூக்தமும் சொல்லப்பட்டு உள்ளனவே!

//பவுத்தமத வழி வந்தது தான் பெண்களும் துறவியாகலாம் என்கிற மாற்றம்//

இருக்கலாம்! போற்றற்குரியது!
ஆனால் இல்லறத்தில் இருந்து கொண்டே ஆன்மீகப் பணி செய்த அருந்ததி போன்றாரும் உள்ளார்கள்!

//துறவு கோட்பாடுகளும், துறவு நிலையும் சமணம் மற்றும் பவுத்தம் வழி வந்தது தான்//

இது உங்கள் வசதிக்கேற்ற கற்பனை! சன்னியாசம் என்பது நால் வகை நிலைகளுள் ஒன்று! அது கூடப் பேச வேண்டாம்! ஆதி சமணத் துறவிகளிடம், சனாதனத் துறவிகளும் வாக்குவாதம் செய்துள்ளனர் என்பதைச் சமண நூல்களே சொல்கின்றன்! அப்படி இருக்கும் போது துறவு என்பது இந்தப் பக்கதிலும் இருந்தது என்று புலனாக வில்லையா?

//ஏனைய சமயங்களில் உயிர்பலியும், தீ வளர்க்கும் யாகமுமே இறைவணக்கமாக இருந்தது//

இருந்தது! ஒப்புக் கொள்கிறேன்! ஆனால் அது ஒன்று "மட்டுமே" இறை வணக்கமாக இல்லை!
இன்ன பிற வழக்கங்களும், இசை வழிபாடும் கூட இருந்தன!

//பிறவாமையே மோட்சம் என்ற கொள்கை அடிப்படை பவுத்த மற்றும் சமண மதங்களில் உண்டு//

சரியே!
பரவஸ்து அண்ணா: பிறவிச் சுழற்சி என்பது சமணத்திலும் உண்டு! சமணப் பெண்கள் ஆணாகப் பிறந்து தான் மோட்சம் அடைய வேண்டும் என்ற சமணக் கோட்பாடு கூட உண்டு! அதனால் பிறவிச் சுழற்சி என்பது இந்து மதத்துக்கு மட்டுமே சொந்தமானது அல்ல!

நீங்கள் சொல்ல வந்தது உருவ வழிபாடு முதலான இன்ன பிற கோட்பாடுகள்! இது வேண்டுமானால் இங்கிருந்து அங்கு போயிருக்கலாம்!
பெளத்தத்திலே ஹீனயானம் மட்டுமே உருவ வழிபாடு கொண்டது! மஹாயானம் அல்ல!

@கோவி அண்ணா
உங்களுக்கு முன்னரே சொன்னது தான்!
தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மையை நிலைநாட்டணுமே என்று,
வட பண்பாட்டில் இருப்பதை இல்லையென்றும், இல்லாததை இருக்கு என்றும் என்னால் மாற்றிச் சொல்ல முடியாது!
தமிழின் தனித்தன்மையை, தனியாகவே நிலைநாட்டிட முடியும்! அதுவே தனித்தமிழின் சிறப்பு!

கோவி.கண்ணன் said...

//2. தீர்த்தங்கரர்கள் எல்லாம் வடநாடு தானே! அப்போ சமணம் ஆரியவாதம் இல்லையா? :)//

திராவிட நிலப்பரப்பு தற்பொழுது சுறுங்கி உள்ளதை வைத்துப் பார்த்தால் வட நாடெல்லாம் பார்பனர் நிறைந்திருந்தனர் என்ற பொருளாகிவிடுமா ? வடநாடு வடமொழி ஆதிக்கத்தில் இருந்ததால் பார்பனர்களை வடவர் என்று சொல்வது வழக்கு. அவ்வளவுதான். சமண சமயம் பார்பன சமயமாக இருந்தது இல்லை. பாரபன சமயம் வேதவழி சமயம் மட்டுமே.


//@கோவி அண்ணா
உங்களுக்கு முன்னரே சொன்னது தான்!
தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மையை நிலைநாட்டணுமே என்று,
வட பண்பாட்டில் இருப்பதை இல்லையென்றும், இல்லாததை இருக்கு என்றும் என்னால் மாற்றிச் சொல்ல முடியாது!
தமிழின் தனித்தன்மையை, தனியாகவே நிலைநாட்டிட முடியும்! அதுவே தனித்தமிழின் சிறப்பு!
//

நான் மாற்றுக் கருத்துச் சொன்னது தமிழ் சமயத்தில் இருப்பதெல்லாம் வடசமயத்தில் இருக்கிறது என்ற ஒட்ட வைத்தலைத்தான். குறிப்பாக வள்ளி பற்றி கூறியதே அதற்குத்தான். நான் சொல்லியதை அனைத்துமே வடக்கிலும் இருக்கிறது என்று தாங்களும் சொன்னீர்கள் அதனால் தான் கேட்டேன். இங்கிருந்து அங்கு சென்றதா அங்கிருந்து இங்குவந்ததா ? தமிழனுக்கு என்ற தனித்துவமே இல்லையா ? என்று கேட்டேன். அதை உங்களது தமிழ் உணர்வை கொச்சைப்படுத்துவதாக புரிந்து கொண்டீர்கள். எனக்கு பாதகமில்லை.

நாயன்மார்களையும் ஆழ்வார்களையும் வடவர் பெயரளவுக்கு அறிந்திருப்பதையெல்லாம் வைத்து அவர்களும் அறிந்திருக்கிறார்கள், போற்றுகிறார்கள் என்று நான் சொல்ல மாட்டேன்.

ஏசுபிரானையோ, நபிகளையோ அறிந்திருப்பதால் அவற்றை நாமும் போற்றுகிறோம், ஏற்றுக் கொள்கிறோம் என்ற பொருளல்ல, மாறாக மதிக்கிறோம் என்றே பொருள்.

தமிழ் நில கடவுள்கள் பற்றிய வடவர்களின் புரிந்துணர்வும் இந்த அளவுக்குத்தான் என்பதே என் புரிதல். அவர்களது புரிந்துணர்வு தமிழ் தெய்வங்களைப் போற்றுவதாக நீங்கள் கருதினாலும் எனக்கொன்றும் பாதகமில்லை.

ஈசனை வழிபடுபவனுக்கு அவன் கையிலையில் இருந்தாலும் ஒன்று தான், சிதம்பரத்தில் இருந்தாலும் ஒன்று தான். 'உலகிலேயே தர்மஸ்தலாவில் தான் இறைவன் இருக்கிறான்' என்று ஒரு கன்னடர் சொல்லும் போது எனக்கு சிரிப்பே வந்தது. காரணம் அவர் அதை மட்டுமே உயர்வு என்று கருதுபவராக இருந்தார். தமிழர்கள் கையிலை, காசி என்று தேடிச் சென்று வழிவடுவது போல் இங்கு வரும் வடநாட்டினரும், நம் தெய்வங்கள் பற்றி அறிந்திருப்போரும் குறைவே.

இதுக்கும் மேல விவாதத்தையும் வளர்த்தல. நான் இறைமறுப்பு செய்யவில்லை என்ற புரிதலில் படித்தால் என்னுடைய கருத்துக்கள் உங்களுக்கு சரியாகப் படாவிட்டாலும் கண்டிப்பாக தவறாக படாது என்றே நினைக்கிறேன்.

In Love With Krishna said...

Beautiful!!!

சுப்ரபாதம் (தமிழில்):

ஒலிச் சுட்டிகள்!

முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1. M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2. கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3. தமிழ் சுப்ரபாதம் - நித்ய ஸ்ரீ பாடுவது (Windows Media Player)

நன்றி:
Music: musicindiaonline.com, sribalaji.com
Pics: tirumala-tirupati.com

சுப்ரபாதம் (மூலம்):

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP