Saturday, August 11, 2007

சுப்ரபாதம்(14) - கோவிலுக்குக் குளிக்காமப் போனாத் தீட்டா?

சிவனாரும், பிரம்மனும், முருகனும் பெருமாளைத் தரிசிக்கும் ஆவலில், க்யூ வரிசையை உடைத்து விட்டு ஒடோடி வருகிறார்கள்! அவர்கட்கு பிரம்படி வேறு!
இன்னொரு விஷயம்! தரிசனம் செய்யணும்னா கட்டாயமா குளிக்கணுமா என்ன? குளிக்கா விட்டா தீட்டா?.....
ஆமாம், தீட்டு தான் என்றால் தீட்டு கழிப்பது எப்படி? பார்க்கலாம் வாங்க! :-)




(இந்த சுலோகத்தை படிக்கும் போது, கூடவே கேட்டுப் பயில நினைத்தால், இதோ சொடுக்குங்கள்)




ஸ்ரீ சுவாமி புஷ்கரிணி- காப்லவ நிர்மலாங்கா
ச்ரேயோர் திநோ, ஹர விரிஞ்சி சனந்தன ஆத்யா
த்வாரே வசந்தி வரவேத்ர ஹதோத்த மாங்கா:
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்

ஸ்ரீ சுவாமி புஷ்கரிணி = ஸ்ரீ சுவாமியின் திருக்குளத்தில்
புஷ்கரிணி = குளம்; திருவேங்கடமுடையான் ஆலயத் திருக்குளத்துக்கு சுவாமி புஷ்கரிணி என்று பெயர். இதைக் குலசேகர ஆழ்வார் எவ்வளவு அழகா தமிழில் ஆக்குகிறார் பாருங்கள்!
சுவாமி+புஷ்கரிணி = கோன்+ஏரி = கோனேரி

கோனேரி ராஜபுரம் என்ற ஊர், தமிழ்நாட்டில் உண்டு.

பொதுவா வடமொழிச் சொற்களைத் தமிழில் ஆக்கும் போது, தமிழ்ப் பெயர் சற்று நீண்டு விடும் என்று சிலர் குறைபட்டுக் கொள்வார்கள்.
ஆனா இங்க பாருங்க...வடமொழியில் நீள்ள்ள்ள்ள்ள்ளமான பெயர்...ஆனால் தமிழில் ரத்தினச் சுருக்கமா "கோனேரி".
வடமொழி-தமிழ் ஆக்கும் போது, நிறைய சொற்களுக்குக் கடினப்படுகிறீர்களா?

கவலைய விடுங்க! ஆழ்வார்களிடமும், குறிப்பா ஆண்டாளிடமும் தேடினாலே பாதிச் சொற்கள் கிடைத்து விடும்!

கோனேரி வாழும் குருகாய் பிறப்பேனே என்பது ஆழ்வார் பாசுரம்.

அதாச்சும் இறைவன் திருக்குளத்துக்கு அருகிலேயே வாழும் ஒரு கொக்காய் பிறந்தால் கூட பேரின்பம் தான் என்கிறார் ஆழ்வார்!
வைகுண்டத்தில் உள்ள விரஜா நதியே கோனேரி ஆனது என்பது தாத்பர்யம்.


கா அப்பு லவ, நிர்மலா அங்கா = கோனேரி நீரைத் தெளித்துக் கொண்டு, அகமும் புறமும் தூய்மை அடைந்து
அப்பு=நீர், லவ=கொஞ்சமாக
மலம் = குற்றம்/அழுக்கு; நிர்மலம் = குற்றமின்மை
அது சரி, கோயிலுக்குப் போகணும்னா கட்டாயம் குளிச்சிட்டுத் தான் போகணுமா?


பண்டரிபுரம் பாண்டுரங்கன் ஆலயத்துக்குப் போனீங்கனா தெரியும். வடக்கத்திக்காரர்கள் அதுவும் குறிப்பா தாக்கூர்கள் கோயிலுக்குள் திபுதிபு-ன்னு ஒடி வருவாய்ங்க! சில பேர் கிட்ட வந்தா நாறும்! என்னைக்குக் குளிச்சானோ என்னமோ? :-)
ஆனாப் பாருங்க! கோயிலில் வேற எந்த ஒரு வார்த்தையும் பேச மாட்டாங்க!
ஹே பாண்டுரங்கா, ஹே விட்டலா...ன்னு ஓடி வந்து பாண்டுரங்கன் காலில் விழுந்திடுவான்.

தீட்டு தீட்டு-ன்னு சொல்றாங்களே! அப்பிடி-ன்னா என்ன? -
நம் ஐயன் வள்ளுவரும் சொல்கிறார்! கன்னடத்துக் கவி புரந்தரதாசரும் சொல்கிறார்!
குளிக்காம கோவிலுக்குப் போனா தீட்டு! - அது சரின்னே இப்போதைக்கு வைத்துக் கொள்வோம்! சரி, அங்கே போயி, கோவிலில் வம்பு பேசினா? - அதைக் காட்டிலும் இது தீட்டு! :-)
கோவிலுக்கு மடியா போகணும் மடியாப் போகணும்-னு சொல்லிட்டு, அங்கு போய் வம்பு பேசினா? மடி மடின்னு, மடியே மடிந்து விடுகிறது! :-)

சரி தீட்டாயிடிச்சு!...இதுக்கு எப்படி தீட்டு கழிக்கறது?

சும்மா தண்ணியில் ரெண்டு முக்கி முக்கி எழுந்துட்டா தீட்டு போயிடுமா? - இல்லவே இல்லை!
சிறப்புக் குளியல் செய்யணும்! அது என்ன சிறப்புக் குளியல்?
கோவிலில் அந்நிய வார்த்தைகளை விடுவது தான் சிறப்புக் குளியல்! உயர்ந்த ஸ்நானம், எல்லாம்!

அதைத் தான் புரந்தரதாசர், "தனுவு நீர் ஓளகத்தி பளவேனு, மனதல்லி திட பக்தி இல்லாத மனுஜனு!" என்கிறார். நம் ஐயன் வள்ளுவர் ஒரு படி மேலே போய் விடுகிறார்.
புறத்தூய்மை நீரால் அமையும் அகத்தூய்மை
வாய்மையால் காணப் படும்.
திருக்குளத்தில், கங்கையில், காவிரியில், குமரியில், எங்கு குளித்தாலும்... குளிக்கும் போது புறத்தை மட்டும் தூய்மை செய்யாமல்,
அகத்தையும் சேர்த்துத் தான் தூய்மை செய்ய வேண்டும்!

சரி, புறத்துக்கு சோப்பு/ஷாம்பூ போடலாம்; சில பேர் பால், பயத்தமாவு கூட பயன்படுத்தறாங்க!

ஆனா அகத்துக்கு எது சோப்பு? - இறைவனின் திருநாமம் தான் அழுக்கு நாசினி, கிருமி நாசினி, எல்லாம்!
விடியற் காலை அங்கப் பிரதிட்சணம் செய்தவர்களுக்கும், மொட்டை போட்டுக் கொள்பவர்களுக்கும் இது நல்லாத் தெரியும்!
அதிகாலைக் குளிரில் நடுங்கிக் கொண்டே,
திருமலைக் குளத்தில் ஒரு முங்கு, முங்கி எழுங்க!
அதுவும் மனதாரக் "கோவிந்தா கோவிந்தா" என்று சொல்லிக் கொண்டே எழுங்க!
குளிரில் உடம்பும் நடுங்கி,

உள்ளே உள்ள பாவங்களும் நடுங்கி விடாதா என்ன?


ச்ரேய ஆர்த்திநோ = பரிபூர்ணமான நலமுடன் வாழ வேண்டிக் கொண்டு ஆனந்தமும் நலமும் கிடைக்க வேண்டிக் கொண்டு,
ஆனந்த நிலையத்தில், யார் யார் எல்லாம் காத்திருக்கிறார்கள்?

ஹர, விரிஞ்சி, சனந்தன ஆத்யா = சிவன், பிரம்மன், சனந்தனர் முதலான மகரிஷிகள்
ஹரன் = சிவபெருமான்
விரிஞ்சி = பிரம்மன் (ஜனனி ஜனனி பாடலில் கூட ஹரி ஹர விரிஞ்சி-ன்னு ஒரு வரி வரும்)
சனந்தன ஆத்யா = சனகாதி முனிவர்கள்;
சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்ற நால்வரும் வயதில் இளைய ரிஷிகள். ஆனால் பக்தியும் ஞானமும் ஒருங்கே கைவரப் பெற்றவர்கள்!
இதில் சனத்குமாரர் கார்த்திகேயனான முருகப் பெருமானின் அம்சம் என்றும் சொல்லுவார்கள்.
இந்த 4 பேரால் தான்...நமக்கு 4 அவதாரங்கள் கிடைத்தது...என்னன்னு பின்னூட்டத்தில் சொல்லுங்க பார்ப்போம்!
:-)

த்வாரே வசந்தி, = மகா துவாரம் என்னும் உன் ஆலய வாசலிலே நிற்கிறார்கள்.
(அப்போது சேனை முதலியாரின் தொண்டர்கள், தங்கள் கையில் உள்ள பொற் பிரம்பால், அனைவர் தலையின் மேலும், மெல்லிதாய் வைத்து, அனுகிரகம் செய்ய)


வர வேத்ர ஹத= பொற் பிரம்பால் தட்டி முறைப்படுத்த,

உத்தம அங்கா = அதனால் இன்னும் தூய்மை அடைகிறார்கள்!

வேத்ரம்=பிரம்பு; வர வேத்ரம்=பொற் பிரம்பு
அந்தக் காலத்தில் ஆசிரியர் என்றால் கையில என்ன இருக்கும்? - பிரம்பு!
யாராச்சும் பார்த்து இருக்கீங்களா? இல்லை அடி வாங்கித் தான் இருக்கீங்களா? :-)
மாணவர்களை அவர் அடிக்கிறாரோ இல்லையோ, ஆனால் கையில் பிரம்புடன், வேட்டி-கோட்-தலைப்பாகை-குடை; வாயில் கணீரென்று தமிழ்ச் செய்யுள்...ஆகா! ஆகா!

பெருமாளின் படைகளுக்கு பிரதான தளபதியாய் இருப்பவர் விஷ்வக்சேனர்.

தமிழில் சேனை முதலியார் என்று போற்றுவார்கள்! விநாயகரைப் போலவே, வைணவ பூசைகளில் முதல் பூசை இவருக்குத் தான்! - இவர் தான் வைணவ சம்பிரதாயத்தில் முதல் ஆசிரியர்!
பெருமாள் தாயாருக்கு உபதேசிக்க, தாயார் நம் மீது உள்ள கருணையால் இவருக்கு உபதேசம் செய்து வைத்தார்! - இவரே தலைமை ஆசிரியர்! நம்மாழ்வாரின் குரு!

அந்தக் குருவின் கையில் பொற் பிரம்பு!
அந்தப் பிரம்பில் இருந்து எழும் இனிய நாதம்!...

என்னது பிரம்பில் இருந்து இசையா? நம்ப முடிய வில்லையா? பிரம்பைக் காற்றில் வீசிப் பாருங்க...தெரியும்! :-)
மெல்லிசைக் கச்சேரிகளில், வாத்தியங்களுக்கு முன்பு நின்று கொண்டு ஒரு மனுஷர் கையில் பிரம்பை வைத்து அப்படியும் இப்படியும் ஆட்டுவார்! - music conductor


நாம் நினைப்போம் - இந்த மனுஷன் ஒன்னுமே செய்யாம, சும்மா பந்தா கட்டுகிறாரே என்று! ஆனால் அத்தனை வாத்தியங்களின் நாதமும் ஒருங்கே சுருதி சேர்ந்து ஒன்றாய் ஒலிக்கிறது என்றால், அதற்கு இவரே காரணம்.
அதே போலத் தான், உயிர்கள் எல்லாம் பல பாதைகளில் சென்றாலும்,

எம்பெருமானின் திருநாமம் என்னும் நாத இன்பத்தை எல்லா உயிர்களும் ஒருங்கே அடைய, பிரம்பை வீசுகிறார் விஷ்வக்சேனர்!


அவருடைய சேனைகள் கையிலும் பொற்பிரம்பு இருக்கிறது!....எதற்கு?
கோயிலுக்கு வருபவர்களை எல்லாம் அடித்து விளாசவா? இல்லையில்லை! :-)

வானவர்களை எல்லாம் தலையில் பொற்பிரம்பால் தொட்டு, தரிசனத்துக்கு, ஒவ்வொருவராக அனுப்பி வைக்கிறார்கள்! அப்படி பிரம்போசையால் ஏற்படும் ஓங்காரம், யார் எந்த மன நிலையில் இருந்தாலும், அதை எல்லாம் விலக்கி,
பரம்பொருள் ஒருவனையே நெஞ்சில் நிறைத்து விடுகிறது! - ஆனாப் பாருங்க, வானவர்களுக்கு மட்டும் தான் இந்த "அடி"! நமக்கு இல்லை - ஏன் இப்படி? :-)

தானம் தவம் செய்த முனிவர்கள், வானவர்கள் எல்லாரையும் கீழே இறக்குகிறார் பெருமாள்!
பாவங்கள் புரியும் நம்மையோ மேலே ஏற்றுகிறார்!

மேலோர் எல்லாரும் அவரவர் நிலையில் இருந்து கீழிறங்கி திருமலைக்கு வருகிறார்கள், பெருமாளின் திருமேனி செளந்தர்யம் என்னும் வடிவழகைச் சேவிக்க!
நாமோ, ஒன்றுமே செய்யாமல், மேலேறிச் செல்கிறோம், மேல்நிலையை அடைய! - இது தான் இறைவனின் கேழில் பரங்கருணை!

இப்பேர்ப்பட்ட எம்பெருமானைப் பார்த்துப் பார்த்து அனுபவிக்க வந்துள்ளார்கள்...
கயிலை நாதன் சிவபெருமான்
சத்யலோக நாதன் பிரம்மா
தமிழ்வேள் முருகப் பெருமான்
சனகாதி முனிவர்கள்
....
எல்லாரும் வந்து, பங்காரு வாகிலியில் உன்னைச் சேவிக்க நிற்கிறார்கள்!
ஆவல் மிகுதியால் எட்டி எட்டிப் பார்க்கிறார்கள்...
பெருமாளின் வடிவழகைக் அப்படியே கண்களால் உறிஞ்சிப் பருகுவதற்கு!

துவார பாலகர்கள், இவர்கள் ஆவலை எல்லாம் முறைப்படுத்தி,

ஓங்காரப் பிரம்போசையால் மனம் ஒன்றச் செய்து, தரிசனத்துக்கு வழிவகை செய்து வைக்க...
என் அப்பனே, திருவேங்கடமுடையானே...
சிவபெருமானின் அன்பை பெற்றுக் கொள்ளவும்,
சண்முகனின் அன்பைப் பெற்றுக் கொள்ளவும்,
பிரம்ம சனகாதிகள் அன்பைப் பெற்றுக் கொள்ளவும்.....சீக்கிரமாகத் திருப்பள்ளி எழுவாயே!


ஸ்ரீ வேங்கடாசல பதே = அப்பா, திருவேங்கடமுடையானே
தவ சுப்ரபாதம் = இனிய காலை வணக்கங்கள்! திருப்பள்ளி எழுக!!

குறிப்பு:
இப்படி சிவபெருமானும் முருகப்பெருமானுமே ஆவல் மிகுதியால் காத்துக் கொண்டு நிற்கும் போது நாம் எல்லாரும் எம்மாத்திரம்?

- அதனால் அடுத்த திருமலை யாத்திரையில்,
க்யூ வரிசையில் நிற்கும் போது, அலுப்பு ஏற்பட்டு மனம் சலித்துக் கொள்ளாதீர்கள் :-)

முனிவர்களே பிரம்போசை கேட்கும் போது, நாம் எல்லாம் எம்மாத்திரம்?
கோவில் பணியாளர்கள் சற்றே கடுமையாக நம்மை நகர்த்தி விட்டாலும்,

அதற்காக எல்லாம் சலனப் படாதீர்கள்!
இதையெல்லாம் தாண்டிய பெரும் பொக்கிஷம் நம் முன்னே நிற்க,

இதெல்லாம் ஒரு பொருட்டா என்ன? :-)
----------------------------------------------------------------------------
முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1.
M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2.
கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3.
தமிழ் சுப்ரபாதம் (நித்ய ஸ்ரீ) - (Windows Media Player)
நன்றி: Music: musicindiaonline.com, sribalaji.com Pics: tirumala-tirupati.com
----------------------------------------------------------------------------

Friday, July 27, 2007

சுப்ரபாதம்(13)- வேங்கடம்- தமிழ்ச் சொல்லா? வட சொல்லா?

திருமலை திருப்பதி, தமிழ்நாட்டுக்கு உரியதா என்ன?
தமிழ்நாட்டின் எல்லை வடவேங்கடம் என்று எல்லாத் தமிழ் இலக்கியங்களும் பேசுகின்றன! - இலக்கியம் பேசினால் போதுமா? மக்கள் பேச வேண்டுமே!
அங்கேயோ மக்கள் பலர் தெலுங்கு பேசுவதால், வேங்கடம் ஆந்திரத்துக்குச் சென்று விட்டது! திருத்தணிகையை மீட்ட ம.பொ.சி அவர்களால் கூட திருப்பதியை மீட்க முடியவில்லை!

இன்றைய பதிவில் இருந்து ரூட் மாறப் போகுது! :-)
இது நாள் வரை "சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்" என்று தான் வந்தது...சேஷ மலைக்கு அரசனே எழுந்திரு-ன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க!
ஆனா பெருமாள் அப்படி லேசாத் துயில் கலையப் போகிறார்-ன்னு தெரிஞ்சதும்... எல்லாமே மாறிப் போச்சுது! பெருமாளைப் பற்றிப் பாடிக்கிட்டு இருந்தவர்கள், இனி பெருமாளுக்குப் பிடித்தமானவர்களைப் பற்றி எல்லாம் பாடப் போறாங்க!
இனிமேல் ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்-னு மாற்றிப் பாடப் போறாங்க!

எது என்ன வேங்கடம்?...அது என்ன தமிழ்ச் சொல்லா? வட சொல்லா?
அசலம்=மலை; இது வடசொல். தெரிஞ்சது தான்!
(சேஷாசலம், பத்ராசலம், ஹிமாச்சலம், அருணாச்சலம்...)
ஆனா வேங்கடம்?...இது மிகவும் அழகான தமிழ்ச் சொல்!

வேங்கடம் = வேம் + கடம் = கொடுங் கடன்கள் வேகும் மலை என்பது பொருள்.
வேம் என்பது வெப்பம், நெருப்பு, பொசுக்கல் என்ற பொருளில் வரும். (வேங்காலம், வேடைக் காலம் என்று கோடைக் காலத்தைச் சொல்வதுண்டு).

கடம் = கடன் = பிறவிக் கடன் (வினை)
கடம் பலகிடந்து காடுடன் கழிந்து என்று சிலப்பதிகாரம் சொல்கிறது!
கடம் உண்டு வாழாமை என்று கடன் வாங்குவதைப் பற்றி இனியவை நாற்பது என்னும் பழந்தமிழ் நூல் பாடுகிறது!
இந்தப் பிறவிக் கடனைப் (நல்வினை/தீவினை) பொசுக்க வல்ல மலை ஆனதாலே அது வேங்கட மலை!

வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும்
ஓங்கு உயர் மாமலை உச்சி மீமிசை
பகை அணங்கு ஆழியும் பால் வெண் சங்கும்
தகை பெறு தாமரைக் கையில் ஏந்தி

என்று சங்கு சக்கரங்களோடு பெருமாள், வேங்கடத்தின் மேல் நிற்பதைச் சிலப்பதிகாரம் படம் பிடித்துக் காட்டுகிறது!



சரி, ஒரு மலை எப்படி கடத்தைப் பொசுக்கும்?...
தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய் என்ற திருப்பாவை நினைவுக்கு வருகிறதா?
போய பிழையும், இனி வரப் போகும் கர்ம வினைகளும், இவை போதாதென்று, இந்தப் பிறவியில் ஏற்றிக் கொண்ட பாவ மூட்டைகளும் - இப்படி எவ்வளவு கடனை நாம வாங்கி வைச்சிருக்கோம்! திருப்பிக் கட்ட வேண்டுமே! வட்டி கட்டி மாளுமா?

செல்போன் பில்லைக் கட்டாமப் போனாலே, Late Fee, Finance Charges, Delinquency அது இது என்று போட்டுத் தாளித்து விடுகிறார்கள்! கிரெடிட் கார்டு என்றால் இன்னும் ஒரு படி அதிகம் - சொல்லவே வேண்டாம்! வட்டிக்கு-வட்டிக்கு-வட்டி என்று ஏறிக்கொண்டே போக வேண்டியது தான்!

உண்மையான பண இருப்பை எண்ணிப் பார்க்காது, கையில் தான் கார்டு இருக்கே-ன்னு ஆடாத ஆட்டம் ஆடினால்?....திவால்!
அதே போல் உண்மையின் இருப்பான இறைவனை எண்ணிப் பார்க்காது, கையில் தான் வசதி இருக்கே, வாழ்க்கை இருக்கே-ன்னு ஆடாத ஆட்டம் ஆடினால்??? :-)


கொடும் பாபங்களையும் பொசுக்க வல்லது திருமலை!
மலையே வைகுந்த சாளக்கிரமாக இருக்கிறது!
அதன் மீது தன் கால் படவும் அஞ்சி, கீழிருந்தே சேவித்தார்கள் ஆழ்வார்கள்!
சென்று சேர் திருவேங்கட மாமலை
ஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே

என்று மலையைத் தொழுதாலே போதும், வினைகள் எல்லாம் ஓயும்! என்கிறார் வேதம் தமிழ் செய்த நம்மாழ்வார்!

அந்த வேங்கட மாமலைக்கு அதிபதி - அயர்வறும் அமரர்கள் அதிபதி -வேங்கடாசலபதி - தவ சுப்ரபாதம் என்று இனி மேல் வரப் போகும் சுப்ரபாதங்களைப் பார்ப்போம், வாருங்கள்!



(இந்த சுலோகத்தை படிக்கும் போது, கூடவே கேட்டுப் பயில நினைத்தால், இதோ சொடுக்குங்கள்)



(சுப்ரபாதத்தில் முக்கியமான சுலோகம் - இந்தச் சுலோகம் பொதுவாக இரண்டு முறை சாற்றப்படும் - மிகவும் எளிது கூட - வாய் விட்டுச் சொல்லிப் பாருங்கள்!)

ஸ்ரீ மந் அபீஷ்ட வரதாகில லோக பந்தோ
ஸ்ரீ ஸ்ரீநிவாச ஜகதேக தயைக சிந்தோ
ஸ்ரீ தேவதா க்ருஹ புஜாந்தர திவ்ய மூர்த்தே
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்

ஸ்ரீ மந் = ஸ்ரீ(மகாலக்ஷ்மி); அவளின் மனத்துக்கு இனியவனே!
Sweet Heart-ன்னு கேள்விப்பட்டு இருக்கீங்களா? அதான் ஸ்ரீமன் :-)
இந்த Sweet Heart-க்கு அப்படியே நேரான தமிழ்ப்பதத்தை ஆண்டாள் தருகிறாள்! என்னன்னு கண்டுபிடிச்சி சொல்லுங்க பார்ப்போம்!

அபீஷ்ட வரத = விருப்பங்களை நிறைவேற்றுபவனே!
அபீஷ்டம்=விருப்பம். நியாயமான நல்ல விருப்பங்கள். மற்றை நம் காமங்கள் அல்லாத விருப்பங்கள்...
இப்படி நம் ஆசை, விருப்பம், எண்ணங்களை எல்லாம் நிறைவேற்றி வைப்பவன் - வரம் தரும் வரதன் - நாம் வந்த காரியம் ஆராய்ந்து அருளுபவன்!


அகில லோக பந்தோ = எல்லா உலகத்துக்கும் உறவுக்காரனே
எல்லா உலகம் என்று ஏன் சொல்ல வேண்டும்?
தேவர்-அசுரர் என்றோ, மேலோர்-கீழோர் என்றோ, பணக்காரன்-ஏழை என்றோ, படித்தவர்-பாமரர் என்றோ, சாதி-மதம் என்றோ எந்தவொரு வேற்றுமையும் அவனுக்குக் கிடையாது!
வேற்றுமை நம்மிடத்தில் தான்! நாம் பார்க்கும் பார்வையில் தான்!
அவனோ கண்ணாடி போல!
எதுவாகப் பார்க்கிறோமோ, அதுவாகவே தெரிகிறான்! அகலில் அகலும்...அணுகில் அணுகும்...


ஸ்ரீ ஸ்ரீநிவாச = திரு-மாலே! ஸ்ரீநிவாசா
ஸ்ரீநிவாசன் என்பது மிகவும் முக்கியமான திருநாமம்..
பொதுவா அம்மாவுக்கு ஒரு பெயர் இருக்கும். அப்பாவுக்கு ஒரு பெயர் இருக்கும்! அம்மையப்பன் இருவருக்கும் சேர்த்து ஒரே பெயராக இருக்குமா?
இருக்கே! அதுவே திரு-மால்! ஸ்ரீ-நிவாசன்!

"பிரம்மநி ஸ்ரீநிவாசே" என்பது இராமானுசரின் ஸ்ரீபாஷ்யம்!
பரப்பிரும்மம் (பரம்பொருள்) யார் என்றால், அது ஸ்ரீநிவாசன் தான் என்று அவர் நிர்ணயம் செய்கிறார்! அவர் மட்டுமில்லை!
ஆதிசங்கரர், மத்வர், வல்லபர் போன்ற பலப்பல ஆச்சாரியர்களும் வேறு வேறு மார்க்கங்களைக் காட்டினாலும், நாராயணனே பரப்பிரும்மம் என்று ஒருமுகமாகச் சொல்கிறார்கள்!
"நாராயண பரோ வக்யாத்" என்று தான் ஆதிசங்கரரின் பாஷ்யமே தொடங்குகிறது! "நாரயணஹ, பரஹ" என்று முத்தாய்ப்பாகச் சொல்கிறார்!



ஜகத் ஏக தயைக சிந்தோ = அனைத்து உலகுக்கும் கருணை சிந்துபவன் நீ ஒருவனே!
தயை=கருணை! தயா சிந்து=கருணைக் கடல்!
உலகத்துக்குக் கடல் தான் காப்பு! கடலில் நடக்கும் நிகழ்வுகளால் தான் உலகம் ஒரே சீராக இயங்குகிறது!

நீராரும் கடல் உடுத்த நில மடந்தை! விரிதிரை முந்நீர் உலகம் என்பதெல்லாம் தமிழ் இலக்கியம்! அதனால் தான் இறைவனைக் கடலாக உருவகிக்கிறோம்!
கடலில் இருந்து தோன்றியது எல்லாம் இறுதியில் கடலில் போய்த் தான் கலக்கிறது.
இறைவனோ கருணைக்கடல்! இருப்பதோ பாற்கடல்!


பெருமாள் மோவாய்க் கட்டையில் இருக்கும் வெள்ளைத் தழும்புக்கும் "தயா சிந்து" என்று தான் பெயர். இது பற்றி முன்பே மாதவிப் பந்தல் பதிவில் பார்த்தோம்!

இந்த "தயா" வின் மேல் தான், சுவாமி தேசிகன் என்னும் ஆச்சார்யர், தயா சதகம் என்னும் அற்புதமான நூலைப் பாடியுள்ளார்!

மோவாயில் பொட்டழகன்!



ஸ்ரீ தேவதா க்ருஹ புஜாந்தர = "ஸ்ரீ" என்று போற்றப்படும், அன்னை மகாலக்ஷ்மி உன் திருமார்பில் வசிக்கிறாள்

ஸ்ரீ மகாலக்ஷ்மிக்கு வீடு (க்ருஹம்) எது?
உன் திருமார்பே அவள் வீடு! வலப்பக்க மார்புக்கு வக்ஷ ஸ்தலம் என்றே பெயர்! அதில் அவள் நீங்காது நித்ய வாசம் செய்கின்றாள்!

ஒரு நொடிப் பொழுதும் உன்னை விட்டுப் பிரிய மாட்டாள்! மஞ்சள் குங்கும பூஷிதையாக, நித்ய சுமங்கலியாக இருக்கிறாள்! அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா!

அவள் எதற்கு திருமார்பில் போய் இருக்க வேன்டும்? அவளுக்கு வேறு இடம் கிடைக்க வில்லையா என்ன?
அடியவர்கள் வரும் போது, அவர்கள் புண்ணிய பாபக் கணக்குகளை இறைவன் பார்க்கத் தொடங்கினால் யாரேனும் மிஞ்சுவமா? அதனால் தான் அவன் இதயத்துக்கு அருகில் போய் உட்கார்ந்து கொண்டாள்.
நாம் அவனிடம் செல்லும் போது, நம் தவறுகள் எல்லாம் அவன் மனத்தில் உதிக்காதவாறு, அவனைக் குளிர்விக்கிறாள்!

திவ்ய மூர்த்தே = திவ்யமான அழகை உடைய தலைவா!
எத்தனையோ மூர்த்திகள் உலகில்! ராம மூர்த்தி, கிருஷ்ண மூர்த்தி, சுந்தர மூர்த்தி!
ஆனால் இவனோ திவ்ய மூர்த்தி! அழகே வெட்கப்படும் அழகன்!

ஸ்ரீ வேங்கடாசல பதே = அப்பா, திருவேங்கட மலைக்கு அதிபதியே
தவ சுப்ரபாதம் = இனிய காலை வணக்கங்கள்! திருப்பள்ளி எழுக!!
----------------------------------------------------------------------------
முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1.
M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2.
கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3.
தமிழ் சுப்ரபாதம் (நித்ய ஸ்ரீ) - (Windows Media Player)
நன்றி: Music: musicindiaonline.com, sribalaji.com Pics: tirumala-tirupati.com
----------------------------------------------------------------------------

Friday, July 13, 2007

சுப்ரபாதம்(11&12) - பெண் தாமரைக்கும் ஆண் வண்டுக்கும் சண்டை!

தாமரை-ன்னா பெண்! வண்டு-ன்னா ஆண்!
இது தான் பொதுவா இலக்கியங்களில் சொல்லப்படும் ஒப்புமை! இதை வைத்தே பெரும்பாலான பெண்கள் ஒரு டயலாக்கை நிரந்தரமாக்கி விட்டார்கள்!

தாமரை = அழகு, பொறுமை, காதல் இதெல்லாம்!
வண்டு = மலர் விட்டு மலர் தாவும் எண்ணம் கொண்டது!
"அட, உங்களுக்கு என்னங்க? ஆம்பிளைங்க நீங்கள் எல்லாம் வண்டு போல; ஹூம்...நாங்க தான் தாமரை போல!", என்ற தங்கமணிகளின் பேச்சு அன்றும், இன்றும், என்றும் உள்ளது தான்! :-)

சுப்ரபாதத்திலும் கிட்டத்திட்ட இதே வசனம் வராத குறை! இதனால் தாமரைகளுக்கும் வண்டுகளுக்கும் ஒரே போட்டா போட்டி! பஞ்சாயத்து பண்ண யாரு?......
அட நம்ம வேங்கட "கிருஷ்ணன்" தான்! கண்ணன் யார் பக்கம் தீர்ப்பு சொல்லுவான்-ன்னு உங்களுக்குத் தெரியாதா என்ன? வாங்க பார்க்கலாம்!
சென்ற பதிவில் நாரதர் வந்தார்!
அவர் பின்னாலேயே, இந்தப் பதிவில் வண்டு-தாமரை சண்டை வருகிறது! :-)





(இந்த சுலோகத்தை படிக்கும் போது, கூடவே கேட்டுப் பயில நினைத்தால், இதோ சொடுக்குங்கள்)







யோஷா கணேன வரதத்னி விமத்ய மானே
கோசால யேஷூ ததி மந்தன தீவ்ர கோஷா
ரோஷாத் கலிம் விததே ககுபஸ்ச கும்பா
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்


யோஷா கணேன = இளமையான பெண்கள் கூட்டம்;

கோசால யேஷூ, ததி மந்தன = கோ சாலை - பசுக்கள் வாழும் இடைச்சேரியில் - தங்கள் கை வளையல்கள் குலுங்கத் தயிர் கடைகிறார்கள்!
கடைவது பாலை! அப்படிக் கடைந்தால் வருவது தயிர்!
அப்படியிருக்க தயிர் கடைகிறார்கள் என்று எப்படிச் சொல்லலாம்?
பால் கடைகிறார்கள் என்று அல்லவா சொல்ல வேண்டும்? - இதற்கு ஒரு இலக்கணக் குறிப்பு கூட இருக்கு தமிழில்! பள்ளியில் படிச்சது ஞாபகம் இருந்தா சொல்லுங்க பார்ப்போம்! :-)

பெரிய கடலைக் கடைந்த போதே தாங்கி நின்ற பரம்பொருள், இன்று ஆயர் சேரியில், சிறிய தயிரைக் கடையும் போதும், தாங்கி நிற்கிறான்!


தீவ்ர கோஷா = தீவிரமான கோஷம் - தயிர் கடையும் பெரும் சப்தம் எழுகிறது!
சாதாரண தயிர் கடையும் விஷயம் - அது எப்படிப் பெரும் சத்தம் எழும்?
"ஆய்ச்சியர் மத்தினால், ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?" என்ற ஆண்டாளின் பாசுரத்தை நினைவிற் கொள்ளுங்கள்!
விடியற் காலை; திருமலை மீது;

அப்போதெல்லாம் மலை மேல் ஆள் அரவம் அதிகம் இல்லை போலும்! அதனால் தான் தயிர் அரவம் அதிகம் கேட்கிறது!

கிராமத்தில் பெரிய பானைகளில் கடைவதைப் பார்த்திருந்தாலோ, கேட்டிருந்தாலோ தெரியும்! பெரிய பானையைத் தூணை ஒட்டி வைத்து,
தூணில் பெரிய மத்தை நாணல் கயிற்றினால் கட்டி, அதைக் கடையும் போது,
கர்..கர்...கர்ர்ர்....கர்ர்ர்ர் என்று பெரும் சத்தம் எழும்பும்...கேட்டு மகிழ்ந்துள்ளீர்களா?
(மிக்சியில் விப்பிங் ப்ளேடு போடு, விப் செய்தால் இதை விடச் சத்தம் கூடுதலாக வரும் என்று யாரோ சொல்வது காதில் விழுகிறதே:-)


ரோஷாத் கலிம் விததே = இந்தப் பெரும் ஒலி, எங்கும் பரவி எதிரொலிக்கிறது!
ககுபஸ்ச கும்பா = பானையின் ஒலி, மலையின் மேல் முழங்குகிறது!
பெருமாளே! இதைக் கேட்டுமா, நீ இன்னும் எழாமல் இருக்கிறாய்?

சேஷாத்ரி சேகரவிபோ = சேஷ மலைச் சிகரத்துக்கு அரசனே!
தவ சுப்ரபாதம் = இனிய காலை வணக்கங்கள்! திருப்பள்ளி எழுவாயாக!!


அடுத்து இதோ.......பெண் தாமரைக்கும் ஆண் வண்டுக்கும் சண்டை!







பத்மேச மித்ர சதபத்ர கதாலி வர்க்கா
ஹர்த்தும் ச்ரியம் குவலயஸ்ய நிஜாங்க லக்ஷ்ம்யா
பேரீ நிநாத மிவ பீப்ரதி தீவ்ர நாதம்
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்


பத்மேச மித்ர = தாமரைப் பூவின் (பத்மம்) நட்புக்குப் பாத்திரமான வண்டு

குவலயஸ்ய = குவளைப் பூ
கருநீல நிறத்தில் இருக்கும் குவளை மலர்! பார்ப்பதற்கு அதுவும் வண்டின் நிறம் போலவே உள்ளது! அதைப் பார்த்து வண்டு பொறாமை கொள்கிறது. பகைமை கொள்கிறது!
"எனக்குப் போட்டியாக, அதே நீலமா?" என்ற முணுமுணுப்பு...சிறிது நேரத்திலேயே ரீங்கார ஒலியாகி...பெரும் சப்தம்!


பேரீ நிநாத மிவ = பேரிகை (முரசு) கொட்டுவது போல
பீப்ரதி தீவ்ர நாதம் = பெரும் ஓசை, தீவிரமான நாத சத்தம்
வண்டுகள் எல்லாம் தங்கள் நீலமே, குவளையின் நீலத்தை விட அழகாக இருக்கிறது என்று பொறாமைக் கீதங்கள் பாடுகின்றன.
அடே நீல வண்ணா! பாவம் அவற்றுக்குத் தெரியவில்லை போலும்,

உன் நீலம் ஒன்றும் உலகத்தில் உள்ளது என்று! அந்த நீல மேக சியாமளத்தின் முன் வேறு எந்த நீலமும் நிற்க முடியுமா என்ன?

பெருமாளே! இன்னுமா எழவில்லை?
இனித் தான் எழுந்திராய்...ஈதென்ன பேர் உறக்கம்?

வண்டுகளுக்கும், தாமரைப் பூக்களுக்கும் நடக்கும் இந்த ஊடலைத் தீர்த்து வைக்கவாவது...சீக்கிரம் எழுந்திருப்பாயாக!

சேஷாத்ரி சேகரவிபோ = சேஷ மலைச் சிகரத்துக்கு அரசனே!
தவ சுப்ரபாதம் = இனிய காலை வணக்கங்கள்! திருப்பள்ளி எழுவாயாக!!
சு+ப்ரபாதம் = உனக்கும், அதனால் எங்களுக்கும் சுகமான காலைப் பொழுதாக மலரட்டும்.

----------------------------------------------------------------------------
இனி மேல், இந்த வலைப் பூவில்..."சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்" வராது!
----------------------------------------------------------------------------
முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1.
M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2.
கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3.
தமிழ் சுப்ரபாதம் (நித்ய ஸ்ரீ) - (Windows Media Player)
நன்றி: Music: musicindiaonline.com, sribalaji.com Pics: tirumala-tirupati.com
----------------------------------------------------------------------------

Saturday, July 07, 2007

சுப்ரபாதம்(9&10) - நாரதா, ஒனக்கு வேறு இடம் கிடைக்கவில்லையா?

காலாங்காத்தால வந்துட்டான்-பா கடன்காரன் என்று நம்மில் பல பேர் எத்தனை முறை சலித்துக் கொண்டிருப்போம்! அதுவும் தூங்கி எழுந்து பெட் காபி குடிக்கலாம் என்று வாய்க்கு அருகே லோட்டாவைக் கொண்டு போகும் வேளையில்................நம் முன்னே நாரதர் வந்து நின்றால்?.....

அய்யோ! அவர் கலக்கும் கலகக் காபி, இதை விட படு ஸ்டாராங்கா இருக்குமே! "நாரதா, இன்று உனக்கு வேறு இடம் கிடைக்கவில்லையா" என்று கேட்பார் அல்லவா சிவாஜி, திருவிளையாடல் படத்தில்!

பெருமாள் துயில் எழும் வேளையிலும், அதே போல் கன்-டைமுக்கு வந்து நிற்கிறார் நாரதர். என்ன விஷயமோ?....... பார்ப்போம் வாருங்கள்!
சென்ற பதிவில்
"கிளிகள்" பெருமாளை எழுப்பின; இன்றோ "கிலிகள்" எழுப்ப வந்துள்ளன! :-)





(இந்த சுலோகத்தை படிக்கும் போது, கூடவே கேட்டுப் பயில நினைத்தால், இதோ சொடுக்குங்கள்)




தந்த்ரீ ப்ரகர்ஷ மதுர ஸ்வநயா விபஞ்ச்யா
காயத்ய நந்த சரிதம் தவ நாரதோபி
பாஷாச மக்ர அசக்ருத் கரசார ரம்யம்
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்


தந்த்ரீ= தந்தி; ப்ரகர்ஷ = அடர்ந்து நீண்ட
நாரதர் தோளில் எப்போதும் தொங்குமே, அது ஒரு விசேட வீணை. அதற்கு மஹதி என்று பெயர்.
அப்போதே எளிதில் எங்கும் எடுத்துச் செல்லக் கூடிய (மொபைல்) வீணையைக் கையாண்டுள்ளார் பாருங்கள்! ஏன் ஊர் ஊராக எடுத்துச் செல்ல வேண்டும்?
எங்கும் ஒரு இடத்தில் நிலையாக இல்லாது......திரிந்து கொண்டே இருப்பது அவர் பெற்ற சாபம். அது தனிக் கதை! அதற்கு ஏற்றவாறு ஒரு இசைக் கருவி மஹதி!
இன்று நாம் கச்சேரிகளில் காணும் வீணையைத் தோளில் தொங்க விட்டுக் கொண்டு, நடமாட முடியுமா என்று கற்பனை செய்து பாருங்கள்! :-)
அடர்ந்து நீண்ட தந்தி உடைய அந்த வீணையில்...

மதுர ஸ்வநயா விபஞ்ச்யா = மதுரமான உன் நாமங்களை சொல்லிக் கொண்டு
பெருமாள் அழகன் என்பது அனைவரும் அறிந்ததே! அவன் திருநாமம் அவனை விடவும் அழகு, இனிமை! அதனால் தான் அது மதுரமான நாம சங்கீர்த்தனம்...
"நாராயண நாராயண ஜெய கோவிந்த ஹரே!" என்று தான் நாரதர் பொதுவாக மீட்டுவாராம்!

நாராயணா என்ற பெயரைக் கேட்டாலே எரிந்து விழும் இரணியகசிபு கூட, இதன் ராகத்தில் மயங்கினானாம்! நாராயண நாமத்தை வாய் விட்டுப் பாடினால் தானே அவன் வம்பு செய்வான்! பாடாமல், மீட்டினால்?
பாவம், நாரதர் தன் எதிரியின் திவ்ய மங்களத் திருநாமங்களைத் தான் பாடுகிறார் என்று அவனுக்கு தெரியாமால், ஆகா ஓகோ என்று ரசித்தானாம்:-)

காயத்ய நந்த சரிதம் = உன் சரிதத்தை, நந்த கிருஷ்ண சரிதத்தைக், கானம் பாடுகிறார்

தவ நாரதோபி = தவ ஒழுக்கத்தில் சிறந்த நாரத முனி!
நாரதர் சார்பு நிலைகள் எதுவும் அற்றவர். தேவர், அசுரர் என்று எல்லாரும் அவரை வரவேற்று உபசரிப்பார்கள்! தர்மம் தழைக்க, இறைவனின் திருவுள்ளப்படி காரியம் ஆற்றுபவர்!
கலகப் பிரியர் என்று உலகம் பழித்தாலும் புகழ்ந்தாலும், அந்தச் சாபத்தையும் வரமாக ஆக்கிக் கொண்டவர்! நாரதர் கலகம் நன்மையில் தானே முடியும்!

நாரதர் சிறந்த முருக பக்தர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

வள்ளித் திருமணத்தில் பெரும் பங்கு வகிப்பவர்! முருகனுக்கே அறிவுரை சொல்லி, காதல் திருமணம் தான் என்றாலும், வள்ளியின் பெற்றோருடைய ஆசி திருமணத்துக்குத் தேவை என்று வலியுறுத்துவார்.

அப்பேர்பட்ட மகரிஷி, கர்நாடக இசையின் ஆதி குரு,

இதோ.......திருமலையில், எம்பெருமான் சந்நிதி முன்பு, பங்காரு வாகிலி (தங்க வாயில்) நின்று கொண்டு, பூபாள ராகத்தில் கீர்த்தனை மீட்டி, திருப்பள்ளி எழுச்சி பாடுகிறார்!

பாஷா சமக்ரம் அசக்ருத் = முழு வாக்கியங்களை ஒரு முறை மட்டும் பாடி நிறுத்தி விடாது, தொடர்ந்து பாடி
தொடர்ந்து பாடுவது என்பது ஒரு cycle, சுழற்சி! ஓம் நமோ வேங்கடேசாய, என்று ஜபிப்பது போல!
காலையில் நம்மை எழுப்ப, நம் அம்மாவும், "எழுந்துருடா" என்று ஒரு முறை சொன்னால் வேலைக்கு ஆகுதா? தொடந்து ஜபம் செய்கிறார்களே, அது போலத் தான்!
:-)

கரசார ரம்யம் = இனிமையான, ரம்மியமான நாரத சங்கீர்த்தனம் கேட்கிறதே!

சேஷாத்ரி சேகரவிபோ = சேஷ மலைச் சிகரத்துக்கு அரசனே!
தவ சுப்ரபாதம் = இனிய காலை வணக்கங்கள்! திருப்பள்ளி எழுவாயாக!!


அடுத்து...............பாருங்க! ஒரு சூப்பர் இயற்கைக் காட்சி!

ஷாப்பிங் மாலில் இரவு நேரம்! எல்லாரும் வெளியேறி விட்டார்கள் என்று நினைத்துக் கதவடைத்து விட்டார்கள்!
ஆனால் பாவம்...எங்கோ உள்ளே இருந்து கொண்டு, விலை ஆராய்ச்சி செய்து கொண்டு இருந்த நீங்கள் மாட்டிக் கொண்டீர்கள்! யாருக்காச்சும் இப்படி நடந்துள்ளதா? :-)
இரவெல்லாம் தனியாக மாட்டிக் கொண்டு, எப்போதடா விடியும் என்று காத்துக் கொண்டிருக்குது ஒரு ஜீவன், திருப்பதி மலையின் மேலே!
யார் அது?.............. பாட்டைப் பாருங்கள்!








ப்ருங்காவலீ ச மகரந்த ரஸா நுவித்த
ஜங்கார கீத நிநதைஸ் சக சேவநாய
நிர்யாத்யு பாந்த சரஸீ கமலோ தரேப்ய
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்


ப்ருங்காவலீ ச மகரந்த
ரஸா நுவித்த = மகரந்த ரசத்தை அனுபவிக்கும் வண்டுகள் சிறைபட்டுக் கிடக்கின்றன
தாமரைப் பூ எவ்வளவு உத்தமமான காதலி! மாலை வேளை ஆனதும், சூரியக் காதலன் போய் விடுவான் என்று தெரிந்து, தானும் தன் இதழ்களை மூடிக் கொள்கிறாள்!
பாவம், இவர்கள் காதலின் ஆழத்தை அறியாத வண்டுகள்,

இன்பமாக தேன் குடித்துக் கொண்டு போதையில் இருக்கின்றன. தாமரை கூம்பிக் கொள்கிறது. உள்ளேயே மாட்டிக் கொண்டன வண்டுகள்!

இன்பம் என்று நினைத்த தேனே எமனாய் ஆகிவிட்டது வண்டுக்கு!
இரவெல்லாம் தாமரைச் சிறைவாசம்!....................................
அதே இன்பத் தேன் இப்போது கசக்க ஆரம்பித்து விட்டதோ வண்டுக்கு?
எப்போதடா பகல் வேளை வரும், எப்போது தாமரை விரியும், எப்போது மீண்டு வரலாம் என்று கணக்கு போடத் துவங்கி விட்டது வண்டு! - நம் ஆன்மாவும் இப்படித் தானோ?

ஜங்கார கீத நிநதைஸ்,
சக சேவநாய = ரீங்கார சப்தத்தை இனிய கீதம் போல் எழுப்புகின்றன. உன்னைச் சேவிக்கின்றன!
சிறைவாசத்தால் சித்தம் தெளிந்த வண்டு, உன்னை மனத்துக்குள்ளேயே சேவித்து, ரீங்கார கீதம் பாட....அதற்கும் ஒரு விடியல் பிறக்கிறது!

நிர்யாத்யு பாந்த
சரஸீ கமலோ தரேப்ய = அந்தக் குளத்தில் (சரஸ்) இருக்கும் தாமரை (கமலம்), இதோ விரிகிறது....ஆன்மா விடுகிறது!
விடியல் கிடைக்கிறது, தாமரை விரிகிறது, சிறை ஒழிகிறது, வண்டு பறக்கிறது!

சேஷாத்ரி சேகரவிபோ = சேஷ மலைச் சிகரத்துக்கு அரசனே!
தவ சுப்ரபாதம் = இனிய காலை வணக்கங்கள்! திருப்பள்ளி எழுவாயாக!!
சு+ப்ரபாதம் = உனக்கும், அதனால் எங்களுக்கும் சுகமான காலைப் பொழுதாக மலரட்டும்.
----------------------------------------------------------------------------
முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1.
M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2.
கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3.
தமிழ் சுப்ரபாதம் (நித்ய ஸ்ரீ) - (Windows Media Player)
நன்றி: Music: musicindiaonline.com, sribalaji.com Pics: tirumala-tirupati.com
----------------------------------------------------------------------------

Friday, April 27, 2007

சுப்ரபாதம்(7&8) - கிளி கூவிற்று! தூக்கம் போயிற்று!!

யாராச்சும் வயற்காட்டிலோ, தோப்பிலோ தூங்கி இருக்கீங்களா? சரி விடுங்க!
வீட்டின் மொட்டை மாடியிலாச்சும் தூங்கி இருக்கீங்களா?
அப்படி தூங்கினவங்களுக்குத் தெரியும், மறு நாள் காலை, அலாரம் இல்லாமலேயே தானாக எழுந்திரிக்க முடியும் என்று!

அது எப்படி? யார் எழுப்புவாங்க?
"கொய்ங்க்க்க்க்க்க்" என்ற சப்தம் - வண்டுகள் பறக்கும் வயலில், தோட்டத்தில்!
போதாக்குறைக்குப் பறவைகளின் சத்தம்...அதுவும் கிளி!
சத்தம் மட்டும் போடாது; சும்மானாங்காட்டியும் இறக்கையைப் படபட என்ற அடித்துக் கொண்டே இருக்கும்!
சேவல், மாடு எல்லாம் இருந்தா சொல்லவே வேண்டாம்! எழுந்திரிச்சே ஆக வேண்டும்!
பெட் காபி எல்லாம் கிடைக்காது; கோமியம் வேண்டுமானால் கிடைக்கும்! :-)))

அட, இதெல்லாம் பத்தாம் நூற்றாண்டு என்கிறீர்களா? அட எங்கப்பா நடக்குது? திருமலையில்...
அங்கு கிளிகள் எல்லாம் பாயாசம் குடிக்குதுங்க! வாங்க, பார்க்கலாம்!
சென்ற பதிவில் முருகன் வந்தான். மாமா என்றான். பெருமாளைத் துயிலும் எழுப்பினான்! இந்தப் பதிவில் வரி வண்டும், பச்சைக் கிளியும்!




(இந்த சுலோகத்தை படிக்கும் போது, கூடவே கேட்டுப் பயில நினைத்தால், இதோ சொடுக்குங்கள்)





ஈஷத் ப்ரபுல்ல சரசீருஹ நாரிகேள
பூகத்ருமாதி சு மநோகர பாலிகாநாம்
ஆவாதி மந்த மநிலஸ் சக திவ்யகந்தை
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்



ஈஷத் ப்ரபுல்ல சரசீருஹ = அழகாக மலரத் துவங்கியுள்ள தாமரை
இன்னும் சூரியன் உதிக்க வில்லை. இருப்பினும் தாமரை சற்றே மலரத் துவங்கியுள்ளது!
இது எப்படி?
இறைவன் திருமுகம் கோடி சூர்யப் பிரகாசம் அல்லவா? அவன் இன்னும் அரைகுறைத் தூக்கத்தில் உள்ளான்...அரைகுறை விழிப்பிலும் உள்ளான்.
அதனால் அவன் முகச் சூரியனைக் கண்டு, தாமரையும் அரைகுறை மலர்ச்சியில் உள்ளது! :-)


நாரிகேள = தென்னை மரம்
பூ கத்ருமாதி சு மநோகர = மலையில் நீண்டு நிற்கும் அழகான
பாலிகாநாம் = பாளைக் கமுகு என்னும் பாக்கு மரங்கள்

ஆவாதி மந்த மநிலஸ் = இப்படி மெல்லிய தென்றல், இந்த மரங்களில் புகுந்து வீச
சக திவ்யகந்தை = திவ்யமான நறுமணம், காலையில் எழும்புகின்றதே!

கமுகு, தென்னம் பாளைகள் பார்த்துள்ளீர்களா...?
இல்லை மலையாளத்து நண்பர் யாராவது இருந்தால் தெரியும்!
அந்தப் பாளைகளை விரித்தால், வீசும் பாருங்க ஒரு வாசம்....அவ்வளவு சுகந்தமா இருக்கும்.

தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் திருப்பள்ளி எழுச்சியில் வருவதை,
இங்கு அப்படியே காட்டுகிறார், சுப்ரபாதம் எழுதிய அண்ணங்காச்சாரியார்.
சுடரொளி பரந்தன சூழ்திசை யெல்லாம்
....
பாயிருள் அகன்றது
பைம்பொழில் கமுகின்
மடலிடைக் கீறி வண் பாளைகள் நாற
வைகறை கூர்ந்தது மாருதம்
இதுவோ?


சேஷாத்ரி சேகரவிபோ = சேஷ மலைச் சிகரத்துக்கு அரசனே!
தவ சுப்ரபாதம் = இனிய காலை வணக்கங்கள்! திருப்பள்ளி எழுவாயாக!!




உந்மீல்ய நேத்ர யுக முத்தம பஞ்ஜரஸ்தா
பாத்ரா வசிஷ்ட கதலீபல பாயசாநி
புக்த்வா சலீலமத கேளிசுகா: படந்தி
சேஷாத்ரி சேகரவிபோ தவ சுப்ரபாதம்


உந்மீல்ய நேத்ர = (நேத்ரம்=கண்); தங்கள் குட்டிக் கண்களைத் திறந்து வைத்துக் கொண்டு
யுக முத்தம பஞ்ஜரஸ்தா = (பஞ்ஜரம்=கூண்டு); தங்கள் ஜோடிகளுடன், உயரமான கிளிக் கூண்டுக்குள்ளே அமர்ந்து கொண்டு......
தியாகராஜரும் "ஓங்கார பஞ்சர கீ" என்று முதல் பஞ்சரத்னக் கீர்த்தனையில் (ஜகதா என்று தொடங்கும் கீர்த்தனை) பாடுகிறார்.
நம் மனம் என்னும் கிளி, ஓங்காரக் கூண்டிலே ஒடுங்குவதாகப் பாடுகிறார்.

பாத்ரா வசிஷ்ட = பாத்திரங்களில் மீதி வைக்கப்பட்டுள்ள
கதலீ பல பாயசாநி = வாழைப் பழம் கொண்டு செய்யப்பட்ட பாயசத்தை புக்த்வா = சாப்பிடுகின்றன
ஒவ்வொரு நாள் இரவும், சுவாமிக்கு ஏகாந்த சேவை ஆகும் போது, வாழைப்பழங்கள்/முந்திரிகள் கலந்த பால் பாயசம் நிவேதனம் செய்வார்கள்.
பின்னரே போக ஸ்ரீநிவாசனை, சயன மண்டபத்தில், கட்டிலில் கிடத்தி, தூங்கப் பண்ணுவார்கள்.
திரை போட்ட பின்னர், அந்தக் கெட்டியான பாயசத்தை, நமக்கும் பிரசாதமாகத் தருவார்கள்.....இதையே கிளிகள் மறுநாள் காலையில் உண்கின்றன.
உடுத்துக் களைந்த பீதக ஆடை போல...அவன் உண்ட மிச்சத்தை, அவை உண்கின்றன!
சேஷத்தை (மிச்சத்தை) உண்டு, சேஷத்வம் பெறுகின்றன!


சலீலமத கேளி சுகா = (சுகம்=கிளி); மிக இன்பமாக விளையாடும் பச்சைக் கிளிகள்
படந்தி = உன் நாமங்களை பாடுகின்றன!
"கோவிந்தா, கோவிந்தா" என்று மதுரமாக கிளிகள் எல்லாம் கீச்கீச் என்று கொஞ்சினால் எப்படி இருக்கும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்!
வரிசையில் நிற்கும் அடியார்களுக்கு இதைக் கண்டால் கால்களும் கடுக்குமோ?

சேஷாத்ரி சேகரவிபோ = சேஷ மலைச் சிகரத்துக்கு அரசனே!
தவ சுப்ரபாதம் = இனிய காலை வணக்கங்கள்! திருப்பள்ளி எழுவாயாக!!
சு+ப்ரபாதம் = உனக்கும், அதனால் எங்களுக்கும் சுகமான காலைப் பொழுதாக மலரட்டும்.

----------------------------------------------------------------------------
முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1.
M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2.
கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3.
தமிழ் சுப்ரபாதம் (நித்ய ஸ்ரீ) - (Windows Media Player)
நன்றி: Music: musicindiaonline.com, sribalaji.com Pics: tirumala-tirupati.com
----------------------------------------------------------------------------

Saturday, February 10, 2007

சுப்ரபாதம்(6) - சேயோன் வணங்கிடும் மாயோன்!

தடைக் காலம் முடிந்தது! தை மாதம் ஹஸ்த நட்சத்திரத்தோடு! (அனத்யயன காலம்) ; அதனால், தமிழ் மறைகளுடன் சேர்ந்து கொண்டு, மீண்டும் சுப்ரபாதம் தொடக்கம்!

சென்ற பதிவில் இறைவன் திருவடிச் சிறப்பும், சப்தரிஷிகள் அவனைத் துயில் எழுப்புவதையும் கண்டோம்!
சரி, ரிஷிகளுக்கு அடுத்தது யார் வருவார்கள்?
அவர்கள் ஓதும் பிரணவத்துக்குப் பொருள் சொன்னவர்கள் தான் வருவார்கள்.
தமிழ்க்கடவுள் முருகன் - பெருமாளின் ஆசை மருகன்,
திருமலைக் கோவிலுக்கு வந்து, இறைவனைத் துதித்து, துயில் எழுப்புகிறான்!
சேயோன், மாயோன் சந்நிதிக்கு வந்து சேவிக்கிறான்.

திருமலையில் முருகப்பெருமான் தவம் செய்த தீர்த்தம் (நீர்வீழ்ச்சி) ஒன்று உள்ளது. போய் இருக்கிறீர்களா? குமாரதாரை என்று பெயர். சற்றுக் கடினப் பட்டு, நடந்து தான் போக முடியும். ஆனால் இயற்கை வளம் கொஞ்சும் அருவி.



su_img6supr6


(இந்த சுலோகத்தை படிக்கும் போது, கூடவே கேட்டுப் பயில நினைத்தால், இதோ சொடுக்குங்கள்)




பஞ்சானன ஆப்ஜபவ சண்முக வாசவாத்யா
த்ரைவிக்ரமாதி சரிதம் விபுதா ச்துவந்தி
பாஷாபதி படதி வாசர சுத்திமாராத்

சேஷாத்ரி சேகரவிபோ தவ சுப்ரபாதம்

பஞ்சானன = ஐந்து முகங்கள் கொண்ட சிவபெருமான்
சிவனாருக்கு வெளியில் தெரியக்கூடிய ஐந்து முகங்கள்; ஆறாம் முகம் யோக காலங்களில் மட்டும் வெளிப்படும். பெருமாளின் இருதயத்தில் "அஜபா" என்ற நடனம் புரிபவன் ஈசன். அந்த இதயலிங்கத்துக்குத் தான் இன்று திருவாரூர் ஆலயத்தில் வழிபாடு நடக்கிறது.

ஆப்ஜ பவ = தாமரை மேல் உள்ள பிரம்மா
ஆப்ஜ=தாமரை; தாமரைத் தலைவன் பிரம்மன் என்று பொருள்.
ஈசனைப் பஞ்சமுகன் என்று சொன்னது போல், இவரை நான்முகன் என்று சொல்லவில்லை பாருங்கள். ஏன்?
முகக் கணக்கால் விளைந்த பிணக்கால் - இவருக்கு ஐந்து முகம் போய் நான்முகம் ஆனது தனிக்கதை. அதனால் தான் செருக்கின் மூலமே வேண்டாம் என்று தாமரை நாயகன் என்று சொல்லிவிட்டார்.
தத்துவம் என்னவென்றால்: உயர் பொறுப்பில் உள்ளவர்கள், அந்தப் பொறுப்போடு கூடவே வரும் பெரும் அதிகாரம். அந்தப் போதையில் மூழ்கி விடாமல், தாமரை இலை மேல் நீராய் இருக்க வேண்டும் என்பதே.

சண்முக = ஆறுமுகக் கடவுள், முருகப் பெருமான்
முருகப்பெருமானுக்கும் எம்பெருமானுக்கும் அப்படி ஒரு உறவு, அன்னோன்யம்.
இது பற்றித் தனிப் பதிவே போடலாம்; மால் மருகன் என்று பல இடங்களில் கொண்டாடப் படுகிறான்.

திருச்செந்தூரில் அசுர வதம் முடிந்து, சிவபெருமானை நோக்கித் தவக்கோலம் கொண்டான் முருகன். போர்க்கோலம் போய் இப்போது தவக்கோலம்.
எஞ்சியுள்ள சில அசுரர்களோ, அவர்கள் உறவினரோ, பழி வாங்கப் புறப்பட்டால்?
பார்த்தார் பெருமாள்! தியானத்தில் உள்ள மருகனைக் காக்கத் தானே கடலுக்கும் அவனுக்கும் நடுவில் பள்ளி கொண்டு விட்டார்!
குலசேகரப்பட்டினம் என்ற ஊர், திருச்செந்தூருக்கு மிக அருகில்! செந்தூர் ஆலயத்திலேயே பெருமாளுக்குத் தனிச் சந்நிதி இதனால் தான்!

வாசவ ஆத்யா = அமரர் தலைவன் இந்திரன் - இவர்கள் எல்லாரும்
(வாசவன்=இந்திரன்)

எல்லாம் சரி, இவர்கள் எல்லாரும் ஏன் ஒரே கூட்டமாக, இங்கு வந்துள்ளார்கள்?


த்ரைவிக்ரமாதி = திரிவிக்ரமன் - வாமனன் - உலகளந்த பெருமாள்!
திருக்கோவிலூர் என்ற ஊருக்குப் போய் உள்ளீர்களா?
கதை கதையாகச் சொல்லலாம் அந்த ஊரைப் பற்றி.

உலகளந்த பெருமாள் திருக்கோலம்.
அவதாரங்களிலேயே நடுநாயகமான அவதாரம். இதுவரை உள்ள ஒன்பதில், ஐந்தாம் அவதாரம் இந்த வாமன-திரிவிக்ரம அவதாரம்.
இதற்கு முன்பு விலங்குகள். இதற்குப் பின்பு மனிதர்கள் என்று பகுத்துக் காட்டும் அவதாரம்.
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே என்பார் வள்ளலார். அப்படி நடுவிலே நின்ற நாயகன் திரிவிக்ரமப் பெருமாள்.

அழிவு, சம்காரம் என்பதே இல்லாத ஒரே அவதாரம் இது ஒன்று தான்!

திருக்குறளப்பன், இந்த முறை, திருவை மறைத்து விட்டு,
வெறும் குறளப்பனாக வந்தான்.
"தீக்குறளை சென்றோதோம்" என்று சொல் ஒரு சொல் பதிவில் வருகிறதே - அந்தக் "குறளை" அல்ல இது! இது குள்ள உருவாய் வந்த குறள்.
இந்த அவதாரத்தில் தான் பூமிக்கும் பல நன்மைகள் நடந்தன. அதில் மிக முக்கியமான ஒன்று, கங்கை ஆறு தோன்றியது!

அதனால் தான் இந்த அவதாரத்தை மட்டும், எல்லாச் சமயங்களிலும், மதங்களிலும் சிறப்பித்துக் கொண்டாடுகிறார்கள்.
கணபதியைப் போலவே குள்ள உருவம் வாமனம். முருகபக்தர் அருணகிரியும் வாமனனைப் போற்றிப் பாடுகிறார்.
சைவ, வைணவ, சாக்த இலக்கியங்கள் மட்டும் இல்லை, ஜைன-பெளத்த இலக்கியங்களிலும் இந்த அவதாரக் குறிப்பு காணப்படுகிறது!

1189lordvamana

மேலும், எந்தப் பிரிவினர் செய்யும் யாகத்திலும், மூன்று முறை இந்தத் திரிவிக்ரமனுக்கு அவிர்ப்பாகம் அளித்தே தான் யாகம் செய்ய வேண்டும் என்பது நியதி.
அது கணபதி ஹோமம் ஆகட்டும், லலிதா சண்டி ஹோமம் ஆகட்டும், ஈஸ்வரனின் மிருத்யுஞ்ஜய ஹோமம் ஆகட்டும், வைணவ சுதர்சன ஹோமம் ஆகட்டும், அவ்வளவு ஏன் - காபாலிகள் செய்யும் அகோர ஹோமங்கள ஆகட்டும்! அனைத்திலும் உலகம் காத்த திரிவி்க்ரமனுக்கு மும்முறை துதி வழங்கப்படும். அத்தனை பெருமை இவனுக்கு!

திருப்பாவையும் ஒரு யக்ஞம் தானே! அதனால் தான்,
முதல் பத்தில் = ஓங்கி உளகளந்த உத்தமன் பேர் பாடி
இரண்டாம் பத்தில் = அம்பரம் ஊடுஅறுத்து ஒங்கி உலகளந்த
மூன்றாம் பத்தில் = அன்றிவ் வுலகம் அளந்தாய் அடி போற்றி

என்று ஆண்டாளும் இவ்வாறே மூன்று முறை அவிர்ப்பாகம் அளிக்கின்றாள், வாமன மூர்த்திக்கு!

சரிதம் விபுதா ஸ்துவந்தி = அந்த வாமனச் சரிதத்தைச் சொல்லித், துயில் எழுப்ப வந்துள்ளனர்.
எப்பேர்ப்பட்ட பாவமாக இருந்தாலும் சரி, மனம் திருந்தும் எண்ணம் வந்தாலே போதும்! வாய் விட்டுக் கூறக்கூட வேண்டாம்! திருத்தி ஆட்கொள்ள திரிபுவனமும் கடந்து வருவான் என்பதைக் காட்டும் வாமன அவதாரம்.
அதனால் தான் பாவங்களை எரிக்கும் (வேங்+கடம்) மலை மேல் நிற்பவனுக்கு, இந்த அவதாரக் குறிப்பைச் சொல்லித் துயில் எழுப்புகின்றனர் சிவன், பிரம்மா, முருகன், இந்திரன் எல்லாரும்.



வாசர சுத்திமாராத் = அன்றைய நாள் கணக்கான பஞ்சாங்கத்தை
வாசரம்=நாள்; சோமவாசரம் என்றால் திங்கட்கிழமை. ஒவ்வொரு நாள் காலையிலும் அந்த நாளின் வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் என்று ஐந்து அங்கங்கள்.
இதை இறைவன் முன்னிலையில் ஒரு weather report (வானிலை அறிக்கை) போலப் படிப்பது இன்றும் திருமலையில் வழக்கம். பஞ்சாங்க சிரவணம் என்று பெயர்.

பாஷாபதி படதி = பல மொழிகளில் வல்லவரான பிரகஸ்பதி, படிக்கிறார்
பொதுவாக நாம் பேசும் போது கூட, "இவரு என்ன பெரிய பிரகஸ்பதியா?" என்று கேட்போம். அப்படி கல்வி கேள்விகளில் சிறந்தவர் இவர். அதனால் அவர் பாஷா பதி (மொழியின் பதி). தேவர்களின் குரு. இந்திரனுக்குத் தர்மத்தைச் சொல்லி அவனை நல்வழிப்படுத்துபவர்.

இப்படி எல்லாத் தெய்வங்களும் உன் சந்நிதிக்கு வந்துள்ளார்கள்.
சேஷாத்ரி சேகர விபோ = சேஷ மலைச் சிகரத்துக்கு அரசனே, திருவேங்கடநாதா

தவ சுப்ரபாதம் = இனிய காலை வணக்கங்கள்! திருப்பள்ளி எழுவாயாக!!
சு+ப்ரபாதம் = உனக்கும், அதனால் எங்களுக்கும் சுகமான காலைப் பொழுதாக மலரட்டும்.

----------------------------------------------------------------------------
முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1.
M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2.
கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3.
தமிழ் சுப்ரபாதம் (நித்ய ஸ்ரீ) - (Windows Media Player)
நன்றி: Music: musicindiaonline.com, sribalaji.com Pics: tirumala-tirupati.com
----------------------------------------------------------------------------

Friday, December 15, 2006

தமிழுக்காக, சுப்ரபாதம் பாதியில் நிறுத்தம்!

மார்கழி மாதம் தொடங்கியது! (Dec-16-2006);
தமிழுக்காக, சுப்ரபாதம் பாதியில் நிறுத்தப்பட்டது!
எங்கு?... தமிழ் அறிஞர் ஒருவரின் வீட்டிலா? இல்லை....
தமிழக அரசு ஏதாச்சும் ஆணை பிறப்பித்து உள்ளதா?? இல்லை! அதெல்லாம் இல்லை!

இது காலம் காலமாக விரும்பிச் செய்யப்பட்டு வரும் ஒரு வழக்கம்! எங்கு?
திருமலை திருப்பதியில்!
அதனால், இங்கு அடியேன் வலைப்பூவிலும் சுப்ரபாதப் பதிவு, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் படுகிறது!

ஏன் இப்படி?
ஆண்டாளுக்குப் பெருமை சேர்க்க; தமிழுக்குப் பெருமை சேர்க்க!
திருமலையில் ஒவ்வொரு இரவும் பள்ளியறை (ஏகாந்த) சேவையில், போக ஸ்ரீநிவாசனைத் தொட்டிலில் கிடத்துவது வழக்கம்!
ஆனால் மார்கழியில் மட்டும், கண்ணனைக் கிடத்துகிறார்கள்!

மறுநாள் காலையில், நம் ஆண்டாள் கண்ணனை எழுப்பிப் பாட்டு இசைக்கி்றாள்! திருப்பாவை முப்பது பாடல்களும் தினமும் பாடுகிறார்கள், வேங்கடவனின் முன்பு! அதுவும் பூசையின் முதல் பாட்டே, கோதையின் தமிழ்ப் பாட்டு தான்!

இப்படி தமிழுக்குப் பெருமை சேர்க்க, ஏற்பாடுகள் செய்தது யார் தெரியுமா?
எம்பெருமானார், உடையவர் என்றெல்லாம் வைணவர் உலகம் கொண்டாடும் இராமானுஜர் தான் இவ்வாறு செய்தது!
இதைக் திருமலைக் கோவில் ஒழுகு விதியாகவே ஏற்படுத்தினார்! திருப்பாவை மீது அவருக்கு அவ்வளவு பாசம்! திருப்பாவை ஜீயர் என்ற ஒரு பெயரும் அவருக்கு உண்டு!





இதற்காக ஏதோ மார்கழியில் மட்டும் தான் திருமலையில் இப்படி என்று யாரும் எண்ணி விட வேண்டாம்! தினமுமே திருப்பாவை ஓதப்படுகிறது! மற்ற மாதங்களில் முதற்காலப் பூசையின் போது ஓதுகிறார்கள்!
திருப்பாவை முழுவதும் பாடிய பின் தான், அவனுக்கு முதல் ஆரத்தி காட்டுகிறார்கள்!
நாமும் பாடலாமா? மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்...


மார்கழியைத் தனுர் மாதம் என்றும் சொல்லுவார்கள்!
மாதங்களில் நான் மார்கழி என்று கண்ணன் கீதையில் மொழிகிறான்!
அவனைக் காதலித்து, அவனில் ஈடழிந்து,
அவன் வாய்ச்சுவை எப்படியோ என்று வெண் சங்கைப் பார்த்துக் கேட்கிறாள் ஒரு பேதை! அவள் பெயர் கோதை!

அந்தக் கோதை அவனை அடைய நோன்பு இருக்கிறாள், இந்த மார்கழியில்! வெறுமனே நோன்பு இருந்தால் அவளோடு கதை முடிந்து விடுமே!
அப்புறம் நாம் எல்லாம் எப்படிக் கடைத்தேறுவதாம்?
அதனால் பாட்டு பாடி நோன்பு இருக்கிறாள்! அவள் எண்ணியது சரி தான்!

இப்போது நமக்கும் அந்தப் பாட்டு கிடைத்து விட்டது அல்லவா?
ஐயைந்தும் (5*5) + ஐந்தும்(5) =25+5 = 30 பாடல்கள்; திருப்பாவை!
ஒவ்வொரு முறை படிக்கும் போதும் ஒவ்வொரு பொருள் தோன்றும்!
பல ஆச்சாரியர்களும், குருமார்களும், புலவர்களும், கவிஞர்களும் இதற்கு உரை எழுதி உள்ளார்கள்!
அப்படியும் முழுப் பொருளைக் காண முடிந்ததா? அறிதோறும் அறியாமை கண்டற்றால்!

2004 இல், நண்பர் தேசிகன், தினம் ஒரு பதிவு தந்தார்
2005 இல், தோழர் ஜி.இராகவன், தினம் ஒரு பதிவு தந்தார்
குமரனும், கோதைத் தமிழமுதத்தை அப்போதும், இப்போதும் தந்து கொண்டு இருக்கிறார்.

மீண்டும் படித்துச் சுவைப்போம் அவற்றை!
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பதும் வம்பு!
நம்மை வம்புக்காக இந்தப் பூமி சுமந்தால்....ச்சே நன்றாகவா இருக்கும்?
வாருங்கள், பாவைப் பாடல்களை, மீண்டும் வாசிப்போம்!...

(சுப்ரபாதம், மீண்டும் தை மாதம் துவங்கும்!) .....



அது வரை,
1. கோதை கண்ட அவதாரங்கள், திருப்பாவையில் - இயற்கை, உணவு, விஞ்ஞானம், வானவியல் என்று சிறப்புக் கண்ணோட்டப் பகுதிகளாக வாரம் ஒரு முறையாவது, மாதவிப் பந்தலில் அடியேன் இட முயல்கிறேன்!

2.௧ண்ணன் பாட்டு வலைப்பூவிற்கு அன்பர்கள் பலர், பாடல்கள் அனுப்பி உள்ளனர்.
ஞானவெட்டியான் ஐயா,
மதுமிதா அக்கா,
பெங்களூரில் இருந்து சுதா,
சாத்வீகன்,
பிரேம்குமார் சண்முகமணி,
பாலராஜன் கீதா
இன்னும் பலர் அனுப்பி உள்ளனர். கூட்டு முயற்சியின் சிறப்பே தனி!
இவர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றி! அதோடு குமரன், பாலாஜி, அடியேன்.

அந்தப் பாடல் மலர்களை எல்லாம் ஒவ்வொன்றாய்த் தொடுத்து, தினம் ஒரு மாலையாக கண்ணன் பாட்டில் இட எண்ணம்!
பாடிக் கொடுத்தாள் நற் பாமாலை - பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு!

நாமும் தினம் ஒன்றாய் இந்த மார்கழியில் தொடுத்துக் கொடுப்போம்!

என்ன, சரி தானே நண்பர்களே? தினம் ஒரு மாலைக்கு இங்கே செல்லுங்கள்: கண்ணன் பாட்டு

Saturday, December 09, 2006

சுப்ரபாதம் (5) - மலை குனிய நின்றான்!

அது சரி, உலகின் பல கதைகளிலும் நாகத்தை ஒரு குறியீடாகச் சொல்லியிருக்காங்க; ஏன்?
கதை என்று இல்லை; விஞ்ஞான மருத்துவக் கல்லூரிகளில் கூட, பெரும்பாலும் அவர்கள் முத்திரையில் நடுவில் ஒரு தண்டும் அதைச் சுற்றி ஒன்றோ, இரண்டோ நாகங்கள் இருக்கும்! ஏன்?
இன்றைய சுலோகத்திலும், இனி வரப்போவதிலும் சேஷன் என்ற நாகம் தான்!
சென்ற இரு பதிவிலும் "அன்னை, தயாநிதியை" எழுப்பினோம்!
(முந்தைய பதிவு -recap- மேலே சொடுக்கவும்);
இன்று அம்மையும் அப்பனும் எழுந்து கொள்ள, அவர்கள் கூடவே பொறுப்புள்ள மூத்த பிள்ளைகளும் எழுந்து விடுகின்றன! (இப்படிச் சொன்னதற்காக இளைய பிள்ளைகள் யாரும் என்கிட்ட சண்டைக்கு வராதீங்கப்பா:-) நான் சொன்னது சப்தரிஷிகள் என்னும் மூத்த பிள்ளைகள்!



இன்றைய சுலோகம் மிக விசேடமானது; முதல் முறையாக, நேரிடையாகவே, வேங்கடவனை எழுப்பும் சுலோகம்; "சேஷாத்ரி சேகர விபோ, தவ சுப்ரபாதம்" என்று இனி ஒவ்வொரு சுலோகத்திலும் வரப்போகிறது.


(இந்த சுலோகத்தை படிக்கும் போது, கூடவே கேட்டுப் பயில நினைத்தால், இதோ சொடுக்குங்கள்)







அத்ரிஆதி சப்தரிஷய சமுபாஸ்ய சந்த்யாம்
ஆகாச சிந்து கமலானி மனோகரானி
ஆதாய பாதயுகம் அர்ச்சயிதும் ப்ரபந்நா
சேஷாத்ரி சேகரவிபோ தவ சுப்ரபாதம்


அத்ரி ஆதி சப்த ரிஷய = அத்ரி முதலான சப்த (ஏழு) ரிஷிகள்
பால் வெளியில் (Milky Way), துருவ நட்சத்திரத்தைச் சுற்றி இருப்பது சப்த ரிஷி மண்டலம் (Ursa Major).
சப்த ரிஷிகள், உலகின் ஆதி தாய் தந்தையர்கள் ஆவார்கள்.
இறைவனின் மூத்த குழந்தைகள் என்றும் சொல்லுவர். அந்த ஏழு பேர் யார் யார் என்ற பட்டியல் சில சமயம் மாறுபட்டாலும், பொதுவாக இவர்களே:
அத்ரி, பரத்வாஜர், கெளதமர், ஜமதக்னி, காச்யபர், வசிஷ்டர், விஸ்வாமித்ரர்
(அத்ரியும், வசிஷ்டரும் பெரும்பாலும் எல்லாப் பட்டியல்களிலும் இருப்பர்; வசிஷ்டரின் மனைவி அருந்ததியும் வான மண்டலத்தில் அவருடன் இருப்பதாக ஐதீகம். "அம்மி மிதித்து அருந்ததி பார்த்து" என்ற வழக்கமும் வந்தது)


சமுபாஸ்ய சந்த்யாம் = வரப்போகும், சந்தியா வந்தன பூசைகளுக்காக
அதிகாலை கொஞ்சம் கொஞ்சமாக புலரத் தொடங்குகிறது; சந்தி செய்யும் வேளையும் வந்து விட்டது.

ஆகாச சிந்து = ஆகாச கங்கை நீர்வீழ்ச்சி, தீர்த்தத்தில் இருந்து
ஆகாச கங்கை என்ற நீர்வீழ்ச்சியைப் பற்றி திருமலை நம்பிகள் பதிவில் பார்த்தோம்; அந்த நீர் பாப விநாச தீர்த்தம் போலவே புனிதமானது; எம்பெருமான் தொடுத்த வில் அம்பினால் உருவானது;

கமலானி மனோகரானி = அழகான தாமரைப் பூக்களைக் கொண்டு வந்து உள்ளனர்
ஆகாச கங்கையில் மலர்ந்த அழகிய (மனோகரமான) தாமரைப் (கமலம்) பூக்களைக் கொண்டு வந்து உள்ளனர்


ஆதாய பாத யுகம் அர்ச்சயிதும் = (அவர்கள் கொண்டு வந்த மலர்களுடன்) பாதம் இரண்டையும் அர்ச்சிக்க
பாத யுகம் = இணை அடிகள் = இரண்டு திருப்பாதங்கள்.
மலர்ப் பாதங்களை, மலர்களால் அர்ச்சிக்க வந்துள்ளனர்;
இறைவனின் இணை அடிகளை பாத பத்மம் என்று சொல்லுவார்கள். ஏன்? தாமரை நீரில் மூழ்கவே மூழ்காது; நீரின் அளவுக்கு ஏற்ப அதுவும் உயர்ந்து கொண்டே இருக்கும். "நீர்அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்"; "வெள்ளத்து அனைய மலர் நீட்டம்" என்பன தமிழ்ப் பாடல்கள்.

அது போல் நாம் நம் புண்ணிய பாவக் கணக்குகளைக் கூட்டினாலும் சரி, குறைத்தாலும் சரி! அதற்காக அவன் பாதங்களை மறைத்து வைக்க மாட்டான்; புண்ணியமோ பாவமோ, எதைச் செய்தாலும் நம்மைக் கடைத்தேற்றுவதற்கு ஒரே வழி! எப்போதும் நன்கு தெரியும்படி, அடைக்கலம் புகும்படி, பாதங்களை மட்டுமாவது காட்டிக் கொண்டே இருப்பான்!
பற்றுவதும் பற்றாததும் நம் கையில் தான் இருக்கிறது! பெரும்பாலும் புண்ணியர்கள் பற்றிக் கொள்கிறார்கள்; பாவம் செய்தோர், காட்டினாலும் பற்ற மறுக்கிறார்கள்!

மற்ற திரு அவயங்கள் வேண்டுமானால் பக்திக்கு ஏற்றவாறு தோன்றும், மறையும்! கரங்கள் காக்கவும் செய்யும்; அம்பைத் தொடுத்து அழிக்கவும் செய்யும்!
ஆனால் திருப்பாதங்கள் அப்படி இல்லை! வாமன அவதாரத்தில் கூட சம்காரம்/அழிவு என்று இல்லாமல், மகாபலி தலை மேல் வைத்து காத்தது! ராமாவதாரத்தில் ராமனே உதவ முடியாமல் போன போது கூட, அவன் திருவடிப் பாதுகைகள் பரதனுக்கு உதவின! இந்தக் காலத்தில் நமக்கும் கோவில்களில் தலை மேல் சடாரியாக வைத்துக் காக்கப்படுகிறது!

பாதுகா சகஸ்ரம் என்ற ஒராயிரம் பாடல்கள் இந்தப் பாதுகைகள் மேல் உள்ளன! அவ்வளவு பெருமை மிக்க பாதங்களைத் தான் தினமும் திருநாமமாக நெற்றியில் அணிகின்றனர்!
இதற்கு ஊர்த்துவ புண்ட்ரம் என்று வடமொழிப் பெயர்! (புண்ட்ரம்/புண்டரீகம் = தாமரை)!
கொஞ்சு தமிழில் திருமண் காப்பு! இப்போது புரிகிறது அல்லவா ஏன் திருப்பாதங்களைத் தாமரையாகச் சொல்கிறார்கள் என்று!



ப்ரபந்நா = சரணம் அடைந்து, வந்துள்ளனர்.
அப்பேர்ப்பட்ட திருவடிகளில் சரணம் புக சப்த ரிஷிகளும் வந்துள்ளனர். ப்ரபத்தி என்றால் சரணாகதி; ப்ரபந்நன் என்றால் சரணாகதி செய்த ஜீவன். இதைப் பற்றி பின்னர் வரப்போகும், "சரணம் சரணம் ப்ரபத்யே", என்ற பகுதியில் பார்ப்போம். "புகல் ஒன்று இல்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே", என்பது ஆழ்வார் செய்யும் சரணாகதி!
அது போல ப்ரபந்நர்களான சப்த ரிஷிகளும் இங்கு பெருமாளைச் சேவிக்க வந்துள்ளார்கள்.



சேஷாத்ரி சேகர விபோ = சேஷ மலைச் சிகரத்துக்கு அரசனே

சேஷன்= ஆதிசேஷன் என்ற பாம்பு! அத்ரி=மலை;
சேகரம்=உச்சி; விபோ = அரசன்;
சேஷ மலைச் சிகரத்துக்கு அரசன் திருவேங்கடநாதன்!
இனி வரும் ஒவ்வொரு சுலோகமும் இப்படித் தான் முடியப் போகிறது! ஏன்?
அப்படி என்ன சேஷனுக்கும், பெருமாளுக்கும் அவ்வளவு அன்னோன்யம்? பெருமாள் எங்கு சென்றாலும், அவனோடு திருமகள் நீங்காது இருக்கிறாள், சரி! ஒத்துக் கொள்ளலாம்!
இந்தத் சேஷன் தொண்டன் தானே! ஏன் எங்கு போனாலும் கூடவே ஒட்டிக் கொள்கிறான்? அடுத்த பதிவில் காணலாம்!!


திருமலையின் ஏழு முடிகளும் சேஷனின் தலைகள்; அந்த மலையே சேஷனின் உருவம் தான்! வளைந்து நெளிந்து பாம்பைப் போலவே தான் உள்ளது! அந்த சேஷ மலை, பக்தியாலும் பணிவாலும் குனிந்து நிற்க, அதன் மேல்
மலை குனிய நின்றான் பெருமாள்
என்று பெயர் பெற்று விளங்குகிறான் இந்தக் கலியுகத் தெய்வம்!
கல்வெட்டுகளிலும் மற்றும் பழந்தமிழ்ப் பாடல்களிலும் இந்தப் பெயர் சிறப்பாக வருகிறது!


தவ சுப்ரபாதம் = இனிய காலை வணக்கங்கள்!
இப்படி சேஷ மலையின் மீது சேஷாத்ரி நாதனாக நிற்கும் மலையப்பா! ....சுப்ரபாதம் = சு+ப்ரபாதம் = உனக்கும், அதனால் எங்களுக்கும் சுகமான காலைப் பொழுதாக மலரட்டும்.

மலை குனிய நின்றான்

-------------------------------------------------------------------------------------
முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1.
M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2.
கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3.
தமிழ் சுப்ரபாதம் (நித்ய ஸ்ரீ) - (Windows Media Player)
நன்றி: Music: musicindiaonline.com, sribalaji.com Pics: tirumala-tirupati.com
-------------------------------------------------------------------------------------

Saturday, December 02, 2006

கெளசல்யா சுப்ரஜா ராமா (4) - அம்மா தயாநிதி!

யாராச்சும் சூரியன் உதித்த பின்னரும் வானத்தில் நிலாவைப் பாத்திருக்கீங்களா? அப்படிப் பாக்கலீன்னா இன்னைக்கு இந்தப் பதிவில் காணலாம்!

சென்ற பதிவில் "அன்னை-சகல உயிர்களுக்கும்", அவளை எழுப்பினோம்!
(முந்தைய பதிவுக்குச் சென்று, சுலோகமும் பொருளும், இன்னொரு முறை பார்த்து வரணும் - recap - என்று நீங்கள் நினைத்தால், மேலே சொடுக்கவும்);
நண்பர் குமரனும், அப்பனின் திருமார்பில் அவள் கொலுவிருப்பதைப் பற்றி அழகிய விளக்கம் கொடுத்து இருந்தார்.

இன்றும் அன்னை மீது தான் பாடல்.
வெளியூரில் இருந்து வீட்டுக்குத் திரும்பிச் செல்லும் போது, குடும்பத்தினர்க்கும், நண்பர்களுக்கும் பரிசுப்பொருள் வாங்கிச் செல்வோம் இல்லையா? ஒரு சிலர் அம்மாவுக்கு மட்டும் ஸ்பெஷலாக இரண்டு பரிசுகள் வாங்கிச் செல்வார்கள்! ஊர் அறிய ஒன்று; தனியாக அடுக்களையில் ஒன்று "நைசாகத்" தரப்படும்! :-)
அது போலத் தான் நேற்றும் இன்றும், இரண்டு பாடல்கள், ஜகன் மாதா ஸ்ரீ மகாலக்ஷ்மியின் மீது!



(இந்த சுலோகத்தை படிக்கும் போது, கூடவே கேட்டுப் பயில நினைத்தால், இதோ சொடுக்குங்கள்)








தவ சுப்ரபாதம் அரவிந்த லோசனே
பவது பிரசன்ன முக சந்திர மண்டலே
விதி சங்கரேந்திர வனிதாபிர் அர்ச்சிதே
விருஷ சைலநாத தயிதே தயாநிதே

தவ சுப்ரபாதம் = மங்களமான காலைப் பொழுதாக மலரட்டும்!
சுப்ரபாதம்=சு+பிரபாதம்=சுகமான காலை
அரவிந்த லோசனே = தாமரை போன்று சிவந்த, குளிர்ந்த கண்களைக் கொண்டவளே
அரவிந்தம்=தாமரை; லோசனம்=கண்
தாமரையை எதற்குக் கண்களுக்குச் சொல்கிறார்கள்? காலையில் திறந்து இரவில் மூடிக்கொள்வதாலா? இருக்கலாம்! ஆனால் இங்கு அன்னையின் கண்கள் தாமரைப்பூ போல் மெல்லிய சிகப்பு (pink) ; குளிர்ச்சி! தாமரைக்குப் பூங்கொத்து தேவையில்லை! ஒரு பூ போதும். அவ்வளவு தெய்வீக அழகு!

பவது பிரசன்ன முக = உன் முகம், எப்போதும் சிரித்த முகமாய் இருக்கும்
சந்திர மண்டலே = சந்திரனைப் போல் முகம் கொண்டவளே
"வதனமே சந்திர பிம்பமோ" என்று தானே ஒரு பிரபலமான பாடல்; சந்திரன் அமைதியாக ஒளிர்வான்; அது போல் அன்னையும் அடக்கமாக, அமைதியாக, இதழ்க் கோட்டோரம் ஒரு மெல்லிய புன்னகை பூத்து, சிரித்த முகமாய் இருக்கிறாள்!
அது சரி, அதான் காலை புலர்கின்றதே! இன்னும் சிறிது நேரத்தில் நிலவு போய் விடும் அல்லவா? கவலை வேண்டாம்! சூரியன் வந்தாலும் இந்த நிலா மறையாது! அன்னையின் முகநிலாவுக்கு தேய்வு தான் உண்டோ?


விதி சங்கர் இந்திர வனிதாபிர் = பிரம்மா (விதி), சங்கரன் (சிவபெருமான்), இந்திரன் ஆகியோரின் மனைவியர் எல்லாம்
வனிதா=பெண்
விதியைத் தலையில் எழுதும் கடவுள் = பிரம்மன்; இவர் மனைவியான கலைமகளும் (சரஸ்வதியும்),
சங்கரன் = சிவபிரான்; ஈசனின் அன்பு மனைவி, அன்னை மலைமகளும் (பார்வதியும்),
இந்திரன் மனைவியான சசிதேவியும் (இந்திராணி),

அர்ச்சிதே = (உன்னை) அர்ச்சிக்கிறார்கள்.
அன்னைக்கும், மற்ற தெய்வங்களின் மனைவியருக்கும் அவ்வளவு தோழமை பாருங்கள்; விரும்பி நன்மொழிகளால் அர்ச்சனை செய்கிறார்கள்! அதுவும் நம் அன்னை யார்?
அண்ணனின் மனைவி என்பதால், பார்வதிக்கு அண்ணி;
கணவரின் (பிரம்மா) அம்மா என்பதால், சரஸ்வதிக்கு மாமி;
கணவரின் (இந்திரன்) தலைவர் என்பதால், சசிதேவிக்குத் தலைவி;
இப்படிப் பிறந்த வீடும், புகுந்த வீடும், எல்லாரும் அன்னை மகாலக்ஷ்மியிடம் அன்பு பாராட்டுகிறார்கள்!


விருஷ சைல நாத= விருஷபாசலம் என்னும் திருமலைக்கு நாதன்
திருமலையில் உள்ள ஒரு மலைக்கு விருஷபாசலம் என்று பெயர்! ஏழு மலைகள் என்னன்ன என்று பின்னர் ஒரு சுலோகத்தில் வருகிறது, அப்போது பார்ப்போம்!
விருஷப+அசலம்=விருஷப மலை; விருஷபன் என்ற ஒரு அசுரனின் நினைவாக! அசுரனின் பேரில் பெருமாளுக்கு மலையா? இது தனிக் கதை. தெரிந்தவர்கள் யாரேனும் சொல்லுங்கள்!

அதை எதற்கு இங்கு சொன்னார்கள்? வேறு ஒரு மலையைச் சொல்லி இருக்கலாமே? இது தாயார் சுலோகம் அல்லவா? அவள் தான் அசுரன், தேவன் என்றெல்லாம் வேறுபடுத்திப் பார்க்க மாட்டாளே! மாத; சமஸ்த ஜகதாம்! கருணைக் கடல் அல்லவா அவள்!!

தயிதே, தயா நிதே = அவனின் விருப்பமான மனைவியே! தயா நிதியே!
தயிதே = Beloved; பெருமாளின் அன்பே ஆருயிரே! தயா+நிதி = கருணை+செல்வம். அன்னை கருணைச் செல்வமானவள்!
அவள் தானே எல்லாச் செல்வத்துக்கு அதிபதி! அவளே ஒரு செல்வமா?
ஆமாம்! காருண்ய லக்ஷ்மி! அஷ்ட லட்சுமிகளில் ஒருவள் காருண்ய லக்ஷ்மி.
எத்தனை செல்வம் வந்தாலும் போனாலும், இந்தக் காருண்யம் மட்டும் என்றும் நிலைத்து நிற்கும்! அதனால் தான் ஒரு மகாகுரு, திருமலை எம்பெருமான் மீது தயா சதகம் என்று ஒரு நூறு பாடல் பாடினார்!

இவ்வளவு பெருமைகள் கொண்ட அம்மா, உனக்கு இனிய காலை வணக்கங்கள்!





-------------------------------------------------------------------------------------
முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1. M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2. கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3. தமிழ் சுப்ரபாதம் (நித்ய ஸ்ரீ) - (Windows Media Player)
நன்றி: Music: musicindiaonline.com, sribalaji.com Pics: tirumala-tirupati.com
-------------------------------------------------------------------------------------

சுப்ரபாதம் (தமிழில்):

ஒலிச் சுட்டிகள்!

முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1. M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2. கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3. தமிழ் சுப்ரபாதம் - நித்ய ஸ்ரீ பாடுவது (Windows Media Player)

நன்றி:
Music: musicindiaonline.com, sribalaji.com
Pics: tirumala-tirupati.com

சுப்ரபாதம் (மூலம்):

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP